புலிகளின் முடிவுரை எழுதப்பட்டதும்
புரட்சிநூல் வியாபாரிகள்
இடது வேடமிட்ட முகத்திரை விலக்கப்பட்டு
தூதரகத்து தீபாவளிப் படையலை
வெற்றிக்களிப்பில்  ருசிக்கிறார்கள்.

 

 

எத்தனை ஆயிரம்
உயிர்களின் உதிரத்தில்
எழுதப்பட்ட வரலாறு சத்திராதிகள் கைகளில்
வெற்றிலையோடு உலாவரவோ
வீரம் பேசி எமை ஏய்த்தனர்.

மண்ணுக்காய் மக்களிற்காய்
என மனக்கண்ணில்
விண் நட்சத்திரங்களாய்
தமிழ் மண்ணில் வீசிய செல்வங்கள்
தூ… எண்ணிப்பார்.

 

புலியின் அரசியல் தெரியாது
புதையுண்ட மனிதநேயர் கதைதெரியாது
விடியும் தமிழீழம்
எனும் வீராப்பு
போராளிகள் நெஞ்சத்துள் ஊறிக்கிடந்தது.

மரணித்துப் போனாலும்
மக்களை  நேசித்துப் போயினர்
புலியை விடு தலைமை விடு
தத்துவம் பேசி எதிரியை நக்குவதை விட
ஒன்றும் அறியாப் போராளிகள் உத்தமர்கள்.

செத்துப் பிழைத்த சனம்
வறுமை துயர் வாழ்வே நித்தம் இடர்
கொடுமைக்குள்ளும்
காலில் விழமறுக்கும் பாலகன்
தத்துவங்களை கற்கவில்லை
அத்தனை வலி பிஞ்சு நெஞ்சத்தில்
எப்படி உங்களால்
அழிப்பவன் காலில் விழமுடிகிறது.

கங்கா

08/11/2011
செய்தி:

06 ஆம் திகதி ஞாயிறு மாலை இலங்கை தூதரகத்தினால் டொராண்டோ கொரியன் மண்டபத்தில் 2011 தீபாவளி கொண்டாட்டங்கள் இந்துமத பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளுடன் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பிரதம விருந்தினராக இலங்கை அமைச்சர் தோழர் வாசுதேவ நாணயக்கார கலந்து சிறப்பித்தார்……….

……இறுதியில் இட்லி, வடை, சாம்பார், சட்னி, லட்டு, தேநீர் என்று சுவையான உணவுகள் வழங்கப்பட்டிருந்தன. வந்தவர்கள் பலரும் சந்தோஷமாக “ஒரு பிடி” பிடித்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. ………..