வீழ்த்தப்பட்ட பிரபாகரனும்,கற்பனைத் தமிழீழமும் சுடுகாட்டுக்குப் போயினும் புலத்தப் புரட்சிப் புலிகளோ, புதுப் புதுத் தொனிகளில் ஊடகங்களை ஆக்கிரமித்தும்,காட்சிவழிக் கருத்தாடல்களின் துணையுடன் மக்களை முட்டாளாக்குவதில் இந்தப்புலத்துப் பினாமிப் புலிகளது தவிப்போ பெருந்தொல்லையாகும்.

மக்களிடம் கொள்ளையடித்த செல்வத்தின் துணையுடன் அதே மக்களை மேலும் மொட்டையடிப்பதில்"ஆரு உண்மையான புரட்சிக்காரர்கள் " எனப் பூச்சுத்தும் இந்த மோசடிப் பேர்வழிகளைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பதும் ஒருபகுதியான ஜனநாயகப் போராட்டம்தாம்.மக்களிடம் சேர்த்த பணம் எவரிடம் போய்ச் சேர்ந்ததெனப் பூச் சுற்றப்போகும் இந்தத் தொலைக்காட்சி,நாளை அப்பணம் கே.பி. என்ற கேடியிடம் போனதாகவும் கூறமுடியும்.இது,ஒரு தொடர் கதையாக மாறமுடியும்.இருப்பினும் நாம் வேறு திசைகளை நோக்கிச் செல்ல வேண்டும்.அது,அவசியமானது.


"வெளிச்சமென்றும்,அரசியல் ஆய்வு" எனவும் GTV கொட்டும் கருத்துக்களைக் குறித்து மிக நேர்த்தியாக அணுகவேண்டியுள்ளது. இணையத்தில் எழுதும் எழுத்துக்களைவிட இலவசமாகப் புலம்பெயர் தமிழர்களது வீட்டுக்குள் பிரேமும்,ஜெகனும் அத்துமீறி வந்து கொட்டும் புலிவழி இனவாதக்கருத்துக்களோ, பன்மடங்கு மோசமான விளைவுகளை இலங்கைவாழ் தமிழ்மக்களுக்குக் காலப்போக்கில் ஏற்படுத்தப்போகிறது.


ஒரு புறம் புலிகளது உறுப்புக்களான புரட்சிப்படைகள்,மறுபுறம் தேசிய விடுதலைக்கு, மீளப் புதுவிலக்கணந்தரும் புலிப்பினாமி ஊடகயுத்தமென இன்றைய சூழல் மிகக் கெடுதியாக நகர்கிறது.இவற்றுக்கு மத்தியில் புதிய"படைப்பாளிகள்" புலிகளது கொலை அரசியலில் நீந்திய தமது கடந்தகாலத்தை மறுத்து, வலம் வருவதற்கேற்ற தயாரிப்புகளில்... கடந்த பல வருடங்களாக வலையுலகில் மனிதநேயத்துக்காக நாம் தட்டந்தனியனாகப் போராடியபோது அதை எதிர்த்த பல புலிக்கேடிகள் இப்போது, "படைப்பாளிகள்-புரட்சிகரப் போராளிகளாக" வலம் வர, நாம் சந்தர்ப்பவாதிகளைத் தோலுரிக்க அடுத்த வலம் வருவதும் அவசியமே!சாகவில்லை!சந்தர்ப்பவாதிகளை-சதிகாரர்களை-புரட்சி பேசிப் புலிக்கு லிங்குகொடுத்தவர்களை,புரட்சிகரக் கட்சிக்கு ஆள் சேர்க்கும் அந்நியச் சேவகர்களை, நாம் தோலுரித்து மக்கள் முன் நிறுத்துவதே இப்போதைய அரசியல் தேவை.அதைச் செய்யாதிருப்பது அரசியல் தற்கொலையே!


சந்தர்ப்பவாதமே உலகினில் அதிக கேடு விளைவிப்பது!


