நச்சுப் பொருட்களின் கிடங்கு உப்புக் கழிவு:

2003 – செப்டம்பரில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் குஜராத் மாநிலம் மித்னாபூர் சோடா உப்பு ஆலையில் கழிவு நீர்க் கசிவு ஒன்று ஏற்பட்டது. கட்ச் வளைகுடாவில் உள்ள தேசியக் கடற்பூங்காவில் 150 ஏக்கருக்கு மேலான கடற்பகுதிக்கு அது பரவியது. மாந்தோப்புகள், பவளப்பாறைகள், களிமண் வாழ் உயிரினங்கள், திமிங்கலம், சுறா போன்றவைகளைக் கொண்ட மிகவும் பல்வகை உயிரினங்களுக்காக இந்தக் கடற்பூங்கா அமைந்துள்ளது. இங்கு டாடா கெமிக்கல்ஸ் ஆலையின் கழிவுகளால் படிந்த திடப் பொருட்கள் காரணமாக 10 கிலோமீட்டர் தூரத்துக்கு கடல் வாழினங்கள் பாதுகாக்கப்படும் பகுதி மாசுபட்டும் சீரழிந்தும் போவிட்டதென்று தேசியக் கடலியல் ஆய்வு நிறுவனம் கூறுகிறது. மித்னாபூர் பகுதியில் உள்ள டாடா கெமிக்கல்சின் உப்பளங்கள் அங்குள்ள நிலத்தடி நீரைப் பெருமளவு உப்பு நீராக்கிவிட்டன. டாடா கம்பெனியின் உப்புக் கழிவு நீரைக் கொட்டி வைக்கும் திறந்தவெளிக் கிடங்குகளுக்காக பல கிராமங்கள் விவசாய நிலங்களை இழந்துவிட் டிருக்கின்றன.

 

 

ஜூக்சாலை-கழிவுப் பொருட்களின் மலைகள்:

ஜாம்சேத்பூர் மாநகரில் உள்ள ஜூக்சாலைப் பகுதியின் மையத்தின் திறந்தவெளியில் ஆயிரக்கணக்கான டன்கள் கொதிகலன் சாம்பலைக் கொட்டி மலை மலையாகக் குவித்திருக்கிறது, டாடா எஃகு ஆலை. கோடை காலத்தில் அச்சாம்பல் மலைகளில் இருந்து பறந்துவரும் கனரக உலோகத் துகள்கள் நிரம்பிய காற்று சாலைகளில் வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்கு பார்வையைப் பதிப்பதோடு, சுவாச நோய்களையும் பரப்புகின்றது. டாடா எஃகு நிறுவன ஒப்புதல்படியே அப்பகுதி நிலத்தடி நீர் மாசுபட்டு, அனுமதிக்கப்படும் அளவைவிட மிகையாகக் கடினநீராகி, திடப்பொருட்களின் கரைசல் நிரம்பியதாக உள்ளது.

ஜோடா சுரங்கங்கள்:

டாடா, பிர்லா, மற்றும் ஜிண்டால் போன்ற குழுமங்களின் இரும்புக் கனிமச் சுரங்கங்கள் அமைந்துள்ள ஜோடா நகரம் 1950-களில் கனிமவளம் கொழிக்கும் நகராக விளங்கி, பல கூட்டுப்பங்கு நிறுவனங்களின் செல்வவளங்களைப் பெருக்கியது; ஆனால், அதனால் அந்த நகரம் ஒரு பயனும் பெறவில்லை. பத்திரிக்கையாளர் தரும் விவரப்படி, ஜோடா நகரமும் அதற்குச் செல்லும் சாலையும் ஒரு பெரிய பாதாளக் குழியாக உள்ளது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக கனிமச் சுமையேற்றிய லாரிகள், இரவுபகலாக 24 மணிநேரமும் நடக்கும் சுரங்கம் வெட்டுதல் ஆகியவை காரணமாக உள்ளூர்வாசிகள், தொழிலாளர்கள், பயணிகள் சுவாசிக்க நல்ல காற்றே கிடையாது. மிக மோசமாகத் தூசு கிளப்பும் இந்தச் சுரங்கங்கள் யானைகளும் புலிகளும் புகலிடமாகக் கொண்டுள்ள சித்தமாதா ரிசர்வ் காடுகளின் எல்லையில் அமைந்துள்ளன என்பது வியப்புக்குரிய ஒன்றாகும்.

