பௌத்த மதம் என்பது சிங்கள இனமும் - சிங்கள மொழியும் என்று கருதும் நேர்கோட்டு கண்ணோட்டம் தவறானது. அதே போல் சைவமும் (இன்று இந்து மதம்) தமிழ் இனமும் தமிழும் ஒன்று என்ற அதே நேர்கோட்டு கண்ணோட்டத்தையும் மறுதளிக்க வேண்டும். மதம், மத நம்பிக்கை என்பது இனம், மொழி, பிரதேசம், நாடு என்ற எல்லை கடந்தது. தனிமனிதன் நம்பிக்கை சம்மந்தபட்டது. இந்தப் புரிதல் அவசியமானது.

மானிட வாழ்வியலைக் கண்டறியும் தொல்லியலை, இன்றைய இனவாத மதவாதக் கண்ணோட்டத்தில் அரசு அணுகுவது என்பது, இனமத ரீதியான அதிகார ஒடுக்குமுறையே. தொல்லியல் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்விடங்களையும் - அவர்களின் நம்பிக்கைகளையும் தகர்க்கின்ற வண்ணமான அரசியல் செயற்பாடு என்பது அரச பயங்கரவாதம் மட்டுமின்றி - மனிதகுலத்திற்கு எதிரான குற்றமுமாகும். இது தனிப்பட்ட அல்லது ஒரு இனத்தின் இன-மத வெறுப்பில் இருந்து செய்யப்படுபவையல்ல, மாறாக பொருளாதார நோக்கங்களுக்காக இழைக்கப்படுகின்ற பாரிய குற்றங்களாகும்.

தொல்லியல் என்பது, அது முன்வைக்கும் மனித வரலாறு என்பது, மக்களை ஒன்றிணைக்கும் சமூக அறிவியல் கூறாக முன்னிறுத்தி வளர்த்தெடுக்க வேண்டும். ஆனால் இலங்கையில் அது எதிர்மறையில் மக்களை பிளக்கின்ற – பிரிக்கின்ற நடவடிக்கைக்காக, அரசு தொல்லியல் துறையை முன்னிறுத்துகின்றது. அரசு விரும்புகின்ற பிரிவினைக்கு எதிராக, ஐக்கியத்தை முன்வைத்தே அனைவரும் சிந்திக்கவும் - செயற்படவும் வேண்டும். அந்த ஐக்கியமென்பது பிரிவினை முன்வைக்கும் அரசுடன் அல்ல. அரசு செய்வது போல், பிற இனங்களும்;, மதங்களும் மக்களிடையே பிரிவினையை கையாளக் கூடாது. அரசு தான் எந்த மதத்தை, எந்த இனத்தை சார்ந்ததாக கூறி செயல்படுகின்றதோ, அந்த இனத்தையும் - மதத்தையும் இதற்கு எதிராக போராடுமாறு கோர வேண்டும். அந்த வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்.

இதற்கு இலங்கையின் மானிட வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியமானது. 2000 வருடங்களுக்கு முன் இலங்கையில் பௌத்தம் பரவி இருந்ததுடன், பௌத்தம் ஒரு இனத்துக்கோ, மொழிக்கோ, நாட்டுக்கோ சொந்தமானதாக இருந்ததில்லை. இந்த வகையில் பௌத்தம், தமிழ் மொழி பேசக் கூடிய மக்களின் மூதாதையர்களாலும் பின்பற்றபட்டதே. இந்த புரிதலும், வெறுப்புமற்ற பொது மனநிலையும் அவசியமானது. குறிப்பாக மதவெறுப்புக் கொண்ட, சொந்த மதவாதத்துக்குள் இனவாதத்துக்குள் இருந்து சிந்திக்கவும் - செயற்படவும் கூடாது.

இலங்கை எங்கும் பௌத்தம் இருந்தது என்பதும், பௌத்த வழிபாடுகள் நடந்ததை உறுதி செய்யும் தொல்லியல் சமூக அடித்தளங்கள் கடந்து, இவ் வரலாற்றுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. இதுபோல் பௌத்தத்துக்கு எதிராக சமணமும், அதைத் தொடர்ந்து சைவமும் இந்தியாவில் கோலோசிய காலத்தில், ஆட்சிகள் மதங்கள் சார்ந்ததாகவும் - வன்முறைகள் கொண்டதாகவும் மாறிய காலத்தில், மத வன்முறைகள் நடந்தன.

இந்தக் காலத்தில் வளர்ச்சியுற்ற சைவம் இலங்கையில் எல்லாப் பகுதிகளிலும் பரவியதுடன், அதற்கான வழிபாட்டுத் தொல்லியல் கூறுகளை இலங்கை எங்கும் காணமுடியும். பௌத்த வழிபாட்டு இடங்களில் சைவ (இந்து) கடவுள் இருப்பதுடன், இனம் மதம் கடந்து - மக்கள் மத்தியில் பொது வழிபாட்டு முறைகள் காணப்படுகின்றது. இந்த உண்மையை மறுத்து அரசு செய்வது போல் குறுக்கி அணுகுவது என்பது, பல கடவுள் நம்பிக்கை மீதான எதிர் வன்முறை.

