20.05.2006 சில நேரங்களில் நமது கல்வியாளர்கள் "உண்மையில் படிப்பாளிகள்தானா? (கவனியுங்கள்: படிப்பாளிகள்தானா என்கிறோம்)" என வினாவத் தோன்றும். ஒரு மொழியில் இலக்கணப் பிழையை, எழுதுத்துப் பிழைகளை நாம் இலகுவாகச் செய்து விடுகிறோம். அதற்கான காரணம் மொழிப் பயிற்சியின்மையும், எழுதியதை மீள்நோக்கத்தக்க "ஆசிரியர்"(எடிட்டர்) இன்மையுமொரு காரணம். தமிழில்தாம் அதிகமாகப் பெரும் பொறுப்பற்ற மெத்தனப்போக்கு நிலவுகிறது! மொழியில் வாக்கிய-இலக்கண-எழுத்துப் பிழைகள் விடுவதைப் பெரியோர்(தமிழறிஞர்கள்) மன்னிக்கின்றார்கள். ஆனால் "பொருளில் குற்றமிட்டால்" நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம், குற்றமே!" இதை நக்கீரர் சொல்வதாகவேறு நாம் அறிகிறோம்! தமிழர்கள் எவ்வளவு உன்னதமாகத் தமது மொழிக்கு முதன்மை கொடுத்தார்!

இப்போது?...

"அந்த ஜங்ஷனில இருந்து, லெப்ஃடில திரும்பி அடுத்தவர்ற குறோசிங்கில ஸ்டிறைற்ற போனாக்கா சில்க்பாலஸ் வருமுங்க"

"வாங்க மேடம்-சார், என்ன ஃபீல் பண்ணிகிட்டிருங்கீங்க? இன்னைக்கு என்ன சாங் பாடப் போறீங்க?"

"சின்னமணிக்குயிலே!"

" பியுட்டுபுள் சாங்! இளையராஜா சாரின்ர வொண்டர்புள் கம்போஷிங்கல பாலாசாரின் அற்புதமான வாய்ஸ்..."

அட அரிகண்ட இராகங்களே!

உங்கள் வாயில கொள்ளிக் கட்டையை வைக்கேனா?

உங்கள் அப்பான் அல்லது ஆத்தாளுக்கு ஆங்கில வெள்ளைக்காரி-வெள்ளைக்காரனா துணை? இதுவா கல்வி?, கேணைத்தனமான கூட்டமே! இப்படி ஏசிவிடவேண்டுமெனத் தோன்றுகிறது! என்றபோதும் இதை இத்துடன் நிறுத்தி விஷயத்துக்குப் போவோம்.

பேராசிரியர் முனைவர்.க.அரங்கராசு என்ற பெரியார்:

" இலக்கண வரையறை என்பது ஒரு மொழியின் தனித்தன்மையைக் காப்பாற்றி வரும் பாதுகாப்புப் பெட்டகமாகும், மொழியின் வரையறை என்பது ஒரு இனத்தின் வரையறையாகுமாம். யாப்புக் கட்டுப்பாடென்பது ஒரு சமுதாயத்தின் கட்டுப்கோப்பாகும்." என்கிறார். (ஆய்வுச் சிக்கல்களும், தீர்வுகளும் பக்கம்:335)

ஆக ஒரு இனத்தின் "இருப்புக்கே" நிகராகக் கருதுகிறார்!

நாம் எவ்வளவோ போராடியும் "பிழையின்றி" எழுதுவதைத் தவிர்க்க முடியவில்லை! முயற்சிக்கின்றோம் என்ற வரையிலாவது ஒரு தெம்பு மனதில் நிழலாடுகிறது.

ஜேர்மனியர்கள் தமது மொழியை இலக்கண சுத்தமாகக் கற்றவருக்கே "மெற்றிக் குலேஷன்" கல்வியில் அதிக புள்ளிகள் கொடுத்து, மருத்துவம்-பொருளாதாரப் பொறியியல் போன்ற அதியுயர்ந்த படிப்புகளைத் தொடர அனுமதிக்கின்றார்கள். மொழியை இரண்டாது வகுப்பிலிருந்து இறுக்கி வரும் இவர்களின் பாடசாலைகள் "தேர்ச்சியுற்ற" ஆசிரியர்களின் மூலம் இதை வெகுவாகச் சாதித்துவிடுகிறது.

எனக்கு ஆரம்பக் கல்வியை வழங்கிய திருமதி ரீட்டா கியோக்குமார் ஆசிரியையை நினைத்துப் பார்க்கிறேன்! எவ்வளவு சிறப்பான பெண்மணி! தமிழை அறிந்து அற்புதமாகப் படிப்புச் சொல்லித் தந்த என் அன்புக்குரிய பெரியார். அவரது கையெழுத்தானது அச்செழுத்தைவிட அழகானது!

"இரண்டு சிறு கண்கள் தேவனைப் பார்க்க

இரண்டு சிறு கைகள் அவர் வேலை செய்ய

இரண்டு சிறு கால்கள் அவரிடம் செல்ல

ஒரு சிறு இருதயம் அவருக்குக் கொடுக்க..."

மிக அழகாகப் பாடி, ஆடி எமக்குப் பாடம் நடாத்திய அற்புதமான அசிரியர் அவர்! இன்றுவரையும் இப்படியானவொரு ஆசிரிய அம்மையாரை நான் பார்த்தது கிடையாது. அந்த ஆசிரியருக்கும் எனக்குமான உறவு "ஏகலைவன்" நாடகம் வரை என்னைத் தயாரித்து மேடையேற்றிப் பாராட்டுக் குவியும் வரை தொடர்ந்தது. அவரே என் குரு. வாழ்க அம்மையே!!!

இன்றோ...

உயிர்மெய் எழுத்துக்கு உதாரணம் கூறும் நமது தமிழ் ஆசிரியர்கள்(புலம் பெயர் நாடுகளில்) "உயிரும் மெய்யும் பிணையுங்கால் உயிர்மெய்மை பிறக்கிறது" என்று வேறு கொல்லுகிறார்கள். தொல்காப்பியத்தை கண்ணாற் கண்டார்களோ நான் அறியேன். நல்ல காலம் "அம்மையும் அப்பனும் பிணையுங்கால் அம்மையப்பன்" பிறக்கிறாறென்றபடி வகுப்பெடுக்கவில்லை!

இது அவல நிலை!

இன்று படித்துப் பட்டங்களை நாய்க்குச் சங்கிலி, கழுத்துப்பட்டி கட்டியமாதிரித் தமது பெயருடன் இணைத்துப் பந்தாகாட்டும்- குறியீட்டுப் பயம் காட்டும்" பண்டித வன்முறையாளர்கள்", மிக எளிதில் தமது "படிப்பு வெறும் மனனம் பண்ணிய படிப்புத்தாம், தொழில் முறைப் படிப்புத்தாம்" என நிரூபித்தே வருகிறார்கள்! புத்திஜீவி என்போர், தினமும், பொழுதும் கற்பவர்கள்-படிப்பவர்கள்! நம்மிடம் புத்திஜீவிகள் இல்லையென்றே சொல்லிவிடலாம். இதனால் தொழில் முறையாளர்கள் மருத்துவம், பொறியியல் கற்றவுடன் "தாமே தலைமுறை காக்கும்" புத்திஜீவிகளாகப் புலம்புகிறார்கள்.

இவர்களிடம் "வள்ளுவன்" படும்பாடோ பெரும்பாடாய்ப் போயிற்று!

என்ன செய்ய?

"கவியுள்ளங் கண்டும் கற் காரிவர்

பொருளறிந் துமுள் வாங்கார்

பொய்த்துப்போன பொருள் கூறிப்

புகுவார் அறிவு வாதத்துள்!"

