1. இலங்கையில் கடல் -அரசியல்.

2021, மே 20 தொடக்கம், ஆனி மாதத்தின் நடுப்பகுதியான இன்றுவரை, கொரோனா பாதிப்புகளை தவிர்த்து, இரு கடல்சார் நிகழ்வுகள் – அனர்த்தனங்கள் விவாதங்களையும், விசனங்களையும் இலங்கையில் பரவலாக ஏற்படுத்தியுள்ளது. அவையானவ, X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் இலங்கையின் வடகடலில் இறக்கப்பட்ட பேருந்துகள் பற்றியனவாகும்.

இவ் இரு நிகழ்வுகளும் இலங்கையிலும் பல மட்டங்களில் விவாதங்களை தூண்டியுள்ளது வரவேற்கத் தக்க விடையமாகும். அதேவேளை, இந்த இரு நிகழ்வுகளும் மேலோட்டமாக வெறும் உணர்வு சார்ந்து மட்டும் விவாதிக்கப்பட்டு வரும் நிலை நிலவுகிறது. இவ் விவாதத்தின் ஆரம்ப புள்ளி, மே 20 2021 அன்று கொழும்பு -நீர்கொழும்பு கடற்பிரதேசத்தில் நடைபெற்ற பாரிய கடல்-இயற்கைவள அழிப்புக்கு வழிகோலியுள்ள X-Press Pearl என்ற சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட, 2021 மாசி மாதம் கடல்சார் வணிக நடவடிக்கைக்கு இறக்கப்பட்ட கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தாகும் . அடுத்ததாக, ஆனி 11 அன்று இலங்கை மீன்பிடி அமைச்சு, மீன்வளங்களை அபிவிருத்தி செய்யும் “நோக்கில் ”, உபயோகத்துக்கு உதவாத, பெரும்பாலும் அலுமினிய பகுதிகளை கொண்ட பேருந்துகளை இலங்கையின் வடகடலில் இறக்கியுள்ள செயலாகும்.

 

கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தானது, மஹிந்த -குடும்பத்தின் டொலர் மீதனா ஆசையினால் ஏற்பட்ட – அவர்களின் திறமை அற்ற ஆட்சி செய்தலுக்கு உதாரணமான நிகழ்வாக தென்னிலங்கை மக்களினால் கருதப்படுகின்றது. சீனாவுக்கு கடலை தாரைவார்த்து கொடுக்க – திட்டமிட்டு மஹிந்த குடும்பத்தினால் நடாத்தப்பட்ட நிகழ்வாக இந்த தீ விபத்து தமிழ் பேசும் மக்களிடையே பிரச்சாரப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, தமிழ் “தேசியம்” சார்ந்து செயற்படுவதாக கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் இக் கருத்தை பிரச்சாரப்படுத்துகின்றனர். அத்துடன், இந்த சூழலை பயன்படுத்தி இந்தியா இலங்கையின் அக அரசியலில் தலையிட வேண்டுமென்றும் கூக்குரல்களும் இவர்களிடமிருந்து கேட்கிறது. இதற்கு எதிராக “குரல்கொடுக்கும் ” இலங்கை அரசுக்கு சார்பான “தமிழ் தேசிய ” எதிர்ப்பாளர்கள், இலங்கை அரசுக்கும் அதன் கடலியல் அரசியலுக்கும், எந்தவித அடித்தளமுமில்லாமல் முட்டுக்கொடுத்து வருகின்றனர்.

இந்த இரு பகுதியினருமே, தற்போது ஈபிடிபி -அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு இணங்க, வடமாராட்சி கடலில் இறக்கப்பட்டுள்ள பஸ்களை முன்னிறுத்தியும் “விவாதித்தும்” வருகின்றார்கள். அரச சார்பான- “தமிழ் தேசிய ” எதிர்ப்பாளர் பகுதி, பஸ்களை கடலில் இறக்கியது தமிழ் மக்களின் மீன்பிடி வளங்களை காப்பாறுவதற்கென வாதிடுகிறார்கள்.

