ksraja



 

ksraja

சாலையிற் தார் உருகிச் செல்லும் நெருப்பு வெயிலில் யாழ்ப்பாணத்தின் சிறு நகரம் ஒன்றிற்குள்ளால் எங்களது வாகனம் சென்றுகொண்டிருந்தது. வாகனத்திற்குள் எனது சகாக்கள் முழு ஆயுதபாணிகளாகப் போர்க்கோலத்திற் தயாராயிருந்தார்கள். வாகனத்தின் தலையில் ஒலிபெருக்கிகள் இரண்டு கட்டப்பட்டிருந்தன. வாகனத்தின் பின்இருக்கையில் நான் அமர்ந்திருந்து ஒலிவாங்கியில் அறிவிப்புச் செய்துகொண்டிருந்தேன். காலையிலிருந்து நாங்கள் இந்த வாகனத்திற் சிறு நகரங்களையும் கிராமங்களையும் அங்குலம் அங்குலமாக அளந்தவாறே வந்துகொண்டிருக்கிறோம். அந்தச் சிறு நகரத்தில் எங்களது வாகனம் ஒரு நிமிடம் நின்று கிளம்பியபோது வாகனத்திற்குள் புதிதாக ஏறி என்னருகே உட்கார்ந்தவரிடம் நான் ஒலிவாங்கியைக் கைமாற்றினேன். இனி அவர்தான் அறிவிப்புச் செய்யப்போகிறார். அந்தக் கறுத்த, சிறுத்த உருவமுடைய மனிதரிடம் அவர் செய்ய வேண்டியிருந்த அறிவிப்பு எழுதப்பட்டிருந்த காகிதத்தைக் கொடுத்தேன். காகிதத்தை வாங்கியவர் தனது தொப்பியை வருடியவாறே காகிதத்தை வரி வரியாகப் பார்த்துக்கொண்டிருந்த போது நான் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அக்காலத்தில் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான பொடியன்களின் கனவு நாயகன், மதுரக்குரல் மன்னன் கே.எஸ். ராஜா.

 

எனக்கு ஏழெட்டு வயதிருக்கும்போது என் தந்தை வழிப் பாட்டி இறந்துபோனார். தனித்துப்போன எங்கள் தாத்தா - நாங்கள் அவரை அப்பு என்றுதான் அழைப்போம் - தனது உடைமைகளுடன் எங்கள் வீட்டிற்கே வந்துவிட்டார். அப்புவிடம் உடைமைகளாக ஒரு துணிமூட்டையும் சாகும்போது ஆச்சி காதில் போட்டிருந்த அரைப் பவுண் தோடும் ஒரு ரேடியோவும் இருந்தன. அப்பு ஒரு விறுக்கர். எத்தனை கிலோ மீற்றர்கள் பயணிக்க வேண்டியிருந்தாலும் ஆள் நடந்துதான் போவார். பஸ்ஸில் ஏறவே மாட்டார். நத்தாருக்கோ வருசத்திற்கோ சுடச் சுடச் சோறும் இறைச்சிக் கறியும் கொடுத்தாற் கூட அதற்குள் ஒருசெம்பு பச்சைத் தண்ணீர் ஊற்றித் தான் பிசைந்து சாப்பிடுவார். எப்போது பார்த்தாலும் “எனக்கென்ன குறை? என்னட்ட அரைப் பவுண் தோடும் ரேடியோவும் இருக்கு” என்று சொல்லிக்கொண்டேயிருப்பார்.

 

ஒரு சிங்கள நாட்டார் கதையில் கமறாலவின் மனைவி அவள் வீட்டு உரலை ஏணியாகவும் உட்காரும் ஆசனமாகவும் விளக்கு ஏற்றி வைக்கும் பீடமாகவும் கதவுக்கு முட்டுக் கொடுக்கவும் பயன்படுத்துவாளே! அது போலவே நாங்கள் அப்புவின் ரேடியோவைப் பாடல்கள் நிகழ்ச்சிகள் கேட்கவும் கடிகாரமாயும் அலாரமாகவும் அவசரத்துக்கு அடவு வைக்கும் பொருளாகவும் பயன்படுத்திக்கொண்டோம்.