அஃது,இப்போது கடந்தகாலப் புலி விசுவாசிகளது உயிர் வாழ்வாக இருக்கலாம்.ஆனால்,நாம் இவர்களது அன்றைய மக்கள்விரோத இயக்கவாதக் கருத்துக்களை-கொலை அரசியலை ஊக்குவித்த மனவியாதிகளை மறக்க முடியுமா நண்பர்களே?


கேடுகெட்ட"படைப்பு"வாதிகளே கேளுங்கள்!


மே 18 எனத் தொடர்ந்த புலியினது மிச்சசொச்சத்தை எதிர்த்தும்,ஆதரித்தும் கருத்தாடும் அதர்ம அரசியல் போக்கில் வந்து குதித்துவிழும் முத்தான பரப்புரைகளது தெரிவில் புரட்சிக்குப் புதுவிளக்கமிடும் புதிய யுகத்தில் புலியினது இருப்பு இன்னுஞ் சிதறவில்லையென்பதும்,அதன் அந்நியச் சேவை தொடர்கிறதென்பதும் மறுத்தொதுக்க முடியாத புரிதற்பாடாகும்.இதையுங் கேளுங்கள்!!

எவன்(ள்)எந்தெந்தத் திசையில் புலிக்கான தளத்தை மீளத் தகவமைத்துப் புலிகளது எஜமானர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனரென்பதை மிக இலகுவாகப் புரிந்துவிட முடியாது.இலங்கை அரசினது புதிய தெரிவுகளாக முன்னெடுக்கப்படும் இராணுவக்கெடுபிடிகளது நகர்வுக்கு வலுச் சேர்ப்பதில் ஆதாயமடையமுனையும் புலத்துப் புலிப் பினாமிகள் மக்களது அவலங்களை வைத்துப் பிழைக்கமுனையும் அரசியலானது புரட்சியின் பெயரால் இனி நம்மை முட்டாளாக்குமானால் அதை அனுமதித்த குற்றத்திற்காக நாம் மக்களைக் குறித்துப் பேசுவதே வீணாகவேண்டும்!

ஒவ்வொரு குழுவும்,அடுத்த குழுவுக்குத் தெரியாதபடி புலிகளது எஜமானர்களால் வளர்த்துவிடப்பட்டுள்ளது.இத்தகைய குழுக்கள் தத்தமக்கு "நியாயமான" வகைகளில் புரட்சி-விடுதலை குறித்துப் பேசுகின்றன.இவர்களில், எவரும் மக்கள் சக்தியெனப் பேசுவதற்கும்,தம்மை முதன்மைப்படுத்துவதற்கும் ஏற்ற தருணங்களைப் பற்றிக்கொண்டு மற்றவர்களை எதிர்க்கின்றனர்.இவர்கள் அனைவரும் ஒரு தளத்தின் பல்வேறு பிரிவுகளாக வளர்க்கப்பட்டு வழி நடாத்தப்படுகின்றனரெனப் பெரிதும் நம்பலாம்.இதை உரைத்துப் பார்க்க ஜீ.ரீ.வீயினது கருத்துக்கட்டும் வியூகத்தில் நம்மைக்கொஞ்சம் இணைக்கும்போது மெல்லப் புரிந்துகொள்ளும் ஆற்றலை இனங்காணமுடியும்.அவ்வண்ணமே, புரட்சிக்காரர்களது இணைய-வலை ஊடகங்களுமென நம்பலாம்.


இப்போது,திருடனே ஊரினது காவற்காரனாக வலம் வருகிறான்-திருடியினது கைகளில் ஊர்க் கோவிலது சாவி...இப்படித்தாம்,புலம்பெயர் புரட்சிக்கார வேஷமும்,போராட்ட வியூகமும்.இதற்குள்தாம் எத்தனை கோலம்-எத்தனை கோட்டம்?

