நாட்டு மக்கள் மீது ஒரு கொடிய உள்நாட்டுப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரால் கோடானுகோடி உழைக்கும் மக்கள் மீது அரசு பயங்கரவாதப் போர் ஏவிவிடப்பட்டுள்ளது. மறுகாலனியச் சூறையாடலைத் தீவிரப்படுத்தவும், சொந்த மண்ணிலிருந்து உழைக்கும் மக்களைப் பிய்த்தெறிந்து விரட்டியடிக்கவும், பாசிச அடக்குமுறையைக் கேள்விமுறையின்றி நாட்டின் மீது திணிக்கவும், மாவோயிஸ்டு பூச்சாண்டி காட்டி ஒரு கொடிய போர் காங்கிரசு கூட்டணி ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்டுள்ளது.

 

நக்சல் ஒழிப்பு கோப்ரா படை, மத்திய ரிசர்வ் போலீசு, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் இப்போரில் பயன்படுத்தப்படும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் செயற்கைக் கோள் வழியே அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு வலைப்பின்னல் ஏற்படுத்தப்படும். நக்சல்பாரிகள் மற்றும் பிற தீவிரவாதக் குழுக்களின் வன்முறையை முறியடிக்க உளவுத்துறை, இராணுவம், துணை இராணுவப் படைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம்  என்ற உயர்மட்ட அமைப்பு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமையில் நிறுவப்படும். தேசத்தின் பாதுகாப்பு நலனையொட்டி உருவாக்கப்படும் இத்தகைய அமைப்புக்கென தனியே சட்டம் இயற்றப்படும்” என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 17ஆம் நாளன்று நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், “நாட்டின் 180 மாவட்டங்களில் நக்சல்பாரிகள் ஊடுருவி விட்டார்கள். நாட்டின் 40 சதவீதப் பகுதியில் அவர்கள் இணையான அரசு நடத்துகிறார்கள்” என்று அப்போதே பீதியூட்டினார். நக்சல்பாரிகளால்தான் நாட்டுக்கு மிகப் பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளதைப் போல காட்டுவதற்காகவும், இந்த உள்நாட்டுப் போருக்கு நியாயம் கற்பிக்கும் வகையிலும், “நக்சல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் வெற்றியடைந்து விடவில்லை. தற்போதைய நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நக்சல் பயங்கரவாதத்தை முறியடிப்போம்” என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். “நக்சல் வன்முறையை நாங்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டோம். ஆனால், இப்போது எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இனியும் தாமதிப்பதற்கில்லை. நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும்” என்று கொக்கரிக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். “மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் ஆயுதப் போராட்டம் நடத்தும் வரை, அவர்களுக்கெதிராக துணை இராணுவப் படைகள் தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை; அவர்களோடு எந்தவித பேச்சுவார்த்தையுமில்லை” என்று அவர் சீறுகிறார். நேற்றுவரை இஸ்லாமிய தீவிரவாதிகளால்தான் நாட்டுக்கு ஆபத்து என்று கூப்பாடு போட்டுவந்த ஆட்சியாளர்கள், இப்போது மாவோயிஸ்டு பயங்கரவாதிகளால்தான் நாட்டுக்குப் பேராபத்து என்று அலறுகிறார்கள்.

 

“நாடெங்கும் ஆளெடுப்பு நடத்தப்பட்டு 1,50,000 போலீசார் புதிதாகச் சேர்க்கப்படுவார்கள். இதேபோல, துணை இராணுவப் படைகளுக்கு 26,000 பேர் சேர்க்கப்படுவார்கள். அனைத்து மாநிலங்களிலும் வட்டார அளவில் உளவுத்துறை மையங்கள் நிறுவப்படும்.

முதற்கட்டமாக மகாராஷ்டிரா, சட்டிஸ்கர், ஜார்கந்து, பீகார் ஆகிய மாநிலங்களில் நக்சல் ஒழிப்பு கோப்ரா படையின் தலைமையகங்கள் நிறுவப்படும். அதன் தொடர்ச்சியாக உ.பி., ஒரிசா மாநிலங்களிலும், பின்னர் இதர மாநிலங்களிலும் நிறுவப்படும். இந்த கோப்ரா படை என்பது கைத்துப்பாக்கிகள், எந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், எரிகணைகள், வீடுகள் கட்டிடங்களைத் தகர்க்கும் ஆற்றல் மிக்க துப்பாக்கிகள், கவச உடைகள் கொண்ட அதி நவீன அதிரடிப்படையாகக் கட்டியமைக்கப்படும்” என்று அரசு அறிவித்துள்ளது.

 

மே.வங்கத்தில் ஏற்கெனவே மாநில போலீசுப் படைகளும் மைய அரசின் துணை இராணுவப் படைகளும் நக்சல்பாரிகளுக்கு எதிராகத் தேடுதல் வேட்டையையும் தாக்குதலையும் தொடங்கிவிட்டன. 17 கம்பெனி படைகள் (ஒரு கம்பெனி என்பது ஏறத்தாழ 1,700 பேர்) அதாவது ஏறத்தாழ 28,000 பேர் கொண்ட படைகள் அம்மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளன.

 

மகாராஷ்டிர மாநில அரசு, நாட்டிலேயே முதன்முறையாக அமையும் ஃபோர்ஸ்1 என்ற இஸ்ரேலிய பாணியிலான பயங்கரவாத எதிர்ப்பு கமாண்டோ படையைக் கட்டியமைத்து, முதலில் மும்பையிலும் அதன் பிறகு புனே மற்றும் நாக்பூரிலும் நிறுவத் தீர்மானித்துள்ளது. நக்சல் வன்முறையால் போர்க்காலச் சூழல் ஏற்பட்டுள்ளதென்றும், நக்சல் வன்முறையை முறியடிக்க ரூ.100 கோடி செலவில் மாநிலப் போலீசுப் படை வலுப்படுத்தப்படும் என்றும், நக்சல் ஆதிக்கம் நிலவும் பகுதிகளில் ரோந்துப் படைகளும் ஆயுதமேந்தியப் புறக்காவல் நிலையங்களும் நிறுவப்படும் என்றும் அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். ஆந்திராவில் நக்சல்பாரிகளை நரவேட்டையாட தனிச்சிறப்பாக போலீசு வேட்டைநாய்கள் படை  உருவாக்கப் பட்டுள்ளதைப் போலவே, சட்டிஸ்கர், ஒரிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கந்து ஆகிய மாநிலங்களில் இத்தகைய சிறப்புப் போலீசுப் படைகள் உருவாக்கப்படும் என்று மைய அரசு அறிவித்துள்ளது.

 

இது தவிர கோப்ரா படைகளும் அதிரடிப் படைகளும் மூன்றாண்டுகளுக்கு இம்மாநிலங்களில் நிறுத்தப்படவுள்ளன. இராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த யு.பி.ஜி.எல். எனப்படும் எறிகுண்டு தாக்குதல் பீரங்கியை இனி மாநில அளவிலான தீவிரவாத எதிர்ப்புப் படைகளும் பயன்படுத்த மைய அரசு அனுமதித்துள்ளது. உ.பி.யின் மாயாவதி அரசு, சட்டிஸ்கரில் அரசே கட்டியமைத்துள்ள சல்வாஜூடும் குண்டர் படையைப் போல, 35,000 பேர் கொண்ட குண்டர் படையைக் கட்டியமைக்கத் தீர்மானித்துள்ளது. இதேபோல, மகாராஷ்டிராவிலும் கத்சிரோலி மாவட்டத்தில் பழங்குடியினரைக் கொண்ட குண்டர்படை கட்டியமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போராளி சத்ரதார் மஹடோ கைது: அவதூறு! பொய்வழக்கு!

மே.வங்கத்தில் லால்கார் மக்களின் போராட்டத்தை போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி (கஇஅகஅ) தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறது. இப்போராட்டக் கமிட்டியின் தலைவரான சத்ரதார் மஹடோ, லால்கார் பகுதியில் மக்கள் மத்தியில் வெளிப்படையாகவும் அரசுக்குத் தலைமறைவாகவும் இருந்துகொண்டு போராட்டத்தை வழிநடத்தி வந்தார்.

 

உள்ளூர் பத்திரிகையாளர்கள் லால்கார் போராட்டம் பற்றிய செய்திகளைத் திரட்ட விரும்பினால், தனது இரகசிய இடத்துக்கு வருமாறு தகவல் அனுப்பி போராட்டச் செய்திகளையும் நேர்காணல்களையும் அவர் அளித்து வந்தார்.

