உப்பினில் மீனினம்
உப்பியே காய்கின்ற
வெம்மணற் கரையோரம்..,
மரக்கலம் தனித் தனி
அலையுடன் மோதிய
வீரங்கள் பல பேசும் - ஆங்கே
பனையொடு தென்னையும்
தனித்தனி வளர்ந்ததில்
தனிமரத் தோப்பாகும் - அதில்
தனி நின்று அறுகின்ற
அடம்பன் கொடி சேர்ந்து - தம்
பலத்தினைப் பறைசாற்றும்.
தொன்மைகள் பேசியே
வன்முறை ஆள்கின்ற
நான்கின நாடுதனில்..,
சிங்களர் - தமிழரும்
மனிதத்தில் ஒருமித்த
கருத்தினிற் பொதுவாகி - நாம்
சுயத்துடன் வாழ்கின்ற
உரிமைக்குப் போரிடும்
மக்களாய் மலர்ந்திடவே - எம்
பொத்திய கரங்களால்
வானையே உடைக்கின்ற
வீரங்கள் விளைந்தோங்கும்.
'சேர்"களும் ஜீ.ஜீ.யும் தொடர்
செல்வா அமீரர் கோட்டை(ப்)
பிரிவினில் சதிராடி - அவர்
தொடர் கொடியெனத் தூக்கிய
தானைத் தளபதி தம்பியர்
தும்பியர் துப்பாக்கி வரையாக...
காசு பணம் நிலம்
சாதி குலம் மதம் - என்ற
விசங்கள் ஒளிந்திருக்கும் - இந்த
இனவாத மதவாத சதிகார
அரசியல் தினம் தினம்
மனிதச் சாவினில் சதிராட - இவர்
சிற்சிலர் சேர்ந்திவை - நின்
தாய்மொழி எனச் சொல்லி - அதில்
உந்தனை உப்பாக்கி - தம்
கொலைவெறி தீர்த்திட
உந்தனை அழைப்பவர் தாம்,
நின் தாய்மொழி என(ப்)
பேசிடும் குரல்களை
வெறிமொழி ஆக்கினர், ஏன்..?
இவர் தன்னிலை வெறிகளை
உந்தனில் நோகாமல்
ஏற்றிடும் ஊசிகளால்..,
இத்தனை ஆண்டாண்டாய் - எம்
மக்களைக் கொன்ற வரலாற்றில்
உண்டு களிக்கின்றார்.
இவர் தாம் ஆண்டபரம்பரை
எனச் சொல்லிடும் போதினில்..!
மீண்டும் மீண்டும் உனை
ஆண்டு சிறக்கின்றார் - இதில்
இந்தியின் இராமன் ஆண்டாலும்
இலங்கையின் இராவணன் ஆண்டாலும்
எம் மக்கள் அடிமையேதான்.
இந்நிலை உடைத்தே நாம்
பொது மக்கள் சபையினில்
நல் வாழ்வினைக் கண்டிடவே..,
மக்களை அழிக்கின்ற
ஆதிக்கப் பேய்களை - அதன்
அடிமைப் பூத சுலோகங்களை..,
அனைத்தின மக்களும்
அடம்பன் கொடி யொப்ப(த்)
திரண்டே பகையாட..,
பறந்தே பகை ஓடும்
பாறியே அவை வீழும் - எம்
பொத்திய கரங்களால்
பாசிசம் உடைத்திட
வாருங்கள் தோழர்களே..!
மக்கள் போராட்டத்தில்
சேருங்கள் தோழர்களே..!!
- மாணிக்கம்