தமிழ் ஈழப் போராட்டத்தின் பாய்ச்சல் இன்று சீரழிக்கப்பட்டுச் பாசிசமாக பரிணாமம் பெற்றுள்ளது. இந்நிலையில் பாசிசம் முழுமையாக எந்த நிபந்தனையுமின்றி அம்பலப்பட்டு வரும் இன்றைய நிலையில், எழுந்து வரப்போகும் போராட்டம் வேறொரு பாதையில் சீரழிந்து வருகிறது. எப்படிப் பாசிசம் மக்களின் விடுதலைக்கு எதிரானதோ அதற்கு எந்த விதத்திலும் திரிபுவாதமும், நவமார்க்சிசமும், வரட்டுவாதமும் குறைவானதல்ல.

 

திரிபுவாதமும், நவமார்க்சிசமும் வரட்டுவாதத்திற்கும் எதிராகப் போராடும் அதேநேரம் மார்க்சிசத்தை பொருள்முதல்வாத நோக்கில் ஆராய்வது அவசியமானது. நாம் அந்த வகையில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெலின், ஸ்டாலின், மாவோ போன்றோரின் அடிப்படைக் கோட்பாடுகளை மேற்கோள் காட்டுவது தவிர்க்க முடியாது. அவர்கள் சொந்த நாட்டின் குறிப்பான நிலைமைகளையொட்டி வரைந்த கருத்துக்கள் எம் பொருத்தமான நிலைமைகளுடன் பொருந்தமாலிருக்கலாம். ஆனால் பொதுவானவையும், அடிப்படை விதிகளும் என்றும் அடிப்படையானது. இதை மறுக்கும் சிலர் அடிப்படைக் கோட்பாடுகள் எந்த வகையில் தவறானது என்பதை ஆராய்வதை விடுத்து, தமது புதிய கருத்துக்களைத் திணிக்கும் வகையில் வகையில் அடிப்படை விதிகளைப் பழைமைவாதமென கூச்சலிடுகின்றனர். புதிய கருத்துக்களை நிராகரிக்கத் தவறுவதேன்? அப்படி நிராகரிக்காமல் பழைமைவாதம் என்ற ஒரு சொற்றொடரூடாக நிராகரிப்பதென்பது கற்பனாவாதமே. இன்றைய சோவியத், சீனா நிலைமைகளைக் கொண்டே புதியதென ஆராய்வதும், கடந்தகால தத்துவம் தவறெனின் அதை தெளிவாக முன்வைத்தே புதியதை நோக்கிச் சொல்ல வேண்டும். இதுவே மார்க்சிய அணுகுமுறையாகும்.

 

முரண்பாடுகளைக் கையாள்வது பற்றிய அடிப்படை விடயத்திலிருந்தே சமூகப் பிரச்சனைகளைக் கண்டறிய முடியும். இன்று ஜக்கிய இலங்கை, தமிழீழம் மற்றும் பல விடயங்களை ஆராய்வதெனின் முரண்பாடுகளின் செயற்பாட்டை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படை முரண்பாட்டை கண்டறிய மாவோவினால் எழுதப்பட்ட முரண்பாடுகள் பற்றி... என்ற நூலிருந்து சில பகுதிகளைத் தொகுத்து முன்i வைக்கிறோம்.

 

அறிவதில் இரு போக்குகள் உள்ளன. ஒன்று குறிப்பிட்ட தனி இயங்கியலிலிருந்து பொதுவானதைப் பற்றி அறிவது. மற்றொன்று பொதுவானதிலிருந்து குறிப்பிட்ட தனி இயல்பு வாய்ந்ததை அறிந்து கொள்வது. இவ்வாறு அறிவு எப்போதுமே சூழல் வட்டங்களாக இயங்குகின்றது. அறிவியல் முறை நெறிபிறழாமல் கடைப்பிடிக்கப்படும் வரை ஒவ்வொரு சுற்று வட்டமும் மனித அறிவை மேலும் ஒருபடி உயர்த்தி அதை மேன்மேலும் ஆழமானதாக்குகின்றது. இப்பிரச்சனையில் நமது வறட்டு தத்துவவாதிகள் எங்கே தவறுகிறார்கள் தெரியுமா? ஒர் முரண்பாட்டின் எங்கும் நிறைந்த இயல்பையும் பொருட்களின் பொது உட்சாரத்தையும் ஆராய வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. மற்றோர் புறம் பொதுவான உட்சாரத்தையும் புரிந்து கொண்ட பிறகு, நாம் தொடர்ந்து சென்று, இதுவரை முற்றாக ஆராய்ந்தறியப்படாத அல்லது இப்போது புதிதாகத் தோன்றியுள்ள திட்டவட்டமான பொருட்களையெல்லாம் ஆராய வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டுள்ளாததிலும் தான் அவர்கள் தவறு இழைக்கின்றனர். நமது வறட்டுத் தத்துவவாதிகள் முழுச் சோம்பேறிகள். அவர்கள் திட்டவட்டமான விசயங்களை பற்றி ஆராய எவ்வித முயற்சியும் எடுக்க மறுக்கிறார்கள். பொது உண்மைகள் வெறும் மையத்திலிருந்து- சூனியத்திலிருந்து---- தோன்றுவதாக கருதுகின்றார்கள். அவர்கள் அவற்றைச் சிறிதும் புலனற்ற அருவமான ஆழங் காணமுடியாத ஒட்டை வாய்ப்பாடுகளாக ஆக்கி விடுகிறார்கள். அதாவது குறிப்பிட்டதிற்குமுள்ள, ஒன்றுக்கொன்றான தொடர்பைப் பற்றியும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

