90களின் ஆரம்பத்தில் “பெரியாரை வீரமணி கும்பலிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!” என புதிய ஜனநாயகத்தில் வந்த தொடர் கட்டுரை அரசியல் உலகில் பெரும் விவாதத்தையும் கிளப்பி போயஸ் தோட்டத்து பூசாரியாக மணியாட்டிக் கொண்டிருந்த வீரமணி கம்பெனியை முற்போக்கு உலகில் அம்பலப்படுத்தியது.

 

 அப்போது கம்பெனியார் ம.க.இ.கவின் மீது கொலைவெறியுடன் விடுதலையில் பார்ப்பனத் தலைமை இன்னபிற அவதூறுகளை வீசிக்கொண்டிருந்தனர். அப்போது இப்போதைய பெ.தி.க தோழர்களும் அங்கேதான் இருந்தனர். இந்தக் கட்டுரையின் தொடர்விளைவாகவும் ம.க.இ.கவின் இந்துத்தவ மற்றும் ஜெயாவை எதிர்த்த போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்ற காலத்தில் திராவிடர் கழகத்திலிருந்து பெ.தி.க தோழர்கள் வெளியேறினார்கள். அதற்கு முன்னரே வீரமணி அரசியல் ரீதியில் சமாதியானார்.

கோபாலபுரத்திற்கும், தோட்டத்திற்கும் மணியாட்டிக்கொண்periyar-copyடிருந்ததன் பின்னே மாபெரும் பொருளாதார நலன்கள் இருந்தன. வட்டிக்கடையும், சுயநிதிக்கல்லூரியும் என பெரியார் ஆரம்பித்த இயக்கத்தை லிமிடெட் கம்பெனியாக மாற்றியிருந்த வீரமணி தனது அல்லக்கைகளை வைத்து பெரியார் திடலில் அவ்வப்போது ஏதோ அரிப்புக்கு கூட்டம் நடத்தி களப்பணியாற்றுவதாக பீலா காட்டிக் கொண்டு மறுபுறம் தனது சொத்துக்களை பெருக்குவதற்காகவும், பாதுகாக்கவும் ஆளும் கட்சிகளை அண்டிப்பிழைத்தார். இத்தனை ஆண்டுகள் ஆகியும் இவ்வளவு கோடிக்கணக்கில் வருமானத்தை பெருக்கியும் பெரியாரின் படைப்புகளை வெளியிடுவதற்கு கூட துப்பில்லாமல் விடுதலையிலும், உண்மையிலும் மருத்துவ நலன், தன்னம்பிக்கை, ஊட்டச்சத்து, வாழ்வியல் சிந்தனைகள் என தூரதர்ஷனில் மாமிகள் நடத்தும் அரட்டைகளை அரங்கேற்றி வந்தார்.

இதனூடாக பெரியார் தி.க தோழர்கள் பெரியார் படைப்புக்களை முழுமையாக கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்ட போது மட்டும் அதை நிறுத்துவதற்கு கருணாநிதியை வைத்தும் நீதிமன்றத்திலும் தடை வாங்கியிருந்தார். பெரியார் கருத்துக்கள் மக்களிடம் போய்ச்சேரக்கூடாது என இந்தக் கருப்பு பார்ப்பனர் செய்த வாதங்கள் குருவாயுரப்பனுக்கே பொறுக்காது.

ஆனாலும் நீதிமன்றத்தில் பெரியாரின் கருத்துக்களை சொந்தம் கொண்டாடுவதற்கு சட்டப்பூர்வ ஆதாரங்கள் இல்லையெனவும், பெரியார் படைப்புக்களை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் எனவும் பெரியார் தி.க தொடுத்த வழக்கில் நீதிபதி சந்துரு தீர்ப்பளித்திருக்கிறார். இதற்கு முதற்கண் பெரியார் திராவிடர் கழக தோழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். உடனே வெகுண்ட வீரமணி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இருப்பினும் இந்த தீர்ப்பை இப்படியே இப்போதைக்கு தொடருமென பதிளிக்கப்பட்டிருக்கிறது. இனி ஐயா டெல்லிக்கு உச்சநீதி மன்றத்திற்கு படையெடுப்பார். எத்தனை கோடி செலவானாலும் இந்த வழக்கில் வெல்லுவதற்கு எல்லா சின்னத்தனமான வேலைகளையும் செய்வார். எனினும் அவை வெற்றிபெறப் போவதில்லை. அதற்குள் பெரியாரின் படைப்புக்கள் தோழர்களால் வெளியிடப்படும் என நினைக்கிறோம். உச்சநீதிமன்றமும் வீரமணிக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பதற்கான முகாந்திரங்கள் எதுவுமில்லை.

