Language Selection

தோழர்களே!  நண்பர்களே!  சமூக அக்கறையுள்ளோரே!


எம்மினம், எம்நாட்டு மக்கள், உலக மக்கள் சந்திக்கின்ற பல்வேறு ஒடுக்குமுறைகளும், அடிமைத்தனங்களுமே மனித வாழ்வாகி வருகின்றது. இதன் பாலான அக்கறையற்ற சமுதாய கண்ணோட்டங்கள், பொய்யான போலியான பிரச்சாரங்கள் எம்முன் எங்கும் மலிந்து கிடக்கின்றது. இதை எதிர்கொண்டு, சழுதாயத்தை வழிநடாத்த வேண்டிய பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உண்டு.

 

இந்த வகையில் நாம் இந்த இணையம் வாயிலாகவே உங்களை சந்திக்கின்றோம். 2008 மே 1 திகதி முதலாக இந்த புதிய இணைய வடிவமைப்பின் ஊடாகவே, உங்களை நாள் தோறும் சந்திக்கின்றோம். இதன் பின் எம்மை நோக்கி வந்தவர்கள், 10 லட்சம் பேர் தலையங்கத்தில் உள்ளவற்றை பார்வையிடல் செய்துள்ளனர். இப்படி கடந்த பத்து மாதத்தில், மாதம் ஒரு லட்சம் வீதம், நாள் தோறும் 3300 பார்வையிடல்கள் நிகழ்ந்துள்ளது. அண்ணளவாக 5400 தலையங்கத்தில் விடையதானங்களைக் கொண்டு, தற்போது இத்தளம் இயங்குகின்றது. இதுவோர் செய்தித்தளமல்ல. மாறாக கற்றுக் கொள்வதற்கானதும், கற்றுக்கொடு;ப்பதற்கானதுமான இணையமாக உள்ளது. இலங்கை, இந்திய தமிழர்களின், பொது சமூக இயக்கம் மீதான பல உள்ளடக்கங்களை கொண்டு, இந்த இணையத்தை ஒழுங்கமைத்துள்ளோம்.

 

எதையும் ஓரே பார்வையில் பார்க்கவும், படிக்கவும், இலகுவாக தேடவும், பழையதை தேடவும்  கூடிய வகையில், குறிப்பாக விரைவாக தேடிப் படிக்கும் வகையில் உங்கள் இந்த இணையத்தளம் உள்ளது.

 

இது உங்கள் அரசியல் தளம் என்பதை, அரசியல் ரீதியாக புரிந்துகொள்வது அவசியமானது. குறிப்பாக இலங்கைச் சூழலில் புலியும் புலிப்; பினாமியும், அரசும் அரச ஆதரவு புலியெதிர்ப்பும் 100 சதவீதமாக எம் கருத்தை, கருத்துத்தளத்தை மூடிமறைக்கின்றது. ஒன்றில் புலி அல்லது அரசு, இவ்விரண்டுக்குள்ளும் தான் கருத்துகள், சிந்தனைகள் உண்டு என்று காட்டமுனைகின்றது. இவ் இரண்டினதும் இருப்பு இதில் அடங்கியுள்ளது. அவை தம் அரசியல், அதற்கு எதிரான அரசியல் என்ற எல்லைக்குள், மக்களை வைத்திருக்க முனைகின்றது. இந்த வகையில் நாம், எம் கருத்துகளோடு மிக தனிமைப்பட்ட நிலையில் இருக்கின்றோம் என்பதை தெரிந்து கொண்டும், புரிந்து கொண்டும், அதற்கு எதிராக செயலாற்ற வருமாறு வேண்டுகின்றோம்.

 

எம் கருத்துகளை, எம் சிந்தனைகளை இன்றைய சூழலில் மக்களிடம் கொண்டு செல்லும் வகைகளில், இன்று இணையமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இணைய வசதியுள்ள பலரும், இன்று அன்றாடம் இணையம் பார்க்கின்றனர். ஆனால் பொதுவாக செய்திக் கொசிப்புகளைத் தான் தேடிப் பார்க்கின்றனர். அதை அறிவாக சிந்தனையாக எடுத்துக்கொண்டு, கற்பனை புனைவுகளில் இன்பம் காண்கின்றனர் அல்லது சோகத்தில் மூழ்குகின்றனர்.

 

நாம் இதில் இருந்து மாறுபட மனிதனின் சிந்தனையை அறிவை விருத்தி செய்ய வைப்பதன்  மூலம், தன்னைச் சுற்றிய நிகழ்வுகளை விருப்பு வெறுப்பற்ற வகையில் பகுத்தாயும் பகுத்தறிவை உருவாக்க முனைகி;ன்றோம்.

 

இலங்கை தமிழர் மத்தியில் இந்த போராட்டத்தை நாம் தனித்து தொடங்கிய போது, சில நண்பர்கள் எம்மைச் சுற்றி இருந்தனர். அதை பல்வேறுபட்ட வழிகளில் தொடர்ந்த நாம், இன்று இணையம் ஊடாக அதைச் செய்கின்றோம். இன்று சிலர் இந்த பணியில் எம்முடன் புதிதாக இணைந்துள்ளனர். அறிமுகமற்ற வேறு சிலர் புதிதாக எழுதத் தொடங்கியுள்ளனர். எம்மை ஒத்த சிந்தனையில் பலர், எமக்கு வெளியில் ஒதுங்கியிருந்தவர்கள், மௌனம் காத்தவர்கள் இன்று எம் இணையம் மூலம் தம் கருத்துகளை வெளிக்கொண்டு வர தாமாகவே முன்வருகின்றனர்.

 

நாம் அவர்களை தோழமையுடன் அணுகுகின்றோம், வரவேற்கின்றோம். எம் இணையத்தில் உள்ளவை எல்லாம், ஒத்த ஒரு கருத்துப்போக்கல்ல. மாறாக ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக, வெளிவரும் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளடங்கியது. சமூகம் கற்றுக்கொள்ள, அவர்களிடம் கற்பதும், அவர்களின் முரண்பாடான வாழ்வியல் கருத்துக்கள் உள்ளடங்கிய வகையில் ஓருங்கிணைக்க முனைகின்றது இந்த இணையம்.

 

ஓடுக்கப்பட்ட மக்கள் சார்பான, எந்த ஒடுக்குமுறைக்கும் துணை போகாத உங்கள் கருத்துகளுக்கு, இந்த இணையத்தளம் வாய்ப்பை வழங்கும்.

 

நாம் சந்தித்த வாழ்வின் அனுபவங்கள், தொடர்ந்து மக்களுடன் நிற்க முடியாது போன சூழல், அதை ஒட்டிய விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள் மிக முக்கியமானவை. மக்களின் பெயரில் இயங்கும் எதிரிகள் மீது கடும் விமர்சனத்தை, சுயவிமர்சனத்தை கோரி எழுதும் நாம், எம்மை நாம் சுயவிமர்சனம் செய்வதும் எம்மை விமர்சித்துக் கொள்வதும் அவசியமானது. இது பலருக்கு கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் உதவும். சமகால அரசியல் போக்கில், புலி புலியெதிர்ப்பு போக்குக்கு வெளியில் இதற்கு எதிராக இயங்காமை அல்லது அங்குமிங்குமான உதிரித்தனமான போக்கு இருந்துள்ளது. மொத்தத்தில் நாம் எம்மை திரும்;பிப்பார்த்தல் அவசியம்.

 

விமர்சனத்தில் நாம் புலியை மையமாக வைத்தே விமர்சனங்கள் அதிகளவு செய்துள்ளோம். காரணம் தமிழ் மக்களின் பெரும்பான்மை, புலிகளின் பாசிச மயமாக்கலுக்குள் கட்டிவைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சிகள் அவர்களை சுற்றியே நிகழ்ந்த வண்ணம் இருந்தது. தமிழ் மக்களை தோற்கடிக்கும் எதிர்நிலை அம்சம், புலிகள் ஊடாக அரங்கில் முன்னிலைக்கு வந்த வண்ணம் இருந்தது. மொத்தத்தில் தமிழ்மக்களை இதில் இருந்து விடுவிக்கவும், சிந்திக்க வைக்கவும் புலி மேலான விமர்சனம் கூர்மையாக மையப்பட்டிருந்தது.

 

எம் முதல் எதிரி அரசு என்பதையும், அதை எதிர்த்த எம் அரசியல் வழி, புலிகளின் இராணுவ தாக்குதலால் மழுங்கடிக்கப்பட்டது. அவை வெற்றிகரமானதாக நம்பப்பட்டது. அரசுக்கு எதிரான எமது விமர்சனம் சிறுமைப்படுத்தப்பட்டது. இப்படி புலியிசம் மேலான விமர்சனத்தை முன்னிலைப்படுத்தியது.

