Language Selection

தமிழ்மக்களின் தமிழீழவிடுதலைப் போராட்டம் எப்படி எதற்காக ஆரம்பிக்கப்பட்டது..., தமிழ் மக்களோடு இருந்த பிரச்சனை என்ன….., தரப்படுத்தலா? தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றமா? சிங்களக்காடையர்களால் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதாலா?

 

தமிழனை அடக்கி ஒடுக்கி அதிகாரம் சொலுத்தியது சிங்களவனா? அல்லது தமிழனைத் தமிழனா? பாலியல் ரீதியாகவும், சாதி ரீதியாகவும் தமிழர்கள் தமிழர்களாலேயே அடக்கி ஒடுக்கப்படவில்லையா?


தமிழர்களின் உண்மையான பிரச்சனைகள் மறைக்கப்பட்டு, தங்கள்தங்கள் குறுகிய நலன்களுக்காக இனப் பிரச்சனையை கையிலெடுத்து தமிழன் என்று சொல்லடா…தலை நிமிர்ந்து நில்லடா...! என்று மேடைக்குமேடை கட்சிக் கொடிகளோடு வெள்ளை வேட்டிக் கள்ளர்கள் கூச்சலிட்ட குரல்தான் அன்றைய தலைமுறையினை மந்தைகளாக்கிய ஆரம்பக் குரல்.


இனவெறி பிடித்த சிங்கள அரசு தமிழனை அடக்கி ஒடுக்குகிறது..., நாங்கள் போராட வேண்டும்…தனித்தமிழீழம் அமைத்தே தீரவேண்டும்…இல்லை என்றால் ஒரு தமிழனும் நிம்மதியாக வாழமுடியாது…என்ற கோஷங்கள் அப்பாவி மக்கள் மத்தியில் கற்பிதம் செயப்பட்டு திணிக்கப்பட்டதன் மூலமாக அவர்களோடு இருந்த முக்கிய அடிப்படைப் பிரச்சனைகள் மறைக்கப்பட்டது.


பௌத்த இனவெறி அரசு அப்பாவி இலங்கை மக்களுக்கு கோட்டு சூட்டோடு செய்ததைத் தான் இந்த இந்துவேளாள வெறியர்கள் வெள்ளை வேட்டியில் செய்யத்துடித்தார்களே ஒழிய மக்கள் விடுதலைக்காக போடப்பட்ட கோஷமல்ல தமிழீழம்.


மலையகமக்கள் அனுபவிக்காத பிரச்சனைகளையா, முஸ்லீம் மக்களோடு இல்லாத பிரச்சனைகளையா, கிராமங்களிலும் நகரங்களிலும் சிங்கள அப்பாவி மக்கள் அனுபவிக்காத துன்பங்களையா தமிழன் அனுபவித்தான். தமிழனுக்குப் பிரச்சனையா இருந்தது... இருப்பது… தமிழன் தான்.


எந்தத் தமிழனும் சிங்கள மக்கள் வீட்டு விராந்தையில் உட்கார்ந்து மூக்குப்போணியிலும், சிரட்டையிலும் தண்ணி குடிக்கவில்லை. தோட்டங்களிலே தமிழ்ப் பெண்களை குறுக்குக்கட்டோடு அலையவிட்டு கால் நீட்;டிக் கொண்டிருந்து பெண்களின் அங்கஅசைவுகளை ரசித்துக் கொண்டிருந்தது எங்கள் வெள்ளை வேட்டிக்கள்ளர்களே ஒழிய சிங்களவர்கள் அல்ல…


இவர்கள் தான் தமிழ் மக்களுக்காக போராட முன்வந்தவர்கள். இவர்கள் ஆரம்பித்து வைத்த போராட்டம் இளைஞர்களால் ஆயுதவடிவமெடுத்து மக்களின் இன்றைய அழிவுநிலைக்கு காரணமாகி விஸ்வரூபமெடுத்து நிற்கின்றது.


தமிழ்மண்ணில் போராட்டச் சூழலால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட இடம்பெயர்விலும்;, வெளிநாட்டுப் புலம்பெயர் வாழ்விலும் சாதிப்பிரச்சனையின் வடிவம் மட்டுமே மாற்றம் பெற்றுள்ளது. ஆனால் இன்றும் பிரச்சனை பிரச்சனையாகத் தான் இருக்கின்றது.


இதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் புலிகளால் சாதிப்பிரச்சனை சமூகப்பிரச்சனை தீர்ந்துவிட்டது, இனி சிங்கள அரசிடமிருந்து தமிழீழத்தைப் பிரித்தெடுத்துவிட்டால் தமிழனின் பிரச்சனை எல்லாமே தீர்ந்துவிடும் என்று கதை அளந்து கொண்டு திரிகின்றார்கள்.


இத்தனை பொருளாதாரவர்க்க சமூகப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அன்று தமிழ்மக்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குடிசையாவது இருந்தது, ஏதாவது கைத்தொழில் இருந்தது, சிறு வியாபாரமாவது இருந்தது, சொந்த கிராமங்களிலோ வன்னிமண்ணிலே விவசாயமிருந்தது, கூழோகஞ்சியோ குடித்துக் கொண்டு கஷ்ட்டப்பட்டாவது பிள்ளைகளின் கல்வியை முன்னெடுக்கக் கூடிய நிலையிருந்தது.


ஆயுதப் போராட்டம் தொடங்கி 30வருடங்காலத்தில் மாற்றப்பட்டதென்ன...? இந்த 30வருடத்தில் தமிழ் மக்கள் அடைந்த நன்மை என்ன...? ...???... கேள்விக் குறிகள்தான் இன்று மக்களோடு எஞ்சியுள்ளது.


தொழிலை இழந்தோம்… உணவு வீடுவாசலை இழந்தோம்… கல்வியை இழந்தோம்… பெற்றோரை இழந்து பிள்ளைகளும், பிள்ளைகளை இழந்து பெற்றோர்களும் அனாதைகள் ஆக்கப்பட்டோம்… இப்படியே தமிழனின் இழப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.


பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டதால் கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டுவிட்டது...! என்ற நிலைதான் இன்றைய தமிழனின்; நிலை.


புலிகளின் போராட்டத்தவறு தமிழ்மக்களோடு இருந்ததையும் இழக்கச் செய்தது மட்டுமல்லாது தமிழ்மக்களின் எதிர்காலத்தை இன்று மக்கள் விரோதிகளின் கைகளில் ஒப்படைத்ததுதான் இன்னொரு கவலைக்குரிய விடயம். இன்று புலிகளின் பின்னடைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ள பலமக்கள் விரோதக் கும்பல்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.


புலிகள் எங்களை ஓரம்கட்டிவிட்டார்கள்….…, புலிகளோடு தங்களுமொரு பாசிஸ்ட்டுகளாக இருந்து கொண்டு புலிகள் அனுபவித்ததை நாங்களும் அனுபவிக்க முடியவில்லையே என்ற ஆத்திரமும் ஆதங்கமும் கொண்டிருந்த புலியெதிர்ப்பாளர்கள் புலிகளின் இன்றைய தோல்வி கண்டு தலைகால் தெரியாத சந்தோஷத்தில் கூத்தடிக்கின்றார்கள்.


புலிகளோடு குறுகியகாலம் சுயநலத்திற்காக நட்புரீதியில் தங்களை இணைத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பவாதிகளும், இன்று புலிகளைத் திட்டித் தீர்த்து கொண்டு தங்களை மக்கள்விடுதலை விரும்பிகளாக காட்டி தங்கள் கடந்த காலத் தவறுகளை நியாப்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் இறங்கியுள்ளார்கள். ஆனால் இப்போதும் வெளிப்படையான புலிகள் பற்றிய கருத்துக்களையோ விமர்சனங்களையோ புலிகள் முன்;வைக்க திராணி அற்றவர்களாகத் தான் இருக்கின்றார்கள்.


இவர்கள் தான் ஆபத்தானவர்கள்.


மக்களின் வாழ்க்கையினை ஏலம் போட்டுச் சந்தைப்படுத்தக் கூடியவர்கள்.


இவர்களை இனம் கண்டு செயற்பட வேண்டிய தேவையும் கடமையும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உண்டு.


தொடர்ந்தும் நாங்கள் ஆட்டுமந்தைகளாக தலையாட்டிகளாக இருப்பதை விட்டு எங்களை மாற்றி கொண்டு மனிதத்தை நேசித்து மக்கள் நலனுக்காக வாழவேண்டும்.


இல்லையேல் கோவணம் மட்டுமில்லை அப்பாவித் தமிழ்மக்களே களவாடப்படுவது தவிர்க்க முடியாது.

 

தேவன்.
01.03.2009.


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