இனியொரு அசோக் தனிப்பட்ட சில குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். அரசியல் ரீதியாக எனக்கு பதிலளிக்க முடியாத நிலையில், தனிப்புட்ட சில குற்றச்சாட்டுகளை வைப்பதைவிட அவர்களுக்கு வேறு வழியில்லை. இதுவே அவர்களின் அரசியலாகிப் போன நிலையில், இந்த தனிநபர் குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பது அவசியமாகி விடுகின்றது. இதை சொல்லித்தான், அவர்கள் இன்று எமக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.

குற்றச்சாட்டு 1

"இலங்கை இனப்பிரச்சனை கூர்மையடைந்து ஆயுதப்போராட்ட வடிவம் கொண்ட 1983களில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள். நாங்கள் மக்களோடும் போராட்ட உணர்வுகளோடும் ஒன்றுகலந்து இலங்கை பேரினவாத அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை பார்த்து உங்கள் சொந்த வாழ்க்கையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டீர்கள். அப்போதைய எங்கள் அனைவரதும் அரசியல் வழிமுறைகள் வேற்றுமைகளை தவறுகளையும் உள்ளடக்கியது என்பதற்கு அப்பால் சமூக உணர்வு படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தையே தமது வாழ்வு முறையாக வரித்துக்கொண்டார்கள்."

இப்படி வரும் குற்றச்சாட்டுகளை இரண்டு தளத்தில் நாங்கள் அணுகலாம்.

1.வாழ்வுக்காக உழைப்பது தவறா?

2.இவர் குறிப்பிட்ட அந்தக் காலத்தில் நான் அப்படி இருந்தேனா?



எந்த ஒரு மனிதனும் வாழ்வுக்காக உழைத்து வாழ்வது மிகச்சரியானது. உழைத்து வாழ்வதை மறுத்து, அதை ஒரு குற்றச்சாட்டாக வைப்பது அபத்தமானது.

இவர் குறிப்பிட்ட 1983 இல்; சீமெந்து தொழிற்சாலையில் நான் வேலை செய்திருக்கவில்லை. அதே 1983ம் ஆண்டும் நான் என்.எல்.எவ்.ரி அமைப்பின் மத்திய குழு உறுப்பினர். என்.எல்.எவ்.ரி அமைப்பின் மத்திய குழு உறுப்பினரான நான், 1980-1981 இல்  என்.எல்.எவ்.ரி அமைப்பாக மாறிய, தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி அமைப்பில் இணைந்து இருந்தேன். 1980-1981-1982 காலத்தில் சீமெந்து தொழிற்சாலையில் ஒரு கட்டிடத் கூலித் தொழிலாளியாகவே, இடைத்தரகர்கள் மூலம் வேலைக்கு அமர்த்தப்பட்டேன். எனது தந்தை, எனது தம்பி உட்பட இந்தக் கூலி வேலைக்கு சேர்ந்தோம். நாம் செய்து வந்த விவசாயம் ஒரு நேர உணவுக்கே சோறு போடாத நிலையில், புதிதாக கட்டிய சீமெந்து ஆலையில் கூலிக்கு போக தீர்மானித்தோம். அப்படித்தான் நாங்கள் வேலை செய்தோம். இது தவறா? இது குற்றமா?

இக்காலத்தில் எனது தம்பி மூலம், விசுவானந்ததேவன் என்னைத் தேடிவந்தார். கம்யூனிசம் மீது இருந்த பற்றை, எனது தம்பி மூலம் அறிந்து என்னை விசுவானந்த தேவன் சந்தித்தார். இதன் பின் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினார். அப்போது அவர் அத்தொழிற்சாலையில் எஞ்சினியராக வேலை செய்தார். நாங்கள் சீமெந்து ஆலையில் தொழிற்சங்கத்தைக் கட்டத்தொடங்கினோம். இதுதான் எனது அரசியலின் முதல்காலடி கூட.

சட்ட விரோதமாகவே தொழிற்சங்கத்தையே கட்டினோம்;. இதுதான் அங்கிருந்த நிலைமை.  இரண்டு துண்டுப் பிரசுரங்களை அடுத்தடுத்து வெளியிட்டோம். இதை அடுத்து அதை வெளியிட்டவர்களைக் கைது செய்ய, பொலிசார் வலைவிரித்துத் தேடினர். ஆனால் கண்டு பிடிக்கப்படவில்லை. தொழிற்சாலை நிர்வாகம் சந்தேகத்தின் பெயரில் இருவரை வேலை நீக்கம் செய்தது. அதில் ஒருவர் விசுவானந்ததேவன். ஆனால் நாங்கள் தொடர்ந்து இயங்கினோம். இக்காலத்தில் எனக்கும் நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை  அடுத்து, நான் 1982 இல் வேலையை விட வேண்டி ஏற்பட்டது. தொடர்ந்து சீமெந்து தொழிற்சாலை உறுப்பினர்கள் இயங்கினர். நான் அமைப்பில் இயங்கத் தொடங்கினேன். இக்காலத்தில் மகாஜனா பாடசாலையில் நடந்த ஊழலுக்கு எதிராக கொடுத்த துண்டுப்பிரசுரம், சிலரை பொலிஸ் தேடுமளவுக்கு வைத்தது. இப்படி தமிழ் தேசியத்துக்கு வெளியில், மக்களின் அன்றாட வாழ்வியல் கோரிக்கைகளுடன் பலதளத்தில் நாம் போராடினோம். இப்படி என்னைச் சுற்றி, எம் தோழர்களைச் சுற்றி பல போராட்டங்கள் இருக்க, அதை அசோக் இழிவுபடுத்தி அவதூறும் பொய்யும் புனைவது இன்று இனியொருவின் அரசியலாகிப்போனது. 

