அறிவுபூர்வமாகவே இணங்கி வாழத் தயாரான குழந்தைகளை, அறிவற்றதாக்குவது யார்? மாடு மாதிரி தின்னப் போடுவதா, புண்ணாக்கு மாதிரி கல்வியைத் திணிப்பதா, பெற்றோரின் கடமை? இதை பூர்த்திசெய்வதே பெற்றோரின் பணி என்று நம்புவது, பெற்றோரின் அறிவிலித்தனமாகும்.

 அதாவது குழந்தை பணம் சம்பாதிப்பதை வழிகாட்டுவதா, பெற்றோரின் கடமை? இப்படித்தான் பல பெற்றோர்கள் நம்புகின்றனர். ஆகவே ஆட்டுக் கிடாயை வளர்க்கும் மனநிலையில் தான், குழந்தையை வளர்க்கின்றனர். மொழி மற்றும் உடல் வன்முறை மூலம் இதைச் செய்யமுனைகின்றனர். இப்படி இணக்கமற்ற குழந்தைகள் உற்பத்தி செய்யப்படுகின்றனர்.

 

குழந்தையை இணக்கமான வகையில், அறிவியல் பூர்வமாக இணங்கி நிற்கும் குழந்தைகளை உருவாக்க வேண்டும், என்று பெற்றோர் கற்பனை கூட செய்வதில்லை. ஆனால் அதையே, குழந்தை தம்முடனான சமூக உறவில் நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். முரணிலையான அணுகுமுறையுடன் கூடிய பெற்றோரின் செயல்பாடுகள். அதாவது சமூகமாக குழந்தை தம்முடன் வாழவேண்டும் என்று விரும்பும் சுயநலம், தாம் அல்லாத மற்றவருடன் சமூகத்துக்கு எதிராக சுயநலத்துடன் வாழத்தூண்டும் நடைமுறையைக் கையாளுகின்றனர்.

 

பெற்றோர் குழந்தை வளர்ப்பில் சரி, குழந்தை பெற்றோர் பராமரிப்பில் சரி, பரஸ்பரம் இணங்கிய அணுகுமுறை தான், சுயநலமல்லாத சரியான சமூக மனித உயிரியை உருவாக்கும். இதற்கு மாறாக சுயநலம் கொண்ட பெற்றோர், குழந்தையுடனான உரையாடல் என்பது, குழந்தைகளை விடாப்பிடியாக நச்சரிப்பதாகவே உள்ளது. குழந்தை ஏன், எதற்கு என்ற கேள்விகளுடன் தான், தமது அறியாமையையும், அறிந்து கொள்ளும் நுணுகிய ஆர்வத்துடன் தான் பெற்றோரை அணுகுகின்றது. இது எல்லாக் குழந்தைகளிடமும் இயல்பில் உள்ளது. இந்தக் குழந்தைகளின் ஆர்வத்தை தெளிவுபடுத்தி வளர்க்கும் ஆற்றல், எந்தளவுக்கு எமது பெற்றோரின் சமூக மனப்பாங்கு சார்ந்து அறிவியல் பூர்வமாக உள்ளது.

 

குழந்தையின் கேள்வியை, அதன் ஆர்வத்தை, அதன் துடிப்பை எதிர்மனப்பாங்கில் தான் பெற்றோர்கள் அணுகுகின்றனர். பெற்றோர் தமது மனச்சிக்கலை, மனவுழைச்சலை குழந்தையின் ஆர்வம் மீது வெறுப்பூட்டும் வகையிலேயே காட்டுகின்றனர். மகிழ்ச்சியாக, பொறுமையாக, விடாப்பிடியாக எத்தனை பெற்றோர் குழந்தையுடன் உரையாடுகின்றனர்? இதற்கு மாறாக குழந்தை மேல் சினந்து விழும் ஒரு உரிமையை, அவர்களுக்கு கட்டளையிடும் அதிகாரத்தை யார் வழங்கியது?

