கடந்த 15 வருட கால தேசிய விடுதலைப் போராட்டமானது இன்று முன்னொரு போதும் இல்லாத ஒரு பின்னடைவை சந்தித்துள்ளது. யாழ் குடா நாட்டை முற்றுமுழுதாகவே இராணுவம் கைப்பற்றியுள்ள நிலையும் , சிங்களப் பெரும் தேசிய இனவாதிகள் தமது இனவெறிக்  கொடிகளை உயரப் பறக்கவிட்ட நிலையில் தமிழ் மண்ணானது சூரையாடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடந்த கால எண்ணற்ற வெற்றிப் பிரகடனங்கள் எல்லாம் எந்த எதிர்பார்ப்புமின்றியும் நொருங்கிப்போய் உள்ளது. நாம் முன்பு குறிப்பிட்டது போல் இப்போராட்டம் வீங்கவைத்த வெற்றிப் பிரகடனங்கள் தான் என்பதை வரலாறு தெளிவாகவே உறுதி செய்துள்ளது.

 

போராடும் புலிகளை விட அதை அண்டிப் பிழைத்த ஒரு பிரிவு எப்பொழுதும் போராடும் போராளிகளின் அபிப்ராயத்திற்கு முன்பே முந்திக் கொண்டே முடிவுகளை அறிவித்துவிடும் போக்கு போராட்ட அமைப்பையே அதன் தளத்தில் சிதைத்து சீரழித்து வந்தது.

 

தொடர்ச்சியான முகங்கொடுக்க முடியாத மக்கள் விரோத நடவடிக்கைகள் எப்பொழுதும் வெற்றியைப் பிரகடனம் செய்து அரசியல் நடத்திய புலிகளின் நிலைகளை நாம் சென்ற இதழில் குறிப்பிட்டதுடன் , அதன் தொடர்;ச்சியில்  புலிகள் தாமாகவே பின் வாங்கிச் செல்ல உள்ளத்தையும் சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளோம்.

 

இனவெறி சிங்கள பாசிச சந்திரிக்கா அரசு புலிகளை மிகத் திட்டமிட்ட முறையில் அரசியல் ரீதியில் பலவீனப்படுத்துவதிலும் பின் இராணுவ ரீதியில் பின்வாங்க வைத்ததிலும் வெற்றி பெற்றது என்பது ஒரு தற்செயலான விபத்தல்ல. மாறாக நரித்தனத்துடன்  கூடிய ஒரு  மிக மோசமான எல்லாவித  மோசடியுடன் கூடிய ஒரு சதிகாரனின் அழகிய பாத்திரத்தை சந்திக்கா மிகத் திறமையாகவே கையாண்டிருந்தார்.

 

வங்குரோத்து அரசியலுடன் கூடிய , எப்பொழுதம் படுகொலைகள் மூலமும் வெடி குண்டுகள் மூலமும் அரசியல் நடத்தும் புலிகளின் ராஜதந்திரமற்ற செயல்முறை , இலங்கை தலைவர்களுக்குள் மிக் மோசமான ஒரு சந்திரிக்கா தலைமையை இனங்காணாமல் போனது என்பது  புலிகளை விட தமிழ் மக்கள் தங்கள் சொந்த தேசிய அடையாளங்களை இழக்கும் நிலைக்குள் நகர்த்தியுள்ளது.

 

சந்திரிக்கா மிகச் சிறந்த ஏமாற்றுக்காரியாக மாறியதுடன் மட்டுமன்றி , சிங்கள இன வாதத்தைப் பேணும் ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்த பின்பு அதையே வெட்டிக் குறுக்கும் பனியில் ஈடுபட்டபடி , இத்தீர்வுத் திட்டத்தை அமுல்படுத்த முடியாததிற்கு தமிழ்த் துரோகக் குழுக்களே காரணம் என ஓர் அப்பட்டமான பொய்யையே கூறி அதையே உண்மையாகக் காட்ட முடிந்தது என்றால் இந்த மோசக்காரியை நாம் புரிந்துகொள்ள வேறு எதுவுமே தேவையில்லை.

 

இந்த நிலையில் கடந்த 10 வருடங்கள் தமிழ் மக்களின் பிடியில் இருந்த ஒரு பகுதி சொந்த மண்ணை இனவெறி சந்திரிக்கா அரசு கைப்பற்றியுள்ளது. இந்நிலை ஏற்பட்டமைக்கான முழுப்பொறுப்பும் புலிகளையே சாரும். எதிரி யார்? நண்பன் யார்? என்பதை எந்த வரையறையின்றி தம்மை தமது கருத்துக்கு விசுவாசம் இல்லாதவர்களையும் ஒழித்துக்கட்டியதுடன் , தமது சொந்த இயக்கத்திலும் அதை விட்டுவைக்கவில்லை. எப்பொழுது துதி பாடியவர்களைக் கொண்ட ஒரு கூட்டமே போராட்டத்தை மதிப்பிடவும் , வாழ்த்துப்பாடவும் இருந்தது என்பது பேராட்டத்தில் பிழைகளைக் கூட  இனம் காண முடியாத ஒரு நிலைமையை அடைந்தது.

 

(உ+ம்) யாழ் குடா நாட்டை கைப்பற்ற என இனவெறியரசு முன்னெடுத்த முதல் நடவடிக்கையின் பொது மக்களை வெளியேற்றி புலிகளால் முதல் வேண்டுகோள் விடப்பட்டது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து புலிகள் தமது தவறை உண்ர்ந்து அதைத் தடுக்க ஊரடங்கு முடிந்தவுடன் மக்கள் கட்டுப்பாட்டையே மீறி ஓடத் தொடங்கினர். முதலில் பீதியை விதத்த நிகழ்வின் பின்னர் அவர்களையே கட்டுப்படுத்த முடியாது போனது.

 

இந்நிகழ்வின் பின் உள்நாட்டு , வெளிநாட்டு புலிகளின் செய்தி ஊடகங்கள் தலைவர் கேட்டதற்கு இணங்கியே மக்கள் வெளியேறினர் எனப் பிரகடனம் செய்தனர். அதை வெற்றியேன்றனர். ஆனால் உண்மையில் மக்கள் புலிகளின் இரண்டாவது வேண்டுகோளை  ஏற்று நின்று இருந்த பின் அது மட்டுமே வெற்றியாக இருந்திருக்கும். அது மட்டுமே போராட்டத்தை வழிநடத்தும் வழியாக இருந்திருக்கும். மற்றைய வழி தப்பியோடும் வழியாக மக்களை மட்டுமன்றி புலிகளின் உறுப்பினர்களைக் கூட இட்டே சென்றது.

 

இன்றைய நிலைமை ஏற்பட்டமைக்கு முழுக்க முழுக்க புலிகள் தான் பொறுப்பாகும். சிங்கள இனவெறியரசு ஆக்கிமித்தது எனக் கூறுவதும் தமது தவற்றை மூடிமறைக்கும் கைங்கரியமேயாகும். புலிகளின் வங்குரோத்து அரசியலின் தோல்வி நியாயப்படுத்த முடியாத வகையில், போராட்டத்தை சிதைத்தது நொருக்கியள்ளது. புலிகள் - சந்திரிக்கா அரசு பேச்சுவார்த்தை தொடங்க முன்பே சந்திரிக்கா பற்றி ஒரு மாயையை மக்கள் முன் புலிகளின் வெளியீடுகள் எடுத்துச் சென்றது. சந்திரிக்கா அரசு தமிழ் மக்களின் காவலராக இட்டுக் காட்டுவதில் புலிகளின் பங்கு மிக முக்கியமானதாகும். இதன் தொடர்ச்சியில் எழுந்த பேச்சுவார்த்தையில் சந்திரிகா அற்ப தீர்வை முன்வைத்து தம்மை நடுரோட்டில் அரசியல் அநாதைகள் ஆக்கிவிடுவார் என பயந்த புலிகள், தாம் சந்திரிகா பற்றி முன்வைத்த பழைய கருத்தில் நம்பிக்கை கொண்டு இராணுவக் கோரிக்கையடங்கிய சில தீர்வுகளை முன்வைத்தனர்.

 

இது சந்திகா அரசுக்குக் கிடைத்த முதல் வெற்றியாக அமைந்தது. தன்னுடைய இனவாத மேலாதிக்க நிலையை பாதுகாக்க , அம்பலப்படாத வகையில் தன்னை தகவமைத்துக் கொள்ள புலிகள் ஒரு அழகான பரிசை வெள்ளித் தட்டில் வைத்து வழங்கினர். சர்வதேச ரீதியாக புலிகளின் கோரிக்கை தேசியத்தை உயர்த்தி பிரச்சாரம் செய்ய முடியாத வகையில் , சொந்த நலன் சார்ந்த வகையில் மக்களின் பெயரால் கோரிக்கையாக வெளி வந்தன. இது ஒர் இராணுவக் கோரிக்கையாக, மக்களைச் சார்ந்து இருக்காத வகையில் சர்வதேச ரீதியில் , சில அரசு, இராணுவம் விவாதிக்கும் விவகாரமாக மாறியது என்பது தேசிய இனக்கோரிக்கையை மூடிமறைக்கம் அளவுக்கு இட்டுச் சென்றது.

 

உண்மையில் சந்திரிகா அரசு ஓர் இனவாத அடிப்படையைக் கொண்டது என்பதைப் புரிந்து கொண்டு, தமிழ் மக்களின் சுயநிர்ணயக்  கோரிக்கையை தரும்படி கோரியிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் சந்திரிக்கா அரசு ஒரு அற்ப தீர்வையும் முன்வைக்க முடியாது திணறி, அரசுக்குள் உள்ளார்ந்த முரண்பாடு வளர்ததும், சிங்களப் பகுதியில் இருந்த சுய நிர்ணய ஆதரவு சக்திகளை தேசியத்தின் பக்கத்திற்கு வென்றெடுத்திருக்க முடியும். இது நடந்திருப்பின் சந்திரிக்கா அரசு ஆட்டங் கண்டு பலவீனமடைந்து, யாழ்பாணத்தைக் கைப்பற்;றுவது சாத்தியமற்றதாக்கியிருக்கும். அத்துடன் சர்வதேச ஆதரவை மொத்தமாக தேசிய போராட்டத்pன் மீது திருப்பியிருக்க முடியும்.


ஆனால் நடந்ததோ எதிர்நிலையாகவும், தொடர்ச்சி சில சிங்களக்கிராம அப்பாவி மக்கள் கொள்ளபட்டதும், இராணுவ இலக்கற்ற மக்கள் பிரதேசத்தில் நடந்த கண்ட தாக்குதல்கள் புலிகளை ஒரு மக்கள் விரோத பயங்கரவாத இயக்கமாக சந்திரிக்கா அரசு சர்வதேசம் எங்கும் பிரச்சாரப்படுத்தி அதில் வெற்றி பெற்று வருவது காணமுடிகிறது. இதனைத் தொடர்ந்து கனடா புலி உறுப்பினர்கள் மீது கைதுகள் நடப்பதையும் , அவர்களின் மீது கைதுகள் நடப்பதையும் அவர்களின் சில மக்கள் விரோத நடவடிக்கைகளை இவ்வரசுகள்  பயன்படுத்துவதையும் காணமுடிகின்றது. 

 

இந்நிலையில் யாழ் குடா நாடு இராணுவத்தால் கைப்பற்றிய பின்பு புலிகள் மீளவும்  தமது தவறான ஒரு புதிய கோரிக்கையை முன்வைதத்துள்ளனர். இதாவது ஆக்கிரமிக்கபட்ட பிரதேசத்தில் இருந்து இராணுவம் வெறியேறினால் மட்டுமே பேச்சு வார்த்தை என அறிவித்துள்ளனர். இவ்வறிவித்தல் போராடுபவர்களையும், அவர்களின் ஆதரவாளர்களையும் தற்காலிகமாக உற்சாகப்படுத்தலாம். ஆனால் இது தேசிய விடுதலைப் போராட்டத்தை மேலும் சிதைக்கவுள்ளது. ஏனெனில் எமது போராட்டம் மக்கள் போராட்டமாக இன்றி இளைஞர்களை கொண்ட ஒரு புலி போராட்டமாக உள்ள நிலையில், ஒரு இராணுவக் கோரிக்கையாக இது உள்ளது. ஒரு யுத்தத்தின் மூலம் பிடித்த பிரதேசத்தை விட்டு வெளியேறிய பின் மட்டுமே பேச்சுவார்த்தை என்பது புலிகள் மேலும் அம்பலப்படுத்த அரசுக்குக் கிடைத்த வெற்றியாக மாறும்.

 

யுத்தத்தை நடத்துவது அரசும் ஏகாதிபத்தியங்களும் ; இக்கோரிக்கையை அரசு, ஏகாதிபத்தியங்களும் புலிகளை பயங்கரவாத இயக்கமாக பிரகடனம் செய்யவும், புலிகள் அரசியல் தீர்வுக்கு தயாரில்லை என காட்டவும் இக்கோரிக்கை எவ்வளவு நியாயமாக இருந்தாலும் இட்டுச் செல்லும். மீண்டும் சந்திரிக்கா அரசு ஒரு இனவாத அரசு என்பதை புரிந்து கொண்டு அரசியல் தீர்வைக்கோர வேண்டும். அதுவும் 1985 திம்பு பேச்சுக் கோரிக்கையை அடிப்படையாக முன்தள்ள வேண்டும். திம்புக் கோரிக்கைக்கு குறைந்தது எதையும் ஆராயத் தயாரில்லை என்பதை பிரகடனம் செய்ய வேண்டும். 10 வருடங்களுக்கு முந்திய சரியான கோரிக்கையை முன் தள்ளினாலும் அதன் மூலம் இக்கோரிக்கையில் அன்று உடன்பட்டிருந்த இன்றைய துரோகக் குழுக்களையும் வாய் மூடவைக்கும் அல்லது இணைந்து கோர வைக்கும் ஒரு சரியான ராஜ தந்திர வழியுடன் அரசியல் தேவை. இது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீது , அதன் இன அடையாளங்களை குறைந்த பட்சம் பேணவும் உள்ள ஒரே தீர்வாகும். இல்லாதவரை தேசிய போராட்டம் சீரழியவும், பின்தங்கிச் செல்லும், திம்புக் கோரிக்கையை முன்வைத்து அதைத் தரும்படி கோரி அரசையும் , உலகத்தையும் நிர்பந்திக்க வேண்டும். அந்த வகையில்

 


திம்புகோரிக்கை :

1. இலங்கை தமிழர்களை ஒரு தேசிய இனமென அங்கீகரித்தல்.


2. இலங்கைத் தமிழருக்கு இன்னதென கூறக்கூடிய தாயகம் உண்டு என்பதை அங்கீகரி;த்தல் ,


3. தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.


4. இலங்கையை தம் நாடாகக் கொண்ட எல்லாத் தமிழர்களது பிரஜாவுரிமையையும் அடிப்படை உரிமைகளையும் அங்கீகரித்தல்.

 

இக்கோரிக்கையை சாதாரணமாக ஓர் இனத்தின் ஜனநாயகக் கோரிக்கையாகும். இதைக் கோருவது சர்வதேசிய ரீதியாக போராட்டத்திற்கு பலத்தை சேர்ப்பது மட்டுமன்றி இதை வழங்க மறுக்கும் அரசை அம்பலப்படுத்தும், இதை அடிப்படையாகக் கொண்டு தேசிய விடுதலைப் போiராட்டத்தை மேலும் ஒருபடி உயர்த்த முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.