கசங்கு சீவடி பிரம்பு செற்றடி
கைவேலை முடித் திடலாம் -- நம்
பசங்கள் பசிக்கு விரைவில் சென்றால்
பழயதைக் கொடுத் திடலாம்

பிசைந்து வைத்துள மாவும் தேனும்
பீர்க்கங் கொடியின் ஓரம் -- அந்த
உசந்த பானை திறந்து கரடி
உருட்டிடும் இந்த நேரம்

கூடைமுறங்கள் முடித்து விட்டேன்
காடை இறக்கை போலே -- இனி
மூடுதட்டும் குழந்தை மூச்சிலும்
முடிப் பதுதான் வேலை

காடு வெட்டவும் உதவி யில்லாக்
கழிப்புக் கத்தியைத் தீட்டி -- நீ
ஏடுபத்தாய் மூங்கில் பிளக்க
எழுந்திரு கண் ணாட்டி

சோடியாக நா மிருவர்
கூடி உழைக்கும்போது -- நம்
ஓடும்நரம்பில் உயிர் நடப்பதை
உரைத்திட முடி யாது

பாடி நிறுத்தி நீகொடுத்திடும்
பாக்கு வெற்றிலைச் சருகும் -- அத
னோடு பார்க்கும் பார்வையும் என்
உயிரினை வந்து திருகும்.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt110