மக்கள் பற்றி பேசமறுக்கும் கூட்டுச் சதி. தத்தம் நோக்கில் அரசியல் ரீதியாக இழிந்து போன தமது சமூக இருப்பில் இருந்து கொண்டு, புலம்புவதும் அலம்புவதும் நிகழ்கின்றது. மக்களின் நலன் பற்றி, அவர்களின் சமூக பொருளாதார அரசியல் உறவு பற்றி எந்த அக்கறையுமற்ற வாதங்களும், நியாயங்களும்.

தமிழ் மக்கள் முதல் சர்வதேச ரீதியாகவே மக்கள் பற்றி அக்கறையற்ற இவர்கள், ஏகாதிபத்திய கண்ணோட்டத்தை தமது சொந்த அடிப்படையாக கொண்ட இந்த புத்திஜீவிகள், தம்மைத்தாம் தக்கவைக்க வாதங்களையும் பிரதிவாதங்களையும் முன்வைக்கின்றனர்.

 

அண்மையில் சேரனின் புலிசார்பு பற்றி தேனீயில் ஒரு புலியெதிர்ப்பு அலம்பல் அண்மையில் வெளியாகியது. இதைத் தொடர்ந்து சேரனின் புலம்பல் வெளிவந்தது. வேடிக்கை என்னவென்றால், இருதரப்பும் தத்தம் நிலையில் நின்று தாம் சமூக அக்கறை உள்ளவராகவும், மக்களுக்காக நேர்மையாக செயல்படுவதாகவும் கூறியது தான். இந்தக் அரசியல் கூட்டுச் சதியை, நாம் இனம் காணவேண்டியவராகவே உள்ளோம்.

 

சேரன் பற்றி தேனீக் கட்டுரையாளர் சில சம்பவங்களையும், அதன் மீதான உண்மைத்தன்மை பற்றிய தரவுகள் மீது, தனது புலியெதிர்ப்புக் கட்டுரையை வரைந்தார். சேரன் கட்டுரையாளரின் தரவுகளின் உண்மைத்தன்மையை கேள்வி கேட்டு, பதிலை அதன் மீது தனக்கு சாதகமாக்கி கொண்டு பதிலளித்தார். இப்படி விடையத்தின் உள்ளடகத்தின் மீதான அரசியல் விமர்சனத்தை, இருவருமே அரசியல் ரீதியாக செய்யவில்லை. இதுவே அலம்பலும் புலம்பலுமாகியது.

 

ஒரு புத்திஜீவியாக தம்மை கருதி செயலாற்றி வருபவர்கள், மக்களுக்கு கருத்துக்களை தெரிவித்து வருபவர்களின் அரசியல் நேர்மை என்பது என்ன? இது ஒரு அடிப்படையான, எல்லோருக்கும் பொருந்தக் கூடிய ஒரு கேள்வியை உள்ளடக்கிய வகையில், அரசியல் சாரத்தைக் கொண்டது. புத்திஜீவியாக ஒருவன் இருக்கின்றான் என்றால், யாருக்கு எப்படி இருகின்றான் என்பதைக் கொண்டே, அவனின் சமூக பாத்திரம் துல்லியமாக தீர்மானிக்கப்படுகின்றது. இலங்கையைச் சேர்ந்த ஒரு புத்திஜீவியாக, அதிலும் தமிழ் புத்திஜீவியாக அவன் இருக்கின்றான் என்றால், அவன் சமூகத்தில் என்ன (அரசியல்) பாத்திரத்தை வகிக்க வேண்டும்.

 

1.மக்களின் துன்ப துயரங்கள் மீது தனது அறிவை, மக்களிடமிருந்து கற்று அதை அந்த மக்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளவேண்டும்.

 

2.சமூக பொருளாதார அரசியல் கூறுகளின் மீது, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை பிரதிநிதித்துவம் செய்து மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

 

3.மக்களின் உள்நாட்டு எதிரி, வெளிநாட்டு (அன்னிய) எதிரியை தெளிவாக உணர்த்தி, மக்களின் நலன்களுடன் ஒன்றிணைந்து தன்னை வெளிப்படுத்தி நிற்கவேண்டும்.

 

4.மக்களின் சமூக பொருளாதார வாழ்வியல் முரண்பாடுகளின் மீதும், மக்களின் அன்றாட போராட்டங்களிலும், ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைத்து தன்னை ஒரு அமைப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

 

5.மக்களை விட்டு விலகிய அனைத்து வகையான மக்கள் விரோத புத்திஜீவித்தனத்தையும், அந்தக் கோட்பாட்டையும் இடைவிடாது எதிர்த்துப் போராட வேண்டும்.

 

இப்படி புத்திஜீவிகளின் முன்னுள்ள கடமை என்பது, சமூக அளவில் விரிவானது. முரணற்ற வகையில், சமரசமற்ற வகையில், மக்களின் நலனுக்காக போராடுவது தான் ஒரு புத்திஜீவியின் முன்னுள்ள கடமை. இது மட்டும் தான் புத்திஜீவியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தகுதியை வழங்குகின்றது.

 

இதை சேரன் போன்றவர்களின் பொது வாழ்வில் காணவேமுடியாது. ஏன், தேனீயின் இணைய வாழ்வில் காணமுடியாது. இவர்களின் அலம்பலும் புலம்பலும், மக்களின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டும் அரசியல் வக்கிரத்தை மட்டுமே செய்கின்றது. புலியெதிர்ப்பு முதல் புலி ஆதரவு புத்திஜீவித்தனத்தின் பகட்டான ஆர்ப்பாட்டமான செயல்கள் அனைத்தும், மிக இழிவான சமூகப் பாத்திரத்தையே சமூகளவில் வகிக்கின்றது.

 

சேரனின் அரசியல் என்ன? சேரனின் கடந்தகாலம் முதல் நிகழ்காலம் வரையிலான அவரின் அரசியல் பாத்திரம் என்ன? அவரின் புத்திஜீவித்தனம் என்ன? எதைத்தான் செய்ய முனைகின்றார். அங்குமிங்கும் வாலையும் மூஞ்சையையும் காட்டும் அரசியல் பன்றித்தனத்தையே செய்கின்றார்.

 

சேரன் எப்போதும் அரங்கில் தன்னை பகட்டாக காட்டுவதன் மூலம், தன்னை தக்கவைப்பவர். அலையில் மிதக்க முனைபவர். தேசியப் போராட்டம் தொடங்கிய போது தமிழ் குறுந்தேசிய கவிதை எழுதியவர். இயக்கத்தின் மக்கள் விரோத போக்கு வளர்ச்சியுற்ற போது, அதை எதிர்த்து குறுகியகாலம் (அலை தணியும் வரை) கவிதை எழுதியவர். இதுதான் அவரை புத்திஜீவியாகவே அறிமுகப்படுத்தியது. பின் அவர் இலக்கிய சீரழிவாளர் கும்பலகளில் ஒருவர். இதற்கு உட்பட்ட புலி பற்றி மென்மைகலந்த விமர்சனம். அதன் நீட்சியாக புலிகளிளுடன் கூடிக்கூலாவியபடி, அவர்களின் பாசிச நிறுவனங்களில் வேலை செய்கின்றார். இன்று பிரபாகரனினதும் பாலசிங்கத்தினதும் உரைக்கு இடையில் தன்னை புகுத்திக் கொண்டு, பிரபாகரனை பின்பற்றுகின்றார். அதற்கு அரசியல் கொள்கை விளக்கங்கள். இப்படி அவரின் அரசியலும் பிழைப்புத்தனமும் நடக்கின்றது.

 

இவரின் புத்திஜீவித்தனம் மார்க்சிய எதிர்ப்பில் முகிழ்ந்தது. ஏகாதிபத்திய வட்டாரங்களுடன் நட்பார்ந்த தொடர்புகள் மூலம், தன்னைப்பற்றிய பிரமையை தக்கவைப்பவர். இதற்கு உட்பட்டு தன்னையும், தனது எழுத்தையும் வாரி துப்புபவர். இந்த கனவான் சோவியத் மண்ணிலும், சீனாவிலும், தனது கம்யூனிச எதிர்ப்பின் அடிப்படையில் மனிதம் பற்றி தேடியலைந்து கருத்துக் கூறும் பிழைப்புவாத புத்திஜீவி, தனது சொந்த மண்ணில் அதைச் செய்வதில்லை. எம் மண்ணில் மனிதம் மறுக்கப்படுகின்றது. எம்மண்ணின் மனித துயரங்கள் எண்ணில் அடங்காதவை. அவை பற்றி எந்த சூடுசுறணையுமற்ற நக்குத்தனமே, இவர்களின் புத்திஜீவித்தனமாகும். விமர்சனமற்ற மிதவாதத்தன்மை இயல்பாக, புலிகளின் அமைப்புகளில் கூலிக்கு மாரடிக்கவைக்கின்றது. பிறகு தமது புத்திஜீவித்தனம் பற்றிய பிரமையில் அங்கலாய்த்து புலம்புகின்றனர்.

 

தமிழ் பேசும் மக்களின் வாழ்வியல் துன்பத்தை தீர்க்க, அதை சமூகத்தின் முன் கொண்டு செல்ல வக்கற்றவர்கள்; தான் இந்த புலம்பல் பேர்வழிகள். மக்களை வழிகாட்டிச் செல்ல, அவர்களுக்கு கற்றுக் கொடுக்க முடியாத சமூக விரோத ஒட்டூண்ணிகள் தான் இவர்கள். சமூகத்தில் வாழ்ந்தபடி, சமூகத்தில் மேலாண்மையை தக்க வைத்தபடி, அதில் படர்ந்து வாழும்; ஒட்டூண்ணிகளாகவே இருக்கின்றனர். இந்த ஒட்டூணிகளின் புத்திஜீவித்தனம், அங்குமிங்கும் ஒன்றைப் பொறுக்கி, மக்களை ஏமாற்றி அவர்கள் மீது காறித் துப்புவதுதான். இதன் மூலமே தமது சொந்த மேலாண்மையை தக்கவைக்கின்றனர். இழிவான, இழிந்து போன சமூகத்தின் இருப்பில், தமது மேலாண்மையை நிறுவி அதில் கவுரவ பிரமுகராக குளிர்காய்வது தான் சமூகம் பற்றிய இவர்களின் நிலைப்பாடு.

 

'மாமனிதன்" சிவராம் என்ற ஒரு சமூக விரோத ஒட்டுண்ணி எப்படி அங்குமிங்கும் ஒரு புழுவாக நெளிந்து வாழ்ந்தானோ, அதே போக்கு சேரனிடமும் உண்டு. அரசியல் ஒட்டுண்ணித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட பிழைப்புத்தனத்தில் தம்மைத்தாம் மிதப்பாக்கி புலம்புகின்றனர்.

 

இந்தப் புலம்பலிலே சேரன் கூறுகின்றார்

 

'நான் திருப்பித் திருப்பி வலியுறுத்துவது போல் எந்தக் கால கட்டத்திலும் எந்தக் கட்சியிலும் நான் உறுப்பினராகவோ ஆதாரவாளனாகவோ இருந்ததில்லை.

 

ஈபிடிபியின் டக்களஸ்தேவானந்தா, முன்னாள் ஈரோஸ் பின்னாள் ஈபிடிபியின் சின்னபாலா, ஈபிஆர்எல்எப் இன் வராராஜப்பொருமாள், பத்மநாபா, விடுதலைப்புலிகள் வே.பாலகுமாரன், கிட்டு, சந்தோஷம் போன்ற ஏராளமான இயக்கத் தலைவர்களுடன், இயக்க உறுப்பினர்களுடன் போன்றவர்களுடன் நட்பு இருந்தது. இன்னும் இருக்கின்றது. அரசியல் முரண்பாடுகளுக்கு அப்பால் நட்பைப் பேணமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது"

