உள்நாட்டுப் போரில் நிலைகுலைந்து, வறுமையும் பட்டினியும் பீடித்து, தீராத அவலத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது, காங்கோ. மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள அந்நாட்டின் வடமேற்கே மாசிசி நகரிலுள்ள நிவாரண முகாம்களில் பஞ்சைப் பாராரிகளான கருப்பின மக்கள் உணவுக்காக வரிசையில் காத்திருந்தனர். வாகனங்கள் அணி வகுத்து சீறிக்கொண்டு வந்தன.

 


 

நீலநிற இரும்புத் தொப்பி அணிந்த ஐ.நா. மன்றத்தின் அமைதிப்படை சிப்பாய்கள், ரொட்டி, பால், முட்டை முதலான உணவுப் பொருட்களுடன் வந்திறங்கி, அம்மக்களுக்கு விநியோகித்தனர். சிறிதுநேரத்தில் உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. பலநாட்களாகப் பட்டினி கிடக்கும் பலர், உணவுக்காக அச்சிப்பாய்களிடம் கெஞ்சிக் கதறினர்.

கைக்குழந்தைகளுடன் கதறும் தாய்மார்களைப் பார்த்ததும் அமைதிப்படை சிப்பாய்களுக்கு வக்கிரமான "கருணை' பிறந்தது. "ரொட்டியும் பாலும் முட்டையும் வேண்டுமா? தருகிறோம். அதற்கு நீங்கள் எங்களுடன் படுக்கைக்கு வரவேண்டும். சம்மதமா?'' என்று கேட்டு கெக்கலி கொட்டிச் சிரித்தனர் அச்சிப்பாய்கள். வேதனையும் வெறுப்பும் கொப்பளிக்க, பட்டினியில் பரிதவிக்கும் கருப்பினத் தாய்மார்கள் அங்கிருந்து வெளியேறினர். பசியை ஓரிரு நாட்கள் தாக்குப் பிடிக்கலாம். பாலியல் இச்சைக்கு இணங்காவிடில் ஒரு துண்டு ரொட்டி கூட கிடைக்காது என்றால், அப்பெண்கள் என்ன செய்ய முடியும்? அகதிகளாக உழலும் அவர்களின் பட்டினியைச் சாதகமாக்கி கொண்டு, காங்கோ பழங்குடியினப் பெண்களைச் சூறையாடியது, அமைதிப்படை.

 

வயிற்றுப் பசி தீர்க்க இராணுவக் கும்பலின் காமவெறிக்குப் பலியாக வேண்டும்; இல்லையேல் பட்டினிக்குப் பலியாக வேண்டும் என்ற அவலத்தில் காங்கோ தாய்மார்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அகதிகளாக நிவாரண முகாம்களில் அல்லற்படும் இளம் பெண்களை அனுபவித்த இக்காமவெறி இராணுவப் படைகள், அடுத்ததாக பருவமடையா இளஞ் சிறுமிகளை பாலுக்கும் ரொட்டிக்கும் விலைபேசியது. பணியாத சிறுமிகளைக் கடத்திச் சென்று கும்பல் பாலியல் வன்முறையை ஏவி, வீதியில் வீசியெறிந்தது. அதன் காமவெறி பயங்கரவாத வக்கிர வெறியாட்டம் இத்துடன் முடிந்து விடவில்லை. இளம் சிறுவர்களைக் கூடப் பிடித்துச் சென்று ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டது.

 

அகதிகளாக வறுமையில் உழலும் மக்கள் மீது இப்படியொரு காமவெறி பயங்கரவாத அடக்குமுறையை ஏவியிருப்பது, காட்டுமிராண்டி அமெரிக்கப் படைகளல்ல. கண்ணியமும் வீரமும் பெருமையும் பாரம்பரியமும் மிக்கதாகச் சித்தரிக்கப்படும் இந்திய இராணுவம்தான் இந்த அட்டூழியங்களை செய்துள்ளது. உள்நாட்டில் காஷ்மீரிலும், மணிப்பூரிலும் தனது காமவெறி பயங்கரவாத வெறியாட்டங்களால் நாறிப் போயுள்ள இந்திய இராணுவம், இப்போது காங்கோ நாட்டில் ஐ.நா. மன்றத்தின் சார்பில் "அமைதிப்படை' என்ற பெயரில் சென்று, அங்கேயும் கொட்டமடித்து உலகெங்கும் அம்பலப்பட்டு காறி உமிழப்படுகிறது.

