ச ரிநிகர்: 112 - 113 இல், இராதிகா குமாரசாமி என்பவர் "பெண்புலிகளும் பெண்விடுதலைப் பிரச்சினைகளும்" என்ற தலைப்பிலான தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. இந்தக் கருத்துக்களை மறுதலித்துக் பல கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன.


இராதிகா குமாரசாமியின் அடிப்படை அரசியலைக் கேள்விக்கு உட்படுத்தி விமர்சித்து அம்பலப்படுத்துவதற்குப் பதில், பல குறைபாட்டுடன் தமிழ் மக்களின் போராடும் உரிமையின் பெயரால் எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரைகள் பல வெளிவந்தன. நான் இக்கட்டுரை மீது, தொடர்ச்சியாக இரு கட்டுரைகள் எழுதியிருந்தபோதும், சரிநிகர் அவற்றை இருட்டடிப்புச் செய்திருந்தது. இராதிகா குமாரசாமியின் அடிப்படை அரசியலைக் கேள்விக்குட்படுத்துவதன் மூலம் நாம் இன்றுள்ள ப+ர்சுவா பெண்ணியவாதப் பிரமிப்புக்களை உடைத்தெறிய முடியும்.


"எந்த வடிவத்திலான முரண்பாட்டையும் தீர்ப்பதற்குப் பதிலாகப் பலாத்காரத்தை வழி முறையாகப் பயன்படுத்துவதற்கு நான் உடன்பாடில்லை" என இராதிகா குமாரசாமி திட்டவட்டமாகத் தனது அரசியல் எது? என்பதைத் தெளிவாக்குகின்றார். "துயரம் மலையளவு தான் ஆனால் மௌனத்தைக் காத்தல் சாத்தியமில்லை" எனப் பதில் அளித்த கட்டுரை வரிகள் முந்திய கூற்றுக்கு எதிராக அமைகின்ற போதே, வர்க்க முரண்பாட்டில் ஒரு பிரிவுக்காக வாதிடுவதை, பாதுகாப்பதைக் காட்டுகின்றது.


இன்றைய உலகமயமாதல் சார்ந்த ஆணாதிக்க இனவாதத்தை வன்முறை மூலம் தகர்ப்பதை எதிர்த்து நிற்கும் அதே நேரம், இதை அம்பலப்படுத்திப் போராடும் போது மௌனத்தைக் காத்தல் முடியாது உள்ளது என மீள் வன்முறையைப் பிரகடனம் செய்கின்றார். முதலாளித்துவ எல்லா பாராளுமன்ற ஜனநாயகவாதிகளும், எதைத் தமது அரசியல் அகராதியில் செய்கின்றனரோ, அதையே இவரும் அசகுபிசகாது வெளிப்படுத்துகின்றார். போராட்டம் அற்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்க, சுரண்டும் வர்க்க அமைதி, சமாதானம், வன்முறையற்ற பிரகடனம் எல்லாம் பேசுகின்றனர். ஆனால் சுரண்டல் வடிவம் கேள்விக்குள்ளாகும் போது சமாதானம், ஜனநாயகம், வன்முறை என எல்லா பிரகடனங்களையும் மறுத்து, எதிர் நிலையில் வன்முறையைப் பரிசளிக்கின்றனர். இது மனித வரலாற்றின் வர்க்க வரலாறாகும.


ஏனோ தெரியாது, இவர் ஐக்கியநாடுகள் சபையில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான விஷேச அறிக்கையாளராக இருப்பதோ என்னவோ, அனைத்து வன்முறைகளுக்கும் எதிராக, குறிப்பாகப் பெண்களுக்கு எதிராகத் தொடரும் வன்முறைகளுக்கு உலகளவில் தலைமை தாங்கும் ஐக்கியநாடுகள் சபையைப் பாதுகாக்கத்தான் வன்முறையை நிராகரிக்கின்றார்.


ஈராக்குக்கு எதிரான மனிதப்படுகொலை வன்முறையில் ஐ.நா. ஈடுபட்டதன் மூலம், 15 இலட்சத்துக்கு மேற்பட்ட ஏழை மக்கள் இன்று வரை இறந்துள்ளதுடன், தொடர்ந்தும் இறந்து வருகின்றனர்.


