வெளிப்படையற்ற தீர்வைக்காணல் என்பது ஒரு சதி. வடக்கு கிழக்கு இணைப்பாகட்டும் அல்லது எதுவாக இருக்கட்டும், அவை வெளிப்படையாகவே முன்வைக்கப்பட்டு அணுகப்பட வேண்டும். தமிழ் மக்களையும், தமிழ் இனப் பிரிவுகளையும் இணைக்கும் வண்ணம், நேர்மையான வெளிப்படையான அரசில் அணுகுமுறை அவசியமானது. இதை மறுப்பதுதான் கூட்டமைப்பின் இன்றைய அசிங்கமான சதி அரசியல். இதைத் தான் கடந்தகாலத்தில் புலிகள் செய்து, அரசியல் ரீதியாகவே மடிந்து போனார்கள்.

இதைத்தான் தமிழ்த்தேசியம் என்று புலிகள் கூட்டணியுடன் இருந்து பெற்ற போது, அதன் வர்க்க வக்கிரங்களை எல்லாம் உள்வாங்கி அதில் புளுத்துத்தான் செத்தனர். அது தன் மோசடியான வக்கற்ற அரசியல் மூலம் மக்களை ஏமாற்ற, தான் அல்லாத அனைத்தையும் துரோகமாக காட்டி தன்னை நிலைப்படுத்தியது. இந்த பித்தலாட்ட அரசியல் விளைநிலத்தில் தங்கள் எதிரிகளையே கொல்ல உருவாக்கிய கொலைகாரனாக பிரபாகரனும், அவனின் புலி இயக்கமும் பல ஆயிரம் பேரைக் கொன்றே தன்னை சமூகத்தின் முன் நிலைநிறுத்தியது. மக்களின் உரிமைகள் புலிகளை அரசியல் அனாதையாக்கும் என்று புலிகளே சொல்லுமளவுக்கு, புலிகள் மக்களின் விரோதிகளாக புளுத்தனர். 

இவர்களின் அரசியல் என்பது, அந்த வர்க்கத்தின் நேர்மையற்ற அரசியலுடன் தொடர்புடையது. இப்படி கடந்தகால அரசியல் அனைத்தும் மூடுமந்திரமாக, மக்களுக்கு தெரியாத ஒரு அரசியல் சதியாகவே இருந்தது. 

இந்தியா 1985 இல் புலிக்கு 50 கோடி கொடுத்து அநுராதபுர தாக்குதலை நடத்தியது போல், தமிழ் பகுதியில் தேர்தலை பகிஸ்கரிக்க வைக்க புலிக்கு பல பத்து கோடியை மகிந்த கொடுத்து வென்றதன் மூலம் புலியை அழித்தனர். இப்படித்தான் புலிகள் அரசியல் மக்களுக்கு எதிராக புளுத்தது.  புலிகளின் அரசியலோ நேர்மையற்றதும், பணத்துக்கு விலை போனதாகவுமே இருந்தது.

இது எப்போதும் மக்களுடன் வெளிப்படையாக இருந்ததில்லை. தன்னை முற்றுமுழுதாக மூடிமறைத்துக் கொண்டது. இதன் மூலம் சதியை அரசியலாக்கியது. நிலவும் சமூக பிற்போக்கு சமூக கட்டுமானத்தில் இயல்பாக உருவான அரசியல் தளத்தில், தன்னை செழிப்பாக்கிக் கொண்டது. இப்படித்தான் கூட்டணியிடமிருந்து புலிகள் தங்கள் அரசியலை பெற்று இருந்தனர். இதனால் மே 18 உடன் புலியின் கதை முடிவுக்குவர, கூட்டணி மீண்டும் அதையே இன்று தொடர்கின்றது.

மகிந்தா உள்ளிட்ட இந்திய எஜமானர்கள் வரை இரகசியமாக நக்கும் கூட்டமைப்பு, எதையும் மக்களுக்கு வெளிப்படையாக முன்வைத்து செயல்படவில்லை. ஒரு இரகசிய சதி மூலம், தமிழ்மக்களுக்கு தீர்வு காணப்போவதாக கூறிக்கொண்டு, மக்களின் முதுகில் குத்துகின்றனர். புலிகள் எதைச் செய்தனரோ, அதையே மீளவும் அச்சுப் பிசகாது செய்கின்றனர்.

