தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டுக்கான முன்னாள் பொறுப்பாளரும் தற்போது சிங்கள இனவெறி அரசின் தடுப்புக் காவலில் உள்ளவருமான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், கொழும்பு நகரிலிருந்து வெளிவரும் “டெய்லி மிரர்” நாளேட்டுக்கு அண்மையில் அளித்துள்ள நேர்காணலில், இறுதிக் கட்ட ஈழப் போரின் போது இந்தியா போர் நிறுத்தத்துக்கு முயன்றதாகவும், அதனை வைகோவும் நெடுமாறனும் சீர்குலைத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்குப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் மூலமாக தான் முயற்சி செய்ததாகவும், இதற்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியும் கிறித்துவப் பாதிரியான ஜெகத் கஸ்பாரும் உதவியதாகவும், அவர்கள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இது குறித்துப் பேசி ஒரு திட்டம் தயாரித்ததாகவும், இதை ஏற்கக் கூடாது என்று புலிகளிடம் வலியுறுத்தி வைகோவும் நெடுமாறனும் இதற்குத் தடையாக இருந்ததால்தான் போர் நிறுத்தம் வராமல் போனது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குமரன்-பத்மநாபன்-ஜெகத்-கஸ்பர்

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் அது தி.மு.க. மற்றும் காங்கிரசு கட்சிகளுக்கு நல்ல பெயராகி தேர்தலில் சாதகமான நிலையைத் தோற்றுவித்துவிடும் என்று கருதி புலிகளின் முடிவை வைகோ மாற்றியதாகவும், தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையும் போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலையை எடுக்க முடியும் என்று வைகோ புலிகளிடம் கூறியதாகவும் கே.பி. குறிப்பிடுகிறார்.

பாதிரியார் ஜெகத் கஸ்பாரும் 2009 ஜனவரி இறுதியில் இந்திய அரசு போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டது உண்மைதான் என்கிறார். இந்திய அரசின் சார்பில், புலிகளின் தலைவரான பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய – பிரபாகரனின் சார்பில் பேசும் தகுதியுடைய நடேசனோடு தொடர்பு கோரப்பட்டதாகவும், ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான விருப்பம் (Intention to Lay Down Arms) மட்டுமே அப்போது விதிக்கப்பட்ட நிபந்தனை என்றும் அவர் கூறுகிறார். இதை புலித் தலைமையிடம் தெரிவித்த கஸ்பாரிடமே, நீங்களே ஒரு மாதிரி வரைவு (draft) தயாரித்து டில்லிக்காரர்களுக்குச் சம்மதமா என்று கேட்டுச் சொல்லுமாறு புலித் தலைமை கூறியதாம். அதன்படி ப.சிதம்பரத்தின் ஏற்பாட்டின்படி கஸ்பார் ஒரு வரைவு தயாரித்தாராம். இந்த வரைவினை இருதரப்பும் ஏற்றுக் கொண்ட பிறகு, புது டில்லி உயர் அதிகாரி ஒருவரோடு நடேசன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினாராம். பின்னர் அது முறிந்துவிட்டதாம். போர் நிறுத்தத்திற்கான அந்த வாய்ப்பு ஏன் தவறவிடப்பட்டது என்ற காரணத்தை நடேசன் சொல்லவில்லை என்கிறார் கஸ்பார்.

ஆனால், முள்ளிவாய்க்கால் முடிவுற்ற பிறகு, களத்தில் நின்ற பலருடன் விவாதித்த போது கஸ்பாருக்குப் பல உண்மைகள் தெரிய வந்ததாம். ” காங்கிரசு மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளையும் தங்கள் கூட்டணிதான் வெல்லப் போகிறது, கொந்தளிக்கும் தமிழக மக்கள் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்றெல்லாம் புலிகளை எச்சரித்து, “ஈழ விடுதலைப் போராட்டத்தை எப்பாடுபட்டேனும் காப்பாற்றியிருக்க வேண்டிய ஒரு வாழ்வா-சாவா கட்டத்தில் தங்கள் அரசியல் கணக்கு வட்டத்திற்குள் போராட்டத்தை வளைத்து, போராட்டத்தின் கட்டளைக் கட்டமைப்பு (Command Structure) அழிக்கப்பட காரணமாக இருந்துள்ளார்கள்” என்று வைகோவையும் நெடுமாறனையும் குற்றம் சாட்டுகிறார், கஸ்பார்.