 

தாய்மையும், பெற்றோரின் உரிமை என்பதும், இணங்கிய சமூக வழிநடத்தலுக்கு உட்பட்டதே ஒழிய, அவர்களை துன்பப்படுத்துவதற்குரிய பெற்றோரின் சொந்த அதிகாரமல்ல. மிகச் சிறிய இடைவெளியில் மிக நுட்பமாகவே இது உள்ளது. சுதந்திரம் உரிமை என்பதெல்லாம், பரஸ்பரம் சமூகமாக இருத்தல் சார்ந்தது. இதை பெற்றோரும் குழந்தையும் இணக்கப்பாட்டுடன் பரஸ்பரம் புரிந்து கொள்வது அவசியம். இதை உருவாக்குவதே பெற்றோரின் சமூகக் கடமை.

 

ஆனால் இது மீறப்படுகின்றது. பெற்றோர் தமது அதிகாரத்தின் எல்லை உள்ளவரை, குழந்தையை சதா திட்டுவது, அவர்கள் மீது எரிந்து வீழ்வதும், மொழி ரீதியான வன்முறை, உடல் ரீதியாக வன்முறை மூலம் குழந்தைகளை அன்னியமாக்குகின்றனர். குழந்தையின் சுயமற்ற மழலை வயதில் கொஞ்சுவதும், கெஞ்சுவதும், குழந்தையின் சுயம் வளரவளர அதை எதிராகப் பார்க்கின்ற மனப்பாங்காக மாறுகின்றது. அவர்களை சதா திட்டுவதாக மாறுகின்றது அல்லது அவர்கள் பாட்டில் விட்டுவிடுவதாக மாறுகின்றது. இது உண்மையில் அவர்களால் உளப்பூர்வமாக புரிந்து திட்டமிட்டு செய்வதல்லை. மாறாக தனிச்சொத்துரிமை அமைப்புக் கண்ணோட்டம், எந்த உயிரியலின் சுயத்தையும் எதிராகவே கற்பிக்கின்றது. சுயமற்ற மந்தைகளும், பொம்மைகளையும் கொண்ட உயிரிகளைத் தான், தனிச்சொத்துரிமை அமைப்பு சமூகமாக முன்வைக்கின்றது. சுயமாக சிந்திக்க, சுயமாக கேட்க, சுயமாக வாழ, தனிச்சொத்துரிமை அமைப்பு அனுமதிப்பதில்லை. தான் கீறிய கோட்டை சமூகமாக வரைந்து, அதை மீற அனுமதிப்பதில்லை. இது சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது.

 

இதற்கேற்ப பெற்றோர் குழந்தையிடம் எதிர்பார்ப்பது மந்தைத்தனத்தையும், பொம்மைத்தனத்தையும் தான். குழந்தைகள் இதை மீறும் போது உடல் மற்றும் மொழி வன்முறைக்குள்ளாகின்றனர். அன்றாட குழந்தையின் இயல்பான சுயம் என்பது, இதை மீறுவதாக உள்ளது. இதை நலமடிப்பது தான், பெற்றோரின் கடமையாக்கப்பட்டுள்ளது. அதாவது அன்பும் அதிகாரமுமாகின்றது. குழந்தையின் நடத்தைகள் மீது இப்படி பெற்றோரின் நச்சரிப்பும், உடன்பாடின்மையும் என்பது அன்றாட வாழ்வாகிவிடுகின்றது. சில பெற்றோர் இதனால் தாம் அன்னியமாகி, தறிகெட்ட வகையில் குழந்தைகளை விட்டுவிடுகின்றனர் அல்லது அவர்களின் விருப்புக்கு ஏற்ப தாம் தாளம் போடுகின்றனர்.