இதை எதிர்ப்பவர்கள், “துரோக ” செயலென வர்ணிக்கின்றார்கள். கடந்த வருடம் மற்றும் இந்தவருட ஆரம்பத்தில் தமிழ் ஈழத்தின் தலைநகர் திருகோணமலையின் ஆழ்கடல் பிரதேசத்தில் இதே போலவே 40 பேருந்துகள் போடப்பட்டன. அப்போது, இந்த இருபகுதியும் அது பற்றி எதுவும் பேசியதாக பதிவுகள் இல்லை. அது போலவே, புரட்டாதி 3. 2020 அன்று MT New Diamond கப்பலில் தீப்பிடித்து தென் தமிழீழ கடல் பிரதேசத்தில்- பாரிய கடல்வள அழிவை ஏற்படுத்தும் நிலை உருவாகியது . அப்போதும் கூட இவர்கள் எவரும் அலட்டிக் கொண்டதாக பதிவுகளில்லை. இந்த இரு பகுதியினரின் கருசனையும் கடல் வளம் பற்றியதோ அல்லது அதுசார்ந்த வாழ்வியலை கொண்ட மக்கள் பற்ரியதோ அல்ல. மாறாக, இந்த இருபகுதியினரினதும் கரிசனை தமது அரசியல் மற்றும் அதிகாரம் சார்ந்த இருப்பு பற்றியதே. குறிப்பாக, யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய அரசியல்- மற்றும் அதிகாரம் சார்ந்த போக்குகளே இவர்களுக்கு இடையிலான முரண்பாடாகும்.

இந்த இரு நிகழ்வுகளையும் வழமை போலவே வெறும் உணர்வு சார்ந்து விவாதிப்பதனால் பாரிய பாதிப்புகளை சந்திக்கப்போவது இலங்கையில் வாழும் அனைத்து மக்களுமே! இன்று எமக்கு தேவை இந்த விடையங்கள் பற்றிய ஆழமான- விஞ்ஞான ரீதியான அறிவும் – ஆய்வுகளுமாகும்.
இந்த உணர்வுகள் சார்ந்த விவாதங்களுக்கு அப்பால், சர்வதேச ரீதியாக இலங்கையின் கடல் பிரதேசம் மற்றும் அதன் கடல்வளம் பற்றிய விவாதம், கடலியல் oceanology/oceanography, கடல் புவியியல்/ Marine geology மற்றும் கடல்சார் உயிரியல்/marine biologi சார்ந்த உலக மட்டத்திலான ஆர்வலர்களிடையே முக்கிய விவாதப்பொருளாக உருவெடுத்துள்ளது.

இந்த சிறு பதிவின் நோக்கம் மேற்படி இரு நிகழ்வுகள் பற்றிய கொஞ்சமேனும் விஞ்ஞான ரீதியினாலான சில தரவுகளை பதிவதுவேயாகும்.

X-Press Pearl அனர்த்தம்

Jebel Ali துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல், 11 மே மாதம் 2021 அன்று ஹமாட் துறைமுகபிரதேசத்தில் பயணிக்கும் வேளை Nitric acid கொள்கலன்களில் ஏற்பட்டிருந்த கசிவுகளை கப்பல் சிப்பந்திகள் கண்டனர். அதனால் கொல்கலன்களை டோகா – ஹமாட் துறைமுகத்தில் இறக்க அனுமதி கேட்டனர். மறுக்கப்பட்டது. அதேபோலவே, இந்திய Hazira Port-துறைமுகத்திலும் அதிகாரிகள் கப்பலை துறைக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக திட்டமிட்ட முறையில் கப்பலானது இலங்கையை நோக்கி பயணித்தது. மே 20 2021 அன்று கொழும்பு துறைமுகத்திலிருந்து 9,5 நோட்டிகல் மைல்களுக்கு அப்பால்(17km) X-Press Pearl கப்பலில் இருந்த Nitric acid கொள்கலன்களில் ஏற்பட்டிருந்த கசிவுகள் காரணமாக தீ பற்றிக்கொண்டது. X-Press Pearl கப்பல் தீ பற்றும் போது அதில் : 1486 சரக்கு பெட்டகங்கள் காணப்பட்டது. அவற்றில் 81 கொள்கலன்கள் நச்சு பொருட்களை உள்ளடக்கமாக கொண்டிருந்தன. மேலும் 5 தொன் Nitric acid காணப்பட்டது . அத்துடன், ஒவ்வொன்றும் 26000 kg உள்ளடக்கத்தை கொண்ட மூன்று கொள்கலன்களில் plastic pellets/பிளாஸ்டிக் துகள்கள் /மணிகள் இருந்தன. கப்பலை இயக்குவதற்காக பயன்படும் டீசல் மற்றும் பலவகை ஒயில் பொருட்கள் 333 தொன் கப்பலின் இயந்திர பகுதிக்கு அருகாமையில் இருந்த பாரிய கலன்களில் நிரப்பபட்டிருந்தது.