கரிக்குழம்புகளின் குவியல்:

டாடா குழுமத்தின் கோர முகம்மேற்கு பொக்காரோவில் டாடா எஃகு நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. பொக்காரோவில் உள்ள நிலக்கரி கழுவுமிடத்திலிருந்து நிலக்கரி தூசுகள் நிறைந்த கரிக் குழம்புகள் பொக்காரோ ஆற்றுக்குள் கொட்டப்படுகிறது; இதனால் ஆற்றுப்படுகை முழுவதும் நிலக்கரி சாம்பல் படிந்து ஆறே நாசமடையச் செய்து அழிக்கப்பட்டு விட்டது. ஆற்றில் இருந்து பெருமளவு தண்ணீர் உறிஞ்சப்பட்டு, நிலக்கரி தூசுக் குழம்பும் கழிவும் கொட்டப்படுகிறது.

பேராபத்து விளைவித்த நிகழ்வுகள் - நிறுவனர் நாள் தீ:

1989 மார்ச் மூன்றாம் நாள், டாடா குழுமத்தின் நிறுவனர் நாள் விழாக் கொண்டாட்டம் நடந்தது. அப்போது பிரபலங்களின் இருக்கைப் பகுதியில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டு விட்டது. அலட்சியம் காரணமாக ஏற்பட்ட இத்தீவிபத்தில் 60 குழந்தைகள் மாண்டு போயினர்; 111 பேர் படுகாயமுற்றனர்; மோசமான ஏற்பாடுகள் காரணமாக உரிய நேரத்தில் விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் போச் சேர முடியாமல் போனது. தீ விபத்து சம்பவத்தை மூடி மறைப்பதற்காக, படுகாயமுற்று- தீக்காயத்தில் செத்துக் கொண்டிருந்தவர்களுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதை டாடாக்கள் மறுத்துவிட்டதால் பிரச்சினை மேலும் கடுமையாகியது. டாடா எஃகு நிறுவனம்தான் விபத்துக்கு முழுப்பொறுப்பாகும் என்று ஆலைகளுக்கான ஆய்வகம் அறிக்கை அளித்துள்ளது. ஆனால், இத்துயரச் சம்பவம் நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகியும் பலியானவர்களின் உறவினர்களுக்கோ, படுகாயமுற்றவர்களுக்கோ டாடா நிறுவனம் இன்னமும் நட்டஈடு வழங்கவில்லை. டாடா இரும்பு எஃகு நிறுவனம் ஆலை விபத்துகளுக்குக் கொடுத்து வந்த நட்டஈடுகளை சுட்டிக் காட்டி, அதே அளவு நீதிமன்ற நடுவரிடம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் பிறப்பித்த ஆணையைக் கூட டாடா நிறுவனம் மதிக்காது மறுத்து வருகிறது.

டாடா குழுமத்தின் தொழிலாளர் விரோத முன்னுதாரணங்கள்

1920-கள் மற்றும் 1930-களில், டாடா இரும்பு எஃகு கம்பெனியின் ஐரோப்பிய பார்சி நிர்வாகத்துக்கு எதிராகப் பழங்குடித் தொழிலாளர்கள் போர்க்கோலம் பூண்டு பலமுறை போராடியிருக்கிறார்கள். வேலை நிலைமைகள், சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமை ஆகியன அவர்கள் ஒன்று திரண்டு போராடுவதற்கான முக்கியமான மையப் பிரச்சினைகளாக இருந்தன. ஆனால், பல ஆண்டுகளாக, தொழிற்சங்கங்களை உடைப்பதற்கு அடிக்கடி வன்முறை வழிகளில் ஈடுபடுவதில் டாடா கம்பெனி பெயர்பெற்றதாக விளங்கியது.

தொழிலாளர் தற்கொலைகள்:

1991-இல் ரத்தன் டாடா தலைமைப் பொறுப்பேற்றபிறகு ஆட்குறைப்பு மற்றும் நெறிப்படுத்துவதை மூர்க்கமாக டாடா குழுமம் மேற்கொண்டது. 2003-ஆம் ஆண்டு, டாடா ஹைட்ரோ கம்பெனிகள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே மண்ணெண்ணெ ஊற்றிக் கொண்டு டாடா நிறுவனத்தின் தலைமையகத்தின் முன்பு தீக்குளித்தார்கள். டாடா மின்சக்தி கம்பெனியிலிருந்து சட்டவிரோதமாக ஒப்பந்தத் தெழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத்தான் அவ்விரு தொழிலாளர்களும் தீக்குளித்து மாண்டனர்.

1980-களில் வீட்டுமனை நிலங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தன; மும்பையின் முதன்மை வீட்டுமனை இடங்களில் இருந்த துணி ஆலைகள் அப்போது நலிவடைந்திருந்தன. துணி ஆலைகளைத் தேவைக்கேற்ப புதுப்பிக்கவும் நவீனப்படுத்தவும் ஆலை நிர்வாகங்கள் தவறிவிட்டன. செல்வம் கொழிக்கும் வீட்டுமனை பேரங்கள் ஆலைகளை மூடி பெரும் பணம் பார்க்க உதவும் என்று நம்பிய ஆலை நிர்வாகங்கள், ஆலைகளை இடித்துத் தள்ளுவது என்று முடிவு செய்தார்கள். மும்பையில் இருந்த மிகப் பழமை வாய்ந்த துணி ஆலைகளில் ஒன்றான சுதேசி ஆலையை நடத்திவந்த டாடாக்கள், தமது சொந்த நிலத்தில் நான்கில் ஒரு பகுதியை விற்பதற்கான அனுமதியை ஏற்கெனவே பெற்றிருந்தது; அதற்கு டாடாக்கள் சொல்லியிருந்த காரணம், தமது ஆலையில் ஆட்குறைப்பால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஒரு பொதுத்துறை ஆலை, ஒரு பொழுதுபோக்கு மையம், ஒரு பொதுமக்களுக்கான வீட்டுவசதித் திட்டம் ஆகியவற்றுக்குப் பாதிக்கும் மேலாக நிலம் அளிக்கப்படும் என்பதுதான். ஆனால், அந்த நிலம் விற்கப்பட்டபோது இவையெதுவும் நடக்கவில்லை. விற்கப்பட்ட நிலமும் குறைமதிப்பீடு செய்து விற்கப்பட்டு, ஆலையைப் புனரமைப்பு செய்வதற்காக அல்லது தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கென்றிருந்த நிதி டாடாக்களின் வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுவிட்டதென்று தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினார்கள். 2000-ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டு, 28000 ஆலைத் தொழிலாளர்கள் அகதிகளாக வீசப்பட்ட போது, சுதேசி ஆலையின் ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளர் முறை ஒப்பந்தம் – வேலைப் பாதுகாப்பின்மையைப் புகுத்துதல்:

