தடுமாறும்  தமிழர்
தலைதூக்கும் அடுத்த 
தலைகள் -நாடு கடந்த
(கடந்து போன)  தமிழீழம் ......


கேட்பதற்கும் இனிமையோடு
பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும்
ஏதுவான வீர வசனங்கள்
மீண்டும் உசுப்பேற்ற ஏற்ற பேச்சுக்கள் ........

என்றவண்ணம் புதிதாக
வண்ணத்தொலைக்காட்சிகளில்
வலம் வரும் படித்த மனிதர்கள்
எதைப்பற்றி பேசுகிறார்கள் ........

ஏதாவது உங்களுக்கு
புரிந்து விளங்கிக்கொண்டீர்களா
எனக்கொன்றும் புரியவில்லை
எல்லாரும் என்னைப்போல் ............

குழம்பிபோய்
தலையைப் பிய்க்கிறார்கள்
நாட்டுக்குள்  இருந்த தமிழீழத்தை
தாரைவார்த்துவிட்டு இதுவென்ன.........

புதுசா ஒரு
நாடுகடந்த தமிழீழம்
இது புலம் பெயர் தமிழர்கள் 
அவர்களுக்காக எந்தத்தேசத்தில் .........

நாடுகிடக்கும் கிடையில்
ஊமை விசில் அடித்த கதைபோல
வருகிறார்கள் போகிறார்கள்
வட்டுக்கோட்டை என்கிறார் ...............

நாடுகடந்த தமிழீழம்
என்கிறார்கள் என்னொரு பகுதியார்
பாதிரியாரும் சொல்லுகிறார்
பாரியாரும் சொல்லுகிறார் .................

பாதிக்கப்பட்டவர்கள்
இன்னும் ஒன்றும் சொல்லவில்லை
போனவருஷம் கொடுத்த விலை
வாங்கியபருசுகள் அவர்கள் கைகளில் ............

இன்னும் பத்திரமாக
கிழிந்த வாழ்வோடு பீத்தலை
தைத்துக்கொள்ள ஊசியும் நூலும்
தேடிக்கொண்டிப்பதால் .................

இன்னும் அவர்கள்
இந்த புதிய வேடிக்கை
விளையாட்டு நிகழ்ச்சியில்
கலந்திட நேரம் போதாது.......

புலம் பெயர் தேசத்தில்
கொளுப்புச்சாப்பாடு மதுவென  
தாராளாமாக சாப்பிட்டால் 
ஏதாவது செய்யத்தானே வேண்டும்........

பஞ்சத்திலும் பசியிலும் 
பட்டினிச்சாவிலும் வாழ்பவர்கள்
களத்தில் என்ன எண்ணுகிறார்கள் 
இவர்களுக்கு ஏதும் தெரியாது.................

பத்து இலட்சம் தமிழர்கள் 
இலட்சியத்துடன் புலத்தில் 
மூன்று இலட்சம் தமிழரை 
தாங்கமுடியலையே என்ற ............. 

கேள்விகலந்த வருத்தத்தோடு
களத்தில் தமிழர்கள் தவிக்கிறார்கள்
தேர்தல்  வட்டுக்கோட்டைக்கும் அடுத்த
தமிழீழத் தேர்தலுக்கும்  செலவாகும்  காசு  ................

பசித்தவர் பசியாற
பயன்படலையே பலர்கேட்கிறார்
நியாயங்கள் இருப்பதை நானும் 
உணர்ந்து கொள்ளுகிறேன் ...................

தமிழனின் ஆதிக்கம் 
தலை சரிந்து போனதால் 
கூடிவாழ  ஆசைப்பட்டே 
கூட்டமைப்பை தேர்ந்தெடுத்தார் ..........

இனிமேலும் இனிமேலும்
இருப்பதை விட்டுவிட்டு
பறப்பதற்கு தயாரில்லை
வடகிழக்கு தமிழர்கள் பேச்சு.............

உணர்வுள்ள தமிழன்
உண்மையிலே இருக்கிறீரா
உலகறிய சொல்லுகிறேன்
ஊருக்கு வாறீரா  உருப்படியாசெய்ய....