தமிழீழத்தின் பெயரில் தமிழினத்தையே கடந்த காலத்தில் அழித்தவர்கள், இன்று அதன் பெயரில் உள்ள பினாமி சொத்துக்களுக்காக மோதுகின்றனர். இப்படி புலத்து புலிக்குள் நடக்கும் மோதல்கள், நோர்வேயில் குறைந்த பட்சம் மூன்று குழுக்களை உருவாக்கியுள்ளது. இந்த மோதல்களின் பின்னணி, எந்த மக்கள் நலன் சார்ந்ததுமல்ல.

மாறாக புலிகளின் பின் உள்ள பினாமிச் சொத்துக்கள், அதன் மேல் பொறுக்கித் தின்ன கட்டமைக்கும் அதிகாரம் சார்ந்த குழு மோதல்கள், எதிர்மறையான போட்டிக் குழுக்களை உருவாக்கி வருகின்றது.

 

ஊர் உலகத்தை ஏமாற்ற, ஒரு பிரிவு வட்டுக்கோட்டை தீர்மானத்தையும், மற்றைய பிரிவு நாடு கடந்த தமிழீழத்தையும் முன்னிறுத்தி மோதுகின்றது. இவை இரண்டிலும் தாமில்லை என்று கூறி, மூன்றாவது அணியாக இருந்து தின்ன, ஒரு  காரணத்தை மூன்றாவது குழு முன்வைக்கின்றது.

 

தங்கள் தலைவரையே சரணடைய வைத்து போட்டுத் தள்ளிய புலத்து புலி அரசியல், இன்று சொத்தை பங்கிடுவது சார்ந்து தமக்குள் மோதுகின்றது. இந்த சொத்து மோதலை நியாயப்படுத்த, கேலிக் கூத்தாக தாங்களே தங்களுக்கு நடத்தும் போட்டியில் "ஜனநாயக தேர்தல்" என்று புது வேசத்தைக் கட்டி ஆடுகின்றனர்.

 

இப்படி நோர்வேயில் இரண்டு தேர்தல்கள், இரண்டு கோஸ்டிகள் சார்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் பாசிச முகத்தை மூடிமறைக்க, ஆங்காங்கே போலியான பினாமிகளை களத்தில் முன்னிறுத்துகின்றனர். இப்படி நோர்வேஜியர்களைக் கூட பினாமிகளாக முன் தள்ளும் இவர்களின் "ஜனநாயகத்தின்' உள்ளடக்கம், புலித் தன்மை கொண்டது.

 

இப்படி பினாமிகளை முன்னிறுத்தியுள்ள புலத்து புலி மாபியாக்கள், தமிழினத்தை தம் பிழைப்புக்கு ஏற்ற மந்தைகளாக தொடர்ந்து தக்க வைக்க முனைகின்றனர். கடந்த காலம் முதல் அன்னியக் கைக்கூலிகளாக இருந்த இவர்கள், அவர்கள் மேல் நம்பிக்கை ஓளியூட்டி தங்கள் தலைவரையே சரணடைய வைத்தனர். இப்படி காட்டிக் கொடுத்து பலியிட்டவர்கள் தான் இவர்கள். இன்று வரை அதற்காக வருந்தியது கிடையாது. தங்கள் தலைவனுக்கு அஞ்சலி கூட, இந்த சொத்துப் பொறுக்கிகள் செலுத்தியது கிடையாது. தங்கள் கடந்தகால துரோக அரசியலை கேள்விக்குள்ளாக்கியது கிடையாது. மக்களிடம் திரட்டிய கோடிக்கணக்கான பணத்துக்கு கணக்கு காட்டியது கிடையாது. புலத்தில் உள்ள மக்களின் பணத்தை, தமிழரின் பொது நிதியமாக மாற்ற தயாரற்ற கும்பல், இன்று அதைத் தனதாக்கி தின்ன மோதுகின்றனர்.

 

வேடிக்கையானதும், கேலியானதும், போக்கிரிகளின் அரசியல். நாடு கடந்த தமிழீழக்காரர்கள் பிரபாகரன் "வீரமரணம்" என்கின்றது. சரணடைய வைத்து கொன்றவர்கள், அது எப்படி நடந்தது என்று சொல்லாமல் சிறிலங்கா பேரினவாத அரசுடன் சேர்ந்து அந்த துரோகத்தை மூடிமறைக்கின்றனர். தங்கள் தலைவர் சாகவில்லை என்றவர்கள், தலைவர் இல்லாத நிலையில் தலைவருக்கு பதில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை கண்டுபிடித்தனர்.

 

இப்படி புலிச் சொத்தை அனுபவிக்க, "வட்டுக்கோட்டை தீர்மானமும்;", "நாடு கடந்த தமிழீழத்தையும்" வைத்து கடைவிரித்துள்ளனர்.

 

இந்த மோதலின் பின் எந்த மக்கள் நலன் சார்ந்த அரசியலும் கிடையாது. இதையே அவர்களின் ஆவணங்கள், மறுபடியும் எடுத்துக் காட்டுகின்றது. 

  

இவர்களின் பின் தமிழ் மக்கள் சென்றால் தமிழ் மக்கள் தம்மிடம் எஞ்சியதையும் இழப்பார்கள். இதுவே இரத்தம் சிந்தி பெற்ற, எம் கடந்தகால வரலாறு. இப்படி ஒரு இனத்தையே அழித்தவர்கள் தான் இவர்கள். அதற்கு கணக்கு சொன்னவர்கள் அல்ல இவர்கள். அதற்கு வருந்தியவர்கள் அல்ல இவர்கள். தமிழ் மக்களை மொட்டை அடித்தவர்கள், எஞ்சிய  கோமணத்தையும் களவாடுவது எப்படி என்பது பற்றி திட்டமிடுகின்றனர். 

 

பி.இரயாகரன்
12.11.2009

 

ஆவணங்கள்

1.நாடு கடந்த தமிழீழம்

2.நோர்வே ஈழத்தமிழர் அவை

3.நோர்வே ஈழத்தமிழர் அவையின் பிரகடனம்

4.தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) பேர்கன்

 

 

தொடர்புடைய கட்டுரைகள்

 

போலித்தேர்தல்- நோர்வே ஈழத்தமிழர் அவை

புலத்துப் புலிகள் போடும் "ஜனநாயகம்", மக்களை ஏமாற்றித் தின்னும் போக்கிலி அரசியலாகும்

கொண்டை முடியும் ஆசாமிகளும், தலை விரித்தாடும் பூசாரிகளும் (02)

Valget i Norge – Hvem er de ? - Election in Norway