கார்ல் மார்க்ஸ் சிந்தனைகளும், தத்துவங்களையும் மார்க்ஸீசம் என்று சொல்லப்படுகின்றது. பொருள் முதல் வாதம் (Materialism) தர்க்கவியல் (Rialectics) சரித்திரம் பற்றிய பொருள் முதல் வாதக் கண்ணோட்டம் (The Materialist Conception History) வர்க்கப்போராட்டம் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டவை மார்க்ஸீய தத்துவங்கள்.


பொருள் முதல் வாதத்தில் (Materialism) கார்ல் மார்க்ஸ் தனது ஆணித்தரமான கருத்துக்களை மதம் வரையில் சென்று அலசி ஆராய்ந்து பார்க்கிறார். உலகமும், மக்களும் ஆண்டவனால் படைக்கப்பட்டவை என்று உலகில் இருக்கும் மதங்கள் அனைத்தும் சொல்கின்றன. ஆனால், கார்ல் மார்க்ஸீசின் சிந்தனை விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்கிறது. முதன் முதலாகச் சிந்திக்கின்ற ஒரு சக்தி தோன்றி உலகத்தை படைத்திருக்க முடியாதென்றும், பொருள்களே (ஜடங்கள்) முதலில் தோன்றி அவற்றின் பௌதிக ரசாயன மாற்றங்களின் காரணமாக உயிருள்ள செல்கள் தோன்றியிருக்க வேண்டும் என்கிறது.

பொருள்களை அடிப்படையாகக் கொண்டே எல்லாம் தோன்றியிருக்கக் கூடும் என்ற கருத்தையே பொருள் முதல் வாதம் (Materialism) என்ற கோட்பாட்டுக்குள் மார்க்ஸீயம் கொண்டு வருகிறது. பொருள் முதல்வாதம் என்பது சிந்தனை அல்லது எண்ணம் என்பது - உலகத்திலும் அதைச் சுற்றிலும் உள்ள பொருள்கள் மனித மூளையின் சிந்தனை உருவங்களாக பிரதிபலிக்கப்படுவது என்கின்றது.

இக்கோட்பாட்டின் அடிப்படையிலேயே மதம், அரசு முதலியவைகள் கடவுளால் சிந்தித்து படைக்கப்பட்டிருக்கக் கூடியவை என்ற கருத்து கற்பனாவாதம் (idealism) என்று மார்க்ஸீயம் சொல்கிறது.

இதில் கற்பனாவாதம் மதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. பொருள் முதல் வாதம் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

அடுத்து தர்க்கவியல் (Rialectics) அறிவு பற்றிய கொள்கைகளையும், மனித அறிவு எவ்வாறு வளர்ச்சி அடைந்து வந்திருக்கின்றது, அறியாமையில் இருந்து அறிவுடைமையை நோக்கிச் சரித்திரப் பூர்வமாக எவ்வாறு முன்னோக்கி வந்திருக்கின்றது என்பதை மார்க்ஸீய சிந்தனைகள் சொல்கிறது.

தர்க்கவியல் மனித இனத்தில் முதன் முதலாக ஆரம்பித்தது கிரேக்கர்களிடம் இருந்து தான். சிந்திக்கத் தெரியாத மனிதனிடம் கேள்விகளை கேட்க வைத்து சிந்திக்க வைத்து தர்க்கவியல் செய்ய தூண்டுகோளாக இருந்தது மானிடவர்க்கத்தில் முதல் தர்க்கவாதி சாக்ரடீஸ். மார்க்ஸீயமும், தர்க்கவியலுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கிறது.



தர்க்கவியல் என்பது என்ன? பொருள்களைப் பற்றிய உண்மையைக் கண்டுபிடிப்பது அப்பொருள்களோ ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு. உலகம் என்பது ஏற்கனவே செய்து வைக்கப்பட்ட பொருள்களின் ஒரு தொகுதி இல்லை. பலவகைகளில் உண்டான வளர்ச்சிகளின் தொகுதிகளாக அவை காணப்படுகின்றன. அப்பொருளிளுள்ள எத்தன்மையும் நிலையானதோ, புனிதமானதோ மாற்றம் அடையாததோ இல்லை. இதில் மனிதனின் எண்ண ஓட்டங்களும் அடங்குகிறது. எப்பொருளும் உள்ளும், புறமும் மாற்றம் அடைந்துக் கொண்டே இருக்கின்றது.

தர்க்கவியலுக்கு சோதனைக்களமாக இயற்கை பயன்படுகிறது என்பது
மார்க்ஸீயத்தின் கோட்பாட்டில் அடக்கம். இயற்கை வளர்ச்சி மனித மூளையில் எப்படி பிரதிபலிக்கப்படுகிறதோ அவைதான் தர்க்கவியல் தத்துவமாக மார்க்ஸீயம் கருதுகின்றது. வெளி உலகத்திலும், மனித மூளையிலும் உண்டாகிக் கொண்டே இருக்கும் இயக்கத்தின் பொது நியதிகளின் தர்க்கமே விஞ்ஞானமாகிறது.