 

பத்திரிகைகள், சஞ்சிகைகள் படிக்கவோ திரைப்படம் பார்க்கவோ வசதி வாய்ப்புக்கள் என் சுற்று வட்டாரத்திலேயே கிடையாது. ரூபவாஹினி என்ற பெயரைக் கூட நாங்கள் அப்போது கேள்விப்பட்டிருக்கவில்லை. அப்பு கொண்டுவந்த ரேடியோ எனக்குப் புதியதோர் கனவுலகத்தையே திறந்து வைத்தது. திரைப்படத்தின் மூலமும் கட்சியின் மூலமும் எம்.ஜி.ஆரின் அதி தீவிர ரசிகர்களானவர்கள் ஆயிரமாயிரமுண்டு. ஆனால் நான் ஆயிரத்தில் ஒருவன். ரேடியோவில் எம்.ஜி.ஆரின் பாடல்களைக் கேட்டுக் கேட்டே முளைக்கும்போதே எம். ஜி. ஆர் ரசிகனாகவே நான் முளைத்தேன். அநேகமாக எம்.ஜி. ஆரின் அத்தனை ‘தத்துவப்’ பாடல்களையும் நான் மனப்பாடம் பண்ணிவைத்திருந்தேன். இன்று வரை எனக்கு அந்தப் பாடல்களில் ஒருவரி கூட மறந்து விடவில்லை.

 

நான் ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ படிக்கும்போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நான் இங்கே தீவில் படித்துக்கொண்டிருந்தேன். எனது அண்ணர் எட்டாம் வகுப்போடு படிப்பு ஏறாமல் பள்ளிக்குப் போகாமல் நின்று விட்டார். அப்போது பப்பா யாழ்ப்பாணம் சின்னக்கடைச் சந்தையில் சாக்கு விரித்து தேசிக்காய், இஞ்சிக் கிழங்கு வியாபாரம் செய்துகொண்டிருந்தார். பள்ளிக்குப் போகாமல் நின்றிருந்த அண்ணரையும் பப்பா தனக்கு உதவியாய் சந்தைக்குக் கூட்டிப் போய் வந்துகொண்டிருந்தார். இதனால் சைக்கிளில் போகவும் வரவும் அண்ணருக்கு யாழ் நகரத்திலுள்ள சினிமாத் தியேட்டர்களின் முன்பு வைத்திருக்கும் ‘கட் அவுட்’டுக்களையும் நகரத்துச் சுவர்களில் ஒட்டியிருக்கும் திரைப்பட விளம்பரச் சுவரொட்டிகளையும் கண்டுகளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒவ்வொருநாள் இரவிலும் அந்தக் ‘கட் அவுட்’டுக்களைப் பற்றியும் சுவரொட்டிகளைப் பற்றியும் அண்ணர் எனக்குக் கதை கதையாகச் சொன்னார். தங்களோடு சந்தைக்கு வந்தால் என்னாலும் ‘கட் அவுட்’டுக்களைப் பார்க்க முடியும் என்றார் அண்ணர். திரைப்படங்கள் பார்ப்பதற்காக அல்ல! வெறும் கட் அவுட்டுக்களைப் பார்ப்பதற்காகவே நான் பள்ளியிலிருந்து நின்றுவிடத் தயாரானேன். பப்பாவிடம் அடி வாங்காமல் ஏதாவதொரு தகுந்த காரணத்தைக் கூறி நான் பள்ளியிலிருந்து நின்றுவிட வேண்டும். நான் ஒரு புத்திசாலித்தனமான திட்டத்தை உருவாக்கிவிட்டு அதை நிறைவேற்றும் தருணத்திற்காகக் காத்திருக்கலானேன்.

 

ஒருநாள் முன்னிரவிற் சந்தையிலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்த பப்பா முற்றத்திற் சாய்வு நாற்காலியில் அமைதியாகப் படுத்திருந்தார். நான் முற்றத்தில் ஆட்டுக்குப் புண்ணாக்குத் தீத்திக் கொண்டிருந்தேன். திடீரென பப்பா என்னைக் கூப்பிட்டு “மகன் படிப்பெல்லாம் எப்பிடிப் போகுது?” என்று விசாரித்தார். ஆகா! இது தான் நான் காத்திருந்த தருணம். இதை நழுவ விடலாமா? பப்பா வழக்கத்திற்கு மாறாக இன்று கொஞ்சம் சாந்தமாய் இருப்பது போலவும் தெரிகிறது. நான் எனது திட்டத்தின் முதற் பகுதியை நிறைவேற்றத் தொடங்கினேன்.

 

“பப்பா எனக்குப் படிக்க கஸ்ரமாக்கிடக்கு நான் பள்ளிக்கு போகயில்ல…”


“ஏன் என்ன கயிட்டம்?”


“எனக்கு படிக்கிறதெல்லாம் மறந்துபோகுது பப்பா”


“சரி கயிட்டமெண்டால் விடு, பள்ளிக்கூடத்த விட்டுப்போட்டு என்ன செய்யப் போறாய்?”


“நானும் உங்களோட சந்தைக்கு வாறன் பப்பா”


“சரி நாளைக்கு என்னோட யாவாரத்துக்கு வா! இப்ப ஒரு பாட்டுப் படி பார்ப்பம்…கேப்பம்!”