குற்றச்சாட்டு 2

"நண்பர் இராயகரன் உங்களுடைய புகலிட வாழ்வு 25வருடங்களுக்கு மேலாகிவிட்டது என நினைக்கிறேன்." என்கின்றார். 25 வருடமென்றால், 1984 இல் நான் நாட்டைவிட்டு வெளியேறியிருக்கவேண்டும்;. இப்படி அவதூறு செய்வது, அங்கு மக்களுக்காக மக்களுடன் நாம் நடத்திய போராட்டத்தை மறுப்பதற்காகத்தான். 1989ம் ஆண்டே நான் நாட்டை விட்டு வெறியேறினேன். இதற்கு முந்தைய காலத்தில் மக்களுக்காக மக்களுடன் நின்று நடத்திய போராட்டத்தில் எமது பங்கும் ஒத்துழைப்பும் தனித்துவமானது. இதை மறுக்கவே முன் கூட்டியே நாட்டைவிட்டு துரத்திவிடுகின்றனர்.

குற்றச்சாட்டு 3

"எங்களுடைய இந்த ஒவ்வொரு செயல்பாட்டையும் கொச்சைத்தனமாக விமர்சித்தே வந்துள்ளீர்கள். உங்களால் மற்றவர்கள் செய்யும் சமூக அக்கறை கொண்ட எந்த நிகழ்வையும் வரவேற்கும் ஆதரிக்கும் மன பக்குவம் கொஞ்சம்கூட உங்களிடம் இருப்பதில்லை. வஞ்சகமும் காழ்ப்புணர்ச்சியுமே உங்களிடம் எங்கள் தொடர்பாக குடிகொண்டுள்ளது. ஏன் இந்த மன நிலை உங்களுக்கு?."

இப்படி குற்றச்சாட்டை முன்வைக்கும் நீங்கள், எந்த அரசியலை முன்வைத்தீர்கள்? சரி மக்களுக்காக என்ன செய்தீர்கள்? "சமூக அக்கறை கொண்டு" செயல் மூலம் மக்களுக்கு சொன்னது தான் என்ன? செய்தது தான் என்ன? அதன் சமூக விளைவைக் காட்டுங்கள். ஒரு அரசியல் விமர்சன முறைமையைக் காட்டுங்கள். இலக்கியச் சந்திப்பு முதல் அனைத்தும்  சாதித்தது என்ன? அது சொன்னது என்ன?

15 முதல் 20 வருடமாக புலியல்லாத புலத்து குழுக்கள், எந்த மக்கள் அரசியலைத்தான் முன்வைத்தது? அதில் பெரும்பான்மை, இன்று இலங்கை அரசுடன் நிற்கின்றது. எப்படி? சாத்தியமானது!? அதை "கொச்சையாக" என்று கூறும் நீங்கள், மக்களுக்காக ஆக்கபூர்வமாக முன்வைத்ததுதான் என்ன?  "சமூக அக்கறை கொண்ட எந்த நிகழ்வையும் வரவேற்கும் ஆதரிக்கும் மன பக்குவம் கொஞ்சம்கூட உங்களிடம் இருப்பதில்லை. " என்கின்றீர்கள். எதை அப்படி குறிப்பிடுகின்றீர்கள். அப்படி ஆக்கபூர்வமாக இருக்கும் என்று கருதி நாம் ஓத்துழைத்தவை கூட, தவறானதாகவே போனதைப் பார்க்கின்றோம்;. இந்த வகையில் நாங்கள் இதில் தவறு இழைத்தோம்.

இன்று மிகத்தெளிவாக தெரிகின்றது, எம் விமர்சனம் மிகச் சரியானதாக இருந்திருக்கின்றது என்பது தான்.

தொடரும்

பி.இரயாகரன்
22.03.2010

12.புனிதத்தை கட்டமைக்க, இனியொரு தன்னை மூடிமறைக்கின்றது. (எதிர்புரட்சி அரசியல் பாகம் 12)


11.றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ் வும், அசோக் முன்னின்று வழிநடத்திய ஈ.என்.டி.எல்.எவ் வும் -அரசியல் பகுதி 11)


10.நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10)


9.சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9)


8.கடந்த வரலாற்றை சொல்வது "இடதுசாரி" அரசியலுக்கு எதிரானதா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8)

7.சீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7)


6.பிரபாகரனின் மரணம் மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி விடுமா!? மக்கள் நலன் கொண்டதாகி விடுமா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 6)


5.நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5)


4.வரலாற்றை இருட்டடிப்பு செய்து, அதை தமக்கு ஏற்ப வளைத்து திரிப்பதும், புலிக்கு பிந்தைய அரசியலாகின்றது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 4)


3தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல் "நேர்மை" (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3)

2.அரசியல் நேர்மை என்பது உண்மைகளைச் சார்ந்தது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 2)


1.எதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1)