 

பெற்றோர் வழிகாட்டுமாற்றலை உண்மையில் இழந்து விடுகின்றனர். இவையே இன்றைய குடும்பங்களாக இருக்கிறது. பணம் சம்பாதிக்க கற்றுக்கொடுக்கும் இயந்திரத்தின் சுயநலம் கொண்ட ஒரு உறுப்பாகவே பிள்ளையைக் காண்பதன் மூலம், குடும்பத்தின் உறுப்பாக குழந்தை நீடிக்கின்றது. குழந்தை பணத்தை சம்பாதிக்க தொடங்க, குழந்தை பெற்றோரைக் கைவிட்டு பணத்தின் பின்னால் ஓடுகின்றது. அதைத் தான் சமூகமாக கற்றுக் கொடுக்கின்றது.

 

இப்படித்தான் குழந்தை வளர்ப்பு உள்ளது. மிக எளிமையான ஒரு கேள்வி. குழந்தை ஏன் படிக்க வேண்டும் என்று பெற்றோரிடம் கேட்டால், அவர்கள் என்ன பதில் கூறுவார்கள்? குழந்தை பணம் சம்பாதிக்கத் தான் படிக்க வேண்டும். இதைப் புரிந்து கொள்ள மற்றொரு உதாரணம். ஏன் கடவுளைக் நாம் கும்பிட வேண்டும்? சரி, அந்த கடவுளிடம் கும்பிடுபவன் என்னத்தைக் கோருகின்றான்? இதற்கு பின்னால் இருப்பதெல்லாம் சொந்த சுயநலம். இதைத் தான் தனிமனித சுயநல சமூக அமைப்பு மீண்டும் மீண்டும் கூறுகின்றது. பெற்றோரின் குழந்தை வளர்ப்பு இதற்கு உட்பட்ட அலங்கோலமாக இயங்குகின்றது. அதன் பக்கவிளைவுகள் பெற்றோர் குழந்தை என இருவரையும் பாதிக்கின்றது.

 

இந்த வகையில் தான் பெற்றோர் குழந்தையைச் சுரண்டும் ஒருவராக இயங்குகின்றனர். சதா சுயநலத்துடன் குழந்தைக்கு, திணிக்க முனைகின்றனர். கல்வியே பணம் சம்பாதிக்க உதவுவதாக காண்கின்றனர். இப்படி கொள்கை கொண்ட எமது மனப்பாங்கு, குழந்தையை கற்பிக்கும் போது வன்முறை வடிவில் அதைச் செய்கின்றது. குழந்தை அழாமல், சினக்காமல், விரும்புகின்ற வகையில் கல்வி போதிக்கும் முறை எம் பெற்றோர் மத்தியில் கிடையாது. குழந்தையுடன் இணங்கிப்போதல், ஏற்றுக்கொள்ள வைத்தல், கற்றலில் ஒரு ஆர்வத்தை உருவாக்குதல் ஊடாக கற்கும் முறையுடன் அவர்களை அணுகத் தெரிவதில்லை.

 

மாறாக வன்முறை மூலம் ஊட்டுதல், திணித்தல் என்று கற்பிக்கும் முறையே பிரயோகிக்கப்படுகின்றது. குழந்தைக்கு பாலூட்டி சோறூட்டுவதிலும் கூட இந்த வழிமுறை பின்பற்றப்படுகின்றது. ஆசைகாட்டுதல், லஞ்சம் கொடுத்தல் மூலம், உணவை பிள்ளையின் வாயில் அவர்கள் அறியாது திணிக்கப்படுகின்றது. குறிப்பாக தாய்மையின் அணுகுமுறையே இப்படி இழிவாகி சீரழிகின்றது. இதே உத்திதான் கல்வி போதிக்கும் முறையிலும் காணப்படுகின்றது. நீ கல்வியை கற்றால் என்ற வாக்குறுதி தரப்படுகின்றது. அதாவது லஞ்சம் தரும் வாக்குறுதி மூலம், கற்கக் கோரப்படுகின்றது. இதைத்தான் முதலாளி செய்கின்றான். பொருட்கள் மூலம், பொருள் லஞ்சம் மூலம் கற்கும் உணர்வை குழந்தையிடம் ஊட்ட முனைகின்றனர்.