 

என்று மக்களுக்கு கூற முனையும் சேரன், என்ன தான் சொல்லுகின்றார். என்னைப் போல் இருந்தல் தான், இன்றைய அரசியல் சமூக பணி என்கின்றார். இதுதான் இன்று புத்திஜீவிகள் செய்யும் அரசியல் சமூக பணி என்கின்றார். ஒட்டுண்ணிக்கேயுரிய அரசியல் நக்குத்தனம்; இது. இதை சொல்லும் போது, அதை வாசிப்பவனை கேனப்பயல் என்று நினைப்பது தான் இவரின் புத்திஜீவித்தனம்.

 

மக்களுடன் அரசியல் ரீதியாக நட்பை பேணமுடியாத இந்த ஒட்டுண்ணி, மக்களின் எதிரியுடன் நட்பை கொள்ளமுடிகின்றது. சேரன் பெயர் குறிப்பிட்டுக் கூறியுள்ள எல்லாத் தலைவர்களும் கடந்த காலத்தில் கொலைகளை செய்தவர்கள், அல்லது கொலைகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள். கொலைக்கு ஏதோ ஒரு வகையில் தலைமை தாங்கியவர்கள். மனித விரோதத்தையே வாழ்வாகக் கொண்டு, ஆயிரம் ஆயிரம் மனிதர்களின் வாழ்வையே அழித்தவர்கள். ஆனால் இவர்கள் சேரனின் நண்பர்களாக இருப்பதாக, சேரனே பெருமை பாராட்ட முடிகின்றது. மக்களாகிய உங்களால் முடியுமா? தனது சொந்த துரோகத்துக்கு முற்போக்கு அரசியல் மூலாம் பூச பயன்படுவது நட்பு. நட்பின் இலக்கணத்தையே இழிவு செய்வதில் வெட்கப்படுதில்லை இந்த பொறுக்கிகள்.

 

சேரனின் நிலையே விசித்திரமானது. அந்த தலைவர்கள் சரியானவர்களா? அல்லது சேரன் சரியானவரா? அல்லது இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா! நண்பன் பற்றிய சமூக மதிப்பீட்டுக்கு சேரன் போன்ற அரசியல் பொறுக்கிகள் புது விளக்கம் கொடுக்க முனைகின்றனர். நட்போ பகையோயற்ற சேரனின் அரசியல் நிலை பற்றிய விளக்கங்கள்; என்பவை, எதார்த்தத்தில் மனித விரோதத்தை அடிப்படையாகக் கொண்டவை. எவ்வளவுக்கு மனித உணர்வுகள் இழிவான சமூக பாத்திரத்தை வகிக்கின்றதோ, அந்தளவுக்கு மனிதர்களின் பகைவர்களுடன் பொறுக்கி வாழ்வோர், கூடிவாழ்வர். மிகவும் கரடு முரடாகவே எமது சமூகம் சந்திக்கும் அவல வாழ்வை, சேரன் இழிவுபடுத்தி கேவலப்படுத்துகின்றார்.

 

