{play}http://www.tamilcircle.net/audio/Kavithaikal/tsunami.mp3{/play}

பசியில பஞ்சத்தில வாடிற வயித்துக்கு
கஞ்சியாகிலும் ஊத்திட,
காத்து மழயில கடும்கும்மிருட்டில,
கடலில மோதி விரட்டிற அலையில
தோணித்துரும்பில
வாழ்வை வெல்லும் எங்கட சாதி ஊர்மனை பக்கமா
அட ராசா நீ உன் காலில மணல் பட
நடந்தாயா?

ஒலைக்கூரைல வெய்யில்ல
காயப்போட்ட வலை மணம்;.
 
கரையில சேறும்
சேந்தே அடிக்கும் நம் ஊர்மணம்.

 

காற்று மழைக்கெண்டாலும் ஒதுங்கி நீ
மூக்கில
லேஞ்சிய போட்டெண்டாகிலும் வந்ததாய்
ஞாபகம் என்னவோ வரயில்ல

 

கடக்கர தான் எங்கட கக்கூசு
சனிற்றரி டாக்குத்தரா நீ வந்ததா ஊரில
யாரும் எவருமே பறையேல்ல பேசேல்ல

 

பிடிபாடு இல்லாத நாட்கள்ள எங்கட
வயிற்றுக் கடிபாடு மனச்சுமை போக்க
நம்மடாள் கடனில குடிக்கிற கள்ளுக் கொட்டில்ல
உன்ர குரல ஒருக்காலும்
வெறியில கூட காதில நாங்க கேக்கல.

 

நாம பெத்த பிள்ளையை பெண்டில
பள்ளிக்கூட படலைய அண்டவோ
நல்ல தண்ணிக் கிணத்தில
விடாய் தீர வாளியில தண்ணிய
தானா மொண்டு குடிக்கவோ
விடாததா இஞ்சையும் வந்து நீ
சொல்லியே பெரும பேசறாய்

 

சுனாமில செத்தவன் பிழைத்தவன் என்னவன்
அந்தச் செத்த சவத்தில யாவாரம் உத்தியா
செய்ய நீ நிண்டாய் பார்
வெளிநாட்டுச் சீமைத் தெருவில

 

என் வீட்டில விழுந்த பிணத்தால
உன் கணக்கில நிரம்பின பணத்தால
அடிதடி கிளம்புது செருப்பால