இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா என்ற பாடல் அனைவரும் பகிருந்து வாழவேண்டும், சுயநலம் இருக்கக்கூடாது என்பதை குறிக்கிறது. இன்றைக்கு தனியே ஒரு சிலரோ, அல்லது நேரடியாகவும், மறைமுகமாகவும் நாம் அனைவரும் இணைந்தோதான் இயற்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறோம். சொன்னால் நம்பமுடியவில்லை அல்லவா. என்ன செய்வது, மனித தேவைகள் அதிகரிக்கும்போது, அவசிய நிலை ஏற்படும்போது கட்டுப்பாடாவாது, நன்னெறிகளாவது, மதிப்பீடுகளாவது, சட்டமாவாது, தண்டனையாவது. ஆம் மனிதன் விலங்கினத்தின் பரிணாம வளர்ச்சியின் வந்தவன் என்பதை. சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் அதாவது பொருத்தமானவர்களின் வாழ்க்கை போராட்டம், வலிமையானவர்கள், திறமையானவர்கள் மட்டுமே போட்டியிடமுடியும் என்ற நிலைக்கு இயற்கை உணவுச் சங்கிலி மாறிவிட்டதை நிரூபிக்கும் வகையில் இயற்கையின் வளங்கள் மனிதத் தேவைகளுக்காக அளவுக்கு அதிகமாக சுரண்டப்படுகின்றன. சில சமயங்களில் இந்த சுரண்டல்களை நியாப்படுதக்கூடிய அளவுக்கு தேவைகள் எழுகின்றன. உதரணத்திற்கு இன்றைக்கு ஒன்றை சொல்கிறோம் கேளுங்கள் நேயர்களே. சீன பாரம்பரிய மருத்துவத்தில் கம்பளிப்பூச்சிக் காளான், அல்லது பூஞ்சை என்ற ஒன்று பயன்படுத்தப்படுகிறது. அந்துப்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள் புழுவாக இருக்கும் நிலையில் இந்த காளான் அல்லது பூஞ்சையின் நுண்ணியிர்கள் உட்புகுந்து, அதன் ஊட்டசத்துகளை உரிஞ்சி வளர்ந்து, புழு இறந்ததும் அதன்மீது பூஞ்சையாக வளர்கின்றன. இந்தக் காளான் அல்லது பூஞ்சைக்கு மருத்துவ குணம் உண்டு. ஆஸ்துமா, இருமல் இவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது, நம் உடலின் நுரையீரல், சிறுநீரகங்கள் ஆகியவற்றை வலிமையூட்டக்கூடியவை இந்த கேட்டர்பில்லர் ஃபங்கஸ் எனப்படும் கம்பளிப்புழு காளான்கள்.

 

பொதுவாக ஏப்ரல் மே திங்கள் காலத்தில் சிச்சுவான் மாகாணத்தின் வட பகுதி கான்சூ பாநிலத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள மின்ஷான் காடுகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த கம்பளிப்பூழுக் காளானைத் தேடி செல்கின்றனர். இந்த பருவநிலையில் அதிக அளவில் கிடைக்கும் இந்த கம்பளிப்புழுக் காளான்களுக்கு நல்ல விலை உண்டு. அதாவது ஒரு வருடத்தில் குறைந்தது 2000 யுவான் இந்த கம்பளிப்புழு காளானை கண்டெடுத்து விற்பதன் மூலம் ஒரு விவசாயிக்கு கிடைக்கும். இது குழந்தைகளின் கல்வி, விவசாய உரங்கள் வாங்க அவருக்கு உதவும். இந்த கம்பளிப்புழுக் காளான்களுக்கான விலையும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. 1980 களில் கிலோ 20 யுவான் மட்டுமே விற்ற இந்த கம்பளிப்புழுக் காளான்கள், 1999ல் கிலோ 10 ஆயிரம் யுவானாகா உயர்ந்தது, 2004ம் ஆண்டில் கிலோ 50 ஆயிரம் யுவான். இன்றைக்கு இந்த காளானின் விலை என்னத் தெரியுமா...கிலோ ஒன்றுக்கு 80 ஆயிரம் யுவான். ஆமாம் ஒரு கிலோ கம்பளிப்புழுக் காளானின் விலை 80 ஆயிரம் யுவான், 10 ஆயிரம் அமெரிக்க டாலர், இந்திய ரூபாயில் 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேல். இந்த விலைக் கிடைத்தால் நாம் கூட உடனே இந்த கம்பளிப்புழுக் காளான் வேட்டைக்கு புறப்படுவோம் அல்லவா. ஆம், இந்த விலையேற்றம் கம்பளிப்புழுக் காளான்கள் அதிக அளவில் கிடைப்பதில்லை என்பதால் உருவானது. வரவு எட்டனா செலவு பத்தனா என்பது போல,இந்த கம்பளிப்புழுக் காளான்களுக்கான தேவை அதிகம் ஆனால் இவை கிடைப்பது குறைவு. விவசாயிகளோ, வேளான்மை சரியாக பலன் தராத நிலையில், தங்களின் பொருளாதாரத்தை வளமாக்கிக் கொள்ள, அல்லது வறுமை நிலையிலிருந்து தப்பிக்க இந்த கம்பளிப்புழுக் காளான்களைத் தேடி, காடுகளில் சட்டவிரோதமாக நுழைந்து சில சமயம் வன அதிகார்களிடம் மாட்டிக்கொள்வதும் உண்டு. கம்பளிப்புழுக் காளான்கள் மிகவும் அரிதான உயிர்வாழ்வினங்களாக இருப்பதால் இவை வளரும் பகுதிகள் வனப்பாதுக்கப்பு பிரதேசங்களுக்குள்ளாக அமைந்திருப்பது குறிப்பிடப்பட வேண்டியது.

 

இந்த கம்பளிப்புழு காளான்கள் இன்றைக்கு மனித குலம் எதிர்நோக்கும் ஒரு முக்கிய சவாலை நமக்கு நினைவூட்டுகின்றன. இயற்கை பாதுகாப்பு, மனித தேவைகள் இவற்றுக்கு இடையிலான குழப்பத்தை அல்லது முரண்பாட்டை இந்த கம்பளிப்புழு காளான் வேட்டை உணர்த்துகிறது. ஆண்டாண்டுகளாக, வனப்பகுதிகளை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் தங்களின் தேவைக்கு வன வளத்தையே நாடியுள்ளனர், நம்பியுள்ளனர். பரம்பரை பரம்பரையாக அவர்கள், விறகிற்கும், மருத்துவத் தேவைகளுக்கான மூலிகைச் செடிகளுக்கும், உணவுத் தேவைக்கான விலங்குகளுக்கும் வனங்களையே அவர்கள் நம்பியுள்ளனர். ஆனால் அண்மைக்காலமாக வனப்பாதுகாப்பு பிரதேசங்கள் உருவாக்கப்பட்டதும், வனங்களை நம்பிய இந்த மக்களுக்கு அவர்களது தேவைகள் சவால்களாகின. இந்த மக்களுக்கு மாற்று வழிமுறைகள் செய்து, வாழ்க்கை வண்டியோட அவர்களுக்கு உரிய நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படாமல் போனால் அவர்கள் நிலை, அதோகதிதான்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.