 

என்னுடைய திட்டம் இவ்வளவு சுலபமாக வெற்றியீட்டும் என்று நான் எண்ணியிருக்கவில்லை. பப்பா தண்ணியைப் போட்டால் அம்மாவைத்தான் பாடச் சொல்லிக் கரைச்சல் கொடுப்பார். ஒருநாளும் இல்லாத திருநாளாக இன்று என்னைப் பாடச் சொல்கிறார். இன்ப அதிர்ச்சியில் நின்றிருந்த நான் அப்பாவின் எதிரே முற்றத்து மணலில் உட்கார்ந்திருந்து பாடத் தொடங்கினேன்.

 

“பாடல் இடம் பெற்ற படம்: வா ராஜா வா!, பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், பூவை செங்குட்டுவனின் பாடல் வரிகளுக்கு இசையமைத்தவர் குன்னக்குடி வைத்யநாதன்” என்று அறிவிப்புச் செய்யாத குறைதான். மற்றப்படிக்கு எந்தக் குறையுமில்லாமல் “இறைவன் படைத்த உலகையெல்லாம் மனிதன் ஆளுகின்றான், மனிதன் வடித்த சிலையிலெல்லாம் இறைவன் வாழுகின்றான்” என்று முழுமையாகப் பாடலைப் பாடி முடித்தேன். இந்தப் பாட்டைப் பாடுவதில் ஒரு நுணுக்கமுள்ளது. சரணத்தின் ஈற்றில் “இசையில் மயங்கி இறங்கி வருகின்றான்/இறைவன் இறங்கி வருகிறான்” என அரை மாத்திரையளவே நிறுத்தி மறுபடியும் பல்லவிக்குக்கு உச்சஸ்தாயில் சீர்காழி எகிறுவார். நான் அந்தப் பாவத்தையெல்லாம் பாடலில் கொண்டு வந்திருந்தேன். பாடல் முடிந்தது தான் தாமதம், அதுவரை கண்களை மூடிச் சாய்வு நாற்காலியில் படுத்திருந்த பப்பா துள்ளி எழுந்து சாய்வு நாற்காலியின் துணியில் சொருகப்பட்டிருந்த தடியை உருவியெடுத்துக்கொண்டு “அடப் புண்டையாண்டி, ஒரு வரி மறக்காமல் சினிமாப் பாட்டுப் பாடத் தெரியுது… ஆனால் உனக்குப் பள்ளிக்கூடப் பாடம் மறக்குதோ?” என்று உறுமியவாறே என்மீது பாய்ந்தார். தடபடவெனத் தடியடிகள் என் தேகத்தில் விழுந்தன. சும்மாயிருந்த அம்மாவுக்கும் இரண்டு அடிகள் போட்ட பப்பா அம்மாவைப் பார்த்து “வேச எல்லாம் நீ வளர்த்த வளர்ப்புத்தானடி” என்று பற்களை நெருமினார். பப்பாவுக்குத் தெரியாது; நான் அம்மா வளர்த்த பிள்ளையல்ல, நான் ரேடியோ வளர்த்த பிள்ளை.

 

‘தணியாத தாகம்’, ‘இரைதேடும் பறவைகள்’, ‘கோமாளிகள்’ போன்ற தொடர் நாடகங்களும் ‘கதம்பம்’, ‘முகத்தார் வீடு’ போன்ற உரைச் சித்திரங்களும் ‘வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும் சலவாத்தும்’ சொல்லும் முஸ்லீம் நிகழ்ச்சியும் கிழமை தோறும் வரும் ஒலிச் சித்திரங்களும் என்னை ரேடியோவுக்கு அடிமையாக்கிப் போட்டன. அந்தக் காலகட்டத்தில் ரேடியோவில் ஒலிபரப்பாகிய நூற்றுக் கணக்கான திரைப்படப் பாடல்கள் பாடல் இடம் பெற்ற படம், பாடியவர்கள், எழுதியவர், இசையமைத்தவர் என்பன போன்ற குறிப்பான தகவல்களோடு முழுமையாக எந்தச் சிரமமும் இல்லாமலேயே என் சின்ன மண்டைக்குள் தரவிறக்கம் செய்யப்பட்டன. பாடசாலையில் ஆசிரிய ஆசிரியைகளுக்குத் திரைப்படப் பாடல்களில் ஏதும் சந்தேகமோ கேள்விகளோ இருந்தால் அவர்களுக்குப் பாடல்களைப் பற்றிய விபரங்கள் தேவைப்பட்டால் எடுத்த வீச்சுக்கு “அழைத்து வாருங்கள் 8 Bயில் படிக்கும் அன்ரனிதாசனை” என்றுதான் கூப்பிட்டார்கள். எங்கள் கிராமத்துச் சண்டியர் ‘குத்துக்கார’ இரத்தினம் கூட என்னைக் கூப்பிட்டு வைத்து எம். ஜி. ஆரின் பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்குமளவிற்கு எனது கியாதி என்னைச் சுற்றி ஆகக் குறைந்தது ஒரு கிலோ மீற்றருக்குப் பரவியிருந்தது. நானொரு நடமாடும் குட்டி ‘ரேடியோ சிலோனா’கக் கிராமத்தை வலம் வந்துகொண்டிருந்தேன்.

