ஐரோப்பா கண்டத்தின் பால்கன் பிராந்தியத்திலுள்ள சின்னஞ்சிறு நாடான செர்பியாவிலிருந்து, அதன் தெற்கு மாநிலமான கொசாவோ கடந்த பிப்ரவரி 17ஆம் நாளன்று தன்னைச் சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது. இதனை அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் வரவேற்று, கொசாவோ நாட்டை அங்கீகரித்துள்ளன. அதேநேரத்தில் ரஷ்யாவும் செர்பியாவும் கொசாவோவின் தனிநாடு பிரகடனத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அத்தனி நாட்டை அங்கீகரிக்க மறுத்துள்ளன. இதேபோல, சிங்கள இனவெறி பிடித்த இலங்கை பாசிச

 அரசும் கொசாவோ விடுதலைக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. சீனா, இந்தியா ஆகிய நாடுகள் கொசாவோவை அங்கீகரிக்கத் தயக்கம் காட்டுகின்றன. மறுபுறம், சில தமிழினவாதிகள் கொசாவோவின் விடுதலையையும், தனிநாடு பிரகடனத்தையும் வரவேற்று ஆதரிக்கின்றனர்.


செர்பியாவின் இனவெறி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி வந்த கொசாவோவின் விடுதலையைப் பாட்டாளி வர்க்கம் ஆதரிப்பதா, அதன் தனி நாடு பிரகடனத்தை வரவேற்பதா என்ற விவாதத்துக்குள் நுழையும் முன், கொசாவோ பற்றிய எதார்த்த நிலைமைகளை வரலாற்றுப் பின்னணிகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இரண்டாம் உலகப் போரின்போது பாசிச இட்லரின் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும் ஒன்றிணைந்து போராடி, அளப்பரிய தியாகத்துடன் நாட்டு விடுதலையைச் சாதித்து, புதிய முற்போக்கான அரசுகளை நிறுவினர். இவற்றில் செக்கோஸ்லாவாக்கியா நாடானது செக், ஸ்லாவாக் எனுமிரு தேசங்களைக் கொண்ட அரசாக இருந்தது. யூகோஸ்லாவிய நாடானது. செர்பியா, குரேஷியா, ஸ்லோவேனியா, மாசிடோனியா, மாண்டி நிக்ரோ, போஸ்னியா ஹெர்சகோவினா, கொசாவோ ஆகிய தேசிய இனங்களைக் கொண்ட நாடாக உருவானது.


1990களில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து, அமெரிக்க வல்லரசின் தலைமையிலான ஏகாதிபத்திய உலகின் சூழ்ச்சிகள் சதிகளால் பல தேசிய அரசுகளாகப் பிளவுபட்டுச் சிதைந்தது. அதன் தொடர்ச்சியாக செக்கோஸ்லாவாக்கியா நாடானது, செக், ஸ்லோவாக் எனுமிரு நாடுகளாக உடைந்தது. பல தேசிய இனங்களின் கூட்டரசாக உருவான யூகோஸ்லாவி யாவில் செர்பிய ஆதிக்கம் படிப்படியாக அதிகரித்ததாலும், பெயரளவிலான சோசலிச நாடுகள் கூட நீடிக்கக் கூடாது என்ற ஏகாதிபத்திய உலகின் சூழ்ச்சிகள் சதிகளுக்கேற்ப தேசிய இனவெறி தூண்டிவிடப்பட்டதாலும், ஐக்கியப்பட்ட அந்நாடு பல கூறுகளாகச் சிதைந்து இன்று உலக வரைபடத்தில் யூகோஸ்லாவியா என்ற நாடே காணாமல் போய்விட்டது.


1991ஆம் ஆண்டில் யூகோஸ்லாவியாவிலிருந்து ஸ்லோவேனியா மற்றும் குரேஷியா ஆகிய இரு தேசிய இனங்கள் பிரிந்து தனி அரசுகளாயின. 1992இல் போஸ்னியா ஹெர்சகோவினா பிரிந்தது. அதைத் தொடர்ந்து, 2007இல் மாண்டிநிக்ரோ தன்னைத் தனிநாடாக அறிவித்துக் கொண்டது. எஞ்சிய பகுதிகள் செர்பியா என்றழைக்கப்பட்டு வந்தது. தற்போது செர்பியாவிலிருந்து பிரிந்து, கொசாவோ தன்னைச் சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது.