செலவுகளைக் குறைக்கும் ஒரு முயற்சியாக, ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பெருமளவு வேலைக்கு அமர்த்தும் காரியத்தில் டாடாக்கள் ஈடுபட்டார்கள் என்று அக்கம்பெனியின் உயர்நிலை அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளார்கள். ஒப்பந்தத் தொழிலாளர் மற்றும் நிரந்தரமாக்கும் சட்டத்திற்கு முரணாக, பயிற்சி பெற்ற நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலைகளையும் மற்றும் நிரந்தர நீண்டகால வேலைகளையும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்யக்கூடாதவை என்று தடைவிதிக்கப்பட்ட பணிகளையும் கூடச் செய்யும்படி ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தினர். தனது நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையே டாடா கம்பெனி பாராபட்சம் காட்டுவதாகத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஜாம்சேத்பூர் டாடா எஃகுக் கம்பெனியின் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களை விடக் கூடுதல் தரமுடைய உணவைப் பெறுகிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்யும் வேலை, கம்பெனியின் நிரந்தரத் தொழிலாளர்களுடையதைவிட தன்மையில் மாறுபாடானது அல்லவெனினும், சம்பள வித்தியாசம் பெருமளவு வேறுபாடானது. கடினமான வேலைகளை நீண்டநேரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் செய்கிறார்கள். திறமைக் குறைவு மற்றும் வேலைநிர்பந்தங்கள் காரணமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூடுதலான விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

கதவடைப்பு:

தொழிற்பாதுகாப்பு தருபவர்கள் என்ற டாடாக்கள் பெற்றிருக்கும் “நல்ல” பெயருக்கு மாறாக, டாடா குழுமத்தின் கார்ப்போரேட் நிறுவனம் பெரிய அளவுக்கு ஆட்குறைப்பில் ஈடுபடுகிறது. இதற்கு முதன்மை நிறுவனமான டாடா எஃகு ஆலை எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1994-இல் டாடாக்களின் நிறுவனங்களில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 78,000 ஆக இருந்தது. அதுவே, 1997-இல் 65,000 ஆகக் குறைக்கப்பட்டது. 2002-க்குள் மேலும் 15,000 வேலைகள் ஒழித்துக் கட்டப்பட்டன. 2006-ஆம் ஆண்டில் டாடா நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் தொகை 38,000 ஆனது; அதாவது தாராளமயமாக்கம் தொடங்கிய போதிருந்ததில் பாதியளவுக்குச் சற்று மேலாகும். வேலை இழந்தவர்களில் (40,000 பேர்களில்) 25,000 பேர் விருப்பு அடிப்படையில் விலகி அதற்குரிய ஈட்டுத்தொகை பெற்றார்கள். இருப்பினும், அனைவரும் தாமே முன்வந்து விலகும் திட்டத்தின் கீழ் விலகியவர்கள் அல்ல என்று பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். திடகாத்திரமான தொழிலாளர்கள் கூட கடும் உணர்வு நிலை அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வேலையிழந்தார்கள். விருப்பு விலகல் முறையை ஏற்கவில்லையானால், சாலைகளைப் பெருக்கும்படி ஆசிரியர்கள் கூட நிர்பந்திக்கப்பட்டார்கள் என்று செய்திகள் குற்றஞ்சாட்டுகின்றன.

தொழிற்சங்கங்களை உடைப்பது:

1989-இல், பூனேயில் உள்ள டாடாவின் டெல்கோ ஆலையில் உள்ள டெல்கோ தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்தார்கள். போட்டித் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு கொடுத்தும், தொழிலாளர் அமைதியின்மை நீடித்ததால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று போராடும் தொழிலாளர்களை மிரட்டியும் வேலை நிறுத்தத்தை உடைப்பதற்கு, டாடா நிர்வாகம் முயன்றது. 1989, செப்டம்பரில் 3000 தொழிலாளர்கள் காலவரையறையற்ற உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் மயங்கி விழுந்ததோடு சமரசத்துக்கான அறிகுறியே இல்லாமல் வேலை நிறுத்தம் முன்னேறியபோது, டாடாக்கள் மற்றும் பிற முதலாளிகளின் கடுமையான நிர்பந்தத்துக்கு மாநில அரசாங்கம் ஆளானது. செப்டம்பர் 29 அன்று இரவு, இருள் சூழ்ந்ததைப் பயன்படுத்திக் கொண்டு மாநில ரிசர்வ் மற்றும் பூனே நகரப் போலீசார் “தகர்ப்பு நடவடிக்கை”யைத் தொடங்கினர். உண்ணா நோன்பிருந்த தொழிலாளர்களை வளைத்துக் கைது செய்வதற்காக 80 பேருந்துகள் கொண்டு வரப்பட்டன. போலீசின் உதவியோடு வேலைநிறுத்தத்தை டாடாக்கள் உடைத்தனர்.