 

ksraja

அப்போதைய இலங்கை வானொலியின் உச்ச நட்சத்திரங்களான அப்துல் ஹமீட், முகத்தார் ஜேசுரட்ணம், அப்புக்குட்டி ராஜகோபால், உபாலி செல்வசேகரன், சிறீதர் பிச்சையப்பா, கே. எஸ் .பாலச்சந்திரன், எஸ்.எஸ். கணேசபிள்ளை போன்றவர்கள் போலெல்லாம் பேச முற்பட்டதோடு மட்டுமல்லாமல் என்னைத் தன் மழலைக் குரலால் மயக்கி வைத்திருந்த கமலினி செல்வராசன் போலப் பேசவும் நான் பெரும் பிரயத்தனங்களில் ஈடுபட்டேன். எதிர்காலத்தில் மேடைகளில் நடிக்க வேண்டும் அல்லது ரேடியோ சிலோனிற்குள் புகுந்துகொள்ள வேண்டுமென்ற இலட்சியத்துடன் நான் இந்தக் கடும் பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை. நான் என் அன்றாட வாழ்க்கையிலேயே இவர்களைப் போலத்தான் பேசிக்கொண்டு திரிந்தேன். ஆடு மேய்க்கும் போது முகத்தார் போல அகடவிகடம் செய்தேன். பஸ்ஸில் தொற்றி ஏறியபடியே “அண்ண ரைட்” என்று குரல் கொடுத்தேன். கிராமத்துக்கு நாற்காலி பின்ன வரும் சிங்களவரான ‘பாஸ்’ ஐயாவோடு உபாலி செல்வசேகரன் போலக் கொச்சைத் தமிழில் கதைத்தேன். தொட்டதற்கெல்லாம் கமலினி போலச் செல்லமாகச் சிணுங்கினேன். இவ்வளவு பேரையும் போலச் செய்ய முயன்றவன் கே.எஸ். ராஜாவைப் போலப் பேச ஆசைப்பட்டிருக்க மாட்டேனா என்ன?

 

இலங்கை வானொலியிலேயே எனக்கு ஆகவும் பிடித்த நிகழ்ச்சி திரைவிருந்து தான். அப்போதெல்லாம் வருடம் முன்னூற்று அறுபத்தைந்து நாளும் திரைப்படங்கள் பற்றிய கனவிலேயே நான் மூழ்கிக் கிடப்பேன். ஆனால் வருடத்திற்கு ஒன்றிரண்டு திரைப்படங்களுக்கு மேற் பார்க்க வாய்ப்புக் கிடைக்காது. அப்போது கலரி ரிக்கட் ஒரு ரூபாதான். ஆனால் அதற்கே பெரும் தட்டுப்பாடு. அப்படி ரூபாய் கிடைத்தாலும் படம் பார்க்கச் செல்வதற்கு வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். வீட்டாருக்குத் தெரியாமலும் படம் பார்க்கப் போக முடியாது. யாழ்ப்பாணத்திலிருந்த பதினொரு தியேட்டர்களிலும் எந்தத் தியேட்டரில் நான் களவாகப் படம் பார்த்தாலும் பப்பாவுக்குத் தகவல் தெரிந்துவிடுகிறது. இந்த உளவறியும் விசயத்திலெல்லாம் பொட்டம்மான் என் பப்பாவிடம் பிச்சை வாங்க வேண்டும். மேதினத்தில் மட்டும் படம் பார்க்கச் செல்ல எனக்கு அனுமதி கிடைக்கும். மேதினமன்று நகரத்தின் எல்லாத் திரையரங்குகளிலும் ஐம்பது சதம் மட்டுமே நுழைவுக் கட்டணம். அந்த ஐம்பது சத நுழைவுச் சீட்டு எல்லா வகுப்புக்களிற்கும் செல்லுபடியாகும். நான் மே தினங்களில் ஐம்பது சதத்துடன் பல்கனியில் இருந்தும் படம் பார்த்திருக்கிறேன்.