செர்பியா நாட்டில் குண்டு மழை பொழிந்து மக்கள் குடியிருப்புகள் மற்றும் அனைத்துப் பொருளாதார அடிப்படைகளையும் தகர்த்த போதும், அது பற்றி மௌனம் சாதித்து அங்கீகரித்தபடி, அதே ஐ.நா.வின் கைக்கூலியாக, கூலிக்கு மாரடித்து அவ்வன்முறையைப் பாதுகாக்க வெட்கப்படவில்லை.


பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது தனிச்சொத்துரிமை வடிவில் சுரண்டல் அமைப்பின் விளைவாகும். ஐக்கிய நாட்டுச் சபையானது சுரண்டல் அமைப்பின் ஜனநாயகக் காவல் நாயாகத் திகழும் எல்லா நிலையிலும், பெண்களுக்கு எதிரான வன்முறையின் காவலனாக இருப்பது நிர்வாணமானது. வன்முறை பற்றிய அறிக்கைகள் சுரண்டல் அமைப்பைப் பாதுகாக்க, தனிமனிதனைக் குற்றவாளியாக்கும், இந்தச் சுரண்டல் அமைப்பினை நியாயப்படுத்த, எடுக்கும் புள்ளிவிபரத் தொகுப்புக்கே பயன்படுகின்றது.


ஆணாதிக்கம், சாதி ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை, நிற ஒடுக்குமுறை, சுரண்டல் என அனைத்தும் வன்முறை சார்ந்ததே. உலகத்தின் அனைத்து இயக்கங்களும் வன்முறை ஊடாகக் கட்டியமைக்கப்பட்டுள்ளது. பொதுவில் அமைதி என்பது இருக்கும் வன்முறையைப் பாதுகாக்கும், நியாயப்படுத்தும் கோட்பாடாகும். சமுதாயத்தில் இருக்கும் முரண்பாடுகளைத் தீர்க்க வன்முறை அரசியல் அவசியமில்லை என அடித்துக் கூறும் இராதிகா குமாரசாமி வர்க்க வன்முறையாளனின் காலில் விழுந்து கெஞ்சக் கோருகிறார்.


ஒரு முதலாளியிடம் கூலியைக் கெஞ்சியும் காலைப்பிடித்தும் கோரக் கோருகின்றார். சிங்கள இனவாதிகளிடம் தமிழீழ மக்கள் பணிந்து நின்று கேட்கக் கோருகின்றார். ஆண்களிடம் பெண்கள் அமைதியாகத் தலைகுனிந்தபடி கெஞ்சக் கோருகின்றார். இதுதான் ஐக்கிய நாட்டுச்சபை அவருக்கு வழிகாட்டும் பெண்ணிய வழியாகும். அதாவது ஒரு பெண்ணை ஆண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் போது எதிர்த்துப் போராடாது அமைதியாக வன்முறையை ஏற்று, பின் பேரம் பேசி, அதே ஆணைத் திருமணம் செய்ய வேண்டும் என்கிறார். இதுதான் பலாத்காரத்திற்கு உடன்பாடு இல்லை என்று கூறியபடி செய்ய நினைப்பதாகும்.


இன்று நடைபெறும் உலகமயமாதல் சூறையாடலைக் கைக்கு விலங்கிட்டபடி மௌனமாக, அமைதியாக ஏற்றபடி, மூன்றாம் உலக நாடுகளுக்கு அதிக பிச்சையாக நிதி உதவி வழங்க கோரி, இரங்கி கோரவேண்டும். இதுதான் இராதிகா குமாரசாமியின் அரசியல் அகராதி. ஏகாதிபத்திய, நவகாலனித்துவ ஆக்கிரமிப்பை எதிர்த்து வன்முறை வேண்டாம் என்கிறார். மாறாக, மாற்று வழி பொலிசாக நின்று சேவை செய்ய கோருகின்றார். இவர்களின் நோக்கமும் ப+ர்சுவா பெண்ணியவாதம் பற்றிப் புதிய உலகமயமாதலைப் பற்றியும் புரிந்து, அதற்கு இவர்கள் சார்பாகக் கதைக்கப் பழகவேண்டும் என்கிறார். அது சரி பெண்கள் காலம் காலமாக ஆயுதம் ஏந்திப் போராடவில்லை என்பது, ஆணாதிக்கம் மட்டுமின்றி மதக்கோட்பாடுகளின் தொடர்ச்சியும் ஆகும். மனிதச் சமூகம் காட்டுமிராண்டிச் சமூகமாக இருந்த போது, பெண்கள் தமது உணவுக்கும் தமது குழுவைப் பாதுகாப்பதற்கும் ஆயுதம் ஏந்தி ஆண்களைப் போல போராடினார்கள் என்பது உண்மையானது என, எல்லாப் பெண்ணியவாதிகளுக்கும் தெரியும். ஆனால் இவர்களுக்கு அவை கசப்பானவை.

 
சங்க இலக்கியத்தில் ஆதாரங்கள் கேட்பதும், பார்ப்பனிய இந்து மதத் தலைவர்களிடம் கேட்பதும் ஒன்றே. ஆணுக்குப் பெண் அடிமையான பின் தான் சங்க இலக்கியம் உருவானது.


சங்க இலக்கியத்துக்கு முந்திய தொல்காப்பியத்தில் வெட்சித் திணையில் உள்ள துறைகளில் ஒன்று கொற்றவை நிலை ஆகும். (தொல்: நூற்பா:59) இதில் மன்னன் போருக்குப் போகும் முன், பெண் தெய்வமான கொற்றவைக்கு முன் வாள், வேல் முதலியவற்றை வைத்து வணங்கிச் செல்வதன் மூலம், பெண்ணைத் தலைவியாகக் கொண்டு மதித்து வழிபடும் முறை பழைய சமுதாயத்தின் எச்சமாகும்.


ரிக் வேதத்தில, "இரவிலே நடந்த போரிலே கேலனுடைய மனைவியான விச்பலையின் கால், பறவையின் சிறகைப்போல் துண்டிக்கப்பட்டது. உடனே நீங்கள் அவள் நடந்து செல்ல அவளுக்கு இரும்புக் காலைத் தந்தீர்கள். அந்தப் போர் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்வத்தைப் பற்றுவதற்காக நடந்தது."55 பெண் யுத்தத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, அதன் நோக்கம் மற்றும் பெண் தன்னை எப்படி பாதுகாத்தாள் என்பதை எல்லாம் இது காட்டுகின்றது.


"சந்திரகுப்த மவுரியரின் காலத்தில் (கி.மு 323-300) பெண்கள் படையிலும் பணியாற்றி வந்தனர். அவர் வேட்டைக்குப் போகின்றபோது பெண்கள் குழு ஒன்று அவருடைய மெய்க்காப்பாளராகத்"57 தேர்களிலும், குதிரைகளிலும், யானைகளிலும் ஆயுதம் ஏந்திச் சென்றனர்.


அன்றைய பாண்டிய நாட்டைப் பெண்கள் ஆண்டனர். இலங்கையிலுள்ள வன்னிப்பகுதியில் நடைபெறும் "நாச்சிமார் கோயில் வழிபாடுகள்,"58 பெண்கள் தலைமையில் ஒல்லாந்தரோடு போராடி மடிந்த ஏழு பெண்களின் நினைவாக நடப்பது, பெண்களின் போராட்ட வரலாற்றையும், மக்களின் பங்குபற்றலையும் காட்டுகின்றது.


ஆனால் ஏகாதிபத்தியத்துக்குச் சேவை செய்யப் புறப்பட்ட கைக்கூலிகள் வரலாற்று ஆதாரம் இல்லை என்று கூறி, பெண்களின் போராட்டத்தைச் சிறுமைப்படுத்துவது பெண்ணியமாகின்ற போதே, ஆணாதிக்கத்தின் ஆழமான பெண்ணியத் திரிபுகளையும் புரிந்து கொள்ளமுடியும்.


