05_2005.jpgபோலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு, வரியில்லா பட்ஜெட் என்ற மாய்மாலத்தோடு ப.சிதம்பரம் கொண்டு வந்துள்ள பட்ஜெட்டானது நாட்டை மீண்டும் காலனியாக்கும் சதியே என்பதை விளக்கி ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் வீச்சாக பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன. இது முற்போக்கு பட்ஜெட் அல்ல் மக்களுக்கு வெட்டப்பட்டுள்ள மரணக்குழி என்பதை விளக்கும் ""சிதம்பர இரகசியம்'' என்ற பிரசுரம் ஏறத்தாழ 25,000 பிரதிகள் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்புடன் விற்பனை செய்யப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் முழக்கத் தட்டிகள், துண்டுப் பிரசுரங்களுடன் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

 

மயிலாடுதுறை சின்னகடைத் தெருவில் 12.4.05 அன்று வி.வி.மு. பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து, இது உலக வங்கி கைக்கூலியின் பட்ஜெட்; மறைக்கப்படும் மறுகாலனியாதிக்கம் என்ற தலைப்பில் நடத்திய பொதுக்கூட்டமும், மையக் கலைக்குழுவின் புரட்சிகர நிகழ்ச்சியும் உழைக்கும் மக்களின் உற்சாகமான ஆதரவோடு நடந்தன. 17.4.05 அன்று ஓசூர் ராம் நகரில் பு.ஜ.தொ.மு. பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் சார்பில் சிதம்பர இரகசியத்தை அம்பலப்படுத்திய பொதுக் கூட்டமும் மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது. ""எந்தக் கட்சிக்காரனும் எங்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை; ஆனால் நீங்கள்தான் பட்ஜெட்டுக்கு பின்னே மறைந்துள்ள சதிகளையும் நரித்தனத்தையும் விளக்கிச் சொல்லியுள்ளீர்கள்'' என்று எல்லா இடங்களிலும் வரவேற்ற உழைக்கும் மக்கள் புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள முன்வந்துள்ளனர்.