மக்களை பிரச்சனைகளை தீர்க்கமுனையும் ஒரு அழகிய கறுப்பு முகம். இப்படித்தான் உருவகப்படுத்தப்படுகின்றர். இதன் பின்னால் இருப்பதோ, சூதும் நயவஞ்சகமும் கடத்தனமுமாகும்.

 

இந்த ஓபாமா எப்படி வழிபாட்டுக்குரியவரானர். மக்களின் அவலம்தான், இதற்கு எதிர்மறையில் பதிலளிக்கின்றது. சமூக அவலம் ஓபாமா மூலம் தீரும் என்ற எதிர்பார்ப்பு, இதில் மண்டிக்கிடக்கின்றது. 

 

உண்மையில் வெள்ளை அமெரிக்காவில் ஒரு கறுப்பன் ஆட்சிக்கு வந்தது என்பது, கறுப்பர்களுக்கு விடிவு காலம் என்ற பிரமை உருவாக்கியுள்ளது. மேற்கு உலகமாகட்டும், அமெரிக்கவாகட்டும், இயல்பாகவே வெள்ளை நிறவெறியின் அடையாளமாகும். வெள்ளை மேலாதிக்கம்தான் உலகம் என்ற அடிப்படைக் கோட்பாடுக்கு எதிரான எதிர்வினைதான், ஓபாமா மீதான வழிபாடாகின்றது. மறுபக்கத்தில் வெள்ளையினவெறி அமெரிக்க எப்படி ஓபாமாவுக்கு வாக்களித்தது. கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்கா மக்களை ஆண்ட குடியரசுக் கட்சிக்கும், புஸ்சுக்கும் எதிரான கடுமையான சமூக எதிர்வினை தான், மாற்று எதுவுமின்றி கறுப்பு ஓபாமாவின் வெற்றியாகின்றது. இப்படி கறுப்பு வெற்றி தற்செயலானது.  

 

உலகெங்கும் மக்கள் சந்திக்கின்ற மனித அவலத்தின் ஒரு வெட்டமுகம் தான், இந்த வெற்றி. அமெரிக்கா முதல் உலகம் வரை, இதன் பிரதிபலிப்பு எதார்த்தமானதாக உள்ளது. இது மாற்றம் பற்றி நம்பிக்கையையும், பிரமிப்பையும் அடிப்படையாக கொண்ட வெற்றியாக புரித்து கொள்னப்படுகின்றது.

 

இதை தான் செய்யப்போவதாக பீற்றிக்கொண்ட ஓபாமாவோ, மாபெரும் மோசடிக்காரனாக மாறியுள்ளார். 'அமெரிக்க மக்களிடம் உண்மையாக நடந்து கொள்வேன்" என்கின்றார்.     

 

ஓபாமா மக்களுக்கு உண்மையாக நடந்துகொள்ள முடிமா!?

 

ஓபாமாவின் கலப்பு கறுப்பு நிறத்தைக் கடந்து, பெயரில் உள்ள முஸ்லீம் அடையாளத்தை கடந்த, அவரோ சுரண்டும் வர்க்கத்தின் ஒரு பிரதிநிதி. ஓபாமாவின் ஆன்மா, இதற்கு வெளியில் எந்த மனிதத்தன்மை கொண்டதல்ல. ஏகாதிபத்திய அமெரிக்காவை மாறிமாறி ஆண்டு வரும் ஜனநாயகக்கட்சியின் ஒரு கறுப்பு பிரதிநிதி. ஆளும் வர்க்கத்தின் ஓருபகுதி, மற்றயை தரப்புக்கு எதிரான மக்களின் வெறுப்பை பயன்படுத்தி, தங்கள் பிரதிநிதியாக கறுப்பு ஓபாமாவை தெரிவு செய்துள்ளனர்.