ஈழத்தில் இனப்படுகொலை நடந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இவர்கள் இப்படிக் கூறுவதில் ஏதாவது உண்மையிருக்கிறதா? சிங்களப் பேரினவாத ராஜபக்சே அரசுக்குப் பல்வேறு உதவிகளும் செய்து போரை வழிநடத்திய இந்தியா, போர் நிறுத்த முயற்சி செய்ததாகக் கூறுவதை நம்பத்தான் முடியுமா? இது பற்றி இந்திய அரசோ, ராஜபக்சே அரசோ வாய்திறக்காத நிலையில், இந்திய உளவுத்துறைக்கு அப்பாற்பட்டு கே.பி.யும் கஸ்பாரும் போர்நிறுத்தத் திட்டத்தைத் தயாரித்ததாகக் கூறும் கோமாளித்தனத்தை ஏற்கத்தான் முடியுமா?

மேற்கத்திய நாடுகள் போர்நிறுத்தம் வேண்டுமென்று இலங்கை அரசை வலியுறுத்தியபோதிலும், தமிழகத்தில் போர் நிறுத்தம் கோரி போராட்டங்கள் தொடர்ந்த போதிலும், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் நாம் தலையிட முடியாது, போர் நிறுத்தத்தைக் கோரவும் முடியாது என்றுதான் இந்திய ஆட்சியாளர்கள் கூறிவந்தனர். அதேசமயம், இந்திய இராணுவ மற்றும் இந்திய உளவுப்படையான “ரா” வின் அதிகாரிகள் முள்ளிவாய்க்காலில் நிறுத்தப்பட்டிருந்தனர். தேர்தலையொட்டி தனது உண்ணாவிரத நாடகத்தின் விளைவாக போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று கருணாநிதி ஆரவாரம் செய்தார். கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை மட்டுமே நிறுத்தியிருக்கிறோம், இது போர் நிறுத்தம் அல்ல என்று இலங்கை அரசு அழுத்தம் திருத்தமாக அறிவித்தது.  அதுவும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள் முடியும்வரைதான் நீடித்தது. அதன் பிறகு, இந்தியாவின் வழிகாட்டுதலின்படி முழுவீச்சில் இறுதித் தாக்குதலை சிங்கள பாசிச அரசு கட்டவிழ்த்துவிட்டு உலகின் மிகக் கொடியதொரு இனப்படுகொலையை அரங்கேற்றியது.

அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியோ பிரதமர் மன்மோகன் சிங்கோ போர் நிறுத்தத்தைப் பற்றிப் பேச மறுத்துவிட்ட நிலையில், இவற்றுக்குத் தொடர்பே இல்லாத நிதியமைச்சரான ப.சிதம்பரம் வழிகாட்டுதலில் போர் நிறுத்தத் திட்டம் தயாரிக்கப்பட்டதாக கஸ்பார் கூறுவது அண்டப்புளுகு அன்றி வேறன்ன? கோயபல்ஸ் பாணியில் திரும்பத் திரும்ப இந்தப் பொயைச் சொல்வதன் மூலம் காங்கிரசு மற்றும் கருணாநிதி மீது ஈழ மற்றும் தமிழக மக்கள் கொண்டுள்ள கோபத்தையும் வெறுப்பையும் திசைதிருப்புவதே இந்த கீழ்த்தரமான முயற்சியின் நோக்கம். இந்திய அரசு போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறுவதன் மூலம், கருணாநிதியைப் பாதுகாப்பது மட்டுமல்ல; இலங்கை அரசு போர் நிறுத்தத்துக்கு தயாராக இருந்ததைப் போலவும், புலிகள் போர் நிறுத்தத்துக்கு சம்மதித்துச் சரணடைந்திருந்தால், முள்ளிவாய்க்கால் படுகொலையைத் தவிர்த்திருக்க இயலும் என்பதைப் போலவும் ஒரு புதுக்கதையைக் கிளப்புவதன் மூலம் ஈழத்தமிழர்கள் மத்தியில் ராஜபக்சேவுக்கு ஆதரவு தேடும் கீழ்த்தரமான முயற்சியும் இதில் உள்ளடங்கியிருக்கிறது.

வைகோ, நெடுமாறன், சீமான் முதலானோர் தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்று புலிகளுக்கு நம்பிக்கையூட்டியவர்கள்தான். இந்தியாவின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்கு பதிலாக, சீனாவின் கூட்டாளியான ராஜபக்சே கும்பலை நம்பி ஏமாறக் கூடாது என்று உபதேசித்து இந்திய அரசை இன்னமும் தாஜா செய்பவர்கள்தான். இருப்பினும், இனப் படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட கொலைகார ராஜபக்சே கும்பலைப் போர்க் குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்றும், ஈழப் படுகொலைக்கு இந்தியாவும் காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர்களைத் தனிமைப்படுத்தும் நோக்கத்திலேயே இந்தப் போர் நிறுத்தக் கதை அவிழ்த்து விடப்படுகிறது. இந்தக் கதையை இன்று இந்திய அரசோ, இலங்கை அரசோ கூறும் பட்சத்தில் அதை நம்புவதற்கு ஆளிருக்காது. அதன் பொருட்டுத்தான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கே.பி.யை ஊடகங்களின் முன் கொண்டுவந்து நிறுத்தி, இப்படி ஒரு பொய்யை உலகுக்குச் சொல்ல வைத்திருக்கிறது, இலங்கை அரசு.

ஈழப்போரின் போதே சிங்கள பாசிச அரசுக்கு ஆதரவாகத் தமிழக ஊடகவியலாளர்களை விலைபேசி இலங்கை அரசின் மீது நல்லெண்ணத்தைப் பரப்பும் வேலையை அப்போது சென்னையில் இலங்கையின் துணைத் தூதராகப் பணியாற்றிய அம்சா மூலமாக ராஜபக்சே கும்பல் நடத்தி வந்தது. போருக்குப் பின்னர் “இந்து” நாளேட்டின் ஆசிரியரான ராம் மற்றும் பிறரைக் கொண்டு நிவாரணப் பணிகள் சிறப்பாக நடப்பதாகக் காட்டி, ராஜபக்சே கும்பலின் போர்க்குற்றங்களை மறைக்கும் முயற்சிகள் நடந்தன. பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயமும், சினிமா நடிகர்களின் சுற்றுப்பயணமும் அரங்கேற்றப்பட்டன. அடுத்த ஆண்டு ஜனவரியில் அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்ததுவதென்றும் இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

இது, இந்திய-இலங்கை அரசுகள் இணைந்து தொடுக்கத் தொடங்கியிருக்கும் உளவியல் யுத்தம். இந்திய மேலாதிக்கத்தால் கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம், இத்தகைய வதந்திகளைப் பரப்புவதற்குத் தோதான பலவகையான சக்திகளை ஈழத் தமிழ்ச் சமூகத்தில் தோற்றுவித்திருக்கிறது. இவர்களின் மூலம் துயரத்தில் வீழ்ந்திருக்கும் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் பரப்பி, அவர்களை அரசியல் ரீதியாகவும் சரணடைய வைப்பதே ராஜபக்சே அரசின் நோக்கம்.