சங்க இலக்கியத்திற்குச் சற்று முன் சென்றால், பெண்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதும் தலைமை தாங்கியதும் ஆவணமாகவுள்ளது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பெண் யுத்தத்தில் ஈடுபட்டதை உள்ளடக்கிய செங்கல் நூல் திரட்டில் பெண்ணின் நிலையைத் தெளிவாக்கியுள்ளது. இந்தச் செங்கல் கல் வெட்டை இப்படியே தொகுத்த நூல் தான் இராகுல்ஜி "சிந்துமுதல் கங்கைவரை" ஆகும். இந்நூலைப் படித்தால் ஓரளவுக்கு உண்மையான விபரங்களைப் பெறலாம். இது போல் அல்லியின் கதை போன்ற பல பெண்களின் வீரவரலாறுகள் எமக்கு முன்னுள்ளது.


பெண்கள் சுதந்திரமாக வாழ்ந்ததும், தனது சமூகத்தைப் பாதுகாக்கப் போராடிய மனித வரலாற்றையும் ஆதாரங்களின்றி பெண்விடுதலையை நோக்கிச் சிந்திப்பவர்களுக்குக் கூட இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில், மனித வரலாற்றுத் தொடக்கம் ஆண் பெண்ணை அடக்கியதல்ல. ஆண் சமுதாயத்தில் பெண் அடங்கி அவன் தயவில் வாழ்ந்தவளும் அல்ல. இருவரும் சமூகமாகப் பெண் உள்ளிட்ட வாழ்வுப் போராட்டமாகவே இருந்துள்ளது. ஏன் மனிதகுல வரலாற்றில் பெண்கள் தான் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி போராடிய வரலாறும், ஒரு சரியான பெண்ணியவாதிக்குத் தெரிந்துதான் இருக்கும். ஆனால், இராதிகா போன்றோருக்குத் தமது ஆணாதிக்கத் தலைமையைப் பாதுகாக்க, பெண்ணின் உரிமையைப் பறித்ததைக் கோட்பாட்டுத்தளத்தில் கொச்சைப்படுத்துவது அவசியமாகவுள்ளது.


"இரண்டாவதாக விடுதலைப்புலிகளின் ஆண் - பெண் ஒருமை நிலைத்தன்மையைக் குறிப்பிடலாம். அதாவது ஆணையும் பெண்ணையும் ஒரே விதமாகச் செயலாற்றுவித்தல். இது பெண்மைக்கான சாவுமணி என்று கூறலாம்" என இராதிகா குமாரசாமி கூறுகின்றார். ஆண் - பெண் சமத்துவத்தை மறுக்கும் போது விடுதலைப்புலிகளின் மீதான செயற்தளத்தில் மட்டுமல்ல, எல்லாத் தளங்களிலும் இது கருக்கொள்கிறது.


நாம் விடுதலைப்புலிகளின் அரசியல் போராட்டவடிவம், ஒழுங்கு அமைப்பை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர். ஆனால், பெண் - ஆண் இடையில் உள்ள இடைவெளி குறைக்கப்படும் போது, முரணற்ற ஜனநாயக நிலையில் நின்று அதை நாம் வரவேற்போம். அதன் அடிப்படையில் பெண்கள் ஆயுதம் ஏந்தும் உரிமையைப் பாதுகாப்போம். பெண்கள் இன்று ஆண்களைப் போல் உள்ளனர் எனில் (ஆணாதிக்கத்தில் அல்ல அறிவு, வீரம், உடை ... என்று பல துறைகளில்) நாம் பெருமைப்படவேண்டும். அதற்காக ஒப்பாரி வைக்கக் கூடாது. ஒரு பெண் தலைமயிரை வெட்டி, நகையின்றி உள்ளபோது பெண்மைக்குச் சாவுமணி அடிக்கின்றது எனக்கூறுவது நகைப்புக்குரியது. ஏன் ஆண்கள் கூட முன்பு தலைமயிர் வளர்த்தும், நகையணிந்தும் இருந்தனர். ஆண் - பெண்ணுக்கிடையில் இது ஓர் அடிப்படை வேறுபாடாக முன்னைய சமூகத்தில் இருந்தது இல்லை. ஆனால், இன்று பெண்ணைக் கல்லாக்கிய போதும், அழகியல் பதுமையாக்கிய போதும்தான் இதைப் பெண்மை என்ற பெயரில் தொடரும் உண்மையான நோக்கம் என்ன என்று பார்ப்பதற்கு முன், இம்மாற்றம் விடுதலையாகிவிடாது.