 

புலத்துப் புலிப்பினாமிப் புரட்சிக்காரர்களது இந்த வகை அரசியல், எம்மினத்தை இன்னும் அரசியல் அநாதையாக்கும் சூழ்ச்சிமிக்கப் பயங்கரவாதச் செயற்பாடாக விரிந்து முழு இலங்கையையும் ஒரு பெரும் இனவாதத் தீக்குள் சிக்க வைக்கும் கபட அரசியலாகும்.இதனால், மக்கள்சார் அரசியல் வகைப்பட்ட எந்த முன்னெடுப்பும் பின் தள்ளப்பட்டு,ஆயுதக் கலாச்சாரத்தில் மூழ்கிவிட்டர்வகள் தம்மையும் தமது இருப்பையும் தக்க வைப்பதற்கான இனவாத அரசியலையும்,அதுசார்ந்த கருத்தியல்போரையும் தொடக்கி நமது மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் அழித்துவர மீளத் திட்டமிடுகின்றனர்.பிரபாகரனுக்கு நிகரான இன்னொரு பிரபாகரன் வருவதை நாம் அனுமதிக்கப் போகின்றோமா?இல்லை,இலங்கையில் சிங்கள-புலிப்போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்துள் சிவில் சமூக உருவாக்கத்துக்கான முன்னெடுப்புகளை முடுக்கிவிடுவதற்கான அம்பலப்படுத்தல் அரசியலில் துடிப்பாக இயங்கப் போகிறோமா?


தீர்மானிக்கவேண்டும்-இதை,இப்போதே தீர்மானித்து இயங்கவேண்டும்!வேடதாரிகளை-புரட்சி,விடுதலை பேசும் கயவர்களை இனங்காண்பதே இன்றைய அதியவசியமான தேவை!


இப்போது,இந்த நயவஞ்சகர்களால் புரட்சிகரமான போக்குகள் மிகவும் பலவீனமாக்கப்பட்டு, மக்கள் ஐக்கியம் பாழடிக்கப்படுகிறது.இஃது, தமிழர்களின் அனைத்துத் தார்மீக உரிமைகளையும் இல்லாதாக்கி வருகிறது.எது எப்படி நடைபெற வேண்டுமோ, அஃது, அப்படி முன்னெடுக்கப்படும் அரசியில் வியூகத்தைக் கொண்டியங்கும் புலிகளது உறுப்புகள் தமக்குள் மோதிக்கொள்ளும் பொருள்வழிப்பட்ட முரண்பாடுகளைக்கிடப்பில்போட்டபடி அரசியல் இருப்பைப் புரட்சியின்பெயரால் தொடரமுனையும் கேடுமிக்க அரசியலை நாம் புரிந்துகொண்டுள்ளோமா?


இக் கேள்வி அவசியமானது.நாம்,இதைப் புரிந்துள்ளோமா-இனங்கண்டுள்ளோமா?எவருக்கெவர் "மக்கள் சக்தி"லேபிள் ஒட்டுவது?புலிக்கு வக்காலத்துவேண்டும் புலியுறுப்புகளுக்கும், புரட்சிக்கும் என்னடா தொடர்பு?புரட்சியென்பது மே 18 நயவஞ்சகர்களது முற்றத்து மரமா?அல்லது, அவர்களது கோவணத்துள் சுருங்கும் உலகமா?


இத்தகைய நபர்கள்-குழுக்கள்சார் அந்நிய எஜமானர்களுக்கேற்ற இயக்க-கட்சி நலன்கள் மக்களின் இருப்பைச் சூறையாடுகிறது.அது மனிதத் தன்மையே இல்லாத பயங்கரப் பாசிசத்தை இலங்கைத் தீவில் மீளக்கட்டியமைக்கப் பாடுபடுகிறது.இதற்கேற்றபடி மே 18 இன் தொடர்புகள் விரிந்து மேவுகிறது.அதைக் கொண்டியக்கும் தளங்கள் புதியபல தொடர்ச்சிகளை மிக விரைவாக இயங்கக் கோருகிறது.இந்தப் புதை சேற்றில் இறங்க நம்மை அனுமதிக்கும் ஒவ்வொரு கணமும், நாம், எமது மக்களது உயிரைப் பறிப்பதில் பங்களித்தவர்களாவோம்!இங்கே, மானுடவுரிமை,ஜனநாய மரபு யாவும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு,கட்சி-இயக்க ஆதிக்கம் வன்முறைசார்ந்த அதிகாரமாக நிறுவப்படுகிறது.இந்த வன்முறைசார் அதிகாரமானது எந்தத் திசைவழியை மக்களின் விடுதலைக்கு வழங்குகிறதென்றால்-மக்களின் விடுதலையென்பது குறிப்பிட்ட அதிகார வர்க்கத்தின் நலன்களைக் காக்கும் திசைவழியையே மக்களின் விடுதலையாக மக்கள் குழுமத்தில் சமூக எண்ணமாக விதைக்கிறது.இது மிகக் கொடுமையான மக்கள் விரோதமாகும்.மேலும் பிறிதொரு பாதையில் மக்களின் அனைத்து வளங்களையும்(ஆன்ம-உடல் மற்றும் பொருள்)தமது இருப்புக்கு இசைவாகத் திருடிக் கொள்கிறது.இதைத்தாம்,இந்தக் கேடுகெட்ட புலிவழிப் புரட்சிக்காரர்கள் எமக்குப் புரட்சியெனப் பூச் சுற்றுகிறார்கள்-மக்கள் நலக் கோரிக்கை-அரசியல் என்றும் புனைகிறார்கள்.


நாடு கடந்த தமிழீழ அரசு,மே 18 இயக்க அரசியல் வியூகம்,தேசியவிடுதலைக்கான மீள் போராட்ட வடிவங்களெனப் பிரகடனப்படுத்தப்படும் ஒவ்வொரு திசைவழியும் புலத்துப் பினாமிப் புலிகளுக்கு வரும்படியை உயர்த்தலாம்.இந்த வரும்படியை அவர்கள் தமது அந்நிய எஜமானர்களிடமிருந்தும்,நமது மக்களது உண்மையான பங்களிப்பிலிருந்தும் பெற்றுக்கொள்வர்.ஆனால், இந்த வகை அரசியலை தமிழீழத்துக்கான இறுதி இலட்சியமாக விதந்துரைக்கும் பரப்புரைகள் மக்கள் வெளிக்குள் விதைக்கப்படும்போது,இது பாரிய பின்னடைவை இலங்கையின் ஜனநாயக முன்னெடுப்புகளுக்கு வழங்கும்.இத்தகையவொரு சூழலில் இலங்கை அரசியல் நகர்வு நிச்சியம் தமிழ் பேசும் மக்களின் அனைத்துவகைவுரிமைப் போராட்டத்தையும் சிதறிடித்து, தமிழ் மக்களைப் புதிய வகையில் ஓடுக்கும் சட்டரீதியான யாப்புகள் இலங்கைச் சிங்கள அரசால் எய்யப்பட்டு,தமிழ் மக்களின் தலையில் தீயை அள்ளிக் கொட்டும்.இங்கே, பயன் பெறுவது முன்னாள் ஆயுதக் காட்டுமிராண்டிகளின் தலைவர்களும்-மாபியாக் கும்பல்களுமே என்பது உண்மையானது.இதற்கு, வக்காலத்து வேண்டுவதே ஜீ.ரீ.வி யினது(GTV) வேலையாக இருக்கிறது.இவர்களைப் புலம்பெயர்வாழ் மக்கள் நிராகரிப்பதென்பது, தெருமுனையில்வைத்து இவர்களை அம்பலப்படுத்துவதிலிருந்து ஆரம்பிக்கிறது.


இதைச் செய்தாக வேண்டும்!யாரு செய்வது?; "புதிய படைப்பாளிகளா" அல்லது, "புரட்சிக்காரர்களா" என்பதே சர்ச்சை!ஏனெனில்,இவர்கள் யாவரும் ஏதோவொரு வகையில் புலிப்பினாமிகளதும்,அந்நியத் தேசங்களதும் சேவகர்களாகவே இருக்கின்றனர்!இதை உய்துணர வேண்டாமா?

 

இலங்கையில் புலிகளின் ஆயதப்படைகளது அழிவுக்குப் பின்பான இன்றைய சூழலில் மக்கள் தமது பிரச்சனைகளுக்கான போராட்டத்தைத் தமது இருப்புக்கான போராட்டத்தோடு இணைத்து,ஜனநாயக ரீதியாக வீதிகளுக்கு இறங்கியாக வேண்டும்.இங்கே, இன,மத பேதங்கள் கடந்து மக்களின் கரங்கள் கோர்வைப்படுவது அவசியம்.இந்த நிலைமை உருவாகாதவரை பாசிச அதிகாரங்களை வீழ்த்த முடியாது.மக்களை அணிதிரட்டிப் போராட வைக்கும் சக்தி மக்களின் நலனில் அக்கறையுடைய குடிசார் அமைப்புகளிடமே தேங்கிக்கிடக்கிறது.அத்தகைய அமைப்புகள் வலுப்பெறுவதைத் தடுப்பதில் புலத்துப் புலிப்பினாமிகளும் அவர்களது எஜமான மேற்குலக அந்நிய தேசங்களும் மிகவும் துடிப்பாக இயங்குகின்றன.


பல பத்தாயிரம் உயிருண்ட ஈழக் கோசம் தமிழர் விரோதிகளுக்கு உவகையானது-அது பதவிக்கும் பகட்டுக்கும் வால்பிடிக்கும் புலிகளது எடுபிடிகளுக்குத் தேசவிடுதலைக்கான தெரிவு.இதை வைத்து மக்களை மீள மொட்டையடிக்கும் கும்பல்களோ மக்கள் புரட்சிகரமாக இயங்குவதை-சிந்திப்பதைத் தடுப்பதற்குத் தாமே புரட்சிகரச் சக்தியாக மாறுவேசம் போடுகின்றனர்.இதுகுறித்த புரிதல் நம்மிடம் மிக அற்பமாகவே இருக்கிறது.இவர்களை எங்ஙனமும் இலகுவில் இனங் கண்டுவிட முடியாது.இன்றைய இலங்கையின் பொருளாதார முன்னெடுப்புகள் யாவும் அந்நிய மூலதனத்தின் வரவுகளோடு தம் மக்களின் அதீத உழைப்பைச் சுரண்டி ஏப்பமிடும் பொருளாதார நகர்வாகவே இருக்கிறது.இலங்கையின் முழுமொத்தச் சமூக உற்பத்தியும் அந்நியர்களின் தயவில்(கடனுதவி மற்றும் அந்நியத் தனியார் நிதி மூலதனம்) உயிர்வாழும் தகமையுடைதாகவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது.


புலியை அழித்த பின் எழும் எந்தப் போராட்டமும் புலிகளது பாத்திரத்தில் அவர்களது எஜமானர்களது நலனுக்கேற்றவாறேதாம் நமது நாட்டில் நடைபெறும்!


இலங்கையிலென்ன,உலகின் எந்த மூலையிலும் எழும் எந்தப் போராட்ட வியூகங்களும் வெளிநாட்டுச் சக்திகளாலேயே தீர்மானிக்கப்பட்டு யுத்தமாக விரிவடைவதை நாம் எல்லோரும் ஓரளவேனும் நம்பித்தாம் ஆகணும்.


இந்தவுண்மை மிகவும் நேர்மையான அரசியல் அறிவினூடாகவே புரிந்துகொள்ளத் தக்கதாகும்.இங்கே எந்த முட்டுக்கட்டையுமின்றி (இயக்க வாத-தமிழ்த் தேசியவாத மாயைகள் மற்றும் முஸ்லீம் தேசிய வாத- தலித்துவ வாதங்கள்) வர்க்கச் சமுதாயத்தின் வர்க்க அரசியலைப் புரிந்துகொள்ளும் அறிவே, இலங்கையின் இன்றைய இனப் பிரச்சனையுள் அந்நிய சக்திகளின் மிகவும் கீழ்த்தரமான யுத்த மேலாதிக்கத்தைப் புரிய முடியும்.இத்தகைய பார்வையின்றி நாம் வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லும்.இந்த வர்க்கப் பார்வையை அந்நிய மேலாதிக்க சக்திகளது கைக்கூலிகளே இப்போது மும்மரமாக முன்வைக்கும் தமிழ்ச் சூழலில், எவர் புரட்சிகர அணியின் தொடர்ச்சியென எவரும் இலகுவில் புரியமுடியாது!இதுதாம்,நமது முதற் தோல்வி.இதன்வழி தொடரும் அனைத்துவகை அரசியல் வாதங்களும் நமது குருதியில் மீளத் தம்மை முன்னிறுத்தும் அரசியல் சூழ்ச்சியோடு நம்மை அண்மிக்கின்றன.இதை முறியடிப்பது அவசியமான பணி.புலியினது ஆயுதப்பலத்தோடு இருந்த அதே பாசிசச் சூழல் ,அவர்கள் அழிந்தபின்பும் அவர்களது எஜமானர்களால் நம்மீது நிறுவப்படுகிறது.அப்போது, புலிப்பாசிசம்;இப்போது, புரட்சியின் வடிவிலான கருத்தியல்-மற்றும் உளவியற் பாசிசம் மேலோங்குகிறது.


நாடு கடந்த தமிழீழ அரசு,அதன் செயற்பாடு மற்றும் ஈழத்துக்கான குரல் என்பதெல்லாம் பிரபாகரனது பாத்திரத்தை நிறுவமுனையும் பாதாளவுலக மாபியாகளது அரசிலாகவே இருக்கிறது.இது ஒருவகையில் தற்பெருமை கொள்ளுமொரு பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத் தனிநபர் மீதான அதீத நம்பிக்கையையும்,தலைமை வழிபாட்டையும் இன்னும் அதிகமாகத் தூண்டும்.இத்தகைய ஒரு சமூக உளவியலை எமது எதிரிகள் விரும்பியே நமக்குள் விதைக்கவும், அதை வளர்த்தெடுக்கவும் தீராத மனவிருப்போடு செயலாற்றுகிறார்கள். இவையெல்லாம், புதிய வடிவிலான நச்சு அரசியலாகும்.இதை உருத்திரகுமாரிடமிருந்து கற்க முடியாது-சேரனிடமிருந்து செரிக்க முடியாது!அதை, நாம்தாம் சுய தேடுதலின்வழி புரிந்தாகவேண்டும். இதைவிட்டுவிட்டு,மே 18 இயக்கத்தின் திசையில் கொடிபிடிக்க முனையும் எந்தக் கபோதிகளினது கூற்றிலிருந்தும் நாம் எதிர்கால அரசியல் வாழ்வைக் கற்கமுடியாதென்பதை உணர்வுபூர்வமாக விளங்க முனையவேண்டும்.


இந்தப் புரிதலைச் சிதைப்பதில் புலிப்பினாமிகளது ஊடகமான ஜீ.ரீ.விக்கு(GTV) அதிக அக்கறையுண்டு.அந்தத் தொலைக்காட்சியினது இருப்பில் இன்னொரு சதி பின்னப்படுகிறது.அதை வாந்தியெடுத்தும்-எதிர்த்தும் புலிகளது புரட்சிகரவுறுப்புகள் புரட்சி சொல்லித் தமக்குள் எம்மை உள்வாங்க முனையும் சதி அரசியல், புலிகளை மீளவொரு சக்தியாக-புரட்சிகர அணியாக இனங்காட்டப்போகிறது.இது,அபாயகரமான எதிர்புரட்சிகர அணியாக நமக்குள் மலரும்போது அதைப் புரட்சிகரச் சக்தியாகத் தூக்கி நிறுத்த நமக்குள் ஆயிரம் பேர்வழிகள் வலம்வருவர்-பற்பல தளங்களிலிருந்து.

 

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.05.2010

http://jananayagam.blogspot.com/2010/05/gtv.html