 

இந்த சமூக அமைப்பு வெளிப்படுத்தும் எண்ணங்களை, நிறைவேற்ற உள்ள வழிகளோ, குறுக்குவழி சார்ந்தது. வன்முறை, ஆசைகாட்டுதல், மோசடி செய்தல், இலஞ்சம் கொடுத்தல் என்று எண்ணற்ற குறுக்கு வழிகளில் தான், குழந்தை வளர்ப்பு நடக்கின்றது. ஏன் பெற்றோர் குழந்தை உரையாடல் கூட இதற்குள் தான் நடக்கின்றது. அன்பை வெளிப்படுத்துவது கூட பொருள் சார்ந்த இலஞ்சம் தான். அதுவே எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இப்படியாக குழந்தைகள் சமூகத்தின் உறுப்பு என்ற நிலையில் இருந்து மறுதலிக்கப்படுகின்றது. குழந்தையின் அனைத்துப் பிரச்சனைகளையும் பரஸ்பரம் இணங்கி ஏற்க வைத்தல் என்ற, அறிவியல் ப+ர்வமான இணக்கமான வழி கையாளப்படுவதில்லை. மாறாக இலஞ்சம் கொடுத்தல், ஆசை காட்டுதல், மோசடி செய்தல், இதுவே இணக்கமான வழியாக பார்க்கப்படுகின்றது. இதக்குள் சரிவரவில்லை என்றால் வன்முறை, தண்டனை என்று மாற்றுவழி. சரி, பிழை என்ற தர்க்கத்துக்கு அப்பால், பிள்ளையை இணங்க வைக்கும் பரஸ்பரமான அறிவியல் விவாதம் தவிர்க்கப்படுகின்றது. இது குழந்தை தான் செய்வதையும், ஏன் பெற்றோர் தாம் செய்வதையும் கூட சுய விசாரணை செய்கினறது. விவாதமும், விவாதிக்கும் வடிவமும், எமது சமூகப் போக்கில் குருட்டுத்தனமாகவே செயல்பட்டுள்ள நிலையில் இது மேலும் கடுமையான சிக்கலாகின்றது. ஒரு விவாதம், ஒரு விமர்சனம், சுய விமர்சனம் சமூகத்தில் மட்டுமல்ல, குடும்பத்திலும் கூட அவசியமானது. அதை எமது சமூகம் அடியோடு இழந்துவிட்ட நிலையில், அதாவது இப்படிச் செய்வது சமூகத் துரோகமாக கற்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், எமது குடும்பங்கள் வன்முறை கொண்ட குடும்பங்களாகவே மாறிவிடுகின்றது. அனைத்தையும் வன்முறையூடாக அல்லது இலஞ்ச வழிகள் மூலமாகவே அணுகுகின்றது. ஆண்கள் உடல் வன்முறையாளர்களாக, பெண்கள் மொழி வன்முறையாளராக செயல்படுகின்றனர்.

 

இப்படி குடும்பம் என்ற சமூக உறுப்பில் இருந்தும் குழந்தைகள் அன்னியமாகின்றனர். பல குடும்பங்களில குழந்தை பெருமளவில் தந்தைக்கு அன்னிமாக வாழ்கின்றனர். இதைத் தூண்டும் வகையில் வாழ்க்கைச் சூழல். தாய் அதிக நேரம் வீட்டில் இருப்பதும், தந்தை வேலைக்காக அதிக நேரம் வெளியில் இருப்பதால், தந்தையின் அன்னியமான சூழலுக்குள் தான் குழந்தையுடனான உறவு களங்கப்படுகின்றது. இதற்கு மேலாக தந்தையின் குடி, மனைவி தந்தைக்கு எதிரான புறுபுறுப்பும் மொழி வன்முறையும், சதா தந்தை பற்றி தாய் குற்றம் காணுதலும் சுமத்தலும், குழந்தை தாயுடன் வாழ்வதை கட்டாயப்படுத்துகின்றது. குடும்பத்தில் தந்தையர் அன்னியமான உறுப்பாக்கப்படுகின்றனர். குடும்பத்தில் தாய் தந்தைக்கு இடையில் சதா ஏற்படும் முரண்பாடு, மனைவி கணவனுக்கு எதிராக பிள்ளையிடமே குற்றம் சாட்டியும், குறை சொல்லியும் புலம்பும் போது, கணவன் குடும்பத்தில் இருந்து அன்னியமாவது மேலும் அதிகரிக்கின்றது.