ஏனெனின், பெண்ணின் விடுதலை என்பது, பெண் - ஆண் நிலைக்கு வருவதில்லை, மாறாக ஆண் - பெண் இருவரும் மூன்றாவது நிலையை அதாவது, ஆணாதிக்கமும் பெண்ணடிமையும் அற்ற நிலையை வந்தடைவதாகும். நகையணிதல், தலைமயிர் வளர்த்தல் பெண்மை என்ற பெயரில், பெண்ணை ஏகாதிபத்தியம் எப்படி அழகிய கவர்ச்சி பதுமையாக்கி சந்தையை விரிவாக்குகின்றதோ, அதில் இதை மறுக்கும் போது ஏற்படுத்தும் சிதைவை எதிர்த்தே இது எழுகின்றது.


பெண் இந்த அணிகலன்களைக் கைவிடுவதால் யாருக்கு நட்டம்? ஆணாதிக்க அமைப்புக்கு அதிலும் தனிச்சொத்துரிமை பொருளாதார அமைப்புக்குப் பாரிய சிதைவைக் கொடுக்கும். அதாவது சந்தையைப் பெண்ணின் அங்கம் மீது, பெண்ணின் பண்பாட்டு வடிவங்கள் மீது, அழகுபடுத்திக் காட்டி, கட்டமைக்க முடியாது போனால் அழகு சாதன வர்த்தகம் முற்றாகச் சிதைந்து போகும். இதனால் ஆணாதிக்கம் பெண்ணை மரபாக அடையாளப்படுத்திய வடிவம் சிதைகின்ற போது, அது ஆணாதிகத்துக்கு எதிரான போராட்டத்தின் அங்கமாகி, உலக ஏகாதிபத்தியமும், அதன் தொங்கு சதையான ஐ.நா.வும் தகர்ந்து போகும்.


பெண்கள் முடி வளர்த்து, காதல் உணர்வு ததும்ப ஆண்களுடன் கூடியுள்ளவரை, இந்த உலக ஒழுங்கு மாறாது என்பது தான் இராதிகா குமாரசாமி முதல் ஏகாதிபத்தியம் வரையிலான கொள்கை. அதுதான் பெண்களுக்கு அழகியல் சாதனங்களை உற்பத்தி செய்தும், விளம்பரம் செய்தும் பெண்கள் அதைப் பற்றி சிந்திக்கவும் கோருகின்றனர். பண்பாட்டுக் கலாச்சாரத் தளத்தில் பெண்ணின் வருணனைகள் எல்லாம் பாலியலில் பதுமையாக்கும் அல்லது வக்கிரத்தைக் கொட்டும் வகையில் எல்லா உறுப்புகளும் காட்டப்படுகின்றது, அழகுபடுத்தப்படுகின்றன.

 

பெண்மைக்கான இராதிகா குமாரசாமியின் இன்னுமொரு விளக்கம் தருவதைப் பார்ப்போம். "இரக்கச் சுபாவம், சகிப்புத் தன்மை, சமூகஉறவு பேணல், சாந்தம் இது போன்ற குணங்கள் எல்லாம் மனிதர்களுடன் இணைந்து செயற்படும் போது அவர்கள் பாவித்திருக்கிறார்கள். இந்தப் பண்புகள, குணங்கள் எல்லாம் நீண்ட காலமாகப் பெண்களின் நற்பண்புகளாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டவை. இவை எல்லா நிலைமைகளிலும் மாறுபடாமையாகத் திகழவேண்டிய முக்கிய பண்புகளாகும்."


இவைகளுக்கு வர்க்கம் கிடையாதா? ஏன் இந்தப் பெண்கள் இரக்கம், சகிப்பு, சமூகஉறவு, சாந்தம் போன்றவற்றைப் பொதுவில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு, உயர்சாதிப் பெண்கள் வழங்கவில்லை. தமிழ்ப் பெண்களுக்குள் உயர்சாதிப் பெண்கள் ஏன் வழங்கவில்லை? தமிழ் பெண்களுக்குச் சிங்களப் பெண்கள் ஏன் வழங்கவில்லை? கறுப்பு பெண்களுக்கு வெள்ளையினப் பெண்கள் ஏன் வழங்கவில்லை? மூன்றாம் உலக நாட்டுப் பெண்களுக்கு மேற்கு நாட்டுப்பெண்கள் ஏன் வழங்கவில்லை? ஏன் சொந்த மருமகளுக்குக்கூட மாமியார் ஏன் வழங்கவில்லை? இப்படி எத்தனையோ உண்டு.


