கண்போற் காத்தேனே - என்னருமைப்
பெண்ணை நான்தானே
கண்போற் காத்தேனே...

மண்ணாய்ப் போன மாப் பிள்ளை
வந்ததால் நொந்தாள் கிள்ளை
மணமக னானவன் - பிணமக னாயினன்
குணவதி வாழ்க்கைஎவ் - வணமினி ஆவது?
கண்போற் காத்தேனே...

செம்பொற் சிலை,இக் காலே
கைம்பெண் ணாய்ப்போன தாலே
திலகமோ, குழலில் - மலர்களோ அணியின்
உலகமே வசைகள் - பலவுமே புகலும்
கண்போற் காத்தேனே...

பொன்னுடை பூஷ ணங்கள்
போக்கினா லேஎன் திங்கள்!
புகினும் ஓர்அகம் - சகுனம் தீதென
முகமும் கூசுவார் - மகளை ஏசுவார்!
கண்போற் காத்தேனே...

தரையிற் படுத்தல் வேண்டும்
சாதம் குறைத்தல் வேண்டும்
தாலி யற்றவள் - மேல ழுத்திடும்
வேலின் அக்ரமம் - ஞாலம் ஒப்புமோ?
கண்போற் காத்தேனே...

வருந்தாமற் கைம்பெண் முகம்
திருந்துமோ இச் சமுகம்?
மறுமணம் புரிவது - சிறுமைஎன் றறைவது
குறுகிய மதியென - அறிஞர்கள் மொழிகுவர்.
கண்போற் காத்தேனே...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt136