சுயநலமும், குறுகிய நோக்கமும் கொண்ட இந்த சமூக அமைப்பில், மனிதனாக வாழ்தல் என்பது கூட விதிவிலக்குத் தான். தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்ற குறுகிய வட்டத்தில் வாழ்கின்ற மனிதர்களிடையே, விதிவிலக்காக வாழ்ந்த ஒரு தாயின் மரணச் செய்தியை கேட்க நேர்ந்தது.

 

சாதாரணமாகவே இந்த சமூக அமைப்பில் வாழ்ந்து மடிந்த ஒரு பெண் தான் நாகலிங்கம் சிவகெங்கை. சபேசனின் அம்மாவாக அறிமுகமாகி, எமக்கு எல்லாம் அம்மாவாக இருந்த அந்த தாய், தனது முதிர்ந்த வயதில் 13.12.2007 அன்று லண்டனில் மரணமானார்.

 

நான் இன்று பழைய நினைவுகளை மீட்டுப்பார்க்கின்றேன். அந்த தாயின் அர்ப்பணிப்பை, மனிதம் பற்றிக் கொண்டிருந்த அந்த சமூகப் பண்பை, எந்த சுயநலமுமின்றி எம்முடன் வாழ்ந்த அந்த தாயின் தாய்மைப் பண்பை, மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்க்கின்றேன்.

 

எம்மோடு வாழ்ந்த ஒவ்வொரு தோழர்கள் துன்பத்திலும் பங்கு கொண்டவர். ஒவ்வொருவரிலும் மிகுந்த அக்கறை கொண்டவர். தனது உணவைக் கூட எம்முடன் சரி சமனாக பகிர்ந்தவர். நாம் அவரின் உற்றார் உறவினர்கள் அல்ல. யாரென்று தெரியாத எம்மை, அவரின் மகன் மூலம் அறிமுகமானதால் மட்டுமோ, மகனுக்காகவோ எம்மை அனுசரிக்கவில்லை. மகன் நாட்டைவிட்டு வெளியேறிய பின் தான், எமது உறவு கூட மிகப்பலமானதாக மாறியது.

 

சமுதாயத்தின் விடுதலைக்காக போராடிய பலரை, அரவணைத்தவர். நேரடி யுத்த களத்தில் போராடுபவன் மட்டும் வரலாற்றில் பங்கு பற்றுபவனல்ல, தியாகத்துக்குரியவர்கள் அல்ல. மார்க்சிம் கார்க்கியில் தாய் நாவலில் வரும் தாய் போல், பல தளத்தில் சிலர் (தாய்மார்கள்) போராடுகின்றனர். எந்த சுயநலமும் இன்றி, எந்த குறுகிய நோக்கமுமின்றி இயங்குதல், வாழ்தல் என்பது, இந்த சமூக அமைப்பில் அசாத்தியமானது. இவற்றை மீறி எம்முடன் எம் நினைவுகளுடன் வாழ்ந்தவர். இந்த மனிதப் பண்பை, போராடுபவர்கள் மத்தியில் கூட காண்பது அரிது. இதைத்தான் இந்த இடத்தில் என்னால் மீள நினைத்துப் பார்க்க முடிகின்றது.

 

உள்ளத்தில் ஒன்றைவைத்துக் கொண்டு, அவர் மற்றவருக்கு உதவியவரல்ல. கள்ளம் கபடமற்ற இதய சுத்தியுடனான அவரின் மனித உறவுகள், இந்த மரணத்தின் மூலம் எம்மை உலுப்பித் தான் விடுகின்றது. அதைக் கற்றுக் கொள்ளத்தான் கோருகின்றது.

 

எமக்கு மட்டும் அவர் உதவியவர் அல்ல. அடிக்கடி இராணுவத் தாக்குதலுக்கு உள்ளாகி சுற்றுவட்டாரமே அகதியாகும் போதும், அவர்களின் ஒரு பகுதியினரின் தங்குமிடமாக இவர்கள் வீடு இருந்தது தற்செயலானதல்ல. நான் மண்ணைவிட்டு வெளியேறிய பின், எனது குடும்பம் அகதியாகிய போதும் கூட இந்த தாயிடம் தான் ஓடிவந்தார்கள். அந்தளவுக்கு முகம் சுழியாது, இருப்பதை பகிர்ந்து உண்பது முதல், தமது அன்பால் இன்முகத்தால் அனைவரையும் அரவணைத்தவர். தமது வாழ்வை, அவரின் மூத்த மகளுடன் சேர்ந்து, இப்படித் தான் என்று வாழ்ந்து காட்டியவர். இது சாதாரணமானதல்ல. சுயநலம் கொண்ட எமது சமூக சிந்தனை முறையில் இருந்து விடுபட, மனதளவில் இதற்கு நிறையவே தியாகம் செய்யவேண்டும், போராட வேண்டும். இயல்பான இயற்கையான மனிதப் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

 

இதற்கு இந்த தாய், இந்த பெண், இந்த மனிதர், இந்த சமூகத்தின் தம்மளவில் எடுத்துக்காட்டாக தான் வாழ்ந்தார்.

 

இதற்கு பின்னால் பலருக்கும் இல்லாத மனிதத்தன்மை இருந்தது. மனிதப் பண்பு இருந்தது. மனித உணர்வு இருந்தது. இவை அவர் பற்றிய குறுகிய புகழ்ச்சியல்ல. மாறாக எதார்த்தத்தில் மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் வாழ்ந்து காட்டியவர்.

 

பல உயிர் ஆபத்தான இயக்கப் படுகொலை நிகழ்வுக் காலங்களில் கூட, துணிச்சலுடன் எதிர் கொண்டவர். சில துன்பகரமான நிகழ்வுகள், அவதூறுகளின் பின் கூட, அவர்கள் தம் முந்தைய மனிதப் பண்பை துளியளவும் கூட இழந்தது கிடையாது. அந்த தாய் தன்னலமற்ற வகையில் பலருக்கு உதவியதை, காலத்தால் பலர் மறந்திருக்காலம். ஆனால் அதை மீட்கின்ற போது, இலகுவாக யாரும் புறந்தள்ளிவிட முடியாது.

 

சுயநலமே சமூக அமைப்பாகிவிட்ட எல்லைக்குள் இதை எண்ணிப் பார்க்கின்றேன். மனிதனாக வாழ்தல் என்பது எடுத்துக்காட்டுத் தான். இந்த வகையில் இந்த தாய் விதிவிலக்குத் தான். மற்றவர்களுக்கோ இது எடுத்துக் காட்டுத்தான்.

 

பி.இரயாகரன்
15.12.2007