ஏன் இவைகளை வழங்க மறுத்தபடி, கோட்பாட்டளவிலும் நடைமுறை அளவிலும் வன்முறை எனக் கூறி ஒப்பாரி வைக்கும் போது, மற்றைய பெண்ணுக்கு இந்தப் பண்புகளை மறுத்து வன்முறையைக் கையாளும் போது கேள்வியே இல்லையா?


இவை ஆணாதிக்கத்தால் பெண்கள் மீது திணிக்கப்பட்டவை. ஆணின் தேவையைப் ப+ர்த்தி செய்ய பெண் அடங்கிப் போகவும், பெண்கள் மூலம் சமூக ஒழுங்கை ஏற்படுத்தவும் திணிக்கப்பட்டவையே. இது பெண்ணின் இயல்பான குணமல்ல. மாறாக வீரம், செயல், ஆற்றல், பரஸ்பர மதிப்பு என்பனவற்றை ஆண் - பெண் சமத்துவ நிலையில் தேடவேண்டும்.


இவைகளை எல்லா நிலைமைகளிலும் மானுட ஆளுமையாகக் காணவேண்டும் என்பது, வர்க்கப் போர் நடக்கும் போது, ஒரு முதலாளியை இரக்கம், சகிப்பு, சமூகஉறவு, சாந்தப்படி பாதுகாத்து, வர்க்கப்போருக்கு எதிராக இருக்கக் கோரும் இராதிகா குமாரசாமியின் அரசியல், இன்றைய உலக ஒழுங்கைத் தொடர்வது எப்படி என்பதை மையமிட்டுள்ளது.


மேலும், அவர் "பெண்கள் இராணுவ மயப்படுகின்ற நிலைமை முன்பைவிட அதிக அச்சுறுத்தலான ஒன்றாகும்" எனக் கூறும் போது சிங்கள இனவாதத்தையும், ஏகாதிபத்திய உலகமயமாதலையும் பாதுகாக்க முனைகின்றார். இராணுவவாதம் மட்டுமல்ல பெண்கள் அரசியல் முதல் சகலதுறைகளிலும் முன்வருவது அச்சுறுத்தல் எனின், அது ஆணாதிக்கத்துக்கே என்பது தெளிவானது. இது அடிப்படையில் சுரண்டல் அமைப்புக்கு அச்சுறுத்தல் ஆகின்றது.


விடுதலைப்புலிகளின் அரசியல் மக்கள் போராட்டத்திற்குப் பதில் இனப் பிரிவுகளின், இனப் போராட்டமாகச் சீரழிந்தபோது, அது இனவாதச் சிங்கள அடிப்படைவாதத்துக்குச் சாதகமாக இருந்தது, இருக்கின்றது. இந்நிலையில் புதிய படைப்பிரிவுகளை உருவாக்கி பெண்களை வீட்டுக்கு வெளியில் விடுதலைப்புலிகள் கொண்டு வந்தபோது, பெண்களின் படைப்பிரிவுகள் சிங்கள இனவாதத்திற்குச் சவால் விடுகின்றன. இந்தப் பெண்கள் அணிதிரள்வது என்பது, இந்திய துணைக் கண்டத்தின் சமூகக் கட்டமைப்பின் பெண்ணின் அடங்கிப் போகும் போக்கை, அதன் அடிப்படை உரிமையைக் (ஆணாதிக்கத்தைக்) கேள்விக்குள்ளாக்கியுள்ளது.