படுகொலைகள்:

குறைந்தது இரண்டு தொழிலாளர் முன்னணியாளர்கள் கடந்த காலத்தில் கொல்லப்பட்டனர். அப்துல் பாரி மற்றும் வி.ஜி. கோபால் ஆகிய இருவரும் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தைக்குச் சென்றபோது போட்டி தொழிற்சங்கத்துக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்விரு சம்பவங்களிலும் டாடா நிர்வாகம் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக டாடா தொழிலாளர்களும் சுயேச்சையான பார்வையாளர்களும் குற்றஞ்சாட்டினர்.

டாடாவுக்கு டாடா:

நாட்டின் பல்வேறு இடங்களிலும் வர்த்தக நிறுவனங்கள் அமைப்பதற்கு டாடா கம்பெனி முயற்சித்தபோது, உள்ளூர் மக்கள் அம்முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தனர் என்ற உண்மையிலிருந்து டாடாவுக்குள்ள அவப்பெயர் தானே விளங்கும். இதற்கு மே.வங்கம் சிங்கூரில் நடந்த போராட்டமும், ஒரிசா கலிங்கா நகரில் நடந்துவரும் போராட்டமும் சமீபத்திய பிரபலமான இரு எடுத்துக்காட்டுகள். ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரிசா பழங்குடி மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக இராயகடா மாவட்டத்தில் உள்ள புனித பாஃபிளி மாலி மலைகளில் பாக்சைடு கனிமச் சுரங்கம் அமைக்கும் முனைப்பைக் கைவிடும்படி டாடாக்கள் தள்ளப்பட்டார்கள். 2000-ஆம் ஆண்டு அந்த சுரங்கம் அமையவிருந்த பகுதியில் ஒரு அமைதியான ஆர்ப்பாட்டம் நடந்தபோது மூன்று பழங்குடி இளைஞர்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2000-ஆம் ஆண்டு, ஒரிசாவில், கோபால்பூர்-கடல் என்ற கடற்கரை நகரில் ஒரு எஃகு ஆலையை அமைக்கும் முயற்சியில் டாடாக்கள் ஈடுபட்டனர். அந்த ஆலையை நிறுவுவதற்கு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் 20,000 பேருக்கு மேல் திரண்டு நடத்திய மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது. இந்த ஆலைத்திட்டமும் கூட மக்கள் இரத்தம் சிந்திப் போராடிய பிறகுதான் முடிவுக்கு வந்தது. 1997 ஆகஸ்டில் சிந்திகோவன் நகரில் நடந்த டாடா எதிர்ப்புப் பேரணிக்கு எதிராக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது, சிதறி ஓடிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.

ஒரிசாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள சர்வதேசப் புகழ் பெற்ற சில்கா கடல்நீர் ஏரியின் பெரும் பகுதியை மீன்பண்ணை அமைப்பதற்கு டாடாக்கள் வளைத்துப் போட முயன்றனர். அதற்கு எதிராக 1990-களின் பிற்பகுதியில், சில்கா ஏரியைத் தமது வாழ்வாதாரத்துக்காகச் சார்ந்துள்ள 1,20,000 மீனவர்கள் கடுமையாகப் போராடிய பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.