 

பண்பால் வேறுபட்ட முரண்பாடுகளைப் பண்பால் வேறுபட்ட முறைகளாலேயே தீர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளிவர்க்கத்திற்கும் இடையிலுள்ள முரண்பாடு சோசலிசப் புரட்சி முறையால் தீர்க்கப்பட வேண்டும். பரந்து பட்ட மக்களுக்கும், நிலவுடமை அமைப்புக்கிடையில் உள்ள முரண்பாடு ஜனநாயகப் புரட்சி முறையால் தீர்க்கப்பட வேண்டும். குடியேற்ற நாடுகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்குமிடையில் உள்ள முரண்பாடு தேசிய புரட்சி முறையால் தீர்க்கப்பட வேண்டும்.....

 

நமது வரட்டுவாதிகள் இக் கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதில்லை வெவ்வேறு வகையான புரட்சியில் அதன் நிலைமைகள் வேறுபடுகின்றன என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. எனவே வேறுபட்ட முரண்பாடுகளைத் தீர்க்க வேறுபட்ட வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. அதற்க்கு மாறாக தாம் கற்பனை செய்து கொண்ட மாற்ற முடியாத வாய்ப்பாடொன்றை எப்போதும் எல்லா இடங்களிலும் தம் மனம் போனபடி எதிலும் கையாளுகின்றனர். ஒரு பிரச்சனையை ஆராயும் போது அகநிலைப் போக்கு, ஒரு தலைப்பட்ட போக்கு, மேலோட்டமான போக்கு ஆகியவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.

 

ஒரு தலைப்பட்சப் போக்கு என்பது பிரச்சனைகளை முழுமையாகப் பார்க்கத் தவறுவதாகவும். எடுத்துக் காட்டாக ஜப்பானைப் புரிந்து கொள்ளாமல் பொதுவுடமைக் கட்சியை மட்டும் புரிந்து கொள்வது, கோமிடாங்கைப் புரிந்து கொள்ளாமல் பொதுவுடமைக் கட்சியை மட்டும் புரிந்து கொள்வது, முதலாளிய வர்க்கத்தைப் புரிந்து கொள்ளாமல் பாட்டாளிவர்க்கத்தை மட்டும் புரிந்து கொள்வது, பெரு நில உடமையாளர்களைப் புரிநது கொள்ளாமல் விவசாயிகளை மட்டும் புரிநது கொள்ளவது, முழுமையாக புரிந்து கொள்ளாமல் தனிப்பகுதியை மட்டும் புரிந்து கொள்வது----------

லெனின் கூறினார் ஒரு பொருளை உண்மையாக அறிய வேண்டுமானால் நாம் அப்பொருட்களின் அனைத்துப் பகுதியையும் எல்லாத் தொடர்புகளியும் இடைத்தொடர்புகளையும் தழுவிய வகையில் ஆராயவேண்டும்.

 

ஒருதலைப்பட்ச போக்கு, மேலோட்டப் போக்கும் கூட அகநிலை நோக்கு தான் காரணம். புற நிலையில் உள்ளவை அனைத்தும், உண்மையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, அவ்விதிகளின் நியதிக்குட்பட்டவை. ஆனால் ஒரு சிலரோ, உள்ளவை உண்மையில் எவ்வாறு உள்ளனவோ அவ்வாறே அவற்றைச் சிந்தனைக்கு உட்படுத்தும் கடமையைச் செய்வதற்குப் பதிலாக, அவற்றை ஒரு தலைப்பட்சமாகவும், மேலோட்டமாகவும் மட்டும் பார்க்கிறார்கள். அவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்புகளையோ, அவற்றின் அகவிதிகளையோ அறியாதிருக்கின்றனர். எனவே அவர்கள் முடிபு அகநிலைப் போக்காக உளளது.