வாயைத் திறந்தாலே மரண தண்டனை என்ற நிலையில், அண்ணன் தம்பியைக் கூட தாயின் முன்னால் கொன்று போடுவதே எமது சமூக அமைப்பின் வக்கிரமாகிவிட்டது. ஆனால் சேரனுக்கு இது விதிவிலக்காம். முட்டாள்களே நம்புங்கள். முரண்பாட்டுடன் நட்பை பேணும் அரசியல் பொறுக்கித்தனம் தன்னிடம் இருப்பதால், இது தனக்கு விதிவிலக்கு என்கின்றார். உண்மையில் மக்களின் முதுகில் குத்தி சவாரி செய்யும் புத்திஜீவித்தனம் தான், இந்த ஒட்டுண்ணித்தனமாகும். மக்களின் எதிரிகளுடன் கூடிவாழ முடிகின்றது. இது மக்கள் விரோத இயக்க தலைவர்களுடன் மட்டுமல்ல, பேரினவாத அரசின் தலைவர்களுடனும், ஏன் ஏகாதிபத்திய தலைவர்களுடன் கூட இந்த நட்பு பாராட்டும் அரசியல் விபச்சாரம் கொடிகட்டிப் பறக்கின்றது. இது தான் சேரன். இந்த சேரனின் வாழ்வின் எதார்த்தத்தை, தமிழ் மக்களாகிய நாங்களும் கையாண்டு வாழ்வது தான் உயர்ந்த ஜனநாயகம் என்கின்றார். இதில் முரண்பாடும் வாழும், நட்பும் வாழும் என்கின்றார். தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த எதார்த்தை புரிந்து கொள்ளாமல், காரணமின்றி சும்மா எல்லாம் புலம்பி வீணாகவே சாகின்றனர் என்கின்றார் சேரன். தன்னைப் போல் ஒட்டுண்ணியாக வாழ்ந்து பீற்றிக் கொள்வதே புத்திஜீவித்தனம் என்கின்றார்.

 

மனித விரோதிகளுடன், சமூக விரோதிகளுடன், அன்னியநாட்டு எடுபிடிகளுடன், கொலைகாரனுடன், கொள்ளைக்காரனுடன், மாபியாக் கும்பலுடன், பாசிட்டுகளுடன், குறந்தேசிய வாதிகளுடன், பேரினவாதிகளுடன் நட்பைப் பாராட்டுபவன், ஏன் பெருமையாக அதை பிரகடனம் செய்பவன், நிச்சயமாக மக்கள் விரோதியாக மட்டும்தான் இருக்கமுடியும். மனிதர்களை இழிவுக்குட்படுத்தி, அவர்களின் அழிவில் வாழ்பவர்களை நண்பன் என்று சொல்பவன் யாராக இருக்க முடியும்? நிச்சயமாக மக்களை இழிவுபடுத்தி வாழ்பவனுக்கு துணை போபவன் தான். எந்த மனச்சாட்சியுமற்ற, மனிதத்துவத்தைக் கூட ஏற்றுக் கொள்ளாத இவர்கள், வக்கிரம் பிடித்த லும்பன்களாக வாழ்கின்றனர். சமூகத்தை சமூக செயல்பாட்டை மறுப்பவராகின்றனர். இதனால் தான் தாம் 'எந்தக் கால கட்டத்திலும் எந்தக் கட்சியிலும் நான் உறுப்பினராகவோ ஆதரவாளனாகவோ இருந்ததில்லை" என்று கூறிக் கொள்கின்றனர். தனிமனித சமூக அமைப்பில் ஒரு லும்பனாக வாழ்ந்தபடி, மக்களின் எதிரிகளுடன் நண்பனாக கூட விபச்சாரம் செய்ய முடிகின்றது.

 

இப்படியும் மனிதன் வாழமுடியும், அவர்களை நட்புடன் இணங்கி வாழமுடியும் என்று சொல்லும் சேரனின், புத்திஜீவித்தனம் தான் அவரின் இருப்பின் அடையாளமாகும். 'நான் திருப்பித் திருப்பி வலியுறுத்துவது போல எந்தக் கால கட்டத்திலும் எந்தக் கட்சியிலும் நான் உறுப்பினராகவோ ஆதாரவாளனாகவோ இருந்ததில்லை." என்று கூறும் சேரன், இதற்கு வெளியில் மக்கள் பக்கத்திலும் என்றும் எந்தக் கட்டத்திலும் இணைந்தது கிடையாது. அங்குமிங்கும் நழுவி ஒட்டுண்ணியாகவே படர்ந்து, மக்களை ஏமாற்றி பிழைத்துக் கொள்ளும் புத்திஜீவித்தனமே இவர்களின் சொந்த முகமாகும். எப்போதும் எங்கும் எல்லாக்கட்டத்திலும் மக்களின் எதிரிகளுடன் நட்பாகவே இருந்தனர்.