டாடாக்களின் தரகு வரலாறு போதை மருந்து கடத்தல்:

1850-களில் இருந்து அந்நூற்றாண்டின் இறுதிவரை சீனாவிற்கு “ஓபியம்” என்ற கஞ்சா போதை மருந்து ஏற்றுமதி செய்வதில் டாடா குடும்பம் ஈடுபட்டிருந்தது; இதை ஜாம்சேத்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவின் புகழ்பாடும் ஆவணங்கள் பதிவு செய்யாமல் போவிட்டன. ஓபியம் இந்தியாவில் விளைவிக்கப்பட்டு, ஆங்கிலேயக் காலனியவாதிகளுக்காக டாடா போன்ற தரகர்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். (சீன மக்களை ஓபியம் போதைப் பழக்கத்தில் மூழ்கடித்து அடிமைப்படுத்திக் காலனியாக்கிக் கொள்ள ஆங்கிலேயர்கள் எத்தணித்தபோது அதற்கு எதிராக சீன மக்கள் நடத்தியதுதான் பிரபலமான ஓபியம் போர். ஓபியம் கடத்திக் குவித்த மூலதனத்தைக் கொண்டுதான் துணி ஆலைகளையும் இரும்பு-எஃகு ஆலையையும் டாடா குடும்பம் நிறுவியது – மொ-ர்)

எம்ப்ரஸ் (பேரரசி):

1877, ஜனவரி முதல் நாளில், பருத்தி விளையும் மத்திய இந்தியாவில் ஒரு பருத்தி துணி ஆலையை நிறுவியதுதான் டாடாவின் முதல் ஆலை முனைப்பு ஆகும். அந்த நாள்தான் விக்டோரியா மகாராணியை இந்தியாவின் பேரரசியாகப் பிரகடனம் செய்த நாள்; அதைக் கொண்டாடும் முகமாக துணி ஆலைக்கு பேரரசி ஆலை என்று டாடா கம்பெனி பெயர் சூட்டியது.

பிரிட்டானிய விரிவாக்கத்துக்குத்  தூபம் போடும் வேலை:

முதல் உலகப் போரின்போது வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிரிட்டனின் போர் முன்னெடுப்புகளுக்கு முக்கியத் தேவையாக ஆங்கிலேயப் பேரரசுக்கு ரயில் தண்டவாளங்கள் சப்ளை செய்யும் வேலைக்காக 1906-ஆம் ஆண்டு ஜாம்சேத்பூரில் டாடா இரும்பு எஃகு கம்பெனி தொடங்கப்பட்டது. இந்தியாவில் வைசிராயாக இருந்த செம்ஸ்போர்டு பிரபு, போர் முடிந்த பிறகு சொன்னார், “மெசபடோமியா (ஈராக்) மட்டுமல்ல; எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவுக்குக்கூட டாடா கம்பெனி எஃகுத் தண்டவாளங்கள் கொடுத்துதவ முடியாமல் போயிருந்தால், நாங்கள் என்ன செய்திருப்போம் என்று கற்பனை கூடச் செய்ய முடியவில்லை.”

பிரிட்டானியப் படைக்கு டாடா சப்ளை:

1865-இல் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றது; அது அமெரிக்காவின் தென்மாநிலங்களில் இருந்து இங்கிலாந்தின் துணி ஆலைகளுக்கான பருத்தியை சப்ளை செய்வதற்கு வழிவிட்டது; அந்த ஆலைகளில் இருந்து இந்தியாவுக்கு நூலை அனுப்ப முடிந்தது. இருப்பினும் பல ஆலைகள் இன்னமும் மீள முடியாத நிலையில், 1868-இல் அபிசீனியா (இப்போதைய எத்தியோப்பியா)வில் மக்டாலாப் போரை நடத்திக் கொண்டிருந்த ஆங்கிலேயப் படைக்கு உடை, உணவு சப்ளை செய்யும்-லாபம் கொழிக்கும் ஒப்பந்தங்களைப் பெற்று டாடா குடும்பம் மட்டும் வெற்றிகரமாக தொழில்புரிய முடிந்தது.

(முற்றும்)
(போபாலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சர்வதேசப் பிரச்சாரம் என்ற இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்.)

_____________________