 

மாற்றத்துக்கான இந்த அழகிய கறுப்பு முகம் எகாதிபத்திய தன்மை வாய்ந்தது. அமெரிக்க ஏகாதிபத்திய உலகாளவிய ஆக்கிரமிப்பை பச்சையாக நியாயப்படுத்தியே வாக்கு கேட்ட இவரா உங்களுக்கு மாற்றத்தை தரப்போகின்றார். ''பாலைவனத்திலும் மலைகளிலும் நமது வீரர்கள் உயிரை பணயம் வைத்து நம்மைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று போர் கூச்சல் எழுப்பும் ஓசை, மாற்றத்தை நோக்கி எங்கும் காதுகளில் உட்புகவண்ணம் தடுத்து பிரமை கொள்ள வைக்கின்றது. பாலைவனத்திலும், மலையிலும் மக்களுக்காக சண்டை செய்கின்றனர். எண்ணை முதலாளிகளுக்காகவும், ஆயுத முதலாளிகளுகாகவும்  உலகை அடிமைப்படுத்த, அந்த நாடுகளை ஆக்கிரமிப்பையெ நடத்துகின்றனர்.     

 

அமெரிக்கா மூலதனத்தின் தேவைக்கு உட்பட்டு இயங்கும் ஓபாமா ''நம்பிக்கை மற்றும் நீதியுடன் கூடிய புதிய சமுதாயத்தை உருவாக்க" முடியும் என்ற அவரின் கூற்று, முற்றிலும் பொய்மை நிறைந்தது. உண்மையாக நடத்து கொள்வேன் என்பது, மோசடித்தனமானது. அமெரிக்காவின் ஆளும் வர்க்கங்கள் மாறுவதில்லை. அதை பிரதிநித்துவம் செய்யும் ஜனநாயகக் கட்சியை, ஓபாமா மாற்றமுடியாது. இதற்கு அமைய அமெரிக்காவின் மொத்த அடையாளமே, ஏகாதிபத்;தியத் தன்மைகொண்டது. இதைத்தான் ஓபாமா பிரதிநிதித்துவம் செய்கின்றார்.

 

ஓபாமாவை அதிகாரத்துக்கு கொண்டு வந்தவர்கள் யார்?     

 

மக்கள் அல்ல. அவர் ஜனநாயக்கக் கட்சியின் வேட்பளார். மக்களை ஒடுக்கும் அதன் சொந்த வேலைத்திட்டதுக்கு உட்பட்டவர். தனித்து தேர்தலில் நின்று எந்த வெற்றியை சாதிக்க முடியாத, மூலதனத்தின் பிண்டம். மக்களுடன் நின்று போராட முடியாது, மக்களின் விரோதிகளின் கூடி நின்று வென்றவர்.

 

அவர் எந்த மக்கள் விரோதிகளுடன் கூடிநிற்கின்றார். அமெரிக்காவையும் உலகையும் சூறையாடும் கொள்ளைக்காரர்களுடன் கூடி நிற்கின்றார். அண்மையில் அமெரிக்காவின் நிதித்துறையை கொள்ளை அடித்தவர்கள் துனையுடன் ஆட்சிக்கு வந்தவர். அமெரிக்காவினதும் உலகத்தினதும் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் பொருளாதார மோசடிக்காரர்கள் சேர்ந்துதான் ஆட்சியைக் கைப்பற்றியவர். இவர்கள் எல்லாம் கூடித்தான் ஓபாமாவை தம் வேட்பாளராக தீர்மானித்து பின் வெல்லவைத்தனர்.

 

இவர்கள்தான் ஓபாமாவுக்கு பல கோடி பணத்தை தேர்தல் நிதியாகவும் கொடுத்தனர். இன்று உலகெங்கும் பல கோடி பேர் வேலை இழக்கக் காரணமாக உள்ளவர்கள்தான், ஒபாமாவை தம் வேட்பளராக தெரிவு செய்தனர். மனித இனத்தை அடிமைப்படுத்தி கையெந்த வைத்துள்ள வள்ளல்கள் தான், ஓபாமாவின் எஜாமனர்கள்.

