நீங்கள் சுட்டுவிரலை நீட்டி யார் யார் துரோகிகள் என வரையறுத்தீர்களோ வீராவேசப் பேச்சில் நரம்பு முறுக்கேற உணர்ச்சிப் பிழம்பாக்கி இரத்தத்திலகமிட்டு தம்பிகளை அண்ணன் அமிர் தளபதியாக விடுதலைக்களத்தில் முளைத்தெழுந்த ”களைகளை” துடைத்தெறிந்து விடுதலையை வென்று வாருங்கள் சிங்களவன் தோலைக் கொண்டு வாருங்கள் செருப்பாய் அணிகின்றேன் என்றெல்லாம் வெறியூட்டி ” ”ஓடையிலே என் சாம்பல் ஓடும்போதும் ஒண் தமிழே சலசலத்து ஓட வேண்டும்” ”பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்”  என கீதங்கள் பாடி அனுப்பி வைத்து எதைச் செய்யச் சொன்னீர்களோ தூண்டினீர்களோ அவற்றையே தான் அவர்கள் இன்றும் தொடர்கிறார்கள். அன்று உங்கள் ஆணையில் இருந்தார்கள். இன்று இல்லை.

உங்கள் சுட்டுவிரல் ஏவியது. ”உங்கள் பெடியள்” சுட்டுவிரல்கள் நீங்கள் காட்டிய திசையில் துப்பாக்கியை இயக்கியது. இயக்கி உங்கள் அரசியல் எதிரிகளை துடைத்தெறிந்தார்கள். இதுவே தான் ஆரம்பம் என்பது நீங்கள் புரியாததல்ல. அன்று சுடும் உத்தரவை ”பிறப்பிக்கும்” உங்கள் மேடைப் பேச்சுக்கள் உருவாக்கிய ”வளர்த்த கடாக்கள்” இன்று வேலி தாண்டி விட்டனவே என்ற ஆதங்கமா உங்களுக்கு. உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால் நீங்கள் ”வளர்த்த கடா உங்கள் மார்பில் பாய்ந்தது” மட்டுமல்லாமல் விடுதலை என்றும் தோட்டப்பயிரை துவம்சம் செய்து நிற்பதிலும் உங்களுக்கு பங்குண்டு என்பதும் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் அவற்றையெல்லாம் பேசிக் கொள்ளாமல் மூடி வைத்துவிட்டு மீண்டும் அரசியல் மேடைக்கு வரும் கரிசனை இப்போது தங்களுக்கு ஏற்பட்டது ஏனோ?

 

ஒருவேளை உங்களுக்கு அதே அரசியல் மேடை இன்றும் இருந்திருந்தால் உங்கள் கட்டளைக்கு அவர்கள் துப்பாக்கிகள் குறிபார்க்கும் நிலைமையும் இருந்திருந்தால் இன்று நடப்பவை யாவும் ” வெறும் களையெடுப்புகளாவும் விடுதலைப் பாதையில் முளைத்த தடைக்கற்கள் எனவும் உங்கள் பாசையில் துரோகிகளாகவும் நீங்கள் தளபதிகளாகவோ விடுதலை வீராங்கனையாகவோ வலம் வந்திருப்பீர்கள். நதியின் ஊற்று ஓடும் நதியை பார்த்து நீ எங்கிருந்து பிறப்பெடுத்தாய் என்று கேட்க முடியுமா?

 

தேசமும் ராஜேஸ் பாலாவும் மீண்டும் உங்களை தூசு தட்டி தூய்மையானவர்களாக ஏன் தூக்கி நிறுத்துகிறார்கள் ?

 

காலம் கடந்து ஞானம் பிறந்தது என்றெல்லாம் சொன்னால் தவறு. காலம் கனிந்திருக்கிறது அதனால் ”ஞானம்” பிறந்திருக்கிறது. அடுத்த பொங்கல் தமிழீழத்தில் தான் அணிதிரளுங்கள் என்றீர்கள். தேர்தலில் தமிழர் கூட்டணியின் வாக்கு வேட்டைக்கு ”வட்டுக்கோட்டைத் தீர்மானம்” வழிசமைத்தது. மக்களை விற்று பாராளுமன்றக்கதிரைகளை நிரப்பிய பின்னால் ” தமிழீழம் ” மாவட்டசபையானது. பொய்யும் புரட்டுமாக நீங்கள் நடத்திய சதிகளின் வரலாறு ”கூட்டணியை எதிர்த்தவர்களின் கொலைப்பட்டியலின் வரலாறன்றி வேறெந்த விதத்திலிருந்தது என்று கூறமுடியுமா?.

 

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உங்கள் கொள்கை முழக்கக் கூட்டங்களில் எல்லாம் நீங்கள் தயாரித்தளித்த துரோகிகள் பட்டியலில் ”இயற்கை மரணம் இவர்களுக்கு இல்லை என்றீர்கள்”. இவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று இளைஞர்களுக்கு ஆவேச அறைகூவல் விடுத்தீர்கள். அன்றைக்கு அந்தப் பட்டியலோடு ஆரம்பித்த அழித்தொழிப்பு தான் இன்று வரைக்குமான கலாச்சாரம். இன்றும் அவர்கள் அதே பட்டியலோடு தான் திரிகின்றார்கள்.

 

அல்பிரட் துரையப்பா – துரோகி – காக்கை வன்னியன்- நீங்கள் சொன்னீர்கள்
அவர்கள் கதையை முடித்தார்கள்.

 

குமாரசூரியர், ஆ.தியாகராசா, அருளம்பலம் வி. பொன்னம்பலம் என நீங்கள் வரிசைப்படுத்திய நபர்களை எல்லாம் துப்பாக்கி நபர்கள் துரத்தினர். ஒழித்தனர்.

 

அன்று மட்டும் இந்தக் கொலைகள் எல்லாம் உங்கள் இதயங்களுக்கு குளிர்ச்சியும் மகிழ்சியும் தந்த விடயங்கள். இவற்றையெல்லாம் நீங்கள் கண்டு கொண்டதுமில்லை. கண்டனங்கள் செய்ததும் இல்லை. பாலபாடம் நடத்தியது நீங்கள் அன்றி வேறு யார் ? அன்று ஆரம்பித்து வைத்த கொலைப் பள்ளிக்கூடம் இன்று பல்கலைக்கழகமாக விரிந்து பரந்திருக்கின்றது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தும் விட்டது. 

 

உங்களுக்கு இன்னும் மேடை இருக்கின்றது. பாடுங்கள். கவிஞர் காசி ஆனந்தன் இன்றும் அவர்களோடு தான் இருக்கின்றார். பாடுங்கள் ” பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்…...


ஏமாற தமிழ்மக்கள் இன்றும் இருக்கின்றார்கள் இன்னும் இருக்கின்றார்கள் உங்கள் அரசியலுக்கு இன்னும் விலை இருக்கின்றது. மேடைக்கு வாருங்கள்.  நீங்கள் வளர்த்தெடுத்த இனவெறித் தூபம் இன்னும் மடியவில்லை. எனவே வாருங்கள்.

தமிழ்மக்கள் "பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்படுகிறார்கள்" எனவே வாருங்கள்.

சிறி

17.06.08