கண்ட கண்ட அனாமதேயங்களின் படைப்புக்களையெல்லாம் நாட்டுடைமையாக்கி நவீன புரவலராக மார் தட்டும் கருணாநிதி பெரியாரின் படைப்புகளை மட்டும் வீரமணிக்கு உதவும் பொருட்டு அப்படி ஆக்காமல் இருந்து மற்றொரு துரோகமும் செய்திருக்கிறார். பெரியவர் இப்படி தனது இறுதி காலத்தில் துரோகப் பட்டங்களை நிறைய பெறுவது குறித்து தொண்டர்களே கவலைப்படுவதில்லை. நாம் மட்டும் ஆதங்கப்பட்டு என்ன ஆகப்போகிறது?

ராஜீவ் கொலையின் பின்னாளில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகமெங்கும் ம.க.இ.க வீச்சாக இயக்கம் நடத்திய நாளில் சென்னையில் ஒரு கூட்டம் நடத்துவதற்கு கூட பெரியார் திடலை தருவதற்கு பயந்து கொண்டு மறுத்தவர்தான் இந்த வீராதி வீரமணி. இன்றைக்கு ஈழத்திற்காக என்னவெல்லாம் அழுது புரண்டு நடிக்கிறார். கருணாநிதி மட்டுமல்ல வீரமணியும் தனது இறுதி காலத்தில் துரோகப் பட்டத்தோடுதான் வாழப்போகிறார். வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வீரமணியின் இணையத்தளபதியாக விடாமல் தினசரி நான்கைந்து பதிவுகள் போட்டுத்தாக்கும் தமிழ் ஓவியாவிற்கு இந்த தருணத்தில் சில கோரிக்கைகளை வைக்கிறோம்.

நண்பரே நாத்திகப் பிரச்சாரம் எப்போதும் தேவையுள்ள ஒன்றுதான். ஆனாலும் மக்களின் எல்லா வாழ்க்கைப்பிரச்சினைகளை பேசி போராடும் முழுமையில்தான் அதையும் செய்ய முடியும். இல்லையேல் அதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆளில்லாத சிவன் கோவிலில் ஐயர் கொட்டாவி விட்டுக்கொண்டே பூஜை செய்து சிவனை எழுப்பமுயன்று தோற்று தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்களை விரட்டிவிட்டு வீடு சென்று தயிர்சாதம் உண்டு முடங்குவது போல உங்களின் அன்றாடப்பணியும் கணினியில் அப்படி ஆகிவிட்டது. எங்களுக்கும் உண்மையிலேயே வருத்தமாகத்தானிருக்கிறது. உங்கள் தளத்தை யாரும் அதிகம் பார்ப்பதில்லை, எதைக்குறித்தும் விவாதமும் நடப்பதில்லை. “யாரோ” 5 பேர் ஓட்டு மட்டும் போடுவதால் தமிழ்மணம் வாசகர் பரிந்துரையில் உங்கள் பதிவுகள் தினமும் நான்கைந்து வந்து விடுகின்றன. இனி தினமும் ஒன்று மட்டும் போட்டால் எங்களைப் போல ஏழை பதிவர்களுக்கு உதவியாய் இருக்கும்.

மற்றபடி பெரியாரை அவரது வீரியத்துடன் கொண்டு செல்லும் பணியினை நாங்கள், தோழர் மதிமாறன், மற்றும் பெரியார் திராவிட கழக தோழர்கள் முதலானோர் பார்த்துக் கொள்கிறோம். இனி நீங்கள் திடலுக்கு சென்று மானமிகுவை சந்தித்து அவரை நல்வழிப்படுத்தும் பணியினை செய்யலாம். அப்படி செய்த மறுகணமே நீங்கள் திடலை விட்டும் கழகத்தை விட்டும் நீக்கப்படுவீர்கள். அப்புறம் என்ன செய்யலாம்? நீங்கள் சாயம் போன கருப்புச்சட்டையை கடாசி விட்டு எங்களைப் போன்றவர்கள் அணியும் விறுவிறுப்பான செஞ்சட்டையை அணியுங்கள். காத்திருக்கிறோம்.

 

 

http://www.vinavu.com/2009/07/30/periyar-viduthalai/

 

 .