பாசிச ஜெயா காலத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சங்கர ராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரி ஜெயேந்திரன் கைதானபோது அதிர்ந்து போனது தமிழகம். சங்கராச்சாரி கொலை செய்வாரா என்ற சந்தேகத்தைக் காட்டிலும், இரு பார்ப்பன மையங்கள் மோதிக் கொண்ட அதிசயம்தான் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.

 புதிராகவும் இருந்தது. இரு மையங்களுக்கும் இடையிலான கட்டைப் பஞ்சாயத்து, பொருளாதார முரண்பாடுகள் மற்றும் பாசிச ஜெயாவின் தனிப்பட்ட குணாதிசயங்கள் காரணமாக இந்த "வரலாற்றுப் புகழ்' வாய்ந்த கைது அன்று நிகழ்ந்தது.

 

எல்லா ஊடகங்களும் பெரியவாள், பால பெரியவாளின் லீலைகளை விலாவாரியாக எழுதியதும், சங்கரராமனைக் கொன்றதை ஜெயேந்திரன் பெருமையாக ஒத்துக்கொண் டதும் நக்கீரன் இதழில் வெளியான போது, சங்கர மடத்தின் அதிகாரம் சரிந்து விடும் போலத் தெரிந்தது. ஆனால் முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கங்கள், இந்து மதவெறி அமைப்புகள் ஆகியவற்றின் தரகு, கட்டைப் பஞ்சாயத்து மையமாகத் திகழும் சங்கரமடம் தனது அதிகாரத்தைச் சற்றே இழந்திருந்தாலும், அது தற்காலிகமானதே என்பதை இவ்வழக்கின் தற்போதைய நிலைமைகள் எடுத்துக் கூறுகின்றன.

 

சங்கரராமனைக் கொன்ற கூலிப்படையினரைக் கண்ணால் கண்ட சாட்சிகள் வரத ராஜப் பெருமாள் கோவில் ஊழியர்கள். சங்கரராமனது மனைவி, மகன் மற்றும் மகளும் வீடு தேடி விசாரிக்க வந்த கொலையாளிகளைப் பார்த்திருக்கின்றனர். இந்த அடிப்படையில் போலீசார் கூலிப்படையையும், மடாதிபதிகளையும் கைது செய்து வழக்கு போட்டனர். இந்த வழக்கு தமிழகத்தில் நடந்தால் தங்களுக்கு நீதி கிடைக்காது என்றும் வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென்றும் கூறி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது ஜெயேந்திரன் தரப்பு. வழக்கை புதுச்சேரிக்கு மாற்றுமாறு உச்சநீதி மன்றமும் வழிமொழிந்தது. விசாரணையின் போக்கு எப்படி இருக்கும் என்பது அப்போதே ஏறத்தாழத் தெரியத் தொடங்கி விட்டது.

 

மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும் வரையில் வழக்கு விசாரணையை நடத்த விடக் கூடாது என்பதற்காக எல்லா வகையான நீதித்துறை தகிடுதத்தங்களையும் செய்தது சங்கரமடம். திமுக ஆட்சி வந்தவுடன் சங்கரமடத்தினர் பெருமகிழ்ச்சி அடைந்ததாகவும், இனி வழக்கு தங்களுக்கு சாதகமாக அமையுமென்று உற்சாகம் கொண்டிருப்பதாகவும் பல பத்திரிகைகள் எழுதின. வழக்கைக் கொண்டு செல்வதில் அரசுதரப்பு காட்டிய மெத்தனம் இந்தக் கூற்றுகளை மெய்ப்பிப்பதாகவே அமைந்திருந்தது.

 

தற்போது, புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவரும் விசாரணையில், கொலையை நேரில் பார்த்த சாட்சிகளான கோவில் ஊழியர்கள் தமது முந்தைய வாக்குமூலத்தை மறுத்து கொலையாளிகளைப் பார்க்கவில்லை என்று கூறி, "பிறழ் சாட்சி'களாக மாறி விட்டனர். இந்த நாடகத்தின் உச்சமாக சங்கரராமனது மனைவியும், மகனும், மகளும் கூட கொலையாளிகளை நேரில் பார்க்கவில்லை எனக் கூறி பிறழ் சாட்சியங்களாக மாறி விட்டனர்.

 

பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஜகீரா பானு பிறழ் சாட்சியமாக மாறியதற்காக தண்டிக்கப்பட்டார். வழக்கில் மறு விசாரணை நடத்தப்பட்டது. சங்க பரிவாரம் மற்றும் மோடியின் அதிகார பலத்தையும், ஆள் பலத்தையும் மீறி அப்படியொரு தீர்ப்பைப் பெறுவதற்கு அசாத்தியமானதொரு போராட்டத்தை தீஸ்தா சேதல்வாத் நடத்த வேண்டியிருந்தது. அப்படிப்பட்டதொரு போராட்டம் இல்லையேல் அது நிச்சயம் சாத்தியமாகி இருக்காது. தற்போதும் பிறழ் சாட்சிகளாக மாறி விட்ட இவர்களை அரசு தரப்பு தீவிரமாகக் குறுக்கு விசாரணை செய்ய இயலுமென்றாலும், அரசு தரப்பு அதைச் செய்யுமா என்பதுதான் கேள்வி.

 

 பணபலமும் அரசியல் அதிகார பலமும் கொண்ட ஆளும் வர்க்கத்தினர் சட்ட வழிமுறைகள் மூலம் தண்டிக்கப்படுவது அரிதினும் அரிது. "பிரம்மம் தான் உண்மையானது; நாம் காணும் இந்த உலகம் மாயை'' என்றான் ஆதிசங்கரன். அந்த ஆதிசங்கரன் பெயரிலேயே போலி டாக்குமெண்டு தயார் செய்து, காஞ்சி மடத்தை உருவாக்கியவர்கள் அல்லவா கும்பகோணத்துப் பார்ப்பனர்கள்! இதோ கண்ணால் கண்டதெல்லாம் பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. இனி உண்மை எது, பிரம்மம் எது?


ஏ.டி.எம். மா, உருட்டுக் கட்டையா?