ஒரு பொருளைப் பற்றி அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிகளைப்பற்றி தர்க்கித்து வாத பிரதிவாதத்தின் மூலமாக உண்மையைக் கண்டுபிடிக்கும் முறைக்குத் தர்க்கவியல் முறை என்று பெயர். அக்காலத்தில் கிரேக்கர்களின் உண்மையைக் கண்டறிய தர்கத்திற்காகவே நேரம் ஒதுக்கி விவாதித்து இருக்கின்றனர்.

சுருக்கமாக மார்க்ஸீயத்தின் தர்க்கவியல் குறித்து கூறவேண்டுமானால்
ஒரு குறிப்பிட்ட பொருளில் கொள்கையில் அல்லது சமூதாயத்தில் பலதரப்பட்ட பகுதிகள் ஒன்றையொன்று சார்ந்தும், தழுவியும் நின்ற போதிலும்; அவை எல்லாம் ஒரே ஒரு பொது நியதிக்கும் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் உட்பட்டே தீரும் என்கிறது.

அடுத்து சரித்திரம் பற்றிய பொருள் முதல் வாதக் கண்ணோட்டம் (The Materialist Conception History) இதில் உறவுகள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல், சரித்திரம் போன்றவைகள் கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.
மனித சமூகம் தன் தேவைகளை உற்பத்தி செய்து கொள்ளும் சமூதாய உற்பத்தியில் மனிதர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒருவித உறவுமுறைகளுக்காக உள்ளாக்கப்படுகிறார்கள். இவ்வுற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில் ஒரு கட்டம் வரை பொருத்தமானதாக இருக்கின்றது. உற்பத்தி உறவுகளின் மொத்தமும் சேர்ந்து சமூதாயத்தின் பொருளாதார அமைப்பாக இருக்கிறது. உற்பத்தி உவுகளின் சமூதாய அமைப்பின் மீதே சட்டம் அரசியல் என்ற ஆதிக்கங்கள் நிறுவப்படுகின்றன. யதார்த்த வாழ்க்கையின் உற்பத்தி முறைகள் சமூதாய அரசியல் கலாச்சார வாழ்க்கை நியதியை பொதுவில் அமைக்கின்றது.

மக்கள் தான் சரித்திரத்தை உருவாக்குகிறார்கள். ஆனால் மக்களின் எண்ணத்தை எவை உண்டாக்குகின்றன? முரண்பட்ட கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும், முயற்சிகளுக்கும் இடையே போராட்டத்தை உருவாக்கும் சக்தி எது? மனித சமூதாயத்திற்கு இப்போராட்டங்களினால் ஏற்படும் பலன் என்ன? போராட்ட நிலைமைகளின் மனித வளர்ச்சி நிலை - நியதி என்ன போன்ற வினாக்களுக்கு சரித்திரம் பற்றி விஞ்ஞான பூர்வமாக மார்க்ஸீயம் எடுத்துரைக்கின்றது.

மனிதர்களின் மனப்பான்மை அவர்களின் வாழ்க்கை அமைப்பை உருவாக்குவதில்லை. சமூதாய வாழ்க்கை அமைப்பே மனிதர்களின் மனப்பான்மையை உருவகப்படுத்துகிறது. உற்பத்தி சாதனங்களின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டம் சமூதாயத்தில் இருக்கம் பழைய உற்பத்தி உறவுகளோடு முரண்பாடடைகின்றது. (சொத்துடமை உறவுகளோடு) மாற்று உறவுகளின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு உதவாமல் தடங்கலாக மாறும் போது சமூதாயப் புரட்சி ஆரம்பமாகின்றன.

இப்புரட்சி மாற்றங்கள் சமூதாயத்தில் சாதாரணமாக ஏற்பட்டுவிடுவதில்லை. சமூகத்தில் மனித உறவுகளின் ஆணிவேர் சமூதாய உற்பத்தி முறையிலேயே இருக்கின்றது என்பதை கண்டுப்பிடிக்கப்படாமல் இருக்கின்றது. மாற்றங்களில் ஏற்படும் பொருளாதார நிலைமைகளின் வெளிப்படை மாற்றங்கள் சட்டம், ஒழுங்கு, நீதி, மதம், தத்துவம், அரசியல் போன்ற சிந்தனை முறைகளின் மாற்றத்தையும் பகுத்துணர வேண்டும். பகுத்துணர்ந்த விழிப்புணர்வு சிந்தனைகளே சமூகத்தில் மாற்றங்களுக்கு அல்லது புரட்சிக்கு மையப் புள்ளியாக மாறுகிறது என்ற தத்துவத்தில் மார்க்ஸீயம் தன் வாதத்தை முன்வைத்திருக்கின்றது.