கப்பல் விபத்தால் ஏற்பட போகும் பாதிப்புகள்

பெரும்பாலும் இரும்பினால் உருவாக்கப்படும் கப்பலானது கடலில் முழ்கும் போது குறுகியகால மற்றும் நீண்டகால பாதிப்புகளை கடல்சார் இயற்கைக்கு ஏற்படுத்துமென்பதில் எந்தவித ஐயமுமில்லை. அதேவேளை, சில நூறு வருடங்கள் அவதானிப்பின் அடிப்படையில் இருப்பு / உருக்கு போன்ற உலோகங்களை கடலானது வெகுவிரைவாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும். அத்துடன், இரும்பு போன்ற உலோகங்கள் இயல்பாகவே நீண்டகால போக்கில் கடலின் தன்மைக்கேற்ப தன்னை இயைபாக்கம் அடைந்து கொள்ளும். அதேவேளை, இன்று 22 மீட்டர் ஆழத்தில், கரையிலிருந்து 17 கிலோமீற்றர் தூரத்தில் கிடக்கும் எரிந்து போய் மீதமாகவுள்ள X-Press Pearl கப்பல் பகுதி பகுதியாக வெட்டி அகற்ற முடியும். இதற்கான இன்றுள்ள நவீன கடல்சார் தொழில் நுட்பவியல் உதவும். ஆகவே, ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள பாதிப்பை விட கப்பலில் உலோக பாகங்கள் மேலதிகமாக பாரிய பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை.

அதேவேளை, கப்பலில் ஏற்பட்ட தீயினால், 333 தொன் எரிபொருட்களும், 81 பெட்டகங்களில் இருந்த நச்சு பொருட்களும், 5 தொன் Nitric acid மற்றும் 78000 kg plastic pellets/பிளாஸ்டிக் துகள்களுமே பாரிய இயற்கை அழிவை ஏற்படுத்த வல்லன.

கப்பலின் பொதிகளில் ஒன்றான கோடிக்கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் தலைமன்னார் கரையோரம் தொடக்கம் இலங்கையின் தென் பிரதேசமான தங்கல்ல வரையான பிரதேச கரைகளில் ஒதுங்குகின்றன. இந்த கடற்பிரதேசத்துக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் பிடிக்கப்படும் மீன்களின் பூ, நாடுகள் (வாய்ப்பகுதி) மற்றும் இரைப்பையில் பிளாஸ்டிக் துகள்கள் நிறைந்து காணப்படுகிறது. அத்துடன் இந்த பிளாட்டிக் துகள்கள் கப்பலிலிருந்து வெளியேறிய நீரினுள் அமிழக்கூடிய எண்ணெய் வகைகளுடன் கலந்து கப்பலை சுற்றிய பிரதேசத்தில் பரந்துள்ளதென கூறப்படுகிறது. இது உண்மையானால், பல்லாயிர கிலோ மீற்றர் பரப்பளவு கடலடித்தள தாவரங்கள் உட்பட பலவகை உயிரினங்களும் நீண்டகாலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே, இப்பிரதேசத்தில் வாழ்த்து வந்த 25 இக்கு மேற்பட்ட கடல் ஆமைகள் மூச்சு திணறி இறந்துள்ளன. அவற்றின் உள் உறுப்புகளில் எண்ணெயுடன் கலந்த நச்சு பொருள்கள் படிந்திருப்பது தற்காலிக – மேலோட்டமான ஆய்வுகளில் கண்டடையப்பட்டுள்ளது.

கப்பல்களின் எரிபொருள் கழிவுகள் புகையாக ஒருபகுதி வளிமண்டலத்தில் வெறியேறும். மறுபகுதி நீரடி குழாய்கள் ஊடாக கடலில் அகற்றப்படும். இக் கழிவின் உள்ளடக்கம் Nitrogen monoxide and Sulfur dioxide எனப்படும் நச்சுகளாகும். இவ் இரு கழிவுப்பொருட்களும் உப்புநீருடன் கலக்கும்போது nitric acid and sulfuric acid ஆக, மாற்றமடையும். இம் மாற்றம் கடலில் நிகழும். இந்த நச்சு பொருட்கள் கடலின் மேல் மட்டத்தில் வாழும் உயிரிகளையும், கொஞ்சம் கொஞ்சமாக கரையோரங்களை அடைந்து கரையோர உயிரிகளையும் பாதிப்படைய வைக்கும். ஏற்கனவே, கொழும்பு துறைமுக பிரதேசம் இவ்வகை கழிவுகளால் நிரம்பியுள்ளது. இக் கப்பல் தீயினால், கொள்கலன்களிலிருந்த 5 தொன் Nitric acid இல், எரிந்து போனவை தவிர மீதமானதும், எரிந்த பின் மிஞ்சிய கழிவுகளும் கடலில் கலந்துள்ளது.