 

மறுபக்கத்தில் மனைவிக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவில் உள்ள நெருக்கம் இணக்கமானதல்ல. மாறாக அதுவும் அன்னியமானதாகவேயுள்ளது. எப்படி கணவன் மேலான அதே மொழி வன்முறை உள்ளதோ, அதே வழியில் அதைவிட மோசமாக குழந்தை மேலான நச்சரிப்பே தாயின் சொந்த வாழ்க்கையாகிவிடுகின்றது. குழந்தைக்கேயுரிய விளையாட்டுத்தனத்தை குற்றமாக காண்கின்ற போக்கும், விட்டுக்கொடுக்க மறுக்கின்ற போக்கும், கண்டும் காணாமல் விடப்பட வேண்டியதை சதா கண்டு கொள்வதும், தாய் குழந்தை உறவில் உள்ள எதிர்மறையான அம்சமாகவுள்ளது.

 

எப்படி தந்தையை தாய் அணுகுகின்றாளோ, அதைவிட மோசமாக குழந்தையை தாய் அணுகுகின்றாள். குழந்தையை சதா திட்டிக்கொண்டும், குற்றம் கண்டு கொண்டும், பேசிக்கொண்டு இருக்கின்ற சூழல். குழந்தைக்காகவே வாழும் பல தாய்மார்கள், இதைக் காண்பது கிடையாது. உண்மையில் குழந்தைகள் தந்தையுடன் சேர்ந்து நிற்க முடியாத சூழல், தாயுடன் நெருங்க முடியாத சூழல்.

 

குழந்தை வீட்டில் தனது நிம்மதியை இழக்கின்றது. இது மாற்று வழியை தேடத் துடிக்கின்றது. குடிக்கும் கணவன் வீட்டில் மனைவியால் நிம்மதியை பெறமுடியாத போது, மற்றொரு தவறுக்கு எப்படி தூண்டப்படுகின்றதோ, அப்படித்தான் குழந்தை உலகமும். குழந்தை மாற்று வழியிலான அன்பையும், ஆதரவையும், மாற்று வாழ்க்கை முறையையும் வெளி உலகில் தேடுகின்றது. நண்பர்கள் வட்டம் முதல் பாலியல் மோகம் கொண்டு அலையும் வக்கிரம் பிடித்த கும்பலின் ஆசைகளுக்கும் வலிந்து பலியிடப்படுகின்து.

 

இரகசியமான குறுக்கு வழிகளில், குழந்தை தனக்கென்ற ஒரு வழியை கண்டுபிடிக்கின்றது. தனக்கென்ற இரகசியமான ஆதரவை வெளி உலகில் பெறுகின்றது. அவை பெருமளவில் எப்போதும் சுயநலத்துடன் தவறாகவே வழிகாட்டப்படுகின்றது.

பி.இரயாகரன்
12.07.2007

(மற்றொரு தலையங்கத்தில் இவ் ஆய்வு)

1.போலியான நடிப்பும் எங்கும் பகட்டு வாழ்வாகின்றது

2.மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

3.பெண் தன்னைச் சுற்றிக் கட்டும் பரிவட்டம்

4.சமூக வழிகாட்டலை இழந்து வெம்பும் குடும்பங்கள்

5.கணவன் மணைவிக்கிடையில் புரிந்துணர்வற்ற மொழி வன்முறை

6. பெற்றோரின் இணக்கமற்ற முரண்பாடே, குழந்தையின் முரண்பாடாகின்றது.

தொடரும்