இந்திய இராணுவத்துடன் புலிகள் முரண்பட்டு மோதல் நடத்திய காலத்தில் மறைந்த புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இந்திய அரசின் இலங்கைப் பிரசைகள் மேலான பயங்கரவாத நடவடிக்கைக்கு தாங்கள் எப்படி கைக்கூலிகளானோம் என பின்வருமாறு அம்பலப்படுத்துகின்றார்.

இலங்கை நாட்டின் அநுராதபுரத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆட்சிக்காலத்தில் 1985 ம் ஆண்டு மே மாதம் 14 ம் திகதி 146 அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி தாங்கள் பெண்கள் குழந்தைகள் வயோதிபர், புத்தபிக்குகள் என யார் எவர் என்று பாராமல் சுட்டுத்தள்ளிய படுகொலையை நிகழ்த்தும்படி தங்களுக்கு ஆலோசனையும் பணமும் ஆயுதமும் பயிற்சியும் உளவுத் தகவலும் தந்து தங்களை வேண்டிக் கொண்டவர்கள் யாருமல்ல இந்திய அரசேயாகும் என்றார்.

 

இறைமையுள்ள ஒரு நாட்டின் அப்பாவி குடிமக்களை குறிவைத்து கொலைக்களமாக்கி அவர்களின் உயிர் குடித்து இரத்தத்தை ஆறாய் ஓடவைத்த பயங்கரவாதத்தை பணம் ஆயுதம் மற்றும் திட்டம் தயாரித்து அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்த இந்திய ஆளும் வர்க்கமே! இன்று மும்பை பயங்கரவாதத்தை யாரோ ஏற்றுமதி செய்ததாக அலறுவதற்கு உனக்கு என்ன அருகதையுண்டு?!


இந்திய அரசு இலங்கையரசுடன் போடவிருந்த இலங்கை இனப்பிரச்னை சம்பந்தமான ஒப்பந்தத்திற்கு இலங்கையரசு ஒத்துவராத போக்கிலிருந்து அவர்களை அடக்கி நிர்ப்பந்தப்படுத்துவதற்காகவும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை உலுப்புவதற்காகவும் எல்லாவற்றிலும் மேலாய் தமது மேலாண்மையை இலங்கை மீது இறுக்கமாய் நிறுவிக் கொள்வதற்காகவும் இந்திய அரசின் நெறியாள்கையில் நடந்தேறிய பயங்கரவாதம் இதுவாகும்.

 

அது மட்டுமல்ல ஈழப்போராட்டத்திற்கென தோற்றமெடுத்த இயக்கங்கள் மக்கள் மயப்பட்ட போராட்ட நெறிமுறைகளிலிருந்து விலகிச் சென்று பயங்கரவாத நடைமுறைக்குள் அவர்களை வீழ்த்துவதற்காய் ஆயுதமும் பயிற்சியும் அவசர அவசரமாய் அள்ளிக் கொடுத்தது யார்?

 

பஞ்சாப் பொற்கோவிலுக்குள் கைப்பற்றிய ஆயுதங்கள் கைக்கூலி இயக்கங்களின் கைகளுக்கு எட்டியது எப்படி?

 

பங்களாதேசம் முதற் கொண்டு ஈழத் தமிழ்மக்கள் ஈறாய் ஏற்றுமதி செய்த பயங்கரவாதத்துக்கு மும்பாய் பயங்கரவாதம் எம்மட்டு.

 

மும்பாய் பயங்கரவாதம் இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்துவெறி சார்பில் உண்டான உள்ளுர் உற்பத்தி. இந்திய ஆளும் வர்க்கம் தனது அயல்நாடுகளுக்கு ஏற்றமதி செய்த பயங்கரவாதம் போலன்றி மும்பாய் பயங்கரவாதம் எந்த அயல்நாட்டினதும் ஏற்றுமதியல்ல.

 

அநுராதபுரத்தில் யார் எவர் என்ற வித்தியாசம் இன்றி வழியில் தெருவில் அகப்பட்டோர்களை படுகொலை செய்யும்படி ஏவிவிட்ட இப்பயங்கரவாதத்தை புலிகள் நடத்த ஒப்புக் கொண்டார்கள்.

 

1985 ஆம் ஆண்டு மே மாதம் 14 ம் திகதி பயணிகள் பஸ் ஒன்றைக் கடத்தி அதில் அநுராதபுர நகரின் பிரதான பேருந்து நிலையத்தை வந்தடைந்த புலிகள் அங்கு பஸ்சுக்கு காத்திருந்த பிரயாணிகளை பலரை கண்மண் தெரியாமல் சுட்டு வீழ்த்தினார்கள். அதன்பின்னால் ஸ்ரீமகா போதி புத்த விகாரையினுள் புகுந்து பிக்குகளையும் காணிக்கை செலுத்த வந்திருந்த பொதுமக்களையும் சுட்டு வீழ்த்தினார்கள். திரும்பிச் செல்லும் வழியில் வில்பத்து வன பாதுகாப்பு வலயப் பகுதியில் மேலும் 18 பொதுமக்களை சுட்டு வீழ்த்தினார்கள். இந்த அரசியல் சதுரங்கத்தில் இந்திய ஆளும் வர்க்கத்தால் ஏவிவிடப்பட்ட பயங்கரவாதத்தில் மொத்தமாக படுகொலையானோர் 146 அப்பாவிச் சிங்கள பொதுமக்கள். படுகாயமடைந்தோர் பலபேர்.

 

மும்பாய் தாக்குதல் கொடுரம் எனில் இந்திய ஆளும் வர்க்கம் தயாரித்து நெறிப்படுத்திய இந்த அயல்நாட்டுக்கான பயங்கரவாத ஏற்றமதி எந்த வகை?

 

மும்பாய் தாக்குதலுக்கும் மேலாக தெருவெங்கும் குதறப்பட்டு பிணமாக்கப்பட்ட இவ் அப்பாவிப் பொதுமக்களின் மேலான இப்பயங்கரவாதத்தை கீழே வீடியோ ஒளிப்பதிவில் காண்பவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் பயங்கரவாதத்தை இரத்த சாட்சியாய் பதிந்து கொள்ளுங்கள்.

சிறி 02.12.08