 

ஒரு திரைப்படம் பார்க்கும் மகிழ்ச்சிக்கு நிகராகக் கே.எஸ் ராஜா வானொலியில் நிகழ்த்திய திரைவிருந்து நிகழ்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. சில தருணங்களில் அந்த நிகழ்ச்சி ஒரு திரைப்படத்திலும் மேலாக எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ‘வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில் ஆவலுடன் காத்திருக்கும் ரசிசிசி….கப் பெருமக்களுக்கு’ என்று ஆரம்பித்து ‘வணக்கம் கூறி விடைபெறுவது கே.எஸ்.ராஜா’ என்று மதுரக்குரல் மன்னன் முடிக்கும் வரை நான் கள்ளால் மயங்குவது போல அதைக் கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்பேன்.

 

மிகவும் எளிமையான ஒலி ஒட்டு வேலைகள் மூலமும் நடிகர்களின் படிமங்களுக்குத் தகுந்த வசனங்களைப் பொருத்தமான இடங்களில் ஒலிக்கவிட்டும் நிகழ்ச்சியை முடிக்கும் போது ஒரு ‘தொக்கு’ வைத்து முடித்தும் கே.எஸ். ராஜா தனது பாணியை உருவாக்கியிருந்தார். யாழ்ப்பாணத்தில் ராஜா திரையரங்கில் கலைஞரின் வசனத்தில் ஜெய்சங்கர், எம்.ஆர். ராதா நடித்த ‘வண்டிக்காரன் மகன்’ ஓடிக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சிறீதர் திரையரங்கில் எம். ஜி. ஆரின் ‘மீனவ நண்பனும்’ ஓடிக்கொண்டிருக்கிறது. திரைவிருந்து நிகழ்ச்சியில் இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து கே.எஸ். ராஜா நிகழ்ச்சி செய்தார். நிகழ்ச்சி முடியும் தருவாயில் ராஜா ஓர் ஒட்டு வேலையைச் செய்வார். முதலில் வண்டிக்காரன் மகனிலிருந்து எம். ஆர். ராதாவின் குரல் “ஏய்! சுட்டுவிடுவேன்… சுட்டுவிடுவேன்” என்றொலிக்கும். அந்த இடத்தில் கே.எஸ். ராஜா அதை அப்படியே நிறுத்தி மீனவ நண்பனிலிருந்து எம். ஜி.ஆரின் குரலை ஒலிபரப்புவார். “அய்யா பெரியவரே, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் துப்பாக்கிச் சூடுபட்ட அனுபவம் எனக்கு ஏற்கனவேயுண்டு” என்று எம்.ஜி.ஆர் சொல்வார். அந்த நேரத்தில் என் ஆன்மா காற்றிலே மிதக்கும். ராஜா சின்ன விசயங்களின் கடவுளாயிருந்தார்.

 

‘நினைத்ததை முடிப்பவன்’ திரைப்படத்துக்கு ராஜா விளம்பரம் செய்யும் போது “இந்த ரஞ்சித்துக்கு முன்னால யாரும் சிகரட் பிடிக்கக் கூடாது அண்டர்ஸ்ராண்ட்!” என்ற வசனத்தை மறுபடியும் மறுபடியும் ஒலிபரப்புவார். இதைத் தொட்டு இந்த ‘அண்டர்ஸ்ராண்ட்’ என்ற வார்த்தை எங்களை மயக்கிப் போட்டு எங்களுடனேயே நிழல்போல அலைந்தது. “குழை வெட்டப் போவமா அண்டர்ஸ்ராண்ட்!”, “ரெண்டு அவுன்ஸ் புளி தாருங்கோ அண்டர்ஸ்ராண்ட்” என வார்த்தைக்கு வார்த்தை அண்டர்ஸ்ராண்ட் என்று நாங்கள் சுற்று வட்டாரத்தையே கலக்கிக்கொண்டு திரிந்தோம்.

 

நிகழ்ச்சிகளை முடித்து வைக்கும் போதும் தன் கை வந்த கலையான ஒட்டு வேலைகளால் ராஜா எங்களை இன்ப லாகிரியில் ஆழ்த்துவார். சிவாஜிகணேசன் நடித்த ‘தீபம்’ திரைப்பட நிகழ்ச்சியை முடிக்கும் போது ‘மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது’ எனச் சொல்லி ‘ராஜா யுவராஜா’ என்ற பாடல் துண்டை ஒலிக்கவிடுவார். ‘நாளை நமதே’ திரைப்பட நிகழ்ச்சியை முடிக்கும் போது ‘மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது’ எனச் சொல்லி படத்திலிருந்து ‘மை நேம் இஸ் ராஜா’ என்ற வசனத் துண்டை ஒலிக்கச் செய்வார். ‘நீயா’ திரைப்பட நிகழ்ச்சியை முடிக்கும் போது படத்திலிருந்து ‘ராஜா என்னை விட்டுப் போறீங்களா?’ என்ற வசனத் துண்டை சிறீபிரியாவின் குரலில் ஒலிக்கவிட்டு ‘மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது கே.எஸ். ராஜா’ என்பார்.

