தொலைந்து போகும் அடையாளங்களை
தூக்கிநிறுத்துவதற்கு
புலிப்பிரமுகர்கட்கும் புலிஎதிர்ப்பு பிரமுகர்கட்கும்
மகிந்த வள்ளலானார்
இரும்பும் கரும்பாய் இனிக்குமடா இனி….

செயலிறங்கத் துடிக்கும்
புலத்து இளையோரை பொறிக்குள் வீழ்த்திட
தூதுவராலயத்து தூதுவர்கள்
அபிவிருத்திக் குச்சிகளோடு
ஊரோடு உறவாட வருகிறார்கள்

ஊர்சார் அமைப்புக்களே உசாராகுங்கள்
குண்டுமணியளவேனும்
எங்கள் சொந்தப்பலத்தில் நிகழட்டும்
எங்கள் சொந்தநிலத்திற்கு சேரட்டும்
புதிதாய் முளைக்கும் ஊர்ப்பற்றாளரிடம் விழிப்பாயிருங்கள்

இயற்கைவளமே
எங்கள் பலமென்று வாழ்ந்தவர் நாம்
கடலும் வயலும் பனையும் தென்னையும்
கனிதருமரங்களும் எங்கள் சொந்தம்
எங்கள் நிலத்தில் மூச்சுவிட்டு இருக்கவிடு
இராணுவ அரண்களை இடித்து விலகு

இரந்து நின்றவரல்லர் எமது சொந்தங்கள்
உழுது வாழ்ந்தவர்கள்
உழைப்பால் நிமிர்ந்தவர்கள்
குமுறும் அலையிலும்
பாய்மரம் கட்டி கடலோடி வாழ்ந்தவர்கள்
சுடுமணலும் புழுதியும்
எம் பாதத்துக்குப் பரிட்சயமானவை
கடுகளவும்  அநீதிக்கு அடிபணியா
நீதிக்கு குரல்கொடுக்கும் 
நெஞ்சுரமே மண்வாடை

போர் ஓய புலத்தே புற்றீசலாய்
அரச பரிவாரங்கள் ஆலாய்ப்பறக்கிறது
விழிப்பாய் இருப்போம்
————————————நெடுந்தீவகன் ………………………………………