 

அரசும், அரச பினாமிகளான புலியெதிர்ப்பும், புலிகள் மூலம் எம்மிடமிருந்து தற்காப்பை உருவாக்கிக் கொண்டான். புலிகளின் இன்றைய தோல்வி, அரச பினாமிகளின் புலியெதிர்ப்பே தமிழ்மக்களின் தீர்வாக வைக்கின்ற அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. இதற்கு எதிராக போராட்டத்தை குவியப்படுத்துமாறு தோழமையுடன் கோருகின்றோம். அரசு சார்பு புலியெதிர்ப்பு அரசியல் ஓரு இனத்தை, இன்னொரு இனத்திடம் அடிமைகொள்ள வைக்கின்ற அரசியல்.  

 

முக்கியமான பணி புதிய தலைமையை உருவாக்குவது. இருக்கின்ற தலைமைகள் எல்லாம் மக்களுக்கு எதிரானது. மக்களுக்கான தலைமையை, புதிய இளைய சமுதாயத்தில் இருந்து உருவாகும் வண்ணம், கற்றுக்கொள்ளுதல் கற்றுக்கொடுத்தல் என்ற வகையில் குறிப்பாக கவனம் எடுத்தல் அவசியமானது.

 

அத்துடன் இலங்கை 1970, 1989-1990, 2008-2009 என்ற காலகட்டத்தில் ஆயுதப்  போராட்டத்தை இலங்கை அரசு அழித்துள்ளது. இந்த இயக்கங்களில் வலதுசாரி அரசியலுக்கு அப்பால், இந்த அழிப்பை கவனத்தில் எடுத்து அரசியல் செயல்பாட்டை செய்வது அவசியமானது. இன்று சிங்கள பேரினவாதம் கொண்டுள்ள பாசிச வடிவம், குறைந்தபட்சம் 10 வருடங்களாவது படுகொலை அரசியல் வடிவில் நீடிக்கும். இக்காலத்தில் சர்வதேச நெருக்கடியும் உள்நாட்டும் நிலைமையும் சேர்ந்து பாரிய கொந்தளிப்பான காலகட்டத்தை கொண்டதாக அமையும்.   இதையெல்லாம் குறிப்பாக கவனத்தில் எடுக்கவேண்டும்.

 

அத்துடன் எம்மைச் சுற்றி இனயுத்தம், அதற்குள் சமூகம் மூழ்கிய நேரத்தில், நாடு பல்வேறு வகையில் சுரண்டப்பட்டும், அன்னிய மூலதனங்கள் சூறையாடியும் வருகின்றது. இப்படி பல்வேறு சமூக சிதைவுகள் நாட்டை அழித்து வருகின்றது. இவற்றையெல்லாம் கவனத்தில் எடுப்பதும், அதனடிப்படையில் கருத்துக்களை மையப்படுத்தி கருத்தை செறிவாக்கக் கோருகின்றோம்.

 

நாம் கருத்துக்களை எழுதுவது, வாசிப்பது மட்டும் போதாது. அதை பரந்துபட்ட தளத்தில் வாசிக்க, விவாதிக்க, சிந்திக்க தூண்டுவது அவசியம். ஈமெயில் உள்ள அனைவரையும், நீங்கள் இலகுவாக முன் அனுமதியின்றி அணுக முடியும். எங்கள் பெயரில் ஈமெயில் திறக்க முடியாது உள்ளதென்றால், அவ்வளவு ஈமெயில் உள்ள தமிழர்கள் உள்ளனர். அவர்களுக்கு இணையத்தை அறிமுகம் செய்து வையுங்கள். 10 நிமிடம் நாள் ஒன்றுக்கு ஓதுக்கினால், பத்து பேருக்கு புதிதாக இணையத்தையும் அதன் மூலம் கருத்துகளையும் அறிமுகம் செய்யமுடியும்.

 

ஈமெயில் முகவரிகளை சேகரியுங்கள். ஈமெயில் முகவரிகளை, திறக்க முனைந்து அதன் மூலம் முகவரிகளை கண்டுபிடியுங்கள். இதை ஒரு அரசியல் வேலையாக செய்யுங்கள். இணையத்தை பரந்துபட்ட வாசகரிடம் எடுத்துச் செல்லுங்கள். நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். தமிழர் கூடும் இடங்களில், விளம்பரமாக பொது இடத்தில் ஓட்டுங்கள். உண்மைகளை எடுத்துச் செல்ல, உங்களின் எல்லைக்குள் பலவழிகள் உண்டு. அதை செய்யுங்கள். உங்கள் கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றது.

 

பி.இராயகரன்
03.03.2009      


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