புலிவருது (மன்னிக்கவும் சிங்கம் வருது) கணக்காக கடந்த ஓராண்டுகாலமாக, எப்ப இங்க Airtel வருது என்பதே இளந்தலைமுறையின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாய் போய்விட்டது.

Tower போட்டுட்டாங்களாம், வேலைக்கு ஆளெடுக்கிறாங்களாம், அலுவலகங்கள் திறந்திட்டாங்களாம், டயலொக் ஓட பேச்சு வார்த்தையாம் எண்டு நாளுக்கு நாள் சூடான செய்திகள் வேறு..

அடுத்தமாதம் அடுத்தமாதம் என்று எதிர்பார்ப்பைக் கிளறிவிட்டு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது Airtel வருகை.

தற்போது சடுதியாக இங்குள்ள மற்ற செல்பேசிச்சேவை வழங்கும் நிறுவனங்கள் எல்லாம் அதிரடிக் கட்டணக் குறைப்புக்களைச் செய்ய வெளிக்கிட்டிருப்பது வேறு Airtel பீதியை இன்னும் மோசமாக்குகிறது .

கட்டணங்களை அநியாயத்துக்கு அதிகரித்து வைத்திருந்த மகாராஜாவின் டயலொக் கூட விபரீத (!) விலைக்குறைப்புக்களை தற்போது செய்திருப்பது மொபைல் வழிபாட்டாளர்களாக மாறிவிட்டிருக்கும் எங்கள் இளந்தலைமுறைக்கு தீவிர ஆய்வுக்குரிய விடயமாகப் போய்விட்டது.

Airtel வந்தால் சமாளிக்கிறதுக்குத்தான் இப்பவே கட்டணங்களைக்குறைத்து தயாராகிறாங்களாக்கும் எண்டது அவர்களது முடிவு.

இலங்கையின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிச் சரிகிறது..

அன்றாடம் ஒருவேளைச்சாப்பாட்டை வாங்கும் சக்தியை பெரும்பாலான மக்கள் இழந்து வருகிறார்கள்..

இலங்கைச் சனத்தொகை முழுமையும் பயன்படுத்தும் அரிசி, பருப்பு, சீனி விலை ஏறுகிறது .

பெரும்பகுதி பயன்படுத்தும் பெற்றோலும் விலை ஏறுகிறது.

அநேகமாக அனைவரும் பயன்படுத்தும் மின்சாரக்கட்டணம் ஏறுகிறது.

நகரங்கள் எல்லாமே நம்பியிருக்கும் குழாய் நீரும் ஏறுகிறது.

ஆனால் நாட்டில் மிகச்சிறுபான்மையானவர்களே பயன்படுத்தும் மின்னணுக் கருவிகளும், செல்பேசியும், பொழுதுபோக்குப்பண்டங்களும் மட்டும் ஏன் விலைகுறைந்துகொண்டே வருகிறது?

ஏன்?

அரிசி விலையைக்குறைப்பதைவிட, செல்பேசிக்கட்டணத்தைக்குறைத்து அதன் பாவனையைப் பரவலாக்குவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமா?

அல்லது அரிசியை உற்பத்தி செய்வதை விட உயர் தொழிநுட்பம் பயன்படுத்தப்படும் மின்னணுக்கருவிகளின் உற்பத்திச்செலவு குறைவானதா?

யார்காதில் யார் பூச்சுற்றுகிறார்கள்?

இதற்குப்பதிலைத்தான் எங்கள் தலைமுறை தேடக்காணோம்.


சடாகோபனும் அவரது துணைவியாரும் மேடையேற்றிய உலகமயமாக்கல் குறித்த நடன ஆற்றுகையில் ஒரு காட்சி வரும், பெரிய செல்பேசி ஒன்றை பூப்போட்டு பூசைகாட்டி கண்ணில் ஒற்றி வழிபட்டு "நாக்கியா சாமிக்கு அரோஹரா!" ஊர்வலாமாய் எல்லோரும் தூக்கிக்கொண்டு திரிவார்கள்.

எங்கும் Airtel, எதிலும் Airtel..


அதுசரி, இந்த Airtel என்றால் என்ன?

இந்தக் கம்பனி மீது இப்படி ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையும், ஆர்வமும் எப்படி இலங்கையர்க்கு வந்தது?

ஒருகாலத்தில் இலங்கையில் சீரிய சேவை வழங்கி பின் மூடப்பட்ட கம்பனியா இது?

அல்லது இலங்கை மக்கள் விசுவாசிக்கும் பெருவணிகரின் அடுத்த கம்பனியா இது?

அல்லது மில்க்வைற் முதலாளி Airtel நடத்தப்போறாரா?

யார் இந்த Airtel?

இலங்கையில் முன்பின் யாவாரம் செய்திராத இந்த கம்பனி, இலங்கையின் மற்றக்கம்பனிகளை அச்சுறுத்தவும், மக்களிடம் இவ்வளவு எதிர்பார்ப்பு அலையை தோற்றுவிக்கவும் நிச்சய வெற்றி ஒன்றைப்பெறும் வாய்ப்பினைப்பெற்றுக்கொள்ளவும் கூடியதாக ஆனது எப்படி?

Airtel இன் அந்த மூலதனம் எது?