இது எதிர்காலத்தில் இந்திய சமூகப் பெண்ணின் விழிப்புணர்வுக்கு ஊன்று கோலாகியுள்ளது. இது எதிர்காலத்தில் ஏகாதிபத்தியத்திற்கும், அது சார்ந்த தரகு அமைப்புகளுக்கும் விடப்படும் ஒரு சவாலாக எழுந்துள்ளது. ஜனத்தொகையில் பாதிப்பிரிவு அடங்கியுள்ளவரை (இது சுரண்டும் வர்க்க ஆதிக்கத்தில் அமைதி காத்தலாகும.), சுரண்டும் வர்க்கம் தனது நிலையை இட்டு அலட்டிக் கொள்ளப் போவதில்லை. அதைத் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கீழ் அணிதிரண்ட பெண்கள், (விடுதலைப்புலிகளின் நடவடிக்கை பிழையாக இருந்த போதிலும்) இந்திய துணைக் கண்டத்தின் பண்பாட்டுக்குச் சவாலாக உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் இதன் விளைவுகள் தெளிவாகப் பிரதிபலிக்கும்.


இதையிட்டு அச்சுறுத்துவதாகக் கூறும் இராதிகா குமாரசாமி சரி, சிங்கள இனவாத அரசும் சரி, சுரண்டல் பிரிவும் சரி சொல்ல வருவது "பெண்ணே நீ மீளவும் அடுப்படிக்குப் போ" என்றுதான். பெண் வீதிக்கு வந்தால் பயப்படுகின்றார்கள் என்றால் அவர்கள் ஆணாதிக்கவாதிகளும் அதைச் சார்பவர்களுமே ஆவர்.


ஆண் - பெண் வேறுபாடு இன்றி பெண் போராடவும், ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்யவும் கோருவது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையாகும். சமூகம் வன்முறையில் உள்ளவரை, வன்முறை திணிக்கப்படும் வரை அதற்கு எதிராக வன்முறையைக் கையாளும் உரிமை பெண்களுக்கு அவசியமும் அடிப்படையுமான உரிமையாகும்.


ஓர் இனம், ஒரு மதம், ஒரு தேசியம், ஒரு சாதி மீது வன்முறையை ஒரு பிரிவு கட்டவிழ்த்து விடுமாயின், அதை எதிர்த்துப் போராடுவதும், சொந்த ஜனநாயகத்தை, மனித உரிமையை மீட்கப்போராடுவதும் பெண்ணின் அடிப்படை உரிமையாகும்.


தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பில் பெண்களின் உரிமை நிலை நாட்டப்படுதல், பெண்விடுதலையை அடிப்படையாகக் கொள்ளாமை என்பன அரசியல் ரீதியில் விமர்சனத்திற்கு உரியவையே தவிர, போராடும் உரிமையை மறுப்பதில் மையப்படவில்லை.


ஒரு பெண் ஆணைப்போல் போராடும் சமூகக் கடமையின் மீது நின்றபடிதான் தனது விடுதலை நோக்கியும் போராட வேண்டும். அதற்கு வெளியில் ஒருபோதும் சாத்தியமில்லை. பெண் தனது உரிமையை மீள வென்றெடுக்கவும் போராடவும் சகிப்பு, அமைதி, சாந்தம், சமூகஉறவுகளைப் பின்பற்றுவதால் ஒருபோதும் பெறமுடியாது. பெண் தனக்காகப் போராடவும், இதற்கு வன்முறை பரிசாகக் கிடைப்பின், தற்பாதுகாப்புக்காக வன்முறையை முன்னெடுக்கும் உரிமையைத் தனதாகக் கொண்டுதான் பெண்விடுதலையை அடையமுடியும். ஏகாதிபத்தியப் பெண்களின் அமைப்புக்கள் தமது ப+ர்சுவா கண்டுபிடித்தல்களில் நின்று அமைதி, சாந்தம் பற்றி கூறும் போது எல்லாவிதமான சொற்பதங்களும் உண்மையில் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கச் சார்பானவை என்பதில் சந்தேகமில்லை.


இராதிகா குமாரசாமி மேலும் கூறுகையில் "இலங்கையை நோக்கினாலும் சரி, முழு உலகை நோக்கினாலும் சரி, முழு உலகையும் எடுத்துக் கொண்டாலும் சரி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மனித உரிமைகளை ஈட்டிக் கொள்வதற்கு எதிராகப் பெருந்தடைக்கற்களாக உள்ளவை மத - இன மற்றும் தேசியவாதத் தத்துவார்த்தங்களே ஆகும். இந்த யதார்த்த நிலையை... எதிர்நோக்க விரும்பவில்லை" என இராதிகா குமாரசாமி தனது அங்கலாய்ப்பை வெளிப்படுத்துகிறார்.


