காப்பி எதற்காக நெஞ்சே?
காப்பி எதற்காக?

கையினில் சுக்குடன் மல்லி இருக்கையில்
காப்பி எதற்காக?

தீப்பட்ட மெய்யும் சிலிர்க்க இளிப்புக்கு
வாய்ப்புற்ற தெங்கு வளர்ந்த தென்னாட்டினில்
காப்பி எதற்காக?

ஆட்பட்டாய் சாதி சமயங்களுக்கே
அடிமை வியந்தாய் ஆள்வோர் களிக்கப்
பூப்போட்ட மேல்நாட்டுச் சிப்பம் வியந்தாய்
போதாக் குறைக்கிங்குத் தீதாய் விளைந்திட்ட
காப்பி எதற்காக?

திரும்பிய பக்கமெல் லாம்மேல் வளர்ந்தும்
சிவந்து தித்திப்பைச் சுமந்து வளைந்தும்
கரும்பு விளைந்திடும் இந்நாட்டு மண்ணும்
கசப்பேறச் செய்திடும் சுவையே இலாத
காப்பி எதற்காக?

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt130