Dr N S மூர்த்தி, மைக்கல் உவாட்லோ, ரட்னசபாபதி தியாகராஜா, தாமோதரம்பிள்ளை தேசஇலங்கைமன்னன், Dr நிலானி நக்கீரன், அனிதா யசோதர், Dr ஜெயதாம்பிகை ஞானப்பிரகாசம் - வெண்புறாவின் கணக்கு? வணங்கா மண்ணின் கணக்கு? உங்களுக்கே வெளிச்சம் : த ஜெயபாலன்

பிரித்தானியாவில் தமிழ் மக்கள் மத்தியில் தீவிர நிதி வசூழில் ஈடுபட்ட இன்னமும் ஈடுபட்டு வருகின்ற வெண்புறா வின் கணக்குப் புத்தகம் சில பலமான கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றது. பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவுக்கு வெண்புறாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கணக்குகளில் பின்வரும் விடயங்களில் சந்தேகங்கள் எழுந்தள்ளது. (http://www.charity-commission.gov.uk/ShowCharity/RegisterOfCharities/DocumentList.aspx?RegisteredCharityNumber=1107434&SubsidiaryNumber=0&DocType=AccountList)

1. ஜனவரி 2008 வரையான 12 மாதங்களில்

சேகரிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட நிதி 224,865 பவுண்கள்.
நிதி சேகரிப்பிற்கு ஏற்பட்ட செலவீனம் 58,632 பவுண்கள்.
ஊனமுற்றவர்களின் புனர்வாழ்வுக்கு வழங்கப்பட்ட நிதி 37,392 பவுண்கள்.
நிர்வாகச் செலவீனம் 64,367 பவுண்கள்.
தாயகத்தினுள்ளே இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றத்திற்கு வெண்புறா எவ்வித உதவியையும் வழங்கவில்லை.White_Pigeon_Account

2. வெண்புறா (White Pigeon) பொதுஅமைப்பு உவைற்பிஜின் லிமிடட் (White Pigeon Ltd) உடன் நேரடியாகத் தொடர்புபடுத்தப்பட்டு உள்ளது. உவைற் பிஜின் லிமிடட் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்டு உள்ள ஒரு வரையறுக்கப்பட்ட கொம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அமைப்பு. ஆனால் உவைற்பிஜின் லிமிடட்டின் பிரதான பங்குதாரர் நமச்சிவாயம் உவைற் பிஜின் லிமிடட் (Namasivayam White Pigeon’ Ltd) நமச்சிவாயம் உவைற்பிஜின் லிமிடட் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு கொம்பனி அல்ல. பிரித்தானியாவில் பொது நிறுவனமாக வெளிப்படையாக இயங்க வேண்டிய வெண்புறாவின் பிரதான பங்குதாரர் நமச்சிவாயம் உவைற்பிஜின் லிமிடட் பற்றிய எந்தத்தகவலும் பொதுத் தளத்தில் இல்லை. நமச்சிவாயம் சத்தியமூர்த்தி அவர்களுக்கே அது வெளிச்சம்.

3. வெண்புறாவிடம் 487,778 பவுண் நிலையான சொத்தான காணியும் கட்டிடமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த நிலையான சொத்தில் இருந்து எவ்விதமான வருமானத்தையும் (வாடகை, குத்தகை) ஈட்டுவதாக வெண்புறா கணக்கு தெரிவிக்கவில்லை.

சர்வதேச விடுதலைப் போராட்டங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் மக்கள் தங்கள் விடுதலைக்காக செய்த தியாகங்களும் அர்பணிப்புகளும் மகத்தானது. ஆனால் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம் என்ற பெயரில் தமிழ் விடுதலை அமைப்புகள் குறிப்பாக ஏகபோக தலைமையாக தங்களை நிலை நாட்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையும் அதற்கு ஜால்ரா போட்டு வந்த புலம்பெயர்ந்த அமைப்புகளும் மக்களை தவறாக வழிநடத்தி மாபெரும் மனித அவலத்திற்குள் வன்னி மக்களைத் தள்ளியுள்ளன. வன்னியில் இடம்பெற்ற பல்லாயிரக் கணக்கான கொலைகளுக்கு இலங்கை அரச படைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளுமே பொறுப்பு. தமிழீழ விடுதலைப் புலிகள் கொலைக் களத்திற்குள் மக்களை தடுத்த வைத்திருந்ததை ஆதரித்த பேர்ள் (PEARL), பிரித்தானிய தமிழ் போறம் (BTF) போன்ற அமைப்புகள் அக்கொலைகள் நிகழ்வதற்கு உடந்தையாக இருந்துள்ளன. இலங்கை அரச படைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளும் முதல் தரக் கொலைக் (first degree murder) குற்றவாளிகள். பிரிஎப் பேர்ள் போன்ற புலம்பெயர்ந்த அமைப்புகள் கொலைக்கு காரணமாக (manslaughter) இருந்தவர்கள்.

இந்த புலம்பெயர்ந்த அமைப்புகள் வன்னியில் மக்கள் கொல்லப்படுவதன் மூலம் சர்வதேச அனுதாபத்தைப் பெற்று தமிழீழத்தை வென்றெடுக்கலாம் என இறுதிவரை நம்பிக்கையுடன் இருந்தன. இன்னும் சிலர் இன்னும் அந்த நம்பிக்கையில் உள்ளனர். வன்னியில் கொல்லப்படும் எண்ணிக்கை பத்து நூறு ஆயிரம் என நாளுக்கு நாள் உயர லண்டன், பாரிஸ், பேர்ளின், ரொறன்ரொ வோசிங்டனில் தமிழீழத்தை நெருங்கிவிட்டதாக பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது.

தம் உறவுகளின் அவலம் கண்டு மக்கள் உணர்வுகள் மிக உச்சத்தில் நிற்க, அதனைக் காசாக்குவதில் ஒரு பகுதி மிகத் தீவிரம் காட்டியது. தமிழீழம் பட்ச், தமிழீழம் ரி சேட், புலிக் கொடி என்று பல்லாயிரக் கணக்கில் வியாபாரம் இடம்பெற்றது. அதைவிட வெண்புறா, ரிஆர்ஓ என்ற பெயர்களில் நிதி சேகரிக்கப்பட்டது. இவற்றைவிட வெண்புறா ரிஆர்ஓ போட்ட குட்டி அமைப்புகளும் புதிய புதிய பெயர்களில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டன.

இவை ஒரு பக்கத்தில் நிதிவசூலில் சாதனை படைக்க வானொலி தொலைக்காட்சிகளும் தங்கள் பங்கிற்கு வர்த்தகர்களைக் கசக்கிப் பிழிந்தனர். தேசியத் தொலைக்காட்சி, தேசிய வானொலி, தேசியப் பத்திரிகை என்று தமிழ் தேசியம் ஏகபோகமாக வியாபாரத்தில் இறங்கியது.

இன்னொரு பக்கத்தில் பல பத்தாயிரக் கணக்கில் ஆயுதக் கொள்வனவிற்கும் புலம்பெயர்ந்த நாடுகளில் நிதி திரட்டப்பட்டு உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் பல்லாயிரக் கணக்கில் நிதி வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டன. மே 18ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒட்டுமொத்த தலைமையும் சரணாகதி அடைந்து கொல்லப்பட்ட பின்னரும் இந்த நிதி சேகரிப்பு நிறுத்தப்படவில்லை. இன்னமும் தொடர்கிறது.

அண்மையில் லண்டனில் உள்ள சைவ ஆலயங்களின் திருவிழாக் காலம். அதனை குறி வைத்து நிதி வசூலிப்பு முடக்கி விடப்பட்டு இருந்தது. லண்டனில் மட்டுமல்ல இந்த நிதி வசூலிப்பு பரவலாக புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் நடைபெற்றுள்ளது.

சுனாமி, கண்ணீர் வெள்ளம், யுத்த அவலம் என்று தாயக மக்களின் அவலங்களை காசாக்கியவர்கள் இன்று வன்னி முகாம்களை மையப்படுத்தி நிதி சேகரிப்பில் தொடர்ந்தும் ஈடுபட்டு உள்ளனர். வன்னி முகாம்களுக்குள் சர்வதேச உதவி அமைப்புகளையே இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்த எந்த ஒரு உதவி அமைப்பும் வன்னி முகாம்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கவில்லை. நிலைமை அப்படி இருக்கையில் அந்த மக்களின் பெயரில் நிதி வசூல் செய்வது பகற்கொள்ளை அல்லாமல் வேறு என்ன.