 

மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோவில் 1998 முதல் 2003 வரை இனக் குழுக்களுக்கிடையே உள்நாட்டுப் போர் மூண்டு இரத்த ஆறு ஓடியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகப் பெரியதும் மிகக் கொடூரமானதுமான மனிதப் படுகொலை என்று கருதப்படும் இந்த இனக்குழுப் போரில், பல லட்சம் மக்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக எல்லைப் பகுதிகளில் குவிந்தனர். போரைத் தடுத்து அமைதியையும் ஜனநாயகத்தையும் நல்வாழ்வையும் நிலைநாட்டுவது என்ற பெயரில் ஐ.நா மன்றத்தின் சார்பில், ஏகாதிபத்திய மேலாதிக்கக் கூலிப் படைகள் "அமைதிப் படை' என்ற போர்வையில் காங்கோவில் குவிக்கப்பட்டன. ஏறத்தாழ 18 நாடுகளிலிருந்து 18,000க்கும் மேற்பட்ட துருப்புகள் 2000வது ஆண்டு முதலாக காங்கோவில் முகாமிட்டுள்ளன. இதுதவிர 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மருத்துவ சுகாதார நிவாரணப் பணியாளர்கள் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் படைகளே பெருமளவில் குவிக்கப்பட்டு முன்னிலை வகிக்கின்றன.

 

காங்கோ ஜனநாயகக் குடியரசு (ஈகீஇ) நாட்டில் ஐ.நா.வின் அமைதிப்படையாகச் செயல்பட்டு வரும் இந்திய இராணுவத்தினர் பாலியல் சுரண்டல், வன்முறை வன்புணர்ச்சி, மிரட்டிப் பணிய வைத்தல் சித்திரவதை, பருவமடையா இளஞ்சிறுமிகளைக் கடத்திச் சென்று பாலியல் வன்முறையை ஏவுதல், சிறுவர்களை ஓரினப் புணர்ச்சிக்காகப் பிடித்துச் செல்லுதல் முதலான கொடூரங்களைச் செய்துள்ளதாக கடந்த ஆகஸ்ட் 12ஆம் நாளன்று ஐ.நா. அதிகாரிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். கவனத்துக்கு வந்த 100க்கும் மேற்பட்ட வழக்குகளில், ஆழமான விசாரணைக்கு முன்னரே குற்றங்கள் நிரூபணமாகியுள்ளதாகவும், இவற்றில் 1000க்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நா. அதிகாரிகள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்கள் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

ஐ.நா. மன்றத் தலைவரான பான் கி மூன், விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய இராணுவத்தின் காமவெறி பயங்கரவாத வெறியாட்டங்களை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகவும், இத்தகைய குற்றங்களை ஒருக்காலும் அனுமதிக்கவே கூடாது என்றும், இந்திய சட்டப்படி இக்குற்றவாளிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கையை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இந்திய அரசும், இராணுவத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியும் முழுமையான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

 

இந்திய இராணுவத்தின் காமவெறி பயங்கரவாத அட்டூழியங்கள் இப்போது முதன்முறையாக நடப்பவையல்ல. கடந்த ஐந்தாண்டுகளில் பலமுறை இத்தகைய அட்டூழியங்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தில் இத்தகைய வெறியாட்டங்கள் பற்றி ஐ.நா.வின் உள்விவகார மேற்பார்வை சேவை அலுவலகம் (OஐOகு) விசாரணை நடத்தி இந்தியப் படையினருக்கு எச்சரிக்கை விடுத்தது. இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து நான்குமுறை இந்திய இராணுவத்தின் காமவெறி அட்டூழியங்கள் பற்றி ஐ.நா. மன்றம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளது. ஆனாலும் இந்திய அரசு இக்குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

"இந்திய இராணுவ முகாம் அருகிலேயே ஆணுறைகள் இறைந்து கிடக்கின்றன. வடமேற்கிலுள்ள கோமா பகுதியிலும் மாசிசி நகரிலும் இந்திய இராணுவத்தின் காமவெறி அட்டூழியங்கள் மிக அதிகமாக நடந்துள்ளன. ருவாண்டா படுகொலைகளுக்குக் காரணமான இனக்குழு யுத்தப் பிரபுகளுக்காக இந்திய இராணுவம் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளது. இதற்கீடாக யானைத் தந்தங்களை 

 

இராணுவ அதிகாரிகள் இலஞ்சமாகப் பெற்றுள்ளனர். தங்கக் கடத்தல், போதை மருந்து கடத்தலிலும் இந்திய இராணுவம் ஈடுபட்டுள்ளது'' என்று பி.பி.சி. செய்தியாளர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் இக்குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரம் இல்லை என்று இவ்வழக்குகள் முடக்கப்பட்டன.