அடுத்து, கப்பலின் தாங்கிகளிலிருந்த கிட்டதட்ட 333 தொன் அல்லது 34000 லீட்டர் பலவகையான எண்ணை வகைகளும் பாரிய அழிவை நீண்டகாலத்துக்கு நிகழ்த்தப்போகிறது. இதில் அடர்த்தி கூடிய எண்ணெய்களும், எரித்து அல்லது சூடேறி இறுகிய டீசல் கடலடி தளத்தையும், மிதந்து வந்து கரையோரங்களையும் பாதித்துள்ளது. இலங்கை அரச அதிகாரிகள் இந்த எண்ணெய்கள் கப்பலை விட்டு வெளியேறவில்லை என கூறிவருகின்றனர். ஆனாலும், சுயாதீன தகவல்கள் மற்றும் கரையோர மக்கள் சார்ந்து செயற்படும் அரசியல் அமைப்புகளின் தகவல்களின்படி, கப்பலை ஆழக் கடலுக்கு நகர்த்த முயன்று, அது தாண்டு போன அன்றே பெருமளவிலான எண்ணெய் கப்பலிலிருந்து வெளியேற தொடக்கி விட்டதென தெரியவருகிறது. இந்த வகை எண்ணையானது கடலடி தளத்தில் படிந்து கொஞ்சம் கொஞ்சமாக பரவலடையும். இதன் மூலம் உயிரிகளை அழிப்பது மட்டுமல்லாமல் தாவரங்களும் அழிந்து போகும். எரிபொருள் எண்ணெய்கள் எவ்வாறு கடலை பாதிக்கும் என்பதனை, 1910 இல் California கடலில் நடந்த , Lakeview Gusher Number One, விபத்து தொடக்கம் 2010 இல் மெக்சிகோ குடாவில் நடந்த Deepwater Horizon விபத்துகளை ஆய்வு செய்வதன் மூலம் விபரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ் ஆய்வுகளின்படி கடல் வழமைக்கு திரும்புவதற்கு நூறு வருடங்களுக்கு மேலாகலாம். இது இன்று பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மேல்கடலுக்கும் பொருந்தும்.

எதிர்காலம்

இந்த பதிவை எழுதுபவர் சமூகவியல் சார்ந்த அறிவு பெற்றவர் என்ற மட்டில், கப்பல் எரிவால் ஏற்பட்ட; இயற்கை- விஞ்ஞான அடிப்படையிலான பாதிப்புகள் பற்றி எழுதுவது மிகவும் மட்டுப்படுத்தபட்டது. ஆகவே, இப்பாதிப்புகள் பற்றி துறைசார்ந்த அறிவு பெற்றவர்கள், சமூகத்தின் நலனை முன்னிறுத்தி விபரமாக எழுத முன்வர வேண்டும். அதன் மூலம் சரியான புரிதலின் அடிப்படையில் நாம் இவ் அழிவுகளை பற்றி விவாதிக்க முடியும். இவ் வகை அழிவுகளை தவிர்ப்பதற்காக போராட முடியும்.

இன்றுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏற்பட்ட அழிவை ஓரளவுக்கேனும் சீர்செய்ய பெரும் மூலதனம் தேவைப்படும். இதை எரிந்துபோன கப்பல் நிறுவனம் மற்றும் அதன் காப்புறுதி நிறுவனமும் செய்ய வேண்டுமென்பது சர்வதேச சட்டமாகும். ஆனால், இலங்கை அரசானது, பணத்தை தன்னிடம் தருமாறும், தாமே கடலை சுத்தம் செய்து கொள்வதெனவுமான அடிப்படையில் கப்பல் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இன்றுள்ள நிதி நெருக்கடியில் சில நூறு மில்லியன் டொலர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு பெரிய வரப்பிரசாதம் தான். ஆனால், சரியான முறையில் சுத்தபடுத்தப்பட்ட கடல் தாய், நீண்டகால போக்கில் சில ஆயிரம் மில்லியன் டொலர்களை அள்ளிக்கொடுப்பாள்! குறுகிய பொருளாதார லாபமும்- அரசியல் நோக்கமும் எந்த வகையிலும் இலங்கை மக்களை வாழவைக்க போவதில்லை !

பிற்குறிப்பு : இக் கட்டுரையில் இரண்டாவது பகுதியில், இலங்கை மீன்பிடி அமைச்சரின் ஆணையின்படி, வட கடலில் போடப்பட்ட பேருந்துகள் பேசுபொருளாகிறது . அது இன்னும் சில நாட்களில் இங்கு பதிவு பெறும்.

https://raseriart.wordpress.com/2021/06/13/மேலைக்கடலில்-பிளாஸ்டிக்/