 

இந்நிலையில், மே.வங்க உளவுத்துறை போலீசார் தம்மை வெளிநாட்டு செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் என்றும் அவரிடம் நேர்காணல் நடத்த விரும்புவதாகவும் தகவல் அனுப்பினர். சத்ரதார் மஹடோவும் அவர்களைப் பத்திரிகையாளர்களாகக் கருதி லால்காரிலுள்ள தனது இரகசிய இடத்துக்கு வருமாறு அழைத்தார். பத்திரிகையாளர்களாகக் காட்டிக் கொண்ட உளவுத்துறை போலீசார், இரகசிய இடத்தில் அவரைச் சந்தித்ததும் கைத்துப்பாக்கியை அவரது நெற்றியில் அழுத்தி அவரைக் கடத்திச் சென்று, கைது செய்துள்ளதாக அறிவித்தனர். தலைமறைவாக இருந்து கொண்டு அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வந்த முக்கிய தீவிரவாதியைக் கைது செய்துள்ளதாக மே.வங்க அரசும் உளவுத்துறை போலீசும் தமது சாகசத்தைப் பெருமையாகக் குறிப்பிட்டன.

 

அதைத் தொடர்ந்து, லால்கார் மக்களின் போராட்டத் தலைவரான சத்ரதார் மஹடோ மிகக் கொடிய பயங்கரவாதி என்றும் அவர் மீது 22 கிரிமினல் வழக்குகள் உள்ளன என்றும் மே.வங்கப் போலீசு அறிவித்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த ஜூன் 13ஆம் தேதி வரை அவர் மீது எந்த வழக்கும் இல்லை. தேர்தலுக்கு இருநாட்கள் முன்புவரை, லால்கார் மக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த வேண்டாம் என்று கெஞ்சி தேர்தல் கமிசன் அதிகாரிகளும் மே.வங்க அரசு அதிகாரிகளும் மஹடோவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் முடிந்த பிறகு, அவர் இப்போது “பயங்கரவாதி”யாகி விட்டார்.

 

“மஹடோவுக்கு ஒரிசாவிலுள்ள மயூர்பன்ச் நகரில் அடுக்கு மாடி வீடு உள்ளது; அவர் ஒரு கோடி ரூபாய்க்கு காப்பீடு பாலிசி வைத்துள்ளார். லால்கார் வட்டாரத்தில் அவருக்கு 5 வீடுகள் உள்ளன. அவர் தலைமையிலான போராட்டக் கமிட்டிக்கு வங்கி சேமிப்புக் கணக்கில் பல லட்ச ரூபாய் உள்ளது; மக்களைப் போராட்டத்துக்குத் தூண்டிய அவர், நகர்ப்புற அறிவுத்துறையினரிடம் கோடிக்கணக்கில் நன்கொடை வசூலித்தும் லால்கார் வட்டாரத்தில் கட்டாய வரி வசூலித்தும் சுகபோக வாழ்க்கையை நடத்தி வந்தார்” – என்றெல்லாம் மே.வங்க இடதுசாரி அரசும் போலீசும் மஹடோ மீது அவதூறு சேற்றை வாரியிறைத்தன.

 