பல தேசிய இனங்களின் ஐக்கியப்பட்ட ஒன்றியமாக யூகோஸ்லாவியா விளங்கிய காலத்திலேயே தமது மேலாதிக்கத்தைத் திணித்து வந்த செர்பியர்கள், இதர தேசிய இனங்கள் பிரிந்து செல்லத் தொடங்கியதும் அப்பட்டமான கிறித்துவ மதவெறியையும் செர்பிய பெருந்தேசிய இன வெறியையும் கட்டவிழ்த்து விட்டு சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீது போர் தொடுத்து ஒடுக்கினர். ""அகண்ட செர்பியா'' எனும் தேசிய இனவெறியோடு செர்பியர்கள் நடத்திய காட்டுமிராண்டிதனத்தால் யூகோஸ்லாவியா இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. செர்பியாவின் ஒரு மாகாணமாக இருந்த கொசாவோவில், செர்பிய இனவெறி ஒடுக்குமுறையை எதிர்த்து அம்மக்கள் ஆயுதமேந்திப் போராடி வந்தனர்.


கொசாவோவின் எல்லையிலுள்ள அல்பேனிய மக்களே கொசாவோவில் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் இனத்தால் அல்பேனியர்கள்; மதத்தால் இஸ்லாமியர்கள். எனவே, செர்பிய இனவெறி ஒடுக்குமுறையிலிருந்து மீள, அல்பேனிய நாட்டுடன் கொசாவோ மாகாணத்தை இணைக்கக் கோரி போராடி வந்தனர். பால்கன் பிராந்தியத்தில் காலூன்றி தனது மேலாதிக்கத்தை நிறுவத் துடித்துக் கொண்டிருந்த அமெரிக்க வல்லரசு, கொசாவோ மக்களின் போராட்டத்தை ஆதரித்து ஊக்குவித்தது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பாலஸ்தீனத்திலும் முஸ்லீம் மக்களை அன்றாடம் கொன்று குவித்து வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள், கொசாவோவில் அல்பேனிய இன முஸ்லீம்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தனர்.


கொசாவோ மக்களைக் காப்பது என்ற பெயரில் ஏகாதிபத்திய கூட்டமைப்பின் (நேட்டோ) படைகள் குவிக்கப்பட்டன. மனித உரிமைகளை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டி செர்பியா மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்திப் போர் தொடுத்தன. கொசாவோவிலிருந்து செர்பியப் படைகள் வெளியேற்றப்பட்டு, ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையான ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வை திணிக்கப்பட்டது. கொசாவோ விடுதலைப் படை, அமெரிக்க விசுவாசக் கூலிப் படையாகச் சீரழிக்கப்பட்டது. கொசாவோவில் அமெரிக்க இராணுவத் தளம் நிறுவப்பட்டது. அமெரிக்கஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் போர்த் தாக்குதலில் செர்பியா மீண்டெழ முடியாதபடி நிலைகுலைந்து போனது.


இதன் தொடர்ச்சியாகவே கொசாவோ விடுதலைப் படையின் தலைவரான ஆசிம்தாசி, கடந்த பிப்ரவரி 17ஆம் நாளன்று கொசாவோவின் தலைநகர் பிரிஸ்தினாவில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில், கொசாவோவைத் தனியொரு நாடாக பிரகடனப்படுத்தியுள்ளார். இதனை அமெரிக்காவும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி முதலான ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளும் அங்கீகரித்துள்ளன. அவற்றின் நோக்கம், கொசாவோ மக்களின் நியாயமான சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து ஆதரிப்பதல்ல; மாறாக, தமது மேலாதிக்கத்தை நிறுவுவதேயாகும்.


இதற்கேற்ப கொசாவோ நாடாளுமன்றத்துக்குப் பெயரளவுக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய விவகாரங்கள் அனைத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அவைதான் முடிவு செய்யும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 2000 பேர் கொண்ட படையை அனுப்பி கொசாவோவைப் "பாதுகாத்து கண்காணிக்கும்'. இதுதவிர, 16,000க்கும் மேற்பட்ட அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியப் படைகள் (நேட்டோ) கொசாவோவில் நிலைகொண்டு அந்நாட்டைப் "பாதுகாக்கும்!'