 

இந்த கொள்ளைக்காரர்கள் தான் இன்றைய நிதி நெருக்கடிக்கும், அதனால் பல லட்சம் வேலை இழப்புக்கு காரணகர்த்தகளாகும். இந்த நிதி நெருக்கடி என்பது, வெளிப்படையான கொள்ளை. வங்கியை இவர்கள் தூப்பாக்கி கொண்டு கொள்ளை அடிப்பதில்லை. மாறாக திட்டம்போட்டே, வங்கிப் பணத்தை தமக்குள் பங்கிட்டுக் கொண்டனர். (எப்படி கொள்ளை அடித்தனர் என்பதை இங்கே அழுத்திப் பார்க்கவும்). இப்படி கொள்ளைக்காரர்கள், சூதாடிகள், ஆளும் நாட்டில், வங்கிகளை யாரும் துப்பாக்கி கொண்டு கொள்ளை அடிப்பதில்லை மாறாக  அதை தமக்குள் பிரித்து எடுப்பதுடன், பணம் காணமல் போய்விட்டதாக (திவலாகிவிட்டதாக) அறிவிக்கின்றனர்.

 

இவர்கள்தான் ஓபாமாவுடன் அதிகாரத்தை பகிர்கின்றனர். ஓபாமா நியமித்துள்ள அதிகாரிகள் பலர், இந்த வங்கி கொள்ளைகாரர்கள். இப்படித்தான் ''நம்பிக்கை மற்றும் நீதியுடன் கூடிய புதிய சமுதாயத்தை உருவாக்"கின்றார். மக்கள் சொத்தை கொள்ளை அடித்தவர்கள் பலர், பதவியில் அமர்த்தப்படுகின்றனர். காணமல் போன நிதிக்கு, எந்த நிதி விசாரனையும் கிடையாது. அப்படி ஒரு நீதி விசாரனை செய்யப்படமாட்டாது என்ற கொள்ளைக்காரருக்கு ஓபாமா கொம்பு சிவிவிடுகின்றார். கொள்ளயடித்த பணத்தை மீளப் பெறவில்லை. புதிதாக மக்களின் பணத்தை, மிளக் கொள்ளையடிக்க அதே கொள்ளைக் கும்பலிடம் கொடுக்கின்றனர். அதையும் கண்கணிக்கவும், நிதி விசாரனை செய்யக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் தான், மறுபடியும் கொள்ளயடிக்க உள்ளனர். இதை ஒபாமாவின் அதிகார வர்க்கமும், தன்பங்கு தன்பையை நிரப்புகின்றது.  

 

அன்றைய கொள்ளை முதல் இன்றைய புதிய கொள்ளை வரை ஓபாமாவுடன் அதிகாரத்தை பகிர்பவர்களுக்கும், ஆலோசகர்களுக்கும் பங்குண்டு. தேர்தல் நிதியாக ஓபாமாவுக்கு நிதி வழங்கிய பலர், இந்த திருட்டை நடத்தியவர்கள். இப்படி 'நம்பிக்கை மற்றும் நீதியுடன் கூடிய புதிய சமுதாயத்தை உருவாக்க" முனையும் ஓபாமாவோ, ஊர் உலகத்தை எமாற்ற முனையும் மாபெரும் மோசடிக்காரன்.    

 

இந்த முதலாளித்துவ அற்பபுழு எதற்காக நெளிகின்றது என்பதைப்பாருங்கள். 'இந்த பொருளாதார சிக்கல் நமக்கு ஒரு பாடத்தை தெளிவாக சொல்லிவிட்டது. சாதாரண மக்கள் வளமாக இல்லாவிட்டால் வால் ஸ்ட்ரீட் வாழ முடியாது. சாதாரண தெருக்களில் நடமாடும் மக்களை தவிர்ததுவிட்டு வால் ஸ்ட்ரீட் மட்டும் செழித்துவிட முடியாது." வால் ஸ்ட்ரீட் வாழ்வதுதான் இந்த புழுவின் கவலை. சாதாரண மக்களுக்கு எலும்பைப் போடவிட்டால், அது கடித்து குதறிவிடும் என்ற கவலை. எலுபைத் நான் தரவேன் என்பதைத்தான், மாற்றம் என்கின்றனர். இதைத்தான் 'நம்பிக்கை மற்றும் நீதியுடன் கூடிய புதிய சமுதாய'ம் என்கின்றார்.    