 

ஒரு பொருளின் வளர்ச்சியிலுள்ள எதிரானவைகளின் இயக்கத்தின் வளர்ச்சிப்போக்கு முழுவதும் சிறப்புத் தன்மைகளைக் கொண்டிருக்கின்றது. இச் சிறப்புத்தன்மை, அவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்பிலும், அவற்றின் ஒவ்வொரு கூறிலும் காணப்படுகிறது. அத்தோடு அவ் வளர்ச்சிப் போக்கிலுள்ள ஒவ்வொரு கட்டமும் அக் கட்டத்திற்கே உரிய சிறப்புத் தன்மைகளைக் கொண்டுள்ளது.

 

ஒரு நீண்ட வளர்ச்சிப் பாதையிலுள்ள ஒவ்வொரு கட்டத்திலும் நிலைமைகள் வேறுபடுவது இயல்பு. ஏனெனில் ஒன்றின் வளர்ச்சிப் போக்கில் உள்ள அடிப்படை முரண்பாட்டின் தன்மையும் மாறாமல் இருந்த போதிலும், இந் நீண்ட போக்கில் ஒரு கட்டத்திலிருந்து அடுத்தக் கட்டத்திற்குச் செல்லும் போது அடிப்படை முரண்பாடானது மென் மேலும் கடுமையானதாகிறது. கூடவே அடிப்படை முரண்பாட்டால் நிர்ணயிக்கப்படுகிற அல்லது தாக்கப்படுகிற பல்வேறு பெரிய அல்லது சிறிய முரண்பாடுகள் சில கடுமையாகின்றன. சில தற்காலிகமாகவோ, அல்லது அரைகுறையாகவோ தீர்வு பெறுகின்றன. அத்துடன் சில புதிய முரண்பாடுகளும் தோன்றுகின்றன.

 

நாம் எவ் வகையிலும் அகநிலைப் போக்குடையவர்களாக இருக்கக் கூடாது. தன்னிச்சைப் போக்குடையவர்களாகவும் இருக்கக்கூடாது. இந்த நிகழ்ச்சியில் போக்குகளின் மெய்யான புறநிலை இயக்கத்தில் உள்ள திட்டவட்டமான பாருண்மையான நிலைகளிலிருந்து அவற்றின் திட்டவட்டமான முரண்பாடுகளைக் கண்டறிய வேண்டும். முரண்பாடுகள் ஒன்றுக்கொன்று கொண்டுள்;ள திட்டவட்ட உறவுகளையும் காணவேண்டும். அதாவது இயக்கம், பொருட்கள், நிகழ்ச்சிப் போக்குகள், சிந்தனை இவையெல்லாமே முரண்பாடுகள் தான் முரண்பாட்டை மறுப்பது என்பது அனைத்தையும் மறுப்பது ஆகும். இது எல்லாக் காலத்துக்கும் எல்லா நாட்களுக்குமுரிய, விதிவிலக-;--------; பொதுமை தழுவிய உண்மையாகும்.

 

ஒவ்வொரு முரண்பாடும் குறித்த தன்மை கொண்டிருப்பதாலேயே தனிப்பண்பு தோன்றுகின்றது. தனிப்பண்புகள் யாவும் நிலைமைக்குட்பட்டவையாகும், தற்காலிகமானவையாகவும் இருக்கின்றன. ஆகவே அவை சார்புடையவையாகவும் இருக்கின்றன.

 

சீனா போன்ற அரைக் காலனிய நாட்டில் முதன்மை முரண்பாட்டிற்கும் முதன்மையல்லாத முரண்பாடுகளுக்குமிடையே உள்ள உறவு ஒரு சிக்கலான கட்சியை நமக்கு வழங்குகின்றது.