இந்தக் கேள்விக்கான பதிலைத்தேடும்போது இந்தியாவிலுள்ள பெரிய முதலாளிகளின் வணிக நலனோடு தொடர்புபட்ட இந்திய ஆளும் வர்க்கத்தின் இலங்கை மீதான ஊடக, கலாசாரப் படையெடுப்பினைப் புரிந்துகொள்ள முடியும்.

சிங்கள மக்கள் இந்தி, பொலிவூட் மாய்மாலங்களுக்கூடாகவும், தமிழ் முஸ்லிம் மக்கள் தென்னக சினிமா, தொலைக்காட்சிகளின் ஏமாற்றுக்களாலும் கவர்ந்திழுக்கப்பட்டு இந்திய கலாசாரத்திணிப்புக்கு மிக இலகுவாக ஆட்பட்டுவிடுகிறார்கள்.

பொலிவூட் ஆகட்டும், தொலைக்காட்சிகளாகட்டும் எல்லாமே மனிதர்களை இலகுவாக சுண்டியிழுக்கும் வணிக உத்திகளை மிகச்சீரான முறையில் பயன்படுத்துகின்றன.

பாலியல் தேவைகள் வன்முறையோடு ஒடுக்கப்பட்டு நோய்க்கூறுகளுடன் நிற்கும் மக்கள் கூட்டத்திடம், போரழிவுகளால், போர்ப் பேரங்களால் நாளும் சுரண்டப்படும் மக்களிடம், மலினமான பாலியல் , மட்ட அரசியல் சரக்குகளை, வெற்று விளையாட்டுச்சரக்குகளைக் கடைவிரித்தபடி இந்த ஊடகங்கள் ஆக்கிரமிப்புப் போர் புரிகின்றன.

இந்த தொலைக்காட்சி ஊடகங்கள் இப்படையெடுப்பைச்செய்வதற்கு பணம் கொடுப்பவர்கள்யார்? இத்தகைய பகட்டு நிகழ்ச்சிகளையும் சினிமா வரைகலை மாய்மாலங்களையும் செய்யச் செலவழியும் காசினை வழங்குபவர்கள் யார்?

இந்தியப் பெரு முதலாளிகளே.

அவர்களுக்கு என்ன லாபம்?

அரை மணிநேர நிகழ்ச்சியைப் பார்க்க உட்கார்ந்து, அதில் 20 நிமிடங்களை விளம்பரம் பார்த்தே தொலைக்கிறோமே... எங்களுடைய நேரம் தான் அவர்களுடைய லாபம்.

எமது நேரத்தைச்சுரண்டி அதனுள் தமது விளம்பரங்களை வலிந்து திணித்து எமது சிந்தனையை அடைத்துக்கொள்ள முடிவதே அந்த முதலாளிகளின் பெரு வெற்றி.

அவர்களது ஊடகப்பொறிகளுக்குள் மாட்டுப்பட்டு , நேரத்தையும் காவுகொடுத்து மூளைக்குள்ளும் அவர்களுக்கு வசதியான போதனைகளை தூக்கிச்சுமந்துகொண்டு அவர்கள் ஆட்டிவைத்த பொம்மைகளாக நாம் அலைகிறோம்.

அவர்கள் திரும்பத்திரும்ப ஆயிரம் முறை போதிப்பதை அப்படியே குடித்து உள்வாங்கி பேச்சிலும் எழுத்திலும் நினைவிலும் கனவிலும் ஒழுகவிட்டுத்திரிகிறோம்.

ஊடகங்கள் வழியான இந்தச் சிந்தனை ஆக்கிரமிப்பு, போதனை எவ்வளவு வெற்றிகரமான யாவார உத்தி என்பதைத்தான், இலங்கையின் தற்போதைய Airtel காய்ச்சல் மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகிறது.

முதலாளிகளின் ஏவற் கூலிகளாக வலம் வரும் ஏ ஆர் ரஹ்மானின், இன்னும் பல கலைஞர்களின் உழைப்பு எல்லாவற்றையும் அழகாய் தொகுத்து கோடிக்கணக்காய் காசைக்கொட்டி திணி திணி என்று எம்மீது திணித்த திணிப்பின் பெறுபேறு, கோடிகோடியாய் விளைச்சல் கொடுக்கப்போகிறது.


கண்ணால் பார்க்கும்படி மிகத்தெளிவாக இந்த ஊடக/கலாசார ஆக்கிரமிப்பின் முற்றுமுழுதான வணிகமுகத்தை விளங்கப்படுத்தியதற்காக, இந்த Airtel காய்ச்சலுக்கு நன்றிகூடச்சொல்லலாம்.

தெற்காசியப்பிராந்தியத்தின் ஏகாதிபத்திய சக்தியான இந்திய ஆளும் வர்க்கத்தின் இலாபப்பெருக்க உத்தியே இவ்வளவென்றால், அந்த இந்தியாவிலேகூட தனது கலாசார ஆதிக்கத்தை நிலைநிறுத்தி சுரண்டிக்கொழுக்கும் உலக ஏகாதிபத்தியங்களின் உத்திகளும் முறைவழிகளும் எவ்வளவு நுணுக்கமாயிருக்கும்? எவ்வளவு கோரமாயிருக்கும்?

கலாசாரக் கலப்பாம், சிறுபான்மைக் கலாசாரங்கள் பொதுப்போக்குக்கு (mainstream) கொண்டுவரப்படுகின்றனவாம்.

ஐயோ ஐய்ய்ய்ய்ய்யோ...

http://mauran.blogspot.com/2008/10/bharti-airtel.html