ஓசூர் சிப்காட்2இல் எலக்ட்ரானிக் சர்க்கியூட் போர்டுகளை உற்பத்தி செய்யும் ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் எனும் தனியார் நிறுவனத்தில், அற்பக் கூலியையும் காமவெறி பிடித்த உற்பத்திப் பிரிவு மேலாளர் பெரியசாமியின் இழி சொற்களையும் சகித்துக் கொண்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களில் ஒருவர்தான், தேவி. பணிநிரந்தர ஆணை தரப்படாமல், மேலும் பயிற்சிக்காலம் நீட்டிக்கப்பட்டதால், கடந்த 572011 அன்று அதை ஏற்க மறுத்து தேவி வாதிட்டபோது, அவரையும் அவரது கணவரையும் இழிவாகவும் ஆபாசமாகவும் பேசி அவமானப்படுத்தியுள்ளான், பெரியசாமி. தனக்குரிய சேமநலநிதி முதலானவற்றை ஒப்படைத்துவிடுமாறும் வேலையிலிருந்து விலகிக் கொள்வதாகவும் தெரிவித்து, மறுநாள் ஆலைக்குச் சென்ற தேவியிடம் மேலும் ஆபாசமாக அவன் பேசத் தொடங்கியதும், பெரியசாமியின் வாயிலும் மூக்கிலும் மிளகாய்ப் பொடியை வீசிய தேவி, செருப்பைக் கழற்றி விளாசித் தள்ளினார். பின்னர், தனக்கு நேர்ந்த அநீதியை விளக்கி பெரியசாமியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு புகார் கடிதம் கொடுத்தார். ஆனால் போலீசோ தேவியைக் கைது செய்ததோடு, அவரது புகாரை வாங்க மறுத்தது.

இத்தகவல் அறிந்ததும், இப்பகுதியில் இயங்கும் பு.ஜ.தொ.மு.வினர் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைத் திரட்டி, தோழர் பரசுராமன் தலைமையில் ஓசூர் வட்டத் தொழிலாளர் அலுவலகம் முன்பு, "காமவெறியனுக்கு செருப்படி கொடுத்த வீரப் பெண்மணி தேவி வாழ்க! முதலாளித்துவ பயங்கரவாதம் ஒழிக! வீரப்பெண்மணி தேவியை விடுதலை செய்! காமவெறியன் பெரியசாமியைக் கைது செய்!' என்று விண்ணதிரும் முழக்கங்களுடன் எழுச்சிகரமாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். தோழர் பரசுராமன் மற்றும் 20 பேர் அனுமதியின்றி சாலையை மறித்ததாகப் பொய் வழக்கு பதிவு செய்த போலீசு, தோழர் பரசுராமனைக் கைது செய்து சிறையில் அடைத்தது. "ஆனந்த் எலக்ட்ரானிக் பெண் தொழிலாளி மீது பாலியல் துன்புறுத்தல்! காமவெறிபிடித்த அதிகாரி பெரியசாமிக்கு செருப்படி கொடுத்தார் பெண் தொழிலாளி!' என்ற முழக்கங்களுடன் ஓசூர் நகரெங்கும் ஒட்டப்பட்ட பு.ஜ.தொ.மு.வின் சுவரொட்டிகள் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தையும் போராட்ட உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. தோழர் பரசுராமன் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், வீராங்கனை தேவியை விடுதலை செய்யவும் காமவெறியன் பெரியசாமியைத் தண்டிக்கவும் அடுத்தகட்டப் போராட்டத்துக்கு ஓசூர் தொழிலாளர்கள் தயாராகி வருகின்றனர்.

தகவல்: பு.ஜ.தொ.மு; ஓசூர்.