 

இத்தகையதொரு நாட்டின் மீது ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கும் போது, ஒரு சில தேசத் துரோகிகளைத் தவிர, நாட்டின் பல்வேறு வர்க்கங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியத்திற்கெதிரான தேசியப் போரொன்றில் தற்காலிகமாக ஜக்கியப்பட முடியும். அத்தகைய வேளையில் ஏகாதிபத்தியத்திற்கும் குறிப்பிட்ட நாடுகளிற்குமிடையேயுள்ள முரண்பாடு முதன்மை முரண்பாடாகிறது. நாட்டின் பல்வேறு வர்க்கங்களுக்குமிடையேயுள்ள முரண்பாடு முதன்மை முரண்பாடாகிறது. நாட்டின் பல்வேறு வர்க்கங்களுக்குமிடையேயுள்ள முரண்பாடுகள் அனைத்தும்(இவற்றில் முன்பு முதன்மை முரண்பாடாக இருந்ததே அதுவும் அடங்கும் அதாவது நிலவுடமை அமைப்பு முறைக்கும் பரந்துபட்ட மக்கள் திரளினருக்கும் இடையிலான முரண்பாடும் இவற்றில் அடங்கும்.) தற்காலிகமாக ஓர் இரண்டாம் தர கீழ்ப்பட்ட நிலைக்குத் தாழ்த்;தப்படுகின்றன எது நிகழ்ந்தபோதிலும், ஒவ்வொரு கட்டத்திலும் தலைமைப் பாத்திரம் வகிக்கும் முதன்மை முரண்பாடு ஒன்றே ஒன்று தான் இருக்கும் என்பதிலும் யாதொரு ஜயமுமில்லை.

 

ஆகவே எந்தவொரு வளர்ச்சிப்போக்கிலும், ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் இருக்குமேயானால், அவற்றில் ஒன்று தலைமைப் பங்கை, நிர்ணயம் செய்யும் பங்கை வகிக்கும் முதன்மை முரண்பாடாகவே இருக்கும். மற்றவை இரண்டாம் நிலையில், கீழ்ப்பட்ட நிலையிலிருக்கும். எனவே, இரண்டோ அல்லது இரண்டுக்கு மேற்பட்ட முரண்பாடுகளுடைய எந்த ஒரு சிக்கலான வளர்ச்சிப் போக்கையும் நாம் ஆராயும் போது அதன் முரண்பாட்டைக் காண நாம் அனைத்து வழிகளிலும் முயல வேண்டும். ஒரு முறை இம் முதன்மை முரண்பாட்டை இறுகப் பற்றியதும் எல்லாப் பிரச்சனைகளும் எளிதில் தீர்வு காண்கின்றன. இந்த முறையான முதாலாளியச் சமுதாயம் பற்றிய தமது ஆய்வில் மார்க்ஸ் நமக்கு கற்றுத் தந்துள்ள முறையாகும்.

 

ஒரு வளர்ச்சிப் போக்கிலுள்ள அனைத்து முரணபாடுகளையும் ஒன்றுக்கொன்று சமமானவையாகக் கருதக்கூடாது. முதன்மை முரண்பாட்டுக்கும் இரண்டாம் நிலை முரண்பாட்டிற்குமிடையிலுள்ள வேறுபாட்டைக் காண வேண்டும். முதன்மை முரண்பாட்டை இறுகப் பற்றுவதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

 

முரண்பாடுக் கூற்றுக்களின் இரண்டில் ஒன்று முதன்மையானது. மற்றொன்று இரண்டாம் நிலையானது. முதன்மைக்கூற்றே முரண்பாட்டில் தலைமைப் பாத்திரம் வகிக்கிறது. ஒரு பொருளின் இயல்பை நிர்ணயிப்பதில் முதன்மைப் பங்கு வகிப்பது ஒரு முரண்பாட்டிலுள்ள முதன்மைக் கூறாகும். இது ஆதிக்க நிலையைப் பெற்றுள்ள கூறாகும்.

 

ஆனால் இந்நிலைமை நிலையானதன்று. முரண்பாட்டின் முதன்மைக் கூறும் முரண்பாட்டின் முதன்மையல்லாத கூறும் அவற்றின் எதிர் மறைகளாகத் தாமே மாறிவிடுகின்றன. இதற்கேற்பவே ஒரு பொருளின் இயல்பும் மாறுகிறது.

 

குறிப்பிட்ட கட்டத்தில் அ என்பது முதன்மைக் கூறாகவும் ஆ என்பது முதன்மையல்லாதக் கூறாகவும் இருக்கின்றன. மற்றொரு கட்டத்தில் அல்லது மற்றொரு வளர்ச்சிப் போக்கில் பாத்திரங்கள் இடம் மாறுகின்றன. ஒரு பொருளின் வளர்ச்சிப் போக்கிலுள்ள இரண்டு கூறுக்குமுள்ள சக்தி எந்த அளவுக்குக் கூடுகிறதோ அல்லது குறைகின்றதோ அந்த அளவுக்கு இடமாற்றம் நிகழ்கின்றது.