ஐயரின் நூல் வெளியீட்டின் பெயரில், நடப்பது என்ன? ஒடுக்கப்பட்ட மக்களையும், அவர்களின் தத்துவங்களையும் மேடை போட்டுத் தூற்றுகின்றனர். சுரண்டுவது முதல் சாதிய ஆணாதிக்க … ஒடுக்குமுறைகளை ஒழித்துக்கட்டக் கோரும் மார்க்சியத்தை தூற்றுகின்றனர். இதை ஒழித்துக்கட்டக் கோருவது தான் மார்க்சியம். இதற்கு வெளியில் மார்க்சியம் என்ற வேறு எதுவும் கிடையாது.

இங்கு ஐயரின் நூலை தமக்கு பயன்படுத்திக்கொள்ள முனைகின்றனர். ஐயர் புலி – புளட்டில் இருந்து விலகிய பின், தான் கொண்டிருந்த அரசியல் அடிப்படையில் நின்று கடந்தகால சம்பவங்களை விமர்சிக்கவில்லை. புலி ஆதரவாளரைக் கொண்டு தொகுத்த பின்புலத்தில், இந்த நூல் புலியை அப்பாவித்தனமான காட்டி புலியைப் பூசிக்க வைக்கின்றது. இந்த பின்னணியில் புலி அரசியலை விமர்சிக்கத் தவறியுள்ளது. இந்தப் பின்புலத்தில் இந்த நூலை புலிகளும், புலி சார்ந்த கோட்பாட்டு அடிப்படையைக் கொண்டவர்களும் தங்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகின்றனர். அதற்கு இனியொரு பாய்விரித்து ஏற்பாடு செய்கின்றது. இதுதான் பாரிசிலும் நடந்தது.

இந்த அரசியல் பின்புலத்தில், படிப்படியாக புலியல்லாத மாற்றுத்தளம் இல்லாது போகின்றது. எங்கும் புலிகளும், புலிக் கோட்பாடுகளும் முன்வைக்கப்படுகின்றது. இதைத்தான் இனியொரு தன் திடீர் அரசியல் வருகை மூலம் செய்து முடித்திருக்கின்றது. இங்கு கம்யூனிசமும், மார்க்சியமும் தூற்றப்படுகின்றது.

இந்த அரசியல் பின்புலத்தில் இடதுசாரிகளை பொத்தாம்பொதுவில் தூற்றிய வண்ணம்;, வலதுசாரிய புலி சித்தாந்தத்தை முனைப்புடன் முன்னிறுத்துகின்ற சத்தியசீலன். தன் அருவருப்பான கடந்தகால வலதுசாரி கொலை அரசியலுடன், மீண்டும் அதே புலிக் கோட்பாடுகளை முன்வைத்தார். இதைத்தான் அங்கு பலரும் செய்தனர். ஐயரின் நூல் சாதித்ததும், இதைத்தான். ஒரு சமூகப் படிப்பினையையோ, மீள்பார்வையையோ, சுயவிமர்சனத்தையோ இந்த நூல் செய்யவில்லை. இந்த நூல் நடந்ததை நியாயப்படுத்தி இருக்கின்றது. மிக விரைவில் ஐயரின் நூல் மீதான விமர்சனம் மூலம், இதை விரிவாக நாம் அணுகவுள்ளோம்.

மேடை ஏறியவர்கள் வலதுசாரிய குறுந் தமிழ்தேசியத்தையும், அதை முன்னெடுத்த புலிகள் தோற்றதற்கான காரணத்தை தேடாது, தங்கள் வலதுசாரி வக்கிரத்துடன் கம்யூனிசத்தை மாறி மாறித் தூற்றினார்கள். மேடை ஏறுகின்றவர்கள் முதல் இதை மறுத்து பேசாத வரை, வர்க்க உணர்வற்ற நேர்மையற்ற புரட்டை பரஸ்பரம் பாதுகாத்துக் கொள்வது அன்றாட நிகழ்வுகளின் இன்றைய அரசியல் சடங்குத்தனமாகும்.

அன்று கொலை செய்வதையே அரசியலாகக் கொண்டு தமிழினத்தையே புதைகுழிக்கு அனுப்பத் தூண்டிய சத்தியசீலன் போன்றவர்கள், இன்று அதையே சரி என்று மீளக் கூறி உறுமுகின்ற கூத்தை மேடையில் காண்கின்றோம். இந்த தற்குறித்தனத்தை தாண்டி எதையும் இவர்கள் கற்றுக்கொண்டதுமில்லை, கற்றுகொடுக்க புதிதாக எதுவுமிருப்பதில்லை. தாம் அல்லாதவரை சுடுகின்ற அதே அரசியலை தாண்டி, எதையும் புதிதாக இன்று கூட முன்வைக்க முடியாத தற்குறிகள் தான் இவர்கள். அதை மேடையேறி கூறுகின்றனர். "ஒற்றுமை", "தமிழன்" என்று கூறி கொலை செய்யும் அரசியலைத் தாண்டி, எதையும் புதிதாக சிந்திக்க வழி;காட்ட முடியாத அரசியல் கற்றுக் குட்டிகள். இதை அரசியலாக கொண்ட புலிக்குள் தாமாகவே காணாமல் போனவர்களுக்கு, இன்று புதிதாக இனியொரு மேடை போட்டுக் கொடுக்கின்றது. கம்யூனிசத்தை தூற்றுவது தான், இவர்களின் மேடை அரசியலாகின்றது. இவர்களை நாம் வைக்கும் கம்யூனிச அரசியல்தான் இன்று அச்சுறுத்துகின்றது என்பதை இவர்களின் அரசியல் எதிர்வினை எடுத்துக் காடடு;கின்றது.

