மத்திய அமெரிக்காவின் வறுமைமிக்க ஹெய்தி நாட்டில், கடந்த ஜனவரியில் தலைநகரில் ஏற்பட்ட நிலநடுக்கப் பேரழிவுக்குப் பின்னர் ஏறத்தாழ 8 லட்சம் மக்கள் கிராமப்புறங்களில் அகதிகளாகக் குவிந்தனர். அவர்களுக்கு உணவளிக்க விதைச் சோளத்தை எடுத்துப் பயன்படுத்தியதால், கிராம மக்களிடம் சோள விதை பற்றாக்குறை ஏற்பட்டது. அவலத்தில் சிக்கியுள்ள ஹெதி நாட்டுக்கு உதவுவது என்ற பெயரில், கொலைகார மான்சாண்டோ நிறுவனம் தனது விதைகளைக் கொண்டு இப்போது ஆதிக்கம் செய்யக் கிளம்பியுள்ளது.

கடந்த மே மாதத்தில் ஹெதி நாட்டுக்கு முதல் தவணையாக 60 டன் விதைகளைக் கொடுத்த மான்சாண்டோ நிறுவனம், இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் 400 டன் விதைகளைக் கொண்டுவந்து கொட்டப்போகிறது. அமெரிக்காவின் அனைத்துலக வளர்ச்சி முகமை (க்குஅஐஈ) மூலமாகத் தீவிர விவசாய சாகுபடி என்ற பெயரில் இவை வந்திறங்கப் போகின்றன. மான்சாண்டோவின் மரபணு மாற்றப்பட்ட சோள விதைகள் இவற்றில் கலந்துள்ளன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஹெய்தி - 10000 கூலி மற்றும் சிறு விவசாயிகளின் எழுச்சிமிக்க போராட்டம்

ஹெய்தி - மான்சாண்டோவுக்கு எதிராக ஆயிரிக்கணக்கானோர் பங்குபெற்ற எழுச்சிமிக்க போராட்டம்

மான்சாண்டோ அளிக்கும் வீரியரக சோளம், தக்காளி விதைகள் கொடிய இரசாயனப் பொருட்களால் பாடம் செய்யப்பட்டவை. அவற்றைப் பயன்படுத்தும் விவசாயத் தொழிலாளர்கள் உரிய பாதுகாப்புக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அரசே உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இத்தகைய அபாயங்களைப் பற்றி அறிவிக்காமலேயே மான்சாண்டோவின் விதைகள் ஹெதியில் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன.

விவசாயிகள் தமது அனுபவ அறிவால் பாரம்பரியமாகச் சேகரித்துப் பயிரிட்டு வந்த சோள விதைகளை ஒழித்து, அதனிடத்தில் தனது விதைகளைத் திணித்து ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதே அமெரிக்க மான்சாண்டோ நிறுவனத்தின் நோக்கம்.

இதை உணர்ந்துள்ள ஹெய்தி நாட்டின் விவசாயிகள், கடந்த ஜூன் 4-ஆம் தேதியன்று பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்களை அணிதிரட்டி மான்சாண்டோ நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தினர்.

மான்சாண்டோ விதைகளை எரித்து, “பாரம்பரிய சோள விதைகளைக் காப்போம்! மான்சாண்டோவை விரட்டுவோம்!” என்ற முழக்கங்ககளுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், அமெரிக்கக் கண்டம் எங்கும் மான்சாண்டோவின் கோரமுகத்தைத் திரைகிழித்துக் காட்டியுள்ளது.

________________________________

- புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
______________________________