 

யாழ்ப்பாணத்தையே தாண்டியிருக்காத எனக்கு நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்த திரையரங்குகளை எல்லாம் ராஜா காற்றலைகளில் அறிமுகப்படுத்தி வைத்தார். “செல்லமஹால் கொட்டாஞ்சேனை - சமந்தா தெமட்டகொட - ராஜி திருமலை - ஈஸ்வரி வாழைச்சேனை - சிறீதர் யாழ்நகர் வெண்திரைகளில் இன்றே பார்த்து மகிழுங்கள் ‘ஹாய் பேபி’ புகழ் கமலஹாஸன், ‘ஸ்ரைல் நடிகர்’ ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய தேவர் பிலிம்ஸின் ‘தாயில்லாமல் நானில்லை’, பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்! பார்க்காதவர்கள் பார்க்கத் துடிக்கிறார்கள்!!” என்று சடுதியில் ஏறியும் இறங்கியும் குழைந்தும் கொஞ்சியும் வரும் ராஜாவின் குரலைக் கேளாதோர்தான் தம் மழலை சொல் இனிதென்பர்.

 

கே.எஸ். ராஜாவை ஒரு தடவையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற தீராத ஆசையுடன் நான் தவித்துக்கொண்டிருந்தேன். ராஜா முற்றவெளியில் நிகழ்ச்சி செய்கிறார், ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் பொதுக்கூட்ட உரையை மொழிபெயர்க்க யாழ்ப்பாணம் வருகிறார் என்றெல்லாம் ராஜாவைப் பற்றிய செய்திகள் இடைவிடாமல் கிராமத்தில் அலைந்துகொண்டேயிருந்தன. இதைத் தவிர ராஜாவுக்கு மொட்டைத் தலை, ராஜா ஒரு கணித மேதை, ராஜா திரைப்படத்தில் நடிக்கப் போகிறார், ராஜாவிற்கும் பி.எச். அப்துல் ஹமீதுக்கும் இடையே மோதல் என ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகளும் எங்கள் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அப்போதெல்லாம் ராஜாவை நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. பின்பொரு நாள் ராஜாவைச் நேரில் காணும் எனது கனவு பலித்தபோது அது ஒரு கொடுங்கனவாகப் பலித்தது.

1983ல் ராஜா இலங்கை வானொலியிலிருந்து விலகினார் அல்லது நீக்கப்பட்டார். வெலிகடச் சிறையில் கொல்லப்பட்ட அய்ம்பத்து மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்களையும் வானொலில் அறிவிக்கச் சொன்னபோது ராஜா அதற்கு மறுத்துவிட்டார் எனவும் இலங்கை வானொலியிலுள்ள அரச ஆதரவாளர்களின் சதியால் ராஜா இலங்கை வானொலியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார் என்றும் கதைகள் உலாவின. இதற்கு பின்பு ராஜா இந்தியா சென்றுவிட்டார் என அறிந்தேன். இந்தக் காலத்தில் நாட்டில் பல தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1983 ஆடிக் காற்றில் அம்மியே பறந்தபோது நானும் ஒட்டிப் பறந்தேன்.

 

1986ன் முற்பகுதி! கே.எஸ். ராஜாவின் பெயர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் அமளியாய் அடிபடலாயிற்று. புங்குடுதீவில் நடக்கவிருந்த கலை இரவில் கே. எஸ். ராஜா கலந்துகொள்வதாக விளம்பரங்கள் வெளியாகியிருந்தன. மக்களுக்கு ராஜா மேலுள்ள அபிமானம் இம்மியளவும் குறையவில்லை என்பதை அன்றைய கலை இரவு நிரூபித்தது. ராஜாவைப் பார்ப்பதற்காகத் தூரத்துத் தீவுகளிலிருந்தெல்லாம் மக்கள் திரளாக வந்திருந்தார்கள். அந்தக் கலை இரவை ஈ.பி.ஆர். எல். எவ். இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சிக்கு மற்ற மற்ற இயக்கங்களும் போயிருந்தோம். மைதானத்தில் இயக்கத்திற்கொரு மூலைகளில் வாகனங்களை நிறுத்தி வைத்து ராஜாவுக்காகக் காத்திருந்தோம்.