 

சாதாரண சிப்பாய்கள் மட்டுமல்ல, லெப்டிணன்ட் கர்னல் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் இத்தகைய கடத்தல், பாலியல் வன்புணர்ச்சிக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். கர்னல் தாலும் டூபி, கர்னல் தீபக்சிங் நாயல், ஹவில்தார் சுரேஷ் பாண்டுரங் ஆகியோர் மாசிசி நகரில் தங்களது கடத்தல் குற்றங்களுக்கு உடன்பட மறுத்த உள்ளூர் வியாபாரிகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர். காங்கோவிலுள்ள இந்திய அமைதிப்படை தளபதியான கர்னல் சந்த்சரோகா, காங்கோவின் இனக்குழு யுத்தப் பிரபுக்களுக்கு ஆயுதங்களைக் கடத்தி விற்று ஆதாயமடைந்துள்ளார். இந்த உண்மைகள் மெதுவாகக் கசிந்து பிரிகேடியர் இந்தர்ஜித் நாராயண் என்ற இராணுவ அதிகாரி மூலம் துறை சார்ந்த விசாரணையை இந்திய இராணுவம் நடத்தி வருகிறது.

 

ஆனாலும் இந்த உண்மைகளை "தேசிய'ப் பத்திரிகைகள் திட்டமிட்டே மூடி மறைத்து வருகின்றன. இந்திய அரசோ இக்காமவெறி கிரிமினல் கும்பல் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தேசபக்தி புனிதப் போர்வையால் இக்குற்றங்களை மூடி மறைத்து வருகிறது.

 

உலகெங்கும் மேலாதிக்க ஆக்கிரமிப்புப் போர்களாலும் போர்க்குற்றங்களாலும் உலக அரங்கில் அம்பலப்பட்டு நிற்கும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய வல்லரசுகள், இப்போது புதிய உத்தியைப் பின்பற்றுகின்றன. தமது ஆதிக்கமும் அட்டூழியமும் அம்பலப்படாதிருக்க, ஏழை நாட்டுப் படைகளை அதிக அளவில் சேர்த்து அனைத்துலக அமைதிப்படை என்ற பெயர் சூட்டி, அதற்கு சாதுவான தோற்றத்தையும் அளிக்கின்றன. உலகை மறுபங்கீடு செய்யவும், மேலாதிக்கம் செலுத்தவும் இந்த அமைதிப் படைகளை உலகின் பல நாடுகளில் கொண்டு போய் குவிக்கின்றன. 

 

இந்த வகையில், ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு விசுவாசமாக அடியாள் வேலை செய்ய இந்திய அரசும் அமைதிப் படையை அனுப்புகிறது. இத்தகைய விசுவாச சேவையின் மூலம் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெறவும் தெற்காசியப் பிராந்தியத்தில் ஏகாதிபத்திய கட்டளையை நிறைவேற்றும் நம்பகமான துணை வல்லரசாக அங்கீகாரம் பெறவும் இந்திய ஆட்சியாளர்கள் துடிக்கின்றனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்வது என்ற பெயரில் சர்வகட்சி ஆதரவுடன் இதைச் சாதிக்க முயற்சிக்கின்றனர்.

 

அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டப் போவதாகப் பசப்பிக் கொண்டு செல்லும் இந்த அமைதிப் படைகள் காந்தீய உபதேசம் செய்து கொண்டிருப்பதில்லை. எந்த நாட்டினுள் அமைதிப்படைகள் நுழைந்தாலும், அது மக்களை ஒடுக்குவதும் சூறையாடுவதும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதும்தான் நடந்துள்ளது. ஈழம் மட்டுமல்ல; காங்கோ, சியாரா, லியோன், லைபீரியா, கினியா, ஐவரிகோஸ்ட், ஹெய்தி முதலான நாடுகளில் குவிக்கப்பட்டுள்ள இந்திய அமைதிப் படைகளின் அட்டூழியங்கள் ஏற்கெனவே உலக அரங்கில் அம்பலப்பட்டுள்ளன.

 

நமது வரிப்பணத்தைத் தின்று கொழுத்துத் திரியும் இந்திய இராணுவம் உள்நாட்டில் மட்டுமின்றி, இப்போது இன்னும் பிற ஏழை நாடுகளிலும் தனது பயங்கரவாத அட்டூழியங்களைத் தொடர இனியும் அனுமதிக்க முடியாது. ஏகாதிபத்திய மேலாதிக்க நோக்கங்களுக்குத் தொண்டூழியம் செய்ய அமைதிப் படை என்ற பெயரில் இந்திய அரசு பிற நாடுகளுக்கு இராணுவத்தை அனுப்புவதையும், இதனை அங்கீகரித்து நியாயப்படுத்தும் ஐ.நா. மன்றம் உள்ளிட்ட ஏகாதிபத்திய கைக்கூலி நிறுவனங்களையும் அம்பலப்படுத்தி முறியடிக்காமல், காமவெறி இராணுவ பயங்கரவாத கிரிமினல்களைத் தூக்கிலிட்டு தண்டிக்காமல், இப்பயங்கரவாத கிரிமினல் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்திடவும் முடியாது.

 

· குமார்