உலக மனித உரிமைகளுக்குச் சவால் விடுபவைகள் இவையா? அல்லது வேறு ஒன்றா? எனப் பார்ப்போம். மனித உரிமைகளுக்குச் சவால் விடுபவை ஏகாதிபத்தியமும், சுரண்டல் அமைப்பு ஆகும். அப்படியிருக்க மத, இன தேசியவாதம் எப்படி சவாலாக இருக்கமுடியும்?


மத, இன தேசியவாத எழுச்சிகள் என்பது மனித உரிமைகள் மறுக்கப்படுதல் என்பதிலிருந்தே தோற்றம் பெறுகிறது. மனிதர்களை அடிமைப்படுத்தும் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள்தான், மத, தேசிய மற்றும் இனவாதமாக வெளிப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்வன்முறையை (போராட்டத்தை) நிராகரிப்பதன் மூலம் அந்த மக்கள் ஒடுக்கப்பட்டபடி வாழும் அமைதிதான், மனித உரிமையின் ஜனநாயகம் என வாதிட முனைகின்றார். அதாவது, இன்றைய உலகப் பொருளாதாரச் சூறையாடும் அமைப்பு வடிவைக் குலைக்க முனையும் போராட்டங்களைத் தான், மனித உரிமைக்குச் சவால் விடுகின்றது என்கிறார். அதாவது மனிதனை மனிதன் சுரண்டும் உரிமைதான் ஜனநாயகம் என்கின்றார். ஒரு முதலாளி சுரண்டும் உரிமையையும், ஒரு தொழிலாளி சுரண்டப்படும் உரிமையையும் ஏற்றுக் கொள்ளும் மனித உரிமைதான் உன்னதமான ஜனநாயகத்தின் சின்னம் என்கிறார்.


இன்று சிங்கள இனவாதத்தை எதிர்த்துப் போராடுவதுதான் இலங்கையில் மனித உரிமைக்குச் சவாலாக இருக்கிறது என்கிறார். சிங்கள இனவாதத்துடன் இணைந்து சலுகைகளைக்கோரிப் பெறுவது தான் தமிழ்ப்பிரிவின் கடமையே ஒழிய, எதிர்த்துப் போராடுவது அல்ல என்கிறார். பெரும்பான்மை இனத்தின் இன வன்முறை அரசு ஆதிக்கத்தை எதிர்க்காத, தமிழின அமைதிதான் இலங்கையில் மனித உரிமையைப் பேண அடிப்படையாகும் என்கிறார். தமிழ் மக்களுக்குச் "சமஷ்டித் தீர்வு" தான் சரி எனக் கூறுவதன் மூலம், சிங்கள இனவாதத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் அடக்குமுறையின் கோட்பாட்டை அப்படியே எடுத்து, தமிழ் மக்களுக்கான ஜனநாயகமாகச் சமாதானத்தின் பெயரால் திணிக்க முனைகின்றார்.


தமிழ்மக்களுக்கு உண்மையான சமாதானம், ஜனநாயகம், மனித உரிமை என்பது சுயநிர்ணய உரிமையில் தங்கியுள்ளது. சுயநிர்ணயத்தை நிராகரித்த சமஷ்டி தீர்வு என்பது சிங்கள இனவாதத்திற்குட்பட்ட இனவாதத் தீர்வுகளையே எம்மீது திணிக்க முயல்வதாகும்.


சங்ககால இலக்கியத்தில் பாண்டித்தியம் பெற்ற இராகவன் (விமர்சகர்) அவர்கள் "கன்னிப் பெண்கள் எதிரியுடன் போர் புரிவதற்கென உண்மையில் ஒருமுறை ரீதியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஒரு முன் நிகழ்வைக் கூறமுடியுமா?" என வினா எழுப்பும்போது, இவர் ஒரு பெண்ணியவாதியா? என்ற கேள்வியே எஞ்சி நிற்கிறது. தொப்பிக்கு ஏற்ற தலையைச் செய்ய எண்ணிய இவர் உலக மற்றும் தமிழ் மரபை விபச்சாரம் செய்து ஆணாதிக்கத்துக்கு முண்டு கொடுக்கின்றார்.