கொசாவோ தனிநாடாக அறிவிக்கப்பட்டதும், அம்மாகாணத்தின் வடபகுதியிலுள்ள செர்பிய இனத்தினர் இதனை ஏற்க மறுத்து, தாங்கள் செர்பியாவுடன் இணையப் போவதாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதனை ஆதரிக்கும் செர்பியாவுக்கு ரஷ்ய ஏகாதிபத்தியம் துணையாக நிற்கிறது. செர்பியா, தனது இழந்த மாகாணமாகிய கொசாவோவை மீட்கப் போர் தொடுக்க முனையும். அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் துணையோடு கொசாவோ தனது தனிநாடு நிலையைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடும். ஆக, மீண்டும் பால்கன் பிராந்தியத்தில் இரத்த ஆறு ஓடப் போவது நிச்சயமாகி விட்டது.


அல்பேனியாவுடன் இணைய வேண்டும் என்பதுதான் கொசாவோ மக்களின் விருப்பமாகவும் போராட்டமாகவும் இருந்தது. தனது மேலாதிக்க நோக்கங்களுக்கு இது ஏற்புடையதாக இல்லாததால், கொசாவோவை தனிநாடாக்கியுள்ளது அமெரிக்கா. மேலும் கொசாவோ மக்கள் இதுவரை பயன்படுத்தி வந்த கொடியைக்கூட ஐரோப்பிய ஒன்றியம் மாற்றியமைத்துள்ளது. ஆக, கொசாவோ ஒரு சுதந்திர நாடல்ல; அது ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்துக்கான களம்; அவற்றின் மேலாதிக்க ஆட்டத்துக்கான பகடைக்காய் என்பது தெளிவாகி விட்டது.


இருப்பினும், இது கொசாவோ தேசிய இனத்தின் விடுதலை என்று ""சமூகநீதித் தமிழ்த் தேசம்'' எனும் தமிழினவாத பத்திரிகை குதியாட்டம் போடுகிறது. ""எப்படியோ, செர்பியர்களின் கொடுமைகளிலிருந்து கொசாவோ முஸ்லீம்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என்பதே ஆறுதல்'' என்று இங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொசாவோ தனிநாடாகியுள்ளதை வரவேற்கிறார்கள். இப்படித்தான் அமெரிக்க ஏற்பாட்டின்படி, இந்தோனேஷியாவிலிருந்து கிழக்கு திமோர் தனிநாடாக "விடுதலை' அடைந்ததையும் இனவாதிகள் வரவேற்று ஆதரித்தனர்.


ஆனால், இவையெல்லாம் தேசிய இன விடுதலையோ, சுயநிர்ணய உரிமையோ அல்ல. மாறாக, இத்தகைய "சுதந்திரம்', "விடுதலை'களால் அமெரிக்கஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் சீவி சிங்காரிக்கப்பட்டு, வலுப்படுத்தப்பட்டுள்ளன; அவற்றின் மேலாதிக்கத்துக்கு உதவுபவையாக அமைந்துள்ளன. ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்தக் கூடிய, அதன் மேலாதிக்கத்துக்கு புறக்காவல் அரண்களாக அமைந்துள்ள இத்தகைய "விடுதலை'களை ஆதரிப்பதானது, தேசிய இன விடுதலைக்கே எதிரான ஏகாதிபத்திய கைக்கூலித்தனமாகும். தேசிய இனங்களின் உரிமையையும் ஜனநாயகத்தையும் மதிக்கும் சைவப்புலியாக ஏகாதிபத்தியம் மாறிவிட்டதாகக் காட்டி ஏய்க்கும் துரோகத்தனமாகும்.


மேலும் தனது பெருந்தேசிய இனவெறி நலன்களுக்கு எதிரானது என்பதாலேயே கொசாவோ விடுதலையை சிறீலங்கா அரசு எதிர்க்கிறது. சிங்கள இனவெறி பாசிச ஒடுக்குமுறையை எதிர்ப்பது என்ற பெயரால், கொசாவோவின் "விடுதலை'யை ஆதரிப்பது முற்போக்கானதாகி விட்டது.


பொன் விலங்கைப் பூட்டிக் கொண்டாலென்ன, எப்படியோ இரும்பு விலங்கு போனால் போதும் என்று நியாயவாதம் பேசி ஏகாதிபத்திய வலையில் சிக்கிக் கொள்வது தேசிய இன விடுதலையாகாது; ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்று போராடாமல், எந்தவொரு தேசிய இன விடுதலையையும் சாதிக்கவும் முடியாது. இந்த அரிய படிப்பினைகளை உலகிற்கு உணர்த்திவிட்டு, அமெரிக்கஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் கண்காணிப்புப் பிடியில் சிக்கித் தவிக்கிறது, கொசாவோவின் "தேசிய இன விடுதலை'!


· குமார்