 

இந்த அரசியல் விபச்சாரத்தை பூசிமெழுக, கடந்தகாலத்தில்; தமது சில செயல்களை காட்டித் தப்பிக்க முனைகின்றனர். குறிப்பாக சரிநிகர் பற்றி குறிப்பிடுகின்றார். சரிநிகர் ஆசிரியர் என்ற இடத்தில் இவரின் பெயர் போடப்பட்டதே ஒழிய, அதன் உள்ளடகத்துக்கும் இவருக்கும் சம்பந்தமே கிடையாது. சரி சம்மந்தம் உண்டு என்று வைத்தாலும், அதைக் கொண்டு அரசியல் விபச்சாரத்தை நியாயப்படுத்த முடியாது. சரிநிகரில் தொடாச்சியாக எழுதிய புதுசு அ.ரவி, ஆய்வாளர் என்ற பெயரில் புலம்பும் புலிப்பினாமியாகிய யோதிலிங்கம் எல்லாம் சரிநிகரில் ஏழுதியவர்கள் தான். உன்னை விடவும் அவர்கள் அதிகமாகவே புலியைப்பற்றி எழுதியவர்கள்.

 

அதைவிட அவர்கள் 1986 இல் நடந்த விஜிதரன் போராட்டத்தில் தலைமை தாங்கவும், முன்னணி வரிசையில் நின்று போராடியவர்கள் தான். இன்று அவர்கள் மக்களுக்கு எதிராக அரசியல் விபச்சாரம் செய்கின்றார்கள். கடந்தகாலம் பற்றி கூறி, இவர்கள் எல்லாம் வருங்காலத்தில் தப்பித்துவிடவே முடியாது. இவர்களின் கடந்தகாலம் மக்களுக்கானதாக இருந்தது என்றால், நிகழ்காலம் மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது. இவை எவையும் எதிர்காலத்தில் தம்மைத்தாம் நியாயப்படுத்தி, தமது சொந்த மனிதவிரோதத்தை மூடிமுறைக்க ஒருக்காலும் உதவப் போவதில்லை.

 

இவை கேடுகெட்டவை. சமூக விரோதத் தன்மை கொண்டவை. அது சேரனாகிய உனக்கும் விதிவிலக்கின்றி பொருந்துகின்றது. கனடாவில் புலிகளின் பினாமி அமைப்புகளில், நீ நக்கி அரசியல் ரீதியாக பிழைக்கத் தொடங்கிய போது அது தெளிவாகவே மேலும் அம்மணமாகியது. உனது புத்திஜீவித்தனத்தை பயன்படுத்தி, உலகத்தினை ஏமாற்ற நினைக்கும் உனது சமகால எதிர்வினைகளே மிகவும் இழிவானவை. அவை மக்களுக்கு எதிரானவை.

 

பிரபாகரனின் உரைக்கு பொழிப்புரை வழங்கிய பாலசிங்கத்தின் உரை பற்றி உனது விமர்சனம், உனது இழிவான புத்திஜீவித்தனத்தின் சூழ்ச்சிமிக்க குதர்க்கமாகும். அதை விமர்சனம் செய்த வடிவமே, அப்பட்டமான மோசடித்தனமான ஏமாற்று வித்தையாகும். முடிச்சு மாறிகளுக்கே உரிய ஒரு குணாம்சத்தில், இந்த விமர்சன உள்ளடக்கம் அமைந்துள்ளது. உனது புலி நண்பர்களா! இப்படி ஒரு விமர்சனம் செய்ய ஆலோசனை உனக்கு தந்தார்கள்? இப்படி விமர்சனம் செய்யும் நட்பு அல்லவோ நட்பு. முரண்பாடுகளுடன் தொடரும் நட்புக்கு, புதிய இலக்கணம் வகுத்துள்ளது இந்த விமர்சனம்.

 

விமர்சனம் புலிகளை அரசியல் ரீதியாக செய்யவில்லை. மக்களுக்கு எதிரான அரசியல் உள்ளடகத்தின் மீது செய்யப்படவில்லை. மாறாக புலிகளே ஏற்றுக் கொள்ளாத