மாமரத்து நிழலில்

அப்பு படுத்துறங்கிய சாய்மனைக்கதிரை

கிளையில் கட்டிய ஊஞ்சல்

கந்தகக்காற்றில் கருகிவீழ்ந்த மாம்பிஞ்சுகள்

வரப்பு வடலியில் கட்டிய குருவிக்கூடு

குண்டகற்றும் நிபுணர்குழாம் துருவி ஆய்கிறது

 

 

கொத்திச்சாறி நாற்றுநட்டு களைபிடுங்கி

அருவிவெட்டில் தப்பிய கதிர்களை தேடிப்பொறுக்கி

கஞ்சியாக்கியவன் குடிசையில்

றொட்டிக்கல்லையும் ஆய்ந்துபார்

வீச்சுவலை மிதப்புருளை

துருப்பிடித்த சூளருவாள்

கடலிறங்கப்பயத்தில் காய்ந்துகிடந்த

கட்டுமரத்தையும் கொத்திப் பிளந்துபார்

 

தூ வெறிபிடித்தவனே

மண்ணை முத்தமிட்டாய் வெற்றிமுழக்கமிட்டாய்

மகிந்தசிந்தனை வென்றதென்றாய்

மக்களிற்கெந்த இழப்புமின்றி மீட்டதாய்

மார்தட்ட வெட்கமில்லை

மறுபுறத்தே உன்பெண்டாட்டி

அனாதைப்பிள்ளைகளை அரவணைக்கும் படம்காட்டி

யாரை ஏய்க்கின்றாய்

 

நாளெடுக்கும் மீள்அமர

போட்டுமுடிய உடல்கள்மேல் புத்தவிகாரை எழணும்

மண்ணைத்தோண்டாமல் பயிர்வளர்க்கும் பக்குவம்சொல்ல

இந்திய விஞ்ஞானி மண் எடுத்துப்போயுள்ளார்

ஆழத்தோண்ட அரச அனுமதி சட்டமும் வரும்

கண்ணிவெடியகற்றவென ஏவல் படைவரும்

எந்த தடையமுமின்றி எரிமருந்து ஊற்றுங்கள்

கண்ணில் படுமிடமெல்லாம் இராணுவத்தை நிறுத்து

 

இழப்பாலே மனமுடைந்து கிடக்கின்றார்

ஓட்டுக்காய் உன்நகர்வும்

இனச்சிதைப்பும் தொடருமெனின்

உழைத்துழைத்து உருக்கேறிய கரங்களை

அடைத்துப்போட்டுள்ளாய் உடைத்தெழும் பார்