குறிப்பாக தமிழ் மக்கள் மற்றும் மற்றைய தமிழ் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான சதிகளை செய்கின்றனர். முதலில் 

1. தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன என்பதை, தங்கள் தரப்பில் இருந்து வெளிப்படையாக வைத்துத்தான் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும்.
 
2. வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மை இன மக்களுக்கான (குறிப்பாக முஸ்லீம் மக்கள்) தீர்வை, தங்கள் தீர்வில் உள்ளடக்கியிருக்க வேண்டும்;.

3.வடக்கு கிழக்கு மக்களின் பிரதேச முரண்பாடுகளை தீர்க்கும் வண்ணம், தங்கள் தீர்வுத்திட்டத்தில் அதை தீர்க்கும் வண்ணம் வெளிப்படையாக உள்ளடக்கியிருக்க வேண்டும்.

இந்த வகையில் நிலவும் சமூக அமைப்பில் வைக்கும் தீர்வு, வெளிப்படையாக அந்த வர்க்க சக்திகளுக்கு இடையிலாவது தங்கள் முரண்பாட்டைத் தீர்க்கும் வண்ணம், இணக்கமான ஒரு வெளிப்படையான ஒருமைப்பாட்டை அடையும் வண்ணம் வெளிப்படையாக இருக்கவேண்டும். அதற்குரிய அரசியல் நேர்மையான அரசியல் அவசியமானது. எல்லா மக்கள் விரோதிகளும் இதை மறுக்கின்றனர். இரகசியமாக சதித்தனத்துடன் தீர்க்கமுடியும் என்று சாதிக்கின்றனர்.

தமிழர், முஸ்லீம், பிரதேசவாத முரண்பாடு சார்ந்த சுரண்டும் இந்த சமூக அமைப்பு சார்ந்த வர்க்கப் பிரிவினர், தங்கள் பகுதியை எப்படி நிர்வகிப்பது என்பதில் வெளிப்படையான ஒரு இணக்கப்பாடான அரசியல் அணுகுமுறை அவசியம். இப்படி தங்கள் சொந்தத் தீர்வின் மூலம் தான், பேரினவாதத்தை அணுக வேண்டும். இதற்கு மாறாக தீர்வு விடையத்தில் தமக்குள் பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, இரகசியமாக நடத்தும் சதி அரசியலோ முழு மக்களுக்கும் எதிரான அரசியல் சதியாகும்.

அண்மையில் இந்திய எஜமானர்களிடம் கூட்டணி நடத்திய சதி அரசியல், ஆழமாக தமிழ் மக்களை பிளக்கின்றது. வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளடங்கிய தீர்வை கூட்டணி முன்னிறுத்தி நடத்திய சதி அரசியலும், இதையடுத்து முஸ்லீம் காங்கிரஸ்சின் எதிர்ப்பும், மொத்த மக்களுக்கும் எதிரானது. இவை மொத்த தமிழ் மக்களுக்கும் எதிரான மற்றொரு சதியாகும். இதைத்தான் கடந்த 30 வருடத்தில் துப்பாக்கி முனையில் புலிகள் செய்ததன் மூலம், மற்றைய சிறுபான்மை இன மக்களையும் அழித்ததன் மூலம் தமிழினத்தையே அழித்தனர். இதைத்தான் இன்று மீண்டும் கூட்டணி சதிகள் மூலம் செய்கின்றனர். ஆம் பேரினவாதம் செழித்து வாழ, தங்கள் பங்குக்கு இவர்கள் சதி செய்கின்றனர். தங்கள் இந்த சதியை மூடிமறைக்கவே, இரகசியமான சதி அரசியலை நடத்துகின்றனர். மீண்டும் தமிழ்மக்கள் மேல் மண்ணை அள்ளிப்போடும் சதிதான், இன்றைய தமிழ் அரசியலாக உள்ளது.  

பி.இரயாகரன்
19.07.2010