பௌத்தம், சைவம் (இன்று இந்து) அடையாளங்களை இலங்கை முழுக்க அகழ்வுகளின் மூலம் கண்டறிய முடியும். அகழ்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்படும் இடங்களை, இன்றைய மதப்பிரிவுகள் - இனப்பிரிவுகள் மூலம் உரிமை கோருவது, மோதிக் கொள்வது தவாறனது. இதை மீறி அரசு பிரதேசங்களை இன-மத ரீதியாக ஆக்கிரமிப்பதற்கு எதிரான போராட்டம், எந்த ஒரு குறுகிய இனமத வடிவத்தில் அமைவதாகவும் இருக்கக் கூடாது. திட்டமிட்டு அரசு, தான் முன்னிறுத்தும் இனம் - மதம் சார்ந்து பிற இன-மதங்களை ஒடுக்குவதற்கு, அவர்களின் கூட்டு வாழ்வியல் கூறுகளை சிதைக்கவும் முனைவதன் மூலம், மக்களைப் பிரித்து மோத வைக்கின்றனர். இதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டை கூறுபோட்டு விற்கின்றனர். அனைத்தும் இதற்காகத் தான்.

அண்மையில் வடக்கின் சிறு தீவுகளை சீனாவுக்கு கொடுத்த போது, அதைப் பேச மறுப்பதையும், மறுபக்கம் இந்தியாவுக்கு சார்பாக பேசும் தமிழினவாத அடிமைத்தனத்தையுமே காண்கின்றோம். நாட்டை விற்பதை எதிர்த்தல்ல. இங்கு தொல்லியல் ஆய்வுகளை இன-மத ரீதியாக பிரித்து கையாளும் சதி, நாட்டைக் கூறு போட்டு விற்கத்தான். இதற்கு எதிரான இனவாதம் - மதவாதம் மூலம் எதிர்க்கும் தரப்பும், நாட்டை கூறு போட்டு விற்கும் அரசின் கொள்கையை எதிர்ப்பதில்லை. அதை சீனாவுக்கு கொடுக்காது அதை இந்தியாவுக்கு கொடுக்கவேணடும் என்றே முரண்படுகின்றன. இதற்கு உடன்படுவது என்பதன் பொருள், இனமத ரீதியாக தொல்லியல் ரீதியில் நாட்டை ஏலம் விடுவதுதான்.

தொல்லியல் ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்வது

இலங்கையில் ஒடுக்கப்படும் இனங்கள் மதங்கள் இதை எதிர்கொள்வது என்பது, ஒடுக்கும் அதே இனமத கண்ணோட்டத்தில் இருந்து ஒருநாளும் வெற்றிபெற முடியாது. இனமத வாதமற்ற மனிதக் கண்ணோட்டத்தில் இருந்து தான், வெற்றி பெற முடியும்.

மதத்தை தனிப்பட்ட தனிமனித நம்பிக்கையாக முன்னிறுத்தி, அரச அதில் தலையிடுவதையும், பராமரிப்பதையும் எதிர்த்துப் போராட வேண்டும். பாடசாலைகள் மதமயமாவதை எதிர்த்து, அதேநேரம் மதக் கல்விக்கு எதிராக போராடுவதுடன், அனைத்து மதங்கள் குறித்த பொதுக் கற்கையைக் கோரவேண்டும்.

பௌத்த மதம் என்பது சிங்கள இனமும் - சிங்கள மொழியும் என்று கருதும் நேர்கோட்டு கண்ணோட்டம் தவறானது. அதே போல் சைவமும் (இன்று இந்து மதம்) தமிழ் இனமும் தமிழும் ஒன்று என்ற அதே நேர்கோட்டு கண்ணோட்டத்தையும் மறுதளிக்க வேண்டும். மதம், மத நம்பிக்கை என்பது இனம், மொழி, பிரதேசம், நாடு என்ற எல்லை கடந்தது. தனிமனிதன் நம்பிக்கை சம்மந்தபட்டது. இந்தப் புரிதல் அவசியமானது.

மதம் தனிப்பட்ட மனிதனின் நம்பிக்கையிலான தனித் தெரிவு, இதற்கு இனம், பிரதேசம், மொழி அடையாளங்கள் கொடுப்பதை மறுக்கவேண்டும்;. மாறாக தமிழ் மொழியை பேசக் கூடிய ஒருவன் முஸ்லிமாக, பௌத்தனாக, கிறிஸ்தவனாக, நாஸ்திகனாக, பிற நம்பிக்கை கொண்டவனாக இருக்க முடியும். இது சிங்கள மொழி பேசும் மக்களுக்கும் பொருந்தும். சிங்கள மொழி பேசும் ஒருவன் இந்துவாக இருக்க முடியும். நாத்திகர்கள் எங்கும் இருக்கின்றார்கள். எல்லா கடவுளையும் வழிபாடும் பண்பும், பழக்கமும் கொண்ட இலங்கை மக்களின் தொன்று தொட்டு இருக்கும் குரோதமற்ற மனிதப்பண்பை பாதுகாக்க வேண்டும். அரசுக்கு எதிராக இதை மாற்ற வேண்டும்.

தமிழ் மொழி பேசக் கூடியவர்களின் மூதாதையர்கள் பௌத்தர்களாக இருந்ததையும், சிங்கள மொழி பேசக் கூடியவர்கள் சைவர்களாக இருந்ததை அங்கீகரித்து, அதை முழு மக்களுக்கும் முன்வைத்து அரசுக்கு எதிராக போராட வேண்டும்.

இன்று தொல்லியல் பகுதியில் வாழ்கின்ற மக்கள், தங்கள் மண்ணின் தொல்லியல் கூறுகளுக்கு பாதுகாவலராக தங்களை முன்னிறுத்தி பாதுகாக்கும் முன்னுதாரணங்கள் மூலம், இலங்கையின் உள்ள அனைத்து மக்களிடம் அதைக் கோர வேண்டும்.

அரசு எல்லா இன-மத பொதுப்பண்புகளையும் சிதைக்கின்றதுக்கு எதிராக, இலங்கையின் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் பொது நோக்கில் அனைவரும் சிந்திக்கவும் - செயற்படவும் வேண்டும். வேறு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது.