பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், முதலாளிகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் நியாயப்படுத்தப்படுகின்றன.

“இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்கச்ளுக்கு உரியது” என 2010-11 ஆம் ஆண்டுக்கான மைய அரசின் வரவு செலவு அறிக்கை பற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு பாதி உண்மை; இன்னொரு பாதியோ திரித்துக் கூறப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் என அவர் குறிப்பிடுவது நமக்குத்தெரிந்த குப்பன், சுப்பன் போன்ற சிறு நடுத்தர விவசாயிகளையோ, விவசாய கூலித்தொழிலாளர்களையோ குறிக்கவில்லை. ஏற்றுமதியை குறிவைத்து விவசாயத்தில் குதித்துள்ள புதுப் பணக்கார விவசாயிகளையும்; ஒப்பந்த விவசாயத்திலும், விவசாய விளைபொருட்கள் கொள்முதலிலும் இறங்கியுள்ள ஐடிசி, ரிலையன்ஸ், பிர்லா, பெப்சி போன்ற முதலாளித்துவ நிறுவனங்களையும் குறிப்பிடுகிறார்.

விவசாய உற்பத்தியை பெருக்குவதற்காக இந்த பட்ஜெட்டில் நான்கு அம்ச திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாயிக்கு வழங்கப்படும் வங்கிக்கடன் 3.75 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும் என்பது அத்திட்டத்திலுள்ள கவச்சிகரமான அம்சமாகும். 2000 ஆம் ஆண்டு தொடங்கி 2006 ஆம் ஆண்டு முடிய பொதுத்துறை வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள விவசாயக்கடன் பற்றி நடத்தப்பட்டுள்ள ஆய்வில் 25000 ரூபாய்க்கும் குறைவாக வழங்கப்படும் கடன்களின் எண்ணிக்கை இந்த ஆறு ஆண்டுகளில் சரிபாதியாக குறைந்துவிட்டதாகவும், அதே  பொழுதில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு 10 கோடி 20 கோடி என வழங்கப்படும் கடன்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வறிக்கையை அளவுகோலாகக் கொண்டு பார்த்தால் இந்த 3.75 லட்சம் கோடி ரூபாய் கடனை சுருட்டப்போகும் விவசாயிகள் யாராக இருப்பார்கள் என்பது எளிதாக விளங்கிவிடும்.

விலைவாசி உயர்வால் ஏழைகள் உணவுத்தேவையை சுருக்கிக்கொள்ளும் நிலையில் பஞ்சாப் அரசின் திறந்தவெளி கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ள கோதுமை தண்ணீரில் ஊறி பாழாகிவருகிறது

 


விவசாய விளை பொருட்கள் அழுகி பாழாவதைக் குறைக்கவேண்டுமென்றால், அரசே கிராமப்புறங்களில் குளிர்பதனக் கிடங்குகளை கட்டித்தரவேண்டும். ஆனால் குளிர்பதன கிடங்குகளை கட்டிக்கொள்ள கடன் தரப் போவதாக பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். வீடு தேடி வந்து கடன் கொடுத்தால் கூட இந்தக்கடனை சாதாரண விவசாயிகள் வாங்கிக்கொள்வார்களா? காய்கறிகளையும் பழங்களையும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்துவரும், ரிலையன்ஸ், கோத்ரேஜ், ஐடிசி, ஹெர்டேஜ், நீல்கிரீஸ் முதலாளிகள் தான் விவசாயிகள் என்ற போர்வையில் இந்தக் கடனை அனுபவிப்பார்கள்.

 

சென்னையில் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும் மன்மோகன் சிங்கின் செல்லப் பிள்ளைகள்

 

இது மட்டுமின்றி, விவசாய விளை பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் பொருத்தப்படும் குளிர்பதன இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு  முழுச் சுங்க வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தச்சலுகையால் பலனடையப்போவது அம்பானியா? அல்லது வாங்கிய கந்து வட்டிக்கடனை அடைக்கமுடியாமல் தூக்குக்கயிற்றை தேடிக்கொண்டிருக்கும் கிராமத்து விவசாயியா?

உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவதாகவும் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். நெல்லையும் கோதுமையையும் பயிரிடும் விவசாயி இனி அதை மாவாக்கி, இட்லியாக்கி, ரொட்டியாக்கி விற்கவேண்டும் என நிதியமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அப்படியென்றால் கரும்பு விவசாயி இனி சாராயம் தான் காய்ச்ச வெண்டும். இந்த அறிவிப்பால் விவசாயிகளை விட உருளைக்கிழங்கு சிப்ஸ், குர்குரே போன்ற நொருக்குத்தீனிகளைத் தயாரித்து விற்கும் முதலாளிகள் தான் மகிழ்ச்சி கொள்வார்கள்.

விவசாயிகள் மட்டுமல்ல, பிற அடித்தட்டு மக்களை வாட்டும் பிரச்சனைகள் பற்றியும் இந்த பட்ஜெட் கண்டுகொள்ளவில்லை. மாறாக, இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் மேன்மக்கள் தமக்குப் பிடித்தமான கோக்கையும், பெப்சியையும், பர்கரையும், பிற ஆடம்பர நுகர்வுப்பொருட்களையும் வாங்கமுடியாமல் திண்டாடி நின்றுவிடக்கூடாதே எனக் கரிசனம் காட்டியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி.

வருடத்திற்கு மூன்று லட்ச ரூபாய்க்கு மேல சம்பாதிக்கும் நடுத்தர / மேல்தட்டு வர்க்கத்தினர் கட்டிவரும் வருமான வரியில் சலுகைகளை அளித்து அவர்களின் ‘பணத்திண்டாட்டத்தை’ தீர்த்து வைத்திருக்கிறார் நிதியமைச்சர். இதன்படி வருடத்திற்கு ஐந்து லட்ச ரூபாய்வரை சம்பாதிப்பவர்களுக்கு 20,600 ரூபாய்வரை வரிச்சலுகை கிடைக்கும்; 8 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு 51,500 ரூபாய்வரை வரிச்சலுகை கிடைக்கும். இப்படியாக இந்த பட்ஜெட்டில் வருமான வரி கட்டும் கணவான்களுக்கு 26,000 கோடி ரூபாய் வரிச்சலுகை அளிக்கப்பட்டு அந்தப்பணம் அவர்களின் கோட்டுப் பாக்கெட்டுகளில் திணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த பணத்தைக்கொண்டு தமக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள், பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள் அதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனக்கூறி,இந்தச்சலுகை நியாயப்படுத்தப் படுகிறது.

மேல்தட்டு மக்களின் நுகர்விற்காக 26,000 கோடி ரூபாயை மானியமாக தூக்கிக் கொடுத்திருக்கும் மைய அரசு, அடித்தட்டு மக்களை விலைவாசி உயர்விலிருந்து பாதுகாக்க இந்த பட்ஜெட்டில் அளித்திருக்கும் சலுகை என்ன தெரியுமா? உணவு மானிய வெட்டு.

உணவுப் பொருட்களின் விலைகள் விசம்போல் ஏறுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் குறைந்த பட்சம் பொது வினியோகத்திட்டத்தை பலப்படுத்த வேண்டும். அதாவது, அரிசி கோதுமை மட்டுமின்றி மற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் ரேசன் கடைகளின் மூலம் வழங்குவதோடு, அவற்றின் அளவையும் அதிகரிக்க வேண்டும். இதைச் செய்வதற்கு பட்ஜெட்டில் உணவு மானியத்தை அதிகரித்திருக்க வெண்டும். ஆனால் நிதியமைச்சரோ, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உணவு மானியத்திற்கு 500 கோடி ரூபாய் குறைவாகத்தான் நிதி ஒதுக்கியிருக்கிறார். மேலும் தனது கையிருப்பிலுள்ள உணவுப் பொருட்களை அதிக அளவில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய மறுத்திருப்பதோடு, ரேசன் கடைகளின் மூலம் வழங்கப்படும் அரிசி கோதுமைகளின் விலைகளை அதிகரிக்கவும் திட்டம் போட்டுவருகிறது மைய அரசு.

மன்மோகன் சோனிய கும்பலின் வக்கிரத்திற்கு இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிடலாம். பெட்ரோல் டீசல் விலைகளையும், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதி விதிக்கப்படும் கலால் வரிகளையும் உயர்த்தியிருப்பதன் மூலம் ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய்க்கு மேல் மக்களிடமிருந்து பரித்துக்கொண்டுள்ளது, அக்கும்பல். வருமான வரி கட்டும் கணவான்களுக்கு 26,000 கோடி ரூபாயை மானியமாக வாரிக்கொடுக்காமல் இருந்திருந்தால் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தவெண்டிய அவசியமே இருந்திருக்காது. ஆனால் மன்மோகன் சிங் கும்பலோ இந்த உயர்வின் மூலம் இரண்டு மாங்காய்களை வீழ்த்திவிட்டது. ஒருபுறம், அவர்களுக்கு மானியம் கொடுத்து அவர்களின் மனங்களை குளிர வைத்துள்ள மைய அரசு அதனால் தமக்கு ஏற்படும் வருமான இழப்பை, பெட்ரோல் டீசல் விலைஉயர்வைக்கொண்டு கோடிக்கணக்கான மக்கள் மீது சுமத்தி ஈடு கட்டிவிட்டது. இது மட்டுமின்றி, இந்த பட்ஜெட்டில் 46,000 கோடி ரூபாய் அளவிற்கு மறைமுக வரிகளும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

 

தனிப்பட்ட கணவான்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வருமான வரிச்சலுகை ஒரு புறமிருக்க, தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள வரிச்சலுகைகளை கேட்டால் நாம் அதிர்ச்சியில் உறைந்தே போய்விடுவோம்.  இந்த பட்ஜெட்டில் முதலாளித்துவ நிருவனங்களின் மீது விதிக்கப்படும் கம்பனிவரி உள்ளிட்ட நேரடியான வரி விதிப்புகளில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகளின்  மூலம் 80,000 கோடி ரூபாய் முதலாளிகளுக்கு மானியமாக வாரிக்கொடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு அளிக்கப்பட்டுள்ள சலுகைகையை விட 14,000 கோடி ரூபாய் அதிகம்; அதற்கு முந்தைய ஆண்டு அளிக்கப்பட்ட சலுகையை விட 18,000 கோடி ரூபாய் அதிகம். அதாவது, கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அளீக்கப்பட்டுள்ள நேரடி வரிச்சலுகை மட்டும் 2,08,00 கோடி ரூபாய்.

மானிய விலையில் டீசல் வழங்ககோரி மீனவர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தால் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத் துறைமுகத்தில் நிறுத்தப்படுள்ள படகுகள்

 

மேலும், இந்த பட்ஜெட்டில் கலால் வரி சுங்கவரி விதிப்புகளில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் மூலம் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு கிடைக்கக்கூடிய கூடுதல் லாபம் மட்டும் 4,19,786 கோடி ரூபாய். இதோடு முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள நேரடி வரிச்சலுகையையும் சேர்த்து கணக்கிட்டால், இந்த ஆண்டு பட்ஜெட்டின் மூலம் மட்டும் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள மானியம் 4,99,786 கோடி ரூபாய்.நாளொன்றுக்கு வெறும் இருபது ரூபாய் கூலியை பெற்று வாழ்க்கையை ஓட்டிவரும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில், தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் அவர்களது எஜமானர்களான பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு நாளூம் 1,369 கோடி ரூபாய் மானியமாக வாரிக்கொடுக்கப்படுகிறது.இதைவிட அறுவெருக்கத்தக்க வக்கிரம் வெறெதுவும் இருக்க முடியுமா?

அதேசமயம், கல்வி, மருத்துவ வசதி, போக்குவரத்து போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒகுக்குவதில் இந்தளவிற்குத் தாராளமாக நடந்து கொள்ளவில்லை பிரணாப் முகர்ஜி. இத்திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஏன் ஒதுக்கவில்லை எனக் கேட்டால், பற்றாக்குறை பெருத்துவிடும் என பொருளாதார நிபுணர்களும், முதலாளித்துவ பத்திரிக்கைகளும் கூப்பாடு போடுகின்றன. தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும், மேல்தட்டு வர்க்கத்திற்கும் 5 லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் மானியமாக வழங்கப்பட்டுள்ளதை கண்டு கொள்ள மறுக்கும் இக்கும்பல், உணவிற்கும், பெட்ரோலுக்கும், மண்ணெண்ணைக்கும் வழங்கும் ‘மானியத்தை’ நிறுத்தச் சொல்கிறது. இந்த ஓரவஞ்சணையைவிட வெறென்ன வக்கிரம் இருந்துவிட முடியும்?

இந்தப் பணச்சலுகைகள் ஒருபுறமிருக்க 40,000 கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்பதற்கும், நிதி நிருவனங்கள் என்ற பெயரில் பிளெடு கம்பனிகளை நடத்திவரும் முதலாளிகள்வர்த்தக வங்கிகளை திறந்துகொள்ளவும் பட்ஜெட்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் நெருங்கிவிட்டாலே, அது ஏதோ நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிடும் மந்திரக்கோல் போல, அதுபற்றி வீணான பரபரப்பையும் கவர்ச்சியையும் முதலாளித்துவ ஊடகங்களும் நிபுணர்களும் வலிந்து உருவாக்கி வருகிறார்கள். போலி கம்யூனிஸ்டுகளும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்லர்.

நாட்டின் வளங்களையும் வருமானத்தையும் முதலாளித்துவ கும்பலுக்கு மடைமாற்றிவிடும் சட்டப்பூர்வ ஏற்பாடு தான் பட்ஜெட்.தனியார்மயம் தாராளமயம் திணிக்கப்பட்ட பிறகு, கடந்த 19 ஆண்டுகளில் போடப்பட்டுள்ள பட்ஜெட்டுகளை ஒரு புரட்டு புரட்டினாலே இந்த உண்மை பச்சையாக தெரியும். சமூக நலத்திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்குவதால் நரி பரியாகி விடாது. அப்படிப்பட்ட கவர்ச்சிகரமான பட்ஜெட்டை பிரணாப் முகர்ஜி ஏன் தயாரிக்கவில்லை என்பது தான் போலி கம்யூனிஸ்டுகளின் அங்கலாய்ப்பு.

 

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2010