 

வருவார் வருவார் எனச் சனங்கள் காத்திருந்த ராஜா நள்ளிரவுக்கு மேற்தான் மேடையிற் தோன்றினார். ‘எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ’ என்ற பாடல் வரிகள் பின்னணியில் முழங்க ஒற்றைக் கால் மேடையிற் துள்ள மற்றக் காலைத் தூக்கிக் காற்றிலே உதைத்து உதைத்துத் தலையை உலுக்கி உலுக்கி ஒரு விநோதமான நாட்டியத்தை ஆடியவாறே ராஜா மேடையைச் சுற்றிச் சுற்றி வந்தார். ராஜாவின் ஒரு கையில் ஒலிவாங்கி மற்றக் கையில் எரியும் சிகரட். அதற்கு மேல் ராஜா செய்ததெல்லாம் வெறும் அலம்பல். ஆள் நிறை வெறியில் தள்ளாடிக்கொண்டிருந்தார். இயக்கம் ஏற்பாடு செய்த கலை இரவென்றாலும் நிகழ்ச்சிகள் ‘பாட்டுக்குப் பாட்டு’, ‘ஆம் இல்லையென்று சொல்லக்கூடாது’ என்ற வகையில்தான் அமைந்திருந்தன. இவற்றுக்கு இடையிடையே ராஜா தமிழீழ ஆதரவு முழக்கங்களையும் மேடையில் சகட்டுமேனிக்கு முழங்கிக்கொண்டிருந்தார். ராஜாவின் குரல் மட்டும் கொஞ்சமும் வசீகரத்தை இழக்கவில்லை. ராஜாவின் பொருளில்லாத வார்த்தைள் கூட அந்த இரவில் மதுரமாய் ஒலித்துக்கொண்டிருந்தன.

 

இதற்குச் சில நாட்கள் கழித்து வேலணை மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இதே போன்றதொரு கலை இரவை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் ராஜாவின் அட்டகாசம் உச்சத்தைத் தொட்டது. தரையில் ஓங்கி அடித்த பந்துபோல ராஜா மேடையில் துடித்துக்கொண்டிருந்தார். தனது காலை உயரத் தூக்கிக் காட்டி “இந்தக் காலணிகளைப் பாருங்கள்! இவை ஒரு சிங்கள இராணுவ வீரனிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட காலணிகள்” என்றார். “லலித் அத்துலத் முதலி எனது நண்பர்தான், ஆனாலும் அவரைக் கொன்றே தீருவேன் போரென்றால் போர் சமாதானமென்றால் சமாதானம்” என்று ராஜா மேடையில் சவால் விட்டார். ஆயிரக் கணக்கான இராணுவத்தினருக்குக் கொள்ளி போடத் தயாராயிருக்குமாறு ஜெயவர்த்தனாவை எச்சரிக்கை செய்தார். ஒரு ‘திரைவிருந்து’ நிகழ்ச்சியில் செய்வதைப் போலவே அவர் கலை இரவு மேடையில் சினிமாப் பாடல்களிற்கும் பாட்டுக்குப் பாட்டிற்கும் இடையே ஈழப் போராட்டம் குறித்து அர்த்தமில்லாத வெற்று வசனங்களைப் பேசி ஒட்டு வேலைகள் செய்துகொண்டிருந்தார். கொஞ்சம் விட்டால் ‘LTTE வல்வெட்டித்துறை - PLOT சுழிபுரம் - TELO கல்வியங்காடு - EPRLF சின்னமடு வெண்திரைகளில் கண்டுகளியுங்கள் சிவகுமாரன் பிலிம்ஸின் தமிழீழம்’ என்று கூட ராஜா சொல்லியிருப்பார்.

 

எனக்குச் சீயென்று போய்விட்டது. நான் அன்றிருந்த மனநிலையில் ராஜா ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும் மலினப்படுத்துவதாகவுமே எனக்குத் தோன்றியது. எனக்கருகில் நின்றிருந்த என்னுடைய இயக்கப் பொறுப்பாளரிடம் “அம்மான்! கே.எஸ். ராஜா தேவையில்லாமல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறான்” என்றேன். நானும் பொறுப்பாளரும் மட்டும் மேடையின் பின்புறத்துக்குச் சென்று ராஜாவுடன் பேசுவதற்காக வளம் பார்த்துக்கொண்டிருந்தோம். மேடையில் நின்றிருந்த ராஜா நிகழ்ச்சியின் நடுவே ஒரு முறை மேடைக்குப் பின்னே வரும் போது நான் ராஜாவிடம் “நீங்கள் நிகழ்ச்சி நடத்துவது என்றால் ஒழுங்காக நடத்துங்கள், போராட்டத்தைப் பற்றி அலம்பல் கதைகள் வேண்டாம்” என்றேன். ராஜா எங்களை முறைத்துப் பார்த்தார். தனது இடுப்பில் இரு கைகளையும் ஊன்றியவாறு தனது மதுரக்குரலால் அவர் எங்களைப் பார்த்துக் கலப்பில்லாத ஆங்கிலத்தில் கர்ச்சித்தார். எங்களுக்கு ஒரு இழவும் விளங்கவில்லை. ஆனால் அவர் எங்களைத் திட்டுகிறார் என்பது மட்டும் புரிந்தது. பொறுப்பாளர் ராஜாவைப் பார்த்து “இனிப் போராட்டத்தைப் பற்றிப் பேசினால் உன்னைத் தூக்குவேன்” என்றார். ராஜா திரும்பவும் மேடைக்குப் போய்விட்டார். இதற்குப் பின்பு ராஜா அந்த நிகழ்ச்சி முடியும் வரை அடக்கியே வாசித்தார்.

