கப்பல்உடை பட்டதால் நாயகன் இறந்ததாய்க்
கருதியே கைம்மை கொண்ட
கண்ணம்மை எதிரிலே ஓர்நாள்தன் கணவனும்
கணவனின் வைப்பாட் டியும்
ஒப்பியே வந்தார்கள். கண்ணம்மை நோக்கினாள்

`உடன்இப்பெண் யார்?'என் றனள்.
`உன்சக்க ளத்திதான்' என்றனன். கண்ணம்மை
உணவுக்கு வழிகேட் டனள்.
`இப்பத்து மாதமாய்க் கற்புநீ தவறாமல்
இன்னபடி வாழ்ந்து வந்தாய்
என்பதனை எண்பிக்க எங்களிரு வர்க்கும்நீ
ஈந்துவா உணவெ'ன் றனன்.
அப்படியும் ஒப்பினாள் கண்ணம்மை. ஆயினும்
அடிமையாம் பலிபீ டமேல்
அவள்உயிர் நிலைக்குமோ? அறிவியக் கங்கண்ட
அழகுசேர் அன்னை நாடே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt255