மாலபே தொலில்நுட்ப கல்லூரி மாணவனான நிப்புன ராமநாயக்கவின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பொலிஸாரையும் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல மேலதிக நீதிவான் மஹதில் பிரசாந்த டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

மாணவனின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 03 சப் இன்ஸ்பெக்டர்கள், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் ஏழு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட பதினொரு பொலிஸாரும் கைது செய்யப்பட்டிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலி;ஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட 11 பொலிஸாரும் நேற்று கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் எஸ்.எஸ்.டி. வாஸ். குணவர்த்தனவின் மகன் ரவிந்து குணவர்த்தன சுகயீனம் காரணமாக பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகியிருந்த குற்றத்தடுப்புப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க நீதிமன்றில் தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படுவர். சம்பவம் தொடர்பான முறைப்பாடு பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைக்கப் பெற்றதையடுத்து பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ணவின் பணிப்புரையின் பேரில் உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.


பிற்குறிப்பு:-

இத்தாக்குதல் சம்பவமும் பொலிஸாரின் அராஜக செயல்கள் பட்டியலின் அடுத்த படிக்கல்லாகும். அதாவது, தாக்குதலுக்குள்ளான தொழில் நுட்பக் கல்லூரி மாணவனான நிப்புன ராமநாயக்கவுடன், கொழும்பு குற்றப்புனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் எஸ்.எஸ்.பி. வாஸ் குணவர்த்தனவின் மகன் ரவிந்து குணவர்த்தன பகையுணர்வு கொண்டிருந்தார் என்ற காரணத்திற்காகவே பொலிஸாரும், எஸ்.எஸ்.பி. வாஸ் குணவர்த்தனவின் மகனும், போதாதென்று எஸ்.எஸ்.பி.வாஸ் குணவர்த்தனவின் மனைவியும் குறித்த மாணவனைத் தாக்கியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின்படி, தாக்குதலுக்குள்ளான மாணவனான நிப்புன குறித்த தினத்திற்கு முன்தினம் எஸ்.எஸ்.பி. வாஸ் குணவர்த்தனவின் மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்தே சம்பவதினம் நன்பகல் 12.45 மணியளவில் நிப்புன கண்கள் கட்டப்பட்ட நிலையில் பொலிஸ் ஜீப் வண்டியில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கடத்திச் செல்லும் வழியிலேயே கைது செய்யப்பட்டுள்ள பொலிஸாரில் ஒருவர் தன் விசுவாசத்தைக் காட்டும் முகமாக குறித்த மாணவனை துப்பாக்கிப் பிடியினால் தாக்கியுள்ளார். இச்சந்தர்ப்பத்தில், வண்டியிலிருந்த வாஸ் குணவர்த்தனவின் மகன் ரவிந்து குணவர்த்தன தன்னுடைய வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அம்மா கதவைத் திறந்து வையுங்கள் உங்களுக்காக பரிசு ஒன்றை எடுத்து வருகின்றேன் என் தன் அம்மாவிடம் (எஸ்.எஸ்.பி. வாஸ் குணவர்த்தனவின் மனைவி) கூறியுள்ளார். இதனையடுத்து, பிரதான சந்தேக நபரான ரவிந்து குணவர்த்தனவும், அவரது தாயும் குறித்த மாணவனை தாறுமாறாகத் தாக்கியுள்ளனர். பின்னர் சிலர் மூலம் மாணவனுக்கு சித்தாலேப பூசப்பட்டுள்ளதுடன், காயங்களுக்கு ஐஸ் கட்டியும் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் ஜீப் வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டு மாணவனை கொண்டு சென்றுள்ளனர் இந்நிலையிலேயே, பொரளை காசல் வீதி சமிக்ஞை விளக்குகளை கடந்து செல்லும் போது மாணவன் கண்கட்டப்பட்டிருந்த சீலைககளின் இடைவெளி வழியாக நோக்கியதில், ஜீப் வண்டியின் முன்னிருக்கையில் எஸ்.எஸ்.பி. வாஸ் குணவர்த்தன அமர்ந்திருப்பதைக் கண்டுள்ளார். பின்னர் நேரடியாக கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவன் முன்னிலையில் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டு, கையொப்பம் இடுமாறு பணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவன் அதில் கையொப்பமிட மறுத்துள்ளார். ஏனெனில், அது அம்மாணவனின் வாக்குமூலம் கிடையாது என்பதை மாணவன் வாசித்தறிந்துள்ளார். இதனாலேயே ஒப்பமிட மறுத்துள்ளார். பின்னர் எப்படியோ விடயம் வெளிவர, எஸ்.எஸ்.பி. வாஸ் குணவர்த்தன பொலிஸ்மா அதிபரினால் பொலிஸ் தலைமையகத்துக்கு உடனடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இத்தாக்குதல் சம்பவத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவின் எந்தவொரு அதிகாரியும் சம்பந்தப் படவில்லையென பிரதி பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக சேவையிலிருக்கின்ற 80 ஆயிரம் பொலிஸாரையும் குறைகூறிவிட முடியாதென்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். (எது எப்படியோ மாணவன் 12.45க்கு கைது செய்யப்பட்டு 1.30 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஒப்படைக்கப்படும் வரை எஸ்.எஸ்.பி. வாஸ் குணவர்த்தனவின் மனைவி, மக்களாலும், அடிவருடும் பொலிஸாரினாலும் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து நீதிமன்றம் இப்பொலிஸ் காடையர்களுக்கு என்ன தீர்ப்பினை வழங்கவிருக்கின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போமே.) –தகவல்.. “அதிரடி”யின் தென்னிலங்கை நிருபர்களில் ஒருவரான “ஊடுருவி”

http://athirady.com/