அன்றில் இருந்து இன்றுவரை, எதையும் இவர்கள் சுயவிமர்சனம் செய்தது கிடையாது. இனியொரு இந்த தற்குறிகளை முன்னிறுத்தி நடத்தும் புலித்தேசிய வலதுசாரிய அரசியலை, தங்கள் தலையில் மேல் தூக்கி வைத்து ஆடும் புலியாட்டம் மூலம், கம்யூனிசத்தை தம் பங்குக்கு தூற்றிப் புதைக்கின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலைத் தூற்றியபடி, "ஒற்றுமை" பற்றியும், "தமிழன்" என்ற அடையாள மூலம் ஒன்றிணைவு பற்றியும் மீண்டும் புலிப் பல்லவி தான் பாடப்பட்டது.

ஆம் "ஒற்றுமை" நல்லதொரு விடையம். ஒற்றுமை பற்றியும், தமிழன் அடையாளம் பற்றியும் பேசுகின்றவர்கள் தான், இதற்கு முதலில் தடையாக இருகின்றார்கள். தமிழனுக்குள் இருக்க கூடிய அனைத்து உள் ஒடுக்குமுறைகளையும், முரண்பாடுகளையும் களையுங்கள், ஒற்றுமை தானாக வந்துவிடும். தமிழன் அடையாளம் தானாக வந்துவிடும்.

அதைச் செய்ய மறுக்கின்ற கூட்டம், அதை செய்யக் கோரும் கோட்பாடுகளை கூட்டம் போட்டு அவதூறு பொழிகின்றனர். தமிழனை தமிழன் ஒடுக்குகின்ற, அதைப் பாதுகாக்கின்ற "ஒற்றுமை" பற்றியும், "தமிழ்" அடையாளம் பற்றியும் இவர்கள் பேசுகின்றனர். இந்த அரசியல் பின்னணியில் தான் தமிழனையே ஒடுக்கி படுகொலை செய்தனர். தமிழன் ஒற்றுமைக்கும், தமிழ் அடையாளத்துக்கும் தடையே, தமிழனை பிரித்;து வைத்துக் கொண்டு இதை பேசுகின்ற இந்தப் புல்லுருவிக் கூட்டம் தான்.

இந்தப் பின்னணியில் தமிழன் ஒற்றுமை பற்றியும், தமிழன் அடையாளம் பற்றியும் பொறுக்கித்தனமாக வாய்கிழியப் பேசுகின்றனர். ஒற்றுமைப்படுத்த போட்டுத்தள்ளிய பரம்பரை பாசிசக் குணத்துடன், அதையே மீளப் பிரச்சாரம் செய்கின்றனர், உறுமுகின்றனர்.

"ஒற்றுமை", தமிழன் "அடையாள" அரசியல் உள்ளடக்கம், மாற்றுக் கருத்துக்கும் சிந்தனைக்கும் இடமில்லை என்ற அதே புலிக் கோட்பாடுதான். இது அடிப்படையில் ஐனநாயகத்தை மறுப்பதுதான்.

மார்க்சியம் என்பது, இவர்கள் காட்டுவது போல் சமூகத்துக்கு வெளியில் இருப்பதில்லை. சமூகத்தின் உள் முரண்பாடு சார்ந்து. சுரண்டல், சாதியம், ஆணாதிக்கம், பிரதேசவாதம் .. என்று அனைத்துவகை ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து ஒழித்துக் காட்டும் கோட்பாடுதான் மார்க்சியம். இதற்கு வெளியில் எதுவுமல்ல. "தமிழன்", "ஒற்றுமை" ஊடாக இதை பேணுவதையும், பாதுகாப்பதையும் தங்கள் வாழ்வியல் நடைமுறை கொண்டு அதை ஓழித்துக்கட்ட மறுக்கும் கூட்டம், மார்க்சிய எதிர்ப்பு ஊடாக இதை நிலைநிறுத்த முனைகி;ன்றனர். இதைத்தான் இன்று இனியொருவின் பக்கத்துணையுடன் வலதுசாரி தற்குறிகள் முன்வைக்கின்றனர்.

 

பி.இரயாகரன்

01.05.2012