தேனியிலொரு கட்டுரையைப் புலம் பெயர் தமிழரின் பெரும் புள்ளி- கல்வியாளர், பணக்காரர் என்ற பெயரெடுத்த

திரு.ஜெயதேவனின் சகோதரர் "டாக்டர்". நரேந்திரன் ராஜசிங்கம் அவர்கள் எழுதியிருக்கிறார்.

(கற்றதனால் ஆய பயன் "என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாரெனின்". கற்றறிந்த பெரியோரின் பாதங்களைத் தொழாதவன் கற்றதானால் எதுவித பயனுமில்லை என்கிறது குறள். இதில் வாலறிவன் என்ற சொல் தமிழாகும். இச் சம்பவம் நடந்த சில நாட்களின் பின்னரே எனது சகோதரரும், அவரது நண்பரும் சிறை வைக்கப்பட்டார்கள். அபிவிருத்தி அலுவல்களில் புலிகளுக்கு எந்தவித அக்கறையுமில்லை என்பதை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர்களது கவனம் பணம் கறக்குவதிலேயே இருந்தது. நான் அங்கு கண்ட மனிதர்கள் எந்தவித உணர்ச்சிகளுமற்ற றொபொட் போன்ற உருவங்களாகவும், கண்களில் இரக்க சுபாவமற்ற இறந்த மனித கண்களாகவும் பய உணர்ச்சியைத் தோற்றுவிப்பர்களாகவும் இருந்தனர். இதனால் ஓர் ஏமாற்றமடைந்த மனிதனாகவும், ஆத்திரம் கொண்ட மனநிலையிலும், தமிழர்களுக்காக கவலையடைந்த நிலையிலும் திரும்பினேன்.).

அவர் குறளுக்கு விளக்கிறார்: "கற்றறிந்த பெரியோரின் பாதங்களைத் தொழாதவன் கற்றதானால் எதுவித பயனுமில்லை என்கிறது குறள். " - அதாவது நரேந்தரரின் காலைத் தொழுதால் சரியாம்!:-)))))

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.- குறள்- பாயிரவியல், கடவுள் வாழ்த்து: 2

...ம்... குறளின் இரண்டாவது குறளே இக் கல்வியாளருக்குப் புரியவில்லைப் பின்னிவர் எதைக்கூறி, எவர் கேட்க?:- ((((((

"வாலறிவன்"

எட வள்ளுவா இப்படி நம்ம கல்விப் பெருந் தகைகளையே மண்கவ்வ வைக்கிறாயே!

"தூய அறிவு வடிவம்: இறைவன்!"

இறைவன் இயக்கமாய், நாதமாய்-ஒலியாய் இருப்பதென்று "அத்வைதம்" பகலும். நாதப் பிரமம்.

அதையே "அன்பே சிவம்" என்று சைவர்கள் சொல்கிறார்கள். அன்பு என்றாலென்ன? மனதிலெழும் ஒரு அலை-அதிர்வு! இரக்கம், காதல், மோகம்-பணிவு, இசைவு! இதன் பண்புநிலை மாற்றம் வேதியியல் முறையில் புரிய முடியாது! அதிர்வலையால் "இயங்கு" ஒலியாகப் பரிணாமிக்கிறது. இஃது தியானிப்பின் உச்சம். இறை வடிவம். "வாலறிவன்": இறைவன்.

"தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால்(ஒருவர்), அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?" இதுதாம் மேற்காணும் குறளின் பொருள்! யாரு சொல்கிறார்?

பரிமேலழகர்!

எனது முப்பாட்டர்களுக்கு இருந்த கல்வியாண்மை என் தந்தை-தாய்மாருக்கு இல்லாது போனதால் பிள்ளைகளாகிய எனக்கு- நமக்கு அவர்கள் வடித்து வைத்ததையே வாயாறப் பருக முடிவதில்லை! பொருளறிந்து, பொய்யகற்றிப் புகட்ட முடியவில்லை!

எங்கும் நுனிப் புல் மேய்தல்!!

இது நோய்க்கான அறிகுறி. எவரிடுவார் ஒளடதம்?

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்
20.05.2006