ஆனால், மஹடோவுக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காப்பீடு பாலிசி எதுவுமில்லை. ஒரிசாவிலுள்ள மயூர் பன்ச் நகரில் அவரது முன்னோர்களின் பழங்கால வீடு உள்ளது எனினும், உறவினர்கள் பங்கு போட்டுள்ளபடி அவருக்கு அதில் ஒரு சிறு அறை மட்டுமே கிடைக்கும். லால்கார் பகுதியில் உள்ள அம்லியா கிராமத்தில் உள்ள அவரது குடிசை இடிந்த நிலையில் உள்ளது. சால்மர இலைகளை விற்று அவர் தனது பிழைப்பை நடத்தி வந்துள்ளார். அண்மையில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்து, புதிய கண்ணாடி வாங்கக்கூட அவரிடம் பணம் இல்லாமல் தவித்ததால், போராட்டக் கமிட்டிதான் அவருக்குக் கண்ணாடி வாங்கிக் கொடுத்துள்ளது. போராட்டக் கமிட்டிக்கு வங்கி சேமிப்புக் கணக்கில் சில ஆயிரங்கள் உள்ளன. அந்தக் கணக்குகள் மக்களின் பார்வைக்கு வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்øமகளை உள்ளூர் பத்திரிகைகள் அம்பலப்படுத்திய பின்னரும், இன்னமும் இந்த அண்டப்புளுகையும் அவதூறையும் வாரியிறைத்துக் கொண்டிருக்கிறது, மே.வங்க “இடதுசாரி” அரசு.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, மஹடோவைக் கைது செய்த விதமே சட்டவிரோதமானது, மனித உரிமைகளுக்கு எதிரானது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி (டி.கே.பாசு விசாரணை வழக்கையொட்டி), ஒருவரைக் கைது செய்யும்போது போலீசார் சீருடையும் தமது பெயர் பொறித்த அதிகாரபூர்வ வில்லையும் அணிந்திருக்க வேண்டும். எதற்காக கைது செய்கிறோம் என்ற விவர அறிக்கையையும் அளிக்க வேண்டும். இது அரசியல் சட்டத்தின் 22வது விதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2006 இந்தியக் குற்றவியல் சட்டத் திருத்த 50ஏ விதியிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இச்சட்ட விதிகளை அப்பட்டமாக மீறி, பத்திரிகையாளர்கள் போல நடித்து உளவுத்துறைப் போலீசு அவரைக் கோழைத்தனமாகக் கைது செய்துள்ளது. இதன் மூலம் பத்திரிகையாளர்களின் தொழிலையே களங்கப்படுத்தியுள்ளது.

 

அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் உண்மைச் செய்திகள் வெளிவருவதையே தடுக்க முயற்சிக்கிறது. மஹடோ மட்டுமல்ல; மாவோயிஸ்டு கட்சி முன்னணியாளர்களும் லால்கார் போராட்டத்தை ஆதரித்து வந்த பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைமுயற்சி, அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தது, வெடி மருந்துகள் வைத்திருந்தது, சதிகளில் ஈடுபட்டது என பயங்கரவாத ஊபா சட்டப்படி இவர்கள் மீது பொய்வழக்குகள் சோடிக்கப்பட்டுள்ளன.

 

இப்பயங்கரவாத அடக்குமுறையையும் சட்டவிரோத கைதுகளையும் எதிர்த்தும் போராளிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் அருந்ததி ராய், நோம்சாம்ஸ்கி, பிரசாந்த் பூஷண், ஆனந்த் பட்வர்த்தன், சுமித் சர்க்கார், வந்தனா சிவா, மீரா நாயர் என பிரபல எழுத்தாளர்கள், கலைஞர்கள், மூத்த வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், சமூகவியலாளர்கள், சுற்றுச்சூழலாளர்கள், மனித உரிமை இயக்கத்தினர் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டு மே.வங்க பாசிச அரசை எச்சரித்துள்ளனர்.

 

புதிய ஜனநாயகம்
நவம்பர் 09

-

-

தொடர்புடைய இடுகைகள்:

The Heart Of India Is Under Attack-Arundhati Roy

Human rights activists raise voice against operation greenhunt

Stop War Against the People

Green Hunt:Homeless triblas wanderers in their own country

Delhi Protesters March Against Operation Green Hunt

Mr Chidambaram’s War-Arundhati Roy

Operation Saffron Hunt?

India: Protect Civilians in Anti-Maoist Drive – Human Rights Watch

Seeking Mandate For Operation Jharkhand Hunt

Why Operation Green Hunt will fail

Burnt in oil: A fact-finding report on operation Green hunt in Dantewada in September-October 2009

Operation tribal hunt?

“OPERATION GREEN HUNT”: CENTRAL GOVERNMENT TARGETS TRIBALS AND GUERILLAIST LEFTISTS

Sandwich Theory And Operation Green Hunt

Chhattisgarh Groups Plan Opposition to Operation Green Hunt

-

-

-

-

இந்திய அரசியலின் இழிநிலை: ஆ.விகடனில் தோழர் மருதையன் !

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி!

பினாயக்சென் விடுதலை: அரசை எதிர்த்ததால் இரண்டாண்டு சிறைவாசம்!!

இந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்படும் காஷ்மீர்!!

திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? – சி.பி.எம். இன் நில அபகரிப்பு

இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

லால்கர்: சி.பி.எம்.- காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்!