மக்களை கொலைவெறியுடன் கொன்றுகுவித்து அவர்களை எதுவுமற்ற பரதேசியாக்கிவர்கள், அதை காட்டி இன்று நிவாரணம் கோருகின்றனர். புலியெதிர்ப்பு பேசிய  அரச கைக்கூலிகள், இதை காட்டி தமிழ் மக்களுக்கு பாய் விரிக்கின்றனர். அரசு சார்ந்து நின்று மதம் பரம்பும் கும்பல்கள், இதை பயன்படுத்தி மதத்தை பரப்பி மக்களுக்கு உதவுவதாக    காட்ட முனைகின்றது.

 

அரச கூலிக்குழுக்கள் முதல் மதங்கள் வரை, இலங்கை பாசிச இயந்திரத்தின் ஒரு உறுப்பாக நின்று அதற்கு உதவுகின்றது. இதே போல் சர்வதேச அரசுகள், நிறுவனங்கள் கூட இதைத்தான் செய்கின்றது. பேரினவாதம் தமிழ்மக்களை கொன்று ஒரு இனத்தை அடக்கியொடுக்க, இராணுவமல்லாத சிவில் உறுப்புகளுக்கு பலமாக உதவுவது தான் இந்த உதவி.

 

இன்று இலங்கையில் பாசிச பேரினவாத இயந்திரமே, அனைத்தையும் கண்காணிக்கின்றது. இதைத்  தாண்டி இதற்கு வெளியில் எந்த உதவியும் மக்களுக்கானதல்ல. அனைத்தும் இந்த எல்லைக்குள் தான் நிர்வகிக்கப்படுகின்றது.

 

மனிதாபிமானத்துடன் உதவ விரும்புபவர்கள், உங்கள் உறவினர்கள் நண்பர்கள் ஊடாக உங்கள் சமூகத்துக்கு நேரடியாக உதவுங்கள். அந்த வகையில் நீண்டகால நோக்கில் திட்டமிடுங்கள். உங்கள் எஞ்சிய சந்ததி தளைக்க, மீளவும் உரம்பெறும் வண்ணம் நேரடியாகவே அந்த மக்களை அணுகுங்கள். இடைத்தரகர்கள், மதங்கள், அரச கைக் கூலிகள், அரசுடன் இயங்கும் துரோகக் கும்பல் ஊடாக உதவும் அனைத்தும், இந்த பேரினவாத இனவொடுக்குமுறை இராணுவ இயந்திரத்தின் தேவையை பூர்த்திசெய்வதாகவே அமையும். இதற்குள் இந்த கும்பல் ஒரு பகுதியை சுருட்டிக் கொள்ளும். உங்கள் அனைத்து முயற்சியும், அந்த மக்களுக்கு நேரடியாக உங்கள் சொந்த கண்காணிப்பில் செல்லட்டும்.

 

நாம் இதில் செய்ய வேண்டியது என்ன?  எங்கள் மக்களை இந்த நிலைக்கு கொண்டு வந்த அரசுக்கு எதிராக, இதற்கான நட்ட ஈட்டை வழங்கக் கோரி போராடுவது தான். மக்கள் வாழ்விடத்தை, தொழிலை எல்லாம் அழித்து, அவர்களை அகதியாக்கி எதுவுமற்ற பிச்சைக்காரராக்கியது இந்த பேரினவாத இராணுவ பாசிச அரச இயந்திரம் தான்.

 

இதற்கான பொறுப்பை ஏற்று அந்த மக்களுக்கான நிவாரணத்தை வழங்க வேண்டியது இந்த அரசுதான். இதை மக்கள் மேல் சுமத்துவது, யுத்தத்தை ஆதரித்த அரச கைக்கூலிகள் இதற்கு உதவக் கோருவது எல்லாம் இந்த குற்றத்தை பின்பக்கமாக நியாயப்படுத்துவதுதான்.    

 

யுத்த இயந்திரம் மூலம் மக்களின் வாழ்வை எல்லாம் அழித்தவர்கள் இவர்கள். இன்று அவர்களை பிச்சைக்கார சமூகமாக, தன் முட்கம்பி வேலிக்கு பின் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. வெளியில் மக்களை பார்வையாளராக நிறுத்தியுள்ளது. அவர்களை யாரும் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாத, அவர்களை ஒரு அடிமை விலங்குகளாக பேரினவாதம் உலகம் முன்நிறுத்தியுள்ளது.

 

இதைக்காட்டி நீ உரிமையைக் கோரினால் உனக்கும் இந்தக் கதிதான் என்று மிரட்டுகின்றது. அதேநேரம் உன்னிடம் இந்த மனித விலங்குகளுக்கு பிச்சையைப் போடு என்கின்றது.

 

தமிழினத்தை அடிமைப்படுத்தி, அவர்களை பிச்சைக்காரராக்கியவர்கள், இவர்கள் மேல் மனவிரக்கம் கொண்டு இதனுடன் சேர்ந்து நீ வாழ் என்கின்றது. உரிமையை கோராதே, உதவியை செய் என்கின்றது. இதையெல்லாம் யார் சொல்லுகின்றான்? இதைச் செய்தவன் தான். இதைக் கண்டிக்காதவன் தான். உன்னையும் சேர்த்து நலமடிக்க, இந்த அரச கைக்கூலிகள் புலம்பெயர் மண் வரை தவளைகள் போல் இன்று சலசலக்கின்றனர்.  

 

பி.இரயாகரன்
27.04.2009