மக்கள் விரோத மாலிய இராணுவ ஆட்சியின் துணையுடன், ஒரு தலைப்பட்சமான ஆக்கிரமிப்பு யுத்தத்தில் பிரஞ்சு ஏகாதிபத்தியம் இறங்கியிருக்கின்றது. தன் நவகாலனியை தக்க வைக்கும் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் தான் பிராஞ்சு ஏகாதிபத்தியம் வலிந்து ஈடுபடுகின்றது. ஒருபுறம் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள, நவகாலனிகளை தக்கவைக்கும் போராட்டம் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான ஆக்கரமிப்பு யுத்தங்களாக மாறி இருக்கின்றது. லிபியா, சிரியா,… தொடங்கி மாலி வரை நடப்பது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கெடுபிடி யுத்தம்தான்.

பிராஞ்சு ஏகாதிபத்தியம் "இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு" எதிராகவும், "பணயக்கைதிகளை மீட்டவும்", "சொந்த நாட்டு மக்களைப் பாதுகாக்கவும்" என்று கூறிக் கொண்டு இந்த யுத்தங்களை நடத்துகின்றது. படை நடவடிக்கை மூலம் படைகளை பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக நிறுத்துவது என்பது, மாலியில் மட்டுமல்ல உலகெங்கும் நடந்து வருகின்றது. பல நாடுகளில் அமெரிக்கப் படைகள் இருப்பது போல், பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் தங்கள் முன்னைய காலனியிலும், இன்றைய நவகாலனிகளிலும் படைகளை நிறுத்தத் தொடங்கி இருக்கின்றது.

இன்று ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடைபெறும் பொருளாதார கெடுபிடி யுத்தங்கள் தான், இராணுவ ரீதியான ஆக்கிரமிப்பு யுத்தங்களாக இன்று பரிணாமம் பெற்று வருகின்றது. வெளிப்படையாகக் கூறும் காரணங்களுக்கு அப்பால் இருக்கும் உண்மை இதுதான். இந்த நாடுகள் உலகில் தனது பொருளாதார நலன் சார்ந்த சர்வாதிகார, இராணுவ மற்றும் இஸ்லாமிய ஆட்சிகளை பாதுகாக்கும் அதே நேரம், இதைக் காரணம் காட்டி தனது பொருளாதார நலனுக்கு முரண்பாடான நாடுகளை ஆக்கிரமிக்கின்றன.

இப்படி யுத்தங்கள் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலானதாக, தங்கள் செல்வாக்கு மண்டலங்களை தக்க வைப்பதற்காக, புதிய செல்வாக்கு மண்டலங்களை உருவாக்குவதற்கான யுத்தங்கள் தான் இவை. "ஜனநாயகத்தை பாதுகாத்தல்" "இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு" எதிரான யுத்தங்கள் என்பது மக்களை ஏமாற்றி ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கான காரணங்களாக இருக்க, இது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கெடுபிடி யுத்தங்களாகும்.

மேற்கு ஏகாதிபத்தியங்களின் பரஸ்பர ஒத்துழைப்புடன் நடக்கும் ஆக்கிரமிப்பு யுத்தம், சாராம்சத்தில் உள் முரண்பாட்டால் ஆனது. "ஜனநாயகத்தை பாதுகாத்தல்" "இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரானது", "பணயக் கைதிகளை மீட்டல்" .. என்ற ஏகாதிபத்திய ஆயுத்தத்தையே, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பயன்படுத்தும் போது அதுவே ஒத்துழைப்பாகவும், மறுபுறத்தில் நவகாலனிகளை தங்கள் சொந்த காலனியாக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் இடையிலான யுத்தமுமாகும்.

தங்கள் செல்வாக்கு மண்டலங்களுக்காகவும், காலனியாக்கும் ஏகாதிபத்திய யுத்தம் தான், "இஸ்லாமிய அடிப்படைவாதத்தை" ஆயுதபாணியாக்குகின்றது. இது அரசுக்கு எதிராக அடிப்படைவாதத்தை வளர்த்தெடுக்கின்றது. முஸ்லீம் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அரசுக்கு எதிரான, அதை ஆதரிக்கும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான யுத்தமாக மாறுகின்றது. ஏகாதிபத்தியங்கள் நாடுகளை ஆக்கிரமிக்க நடத்தும் யுத்தத்தில், அடிப்படைவாதத்தை தனது யுத்தப் பங்காளியாக மாற்றுகின்ற ஏகாதிபத்தியம், அவர்களை ஆயுத பாணியாக்குகின்றது. அதே நேரம் அவர்கள் உள்நாட்டு ஆயுதம் மற்றும் ஏகாதிபத்திய ஆயுதங்கள் கொண்டு, "இஸ்லாமிய அடிப்படைவாத" யுத்தத்தை உலகெங்கும் விரிவாக்கி நடத்துகின்றனர்.

இப்படி தாங்கள் ஆயுதபாணியாக்கிய "இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக்" காட்டி, உலகெங்கும் புதிய ஆக்கிரமிப்பை நடத்துகின்றனர். இப்படித் தான் தங்கள் படைகளை நிறுத்தும் புதிய காலனிகளை உருவாக்கும் வண்ணம், ஏகாதிபத்தியம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விரிவாக்கும் ஏகாதிபத்தியக் கொள்கையாக உள்ளது. இன்றைய உலக பொருளாதார நெருக்கடி என்பது, ஏகாதிபத்திய யுத்தங்களாக நாடுகளை ஆக்கிரமிக்கும் யுத்தமாக மாறி இருக்கின்றது. நாடுகள் சர்வாதிகார நாடுகளாக மாறி, ஏகாதிபத்தியங்கள் பின் அணி பிரிந்து வருகின்றது. இந்த அடித்தளத்தில் மக்களுக்கு எதிரான "இஸ்லாமிய அடிப்படைவாதத்தை" வளர்த்தெடுத்து, அதைக்காட்டி ஆக்கிரமிப்புகளை ஏகாதிபத்தியங்கள் நடத்துகின்றன.

ஏகாதிபத்தியத்தின் உலகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள புதிய சந்தை மட்டுமல்ல, சந்தையைப் பாதுகாப்பதும், யுத்தத்தின் மூலம் சமூக வளத்தை அழித்து புதிய தேவையை உருவாக்கி பொருளாதாரத்தை மீட்பதே பொருளாதார மீட்சிக்கான பொருளாதார கொள்கையாக இருக்கின்றது. மாலி மீதான பிரஞ்சு ஆக்கிரப்பு உள்நாட்டு மூலதனத்தை பாதுகாக்கவும், பொருளாதாரத்தை மீட்கவும் நடக்கும் அழிப்பு யுத்தம் மட்டுமல்ல ஆக்கிரமிப்பு யுத்தமும் கூட

"இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு" எதிராகவும், "பணயக்கைதிகளை மீட்கவும்", "சொந்த நாட்டு மக்களைப் பாதுகாக்கவும்" "ஜனநாயகத்தை பாதுகாக்க" வும் என்பதற்கான யுத்தமல்ல இது, ஏகாதிபத்திய மூலதனத்தின் நலன்கள் தான் யுத்தமாகி இருக்கின்றது.

 

பி.இரயாகரன்

20.01.2013