இலங்கை இனவாத அரசின் திட்டமிட்ட வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் மண் அபகரிப்பை நிறுத்தக் கோரியும், இராணுவ ஆட்சியை நீக்கக் கோரியும் சமஉரிமை இயக்கத்தினால் மட்டக்களப்பு நகரில் இன்று இடம்பெற்ற கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு கையெழுத்து இட்டதாக அங்கிருத்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கில் உள்ள தமிழ் அரசியற்ச் சக்திகள் செய்யாத- செய்யத் துணியாத இச்செயலை பாராட்டுவதாக இதில் கையெழுத்து இட்ட பொது மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். புலனாய்வாளர்களின் கண்காணிப்பின் மத்தியிலும் பெருமளவான மக்கள் இதில் கையெழுத்து இட்டுள்ளனர்

இந்நிகழ்வு, மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இடபெற்றது. இதில் தமிழ், முஸ்லிம் மக்கள் பலரும் கையெழுத்திட்டனர்.

வடக்கு, கிழக்கில் இராணுவ ஆட்சியை நீக்க வேண்டும்.

கைதுகள், கடத்தல்கள் உடன் நிறுத்தப்படல் வேண்டும்.

அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும்.

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வுரிமையை பறிக்கக் கூடாது,

அவர்களின் மண்ணை திட்டமிட்டு அபகரிப்பதை நிறுத்த வேண்டும்,

என்பது போன்ற கோரிக்கைகள் எழுதப்பட்ட நீளமான பதாகையில் இந்த கையெழுத்துக்கள் பெறப்பட்டன.

இந்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கை கொழும்பு மற்றும் காலி, கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் குறிப்பாக சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் இடம்பெற்றுள்ளதாகவும், பொதுமக்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருவதாகவும் சமஉரிமை இயக்கத்தின் இணை ஏற்பாட்டாளர் தோழர் றிச்சட் தெரிவித்தார்.