உலகில் ஜனநாயகத்தை அமுல்படுத்தும் ஏகாதிபத்தியங்கள் எப்பொழுதும் தமது நலன்களை முன் நிறுத்தி இதை ஒரு கூச்சலாக்கி உள்ளனர். இந்த ஜனநாயகம் என்பது எப்பொழுதும் மக்களைப் பலியிடுவதே.

அண்மையில் வெளிவந்த “யுனி செல்” அறிக்கை ஒன்றின்படி கடந்த பத்து ஆண்டுகளில் 20 இலட்சம் சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50 இலட்சம் சிறுவர்கள் அங்கவீனமாகியுள்ளனர். மேலும் 50 இலட்சம் சிறுவர்கள் அகதி முகாம்களில் தங்கி உள்ளனர். 120 இலட்சம் சிறுவர்கள் வீடு வாசல்களை; இழந்து நடுத்தெருவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உணவின்றியும், மருத்துவ வசதிகள் இன்றியும் 25 இலட்சம் பேர்  மரணம் அடைந்துள்ளனர். கடந்த பத்து வருடங்களில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் மொத்த 80 கோடி மக்கள் வருமான வீழ்ச்சியை அடைந்துள்ளனர்.

2;ம் உலக யுத்தத்தின் பின்னும், பனிப்போர் முடிந்து இன்றைய நாட்களிலும் முதல்முறையாக சுமார் 40க்கு மேற்பட்ட யுத்தங்கள் தற்பொழுது நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்நிலையில் உலக அமைதியையும் ஜனநாயகத்தையும் பற்றி கூச்சல் போடும் ஏகாதிபத்தியங்கள் தமது கொள்கைகளை இலகுப்படுத்த பல வழிகளில் முயன்று வருகிறது. இந்த வகையில் உள்நாட்டு யுத்தங்களை ஏற்படுத்தவும் மத, இன மோதல்களை தூண்டிவிடவும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதி, பொருளாதாரம், ஆயுதங்களைப் பயன்படுத்தி மூன்றாம் உலக நாடுகளை நவ காலனயாக்கி காலில் போட்டு மிதிக்கிறது.

ஐ.எம்.எவ் (IMF) மூலமும், புதிய வங்கிகள் டங்கல் திட்டம் போன்றவற்றின் ஊடாகவும் உலகை அடக்கி ஆள்கின்றன. இதன் மூலம் கடுமையான நிர்ப்பந்தங்களை விதித்து சமூக நலத்திட்டங்கள், மானியங்களை நீக்குவதென எண்ணற்ற வழிகளில் வறிய நாட்டு மக்களை ஒட்டச்சுரண்டி வருகின்றனர். இதன் மொத்த விளைவுகளே மேற்கூறிய சிறுவர்கள் தொடர்பான புள்ளி விபரங்கள்.