வர்க்கப் போராட்டம் (The class Struggle) பற்றி மார்க்ஸீய தத்துவங்கள் மனித இனத்தின் உயிரோட்ட உணர்வுகளாக எடுத்துரைக்கிறார். ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் அல்லது வர்க்கத்திற்குள் இருக்கும் உட்பிரிவுகளையும் விளக்கி ஒவ்வொரு வர்க்கப்போராட்டமும் எப்படி அரசியல் போராட்டமாக இருக்கிறது என்பதை விளக்குகிறார். இதில் மார்க்ஸீன் பொருளாதாரத் தத்துவம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

"கம்யூனிஸ்ட் அறிக்கை"யில் மார்க்ஸ் சொல்கிறார் :

"முதலாளித்துவத்தை எதிர்த்து இன்று நேருக்கு நேர் நிற்கும் வர்க்கங்களில் பாட்டாளி வர்க்கம் மட்டுமே புரட்சிகரமானது. மற்ற வர்க்கங்கள் நவீன தொழில் வளர்ச்சியின் முன் தாக்கு பிடிக்க முடியாமல் அழிந்துவிடுகின்றன. ஆனால், தொழில் வளர்ச்சி தன் விசேஷ உற்பத்தியாக பாட்டாளி வர்க்கத்தை உருவாக்குகிறது. மத்திய வர்க்கம் சிறு தொழில் வியாபாரி, கலைஞன், விவசாயி அனைவரும் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுகின்றனர். மத்திய வர்க்கத்தினராக இருக்கும் தங்கள் நிலைமையில் இருந்து கீழ் இறங்கிவிடாமல் இருப்பதற்காகத் தான் இப்போராட்டமே தவீர, அவர்கள் புரட்சிகரமானவர்கள் இல்லை. பாட்டாளிகளுடன் போரட்டத்தில் மத்திய வர்க்கத்தினர் இணைகிறார்கள் என்றால் அவை அவர்களுடைய எதிர்கால நலன்களுக்காகவும், தங்களுடைய பாதுகாப்புகளுக்காகவும் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்."

எப்படி வர்க்கப் போராட்டங்களை நுணுக்கமாக ஆராய்ந்திருக்கிறார் என்பதற்கு கம்யூனிஸ்ட் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இக்கோட்பாடு சிறு உதாரணம் மட்டுமே.

வர்க்கப் போராட்டம் பற்றி குறிப்பிடும் போது மார்க்ஸ், "இதுவரையில் எழுதப்பட்டுள்ள சரித்திரங்கள் அனைத்திலும் வர்க்கப்போராட்டங்களே சரித்திரங்களாக காணப்படுகின்றன" என்கிறார்.

"அடிமை எஜமானன் - அடிமைத் தொழிலாளி, எஜமானன் - பண்ணைக் குடியானவன், பண்ணை எஜமான் - பட்டணத் தொழிலாளி, முதலாளி, சுருக்கமாக அடக்கப்பட்டவன் - அடக்கி வைப்பவன் இவர்களுக்கிடையே நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ ஓர் இடையறாப் போராட்டம் நடந்து கொண்டே வந்திருக்கிறது. இந்தப் போராட்டங்களின் முடிவு இந்த வர்க்கங்கள் அடியோடு அழிந்து போவதிலோ அல்லது சமூதாய முழுவதுமே புரட்சிக்கரமாக மாற்றி அமைக்கப்படுவதிலோ கொண்டு விட்டிருக்கிறது!

பிரெஞ்ச் புரட்சிக்குப் பின்னால் ஐரோப்பிய சரித்திரத்தில் போராட்டத்தின் உண்மையான அடிப்படை வர்க்கங்களின் போராட்டமாகவே இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தின் நிலை முதலாளித்துவத்தின் வெற்றி பெற்றிருக்கும் சகாப்தமாகவே இருக்கிறது. எல்லா காலக்கட்டங்களிலும் மனித இனம் இருகூறுகளாக பிரிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது. ஒன்று ஆளும் வர்க்கம் மற்றொன்று பாட்டாளி வர்க்கம். இரண்டுக்கும் இடையே நாளுக்கு நாள் பெரிய இடைவெளி ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது என்றோ, ஒரு நாள் வர்க்கப்போராட்டங்கள் முடிவுக்கு வந்துவிடலாம் என்பதும் மார்க்ஸீன் வாதம்.

இந்துக்களுக்கு பகவத் கீதை வேத நூலாக இருப்பது போல், இஸ்லாமியர்களுக்கு குரான் தெய்வ வாக்காக இருப்பது போல், கிறிஸ்தவர்களுக்கு புனித நூலாக பைபிளைக் கருதுவது போல், மனிதர்களாக இருக்க நினைப்பவர்கள் மார்க்ஸீயத்தை அறிய வேண்டும். அத்தனையும் அறத்தை நோக்கி சமநிலையையும், பொதுவுடமையையும் நோக்கியதான ஒழுக்கநெறிகளின் அடிப்படையை நோக்கிய மார்க்ஸீயத்தின் சிந்தனையை உள்வாங்கும் மனித சமூகம் நிச்சயம் வர்க்கப்போராட்டாங்களுக்காக, உரிமைப் போராட்டங்களுக்காக கதறிக் கொண்டிருக்காது.

தமிழச்சி
12/12/2008

 http://thamizachi.blogspot.com/2008/12/blog-post_12.html&type=P&itemid=84811