 

இதற்குப் பின் ராஜாவைப் பற்றிச் சில தகவல்கள் கேள்விப்பட்டேன். நிகழ்ச்சிகள் நடத்தச் செல்லும் கிராமங்களிலேயே அவர் தங்கிக் கோயில் மண்டபங்களிலும் பாடசாலைகளிலும் உறங்குகிறார், இருபத்து நான்கு மணிநேரமும் போதையிலேயே இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.

 

அது 1986 மே மாதம், திகதி ஏழோ எட்டோயிருக்கலாம். நாங்கள் எங்களது வாகனத்தில் அறிவிப்புச் செய்துகொண்டே அந்தச் சிறுநகரத்துக்குள் நுழையும் போதே சாலையோரத்துத் தேனீர்க் கடையில் ஒட்டி நின்றிருந்த கே.எஸ். ராஜாவைக் கண்டுவிட்டோம். அவரருகே வாகனத்தை நிறுத்தி அவரை வாகனத்தில் ஏறச் சொன்னபோது ராஜா மிரட்சியுடன் எங்களைப் பார்த்தார். பின் தயங்கித் தயங்கி வாகனத்துள் ஏறினார். நாங்கள் எழுதி வைத்திருந்த அறிவிப்பை ஒலிபெருக்கியில் அறிவிக்குமாறு ராஜாவுக்குக் கட்டளையிடப்பட்டது. ராஜா மிரட்சி கலையாமலேயே அங்குமிங்கும் பார்த்தபோது எங்களது வாகனத்திற்குள் சில துப்பாக்கிகளும் ஒரு ஒலிவாங்கியுமிருந்தன. ஒலிவாங்கியைக் கையில் வாங்கிக் குனிந்த தலையுடன் அறிவிப்பைத் தொடங்கிய ராஜாவின் குரல் ஒலிபெருக்கியால் அந்தச் சிறுநகரத்தை உலுக்கிப் போட்டது: “தமிழீழ விடுதலை இயக்கம் ‘TELO’வினருக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிப்பு! உடனடியாக நீங்கள் உங்கள் ஆயுதங்களுடன் எங்களிடம் சரணடைந்து விடுங்கள்….”அப்போது மதுரக்குரல் மன்னனின் குரல் நடுங்கிக்கொண்டிருந்தது.

 

இது நடந்து நான்கு ஐந்து வருடங்களிருக்கும். அப்போது நான் வெளிநாடொன்றில் இருந்தேன். குறிப்பான அந்தக் காலப் பகுதி இலங்கை அரசியலின் உச்சபட்சக் கொதிநிலைக் காலமாயிருந்தது. இந்தக் காலப் பகுதியிற் தான் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், உமாமகேஸ்வரன், பத்மநாபா, கிட்டு, ராஜீவ் காந்தி, அத்துலத் முதலி, காமினி திஸநாயக்கா, பிரேமதாசா எனப் பல முக்கியமான தலைகள் விழுந்துகொண்டிருந்தன. வீடு புகுந்து கொலை, மத்திய குழு கூட்டத்திற்குள் புகுந்து கொலை, மெய்ப் பாதுகாவலர்களால் கொலை, தேர்தற் பிரச்சார மேடையிற் கொலை, கப்பலை வெடிக்க வைத்துக் கொலை, மாலை அணிவிக்கையில் கொலை, மேதின ஊர்வலத்திற் கொலை எனக் கற்பனைக்கு எட்டாத சாகசங்களுடனும் கொடூரங்களுடனும் விடாது கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இடையில் ஒருநாள் கே.எஸ். ராஜா கொலை செய்யப்பட்ட செய்தியும் என்னை வந்தடைந்தது. ராஜாவின் உடல் கொழும்புக் கடற்கரையில் வீசப்பட்டிருந்ததாம். இந்தச் செய்தி அப்போது என்னில் எந்தத் துக்கத்தையோ வேதனையையோ கிளர்த்தவில்லை. ஒரு மனிதனை எத்தனை தடவைகள்தான் கொல்வது என்ற சலிப்புத்தான் என்னுள் மேலிட்டது.