இதுவரை சேர்க்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்த நிறுவனமும் கணக்குகளைச் சமர்ப்பிக்கவில்லை.

Vanni_Missionவர்த்தக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்கள் ஈட்டிய லாபத்திற்கு வரி செலுத்தாமல் தப்பிப்தற்காக நட்டம் ஈட்டக் கூடிய ஒரு திட்டத்திற்கு முதலிடுவார்கள். அவ்வாறு இந்த நிதிசேகரிக்கின்ற அமைப்புகள் இட்ட முதலீடு தான் வணங்காமண். இது வன்னி மக்களுக்கு உதவி வழங்க மேற்கொள்ளப்பட்ட திட்டமல்ல என்பதனை இத்திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே தேசம்நெற் இல் பலரும் எழுதி இருந்தோம். இதுவரை வணங்கா மண் உதவி வன்னி மக்களைச் சென்றடையவில்லை. இதுவரை வணங்கா மண் திட்டத்தை மேற்கொண்டவர்கள் எவ்வித கணக்கு வழக்குகளையும் சமர்ப்பிக்கவில்லை.

‘ஆற்றில் போட்டாலும் கடலில் போட்டாலும் அளந்து போடு’ என்பது தமிழர் வழக்கு. வணக்கா மண்ணில் எவ்வளவு போட்டீர்கள்? என்பதை சொல்வதற்கு என்ன தயக்கம்.

தமிழ் மக்களின் பெயரில் சேகரிக்கப்பட்ட ஒவ்வொரு பெனிக்கும் ஒவ்வொரு சென்ஸ்க்கும் ஒவ்வnhரு சதத்திற்கும் கணக்குக் காட்ட வேண்டிய கடமைப்பாடு நிதி சேகரித்தவர்களுக்கு உண்டு. அதைக் கேட்கின்ற உரிமை எமக்குண்டு.

வெண்புறா மற்றும் வெண்புறா லிமிட்டட் அமைப்புகளின் கணக்கு விபரங்களின் படி 2008 ஜனவரி 31ல் முடிவடைந்த நிதியாண்டில் இவர்கள் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதில் எவ்வித உதவிகளையும் வழங்கி இருக்கவில்லை. ஊனமுற்றவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு 37,392 பவுண்கள் மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது.

White_Pigeon_Logoஆனால் வெண்புறா அதே காலப்பகுதியில் 224,865 பவுண்களை மக்களிடம் இருந்து வசூலித்ததை 2008 ஜனவரி 31ல் முடிவடைந்த நிதி ஆண்டுக்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்துகின்றது. அந்நிதியாண்டு வெண்புறாவின் செலவீனம் 160,391 பவுண்கள். வெண்புறாவின் மொத்த செலவீனத்தில் இருந்து அவர்கள் உதவிய தொயை கழித்துக்கொண்டால் வரும் (160,391 - 37,392 =)  122,999 பவுண்கள் அவர்களுக்கு மேற்படி உதவியை வழங்க ஏற்பட்ட செலவீனம் ஆகும். 37,392 பவுண் உதவியை வழங்க 122,999 பவுண் செலவு ஏற்பட்டு உள்ளது.

தாயக மக்களின் சோகங்களையும் கண்ணீரையும் அவலங்களையும் பவுண்களாக்கிய வெண்புறா அம்மக்களுக்கு வழங்கியது மூன்றிலொரு பங்கு மட்டுமே. இந்த 122,999 பவுண்களுக்கு வெண்புறா காட்டும் கணக்கு இதோ:
Costs of generating funds - Fund raising activities and publications - 58,632
Governance costs - 34,237
Other resources expended - 30,130

பொதுவாகவே பொது ஸ்தாபனங்கள் தங்கள் கணக்கறிக்கையை பதிவு செய்யப்பட்ட சுயாதீன கணக்காளிர்களிடம் கொடுத்து ஓடிற் செய்வது வழமை. பொது ஸ்தாபனங்களுக்கு  சட்டப்படியான பொறுப்பு இல்லாவிட்டாலும் பெரும்பாலும் பொது ஸ்தாபனங்கள் அதனை ஒரு நல்ல நடைமுறையாகப் பேணுவது வழமை. ஆனால் வெண்புறா அவ்வாறான எந்த நடைமுறையையும் கடைப்பிடிக்கவில்லை.