 

ஓபாமா வால் ஸ்ட்ரீட் வாழ்வை எண்ணி புலபும் அதேநேரம், மோசடித்தனத்துடன் எதைக் கூறுகின்றார் 'இந்த வெற்றியை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் உலகம் இந்த நூற்றாண்டின் மாபெரும் பொருளாதார சவாலை எதிர்கொண்டிருக்கிறது. குழந்தைகள் எல்லாம் தூங்கிய பிறகு தந்தையும் தாயும் விழித்து உட்கார்ந்து எப்படி நம் கடன்களை அடைக்கப் போகிறோம், எப்படி டாக்டருக்கு பில் கட்டப் போகிறோம். எப்படி குழந்தைகளை படிக்க வைக்கப் போகிறோம் என்று கவலைகளில் இரவைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் பொருளாதார நிலைமை அப்படி இருக்கிறது" சரி இதை சொல்லும் நீ, இதற்கு காரணத்தை ஏன் சொல்ல மறுக்கின்றாய். மக்களுக்கு ஏன் இந்த பொருளாதார நிலைமை? ஏன் இந்தக் கடன்? ஏன் இந்த அவலம்? இதற்கு காரணமான குற்றவாளியை இனம்காட்டி தண்டிக்க மாறுக்கும் நீ, அதை பாதுகாக்க முனைவது ஏன்? இந்த நிலைமைக்கு வால் ஸ்ட்ரீட் காரணமில்லையா!? இந்த நிலமையை உருவாக்கிய குற்றவாளிகளை தண்டிக்காமல் எப்படி 'நம்பிக்கை மற்றும் நீதியுடன் கூடிய புதிய சமுதாயத்தை உருவாக்க" முடியும். அதை இனம்காட்ட கூட தயாரற்ற கறுப்பு ஒபாமா, மாற்றத்தைக் கொண்டுவரப்போகின்றார்!

 

இப்படி மனித அவலத்தின் கராணமான உண்மைகளை மூடிமறைத்தபடி ''அமெரிக்க மக்களின் கவலைகளை தாம் கவனத்தில் எடுப்பதாக" கூறுவது மோசடித்தனமானதல்லவா!? மக்களின் கவலைக்கு காரணமானவர்களை பாதுகாத்தபடி, கவலையை கவணத்தில் எடுப்பதாக கூறுவது மக்களை எமாற்றுவதாகும். ''மக்களின் புதிய சேவை மற்றும் தியாக உணர்வின் மூலமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" என்று கூறும் ஓபாமா யாருக்காக புலம்புகின்றான்;. மக்களுக்கு உண்மையானவனாக இருந்தால், முதாலாளிகளை பார்த்து நீங்கள் தியாகம் செய் வேண்டும் என்று கூறியிருப்பான். உங்களால் மக்கள் வருத்துகின்றனர், கொஞ்சம் தியாகம் செய்யுங்கள் என்று கெஞ்சியாது இருப்பான். மாறாக மனித அவலத்தை சந்திக்கும் அந்த மக்களை தியாகம் செய்யவே கோருகின்றார். யாருக்கான மேலும் முதலாளிகள் வாழ்வதற்காக! வால் ஸ்ட்ரீட வாழ்தற்காக!


        
''நமக்கு இன்று விடிவு பிறந்திருக்கிறது. நாட்டின் பிரச்சனைகளுக்கும் விடிவு வரும்" என்று வால் ஸ்ட்ரீடகாகத்தான் அழும் ஓபாமா, மக்களுக்காக அழவில்லை. என்றும் மக்களக்காக அழப்போவதில்லை. மக்களை மேலும் துன்பத்திலும் துயரதிலும் அழவைப்பார்கள்;. மக்களுக்காக மக்கள் போராடாத விடிவு எதுவுமில்லை.  

 

பி.;இரயாகரன்
09.11.2008