2008 ஜனவரி 31க்குப் பின் தற்போது 18 மாதங்கள் ஓடிவிட்டது. தமிழ் மக்கள் வரலாறு காணாத அவலத்தைச் சந்தித்துவிட்டனர். அந்த அவலங்களையெல்லாம் வெண்புறா பவுண்களாக மாற்றிக் கொண்டுள்ளது. ஆனால் வெண்புறா தாயகத்தில் காத்திரமான எந்த உதவி நடவடிக்கையையும் மேற்கொண்டதற்கான தடையங்கள் அதன் இணையத் தளத்தில் கூட இல்லை. வெண்புறா போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அடையாளம் காணப்பட்ட எந்த அமைப்பும் இலங்கையில் புனர்வாழ்வு மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

ஆனால் வெண்புறா புலம்பெயர்ந்த மக்களின் உணர்வுகளை பவுண்களாக தனது உண்டியலினுள் சொரியச் செய்வதில் தீவிரமாக உள்ளது. அண்மையில் இடம்பெற்ற லண்டன் தேர்த் திருவிழாக்களில் எல்லாவற்றிலும் வெண்புறா உண்டியல் குலுக்கத் தவறவில்லை.

சுண்டக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்ற கணக்கில் அனுப்பப்பட்ட வணங்கா மண் பொருட்கள் லண்டனில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் சிலவற்றுக்கு விற்றது போக மிகுதி பல மாதங்களாகியும் இன்னமும் வன்னி மக்களைச் சென்றடையவில்லை. மக்களுக்கு வழங்கும் நிவாரண உதவியை அரசியலாக்கி அதனால் சுமந்து சென்ற கப்பலுக்கும் காப்புறுதி நிறுவனங்களுக்கும் பணத்தை வழங்கியது ஒன்றே நடந்தது.

வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினராக ஜிரிவி யால் அறிமுகப்படுத்தப்பட்ட கவுன்சிலர் தயா இடைக்காடர், கலாநிதி நித்தியானந்தன், Dr புவி ஆகியோரைக் கொண்ட Dr N S மூர்த்தி தலைமையிலான குழுவிற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கிறார் கலாநிதி நித்தியானந்தன். வணங்கா மண் க்கு நிதியுதவி செய்ததை ஜிரிவியில் வெளியிட்டனர். அந்த நேர்காணலில் தன்னை ஏற்பாட்டாளர்களில் ஒருவராக குறிப்பிட்டது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்தார் கலாநிதி நித்தியானந்தன். தேசம்நெற் ஏற்பாடு செய்த கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை வெளியிட்டார். வணங்கா மண் பிரித்தானிய பொது அமைப்புகளிள் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட அமைப்பல்ல. அது பற்றிய கணக்கு விபரங்கள் பொதுத் தளங்களில் இல்லை. ஜிரிவி யில் வெளியான வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவின் நேர்காணலை பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.

வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 2
வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 3

பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் படி (http://www.charity-commission.gov.uk/ShowCharity/RegisterOfCharities/ContactAndTrustees.aspx?RegisteredCharityNumber=1107434&SubsidiaryNumber=0) வெண்புறா அறக்கட்டளையினர்: Dr N S மூர்த்தி, மைக்கல் வவாட்லோ, ரட்னசபாபதி தியாகராஜா, தாமோதரம்பிள்ளை தேச இலங்கைமன்னன், Dr நிலானி நக்கீரன், அனிதா யசோதர், Dr ஜெயதாம்பிகை ஞானப்பிரகாசம் ஆகியோர் பதிலளிக்க வேண்டிய நேரமிது.

http://thesamnet.co.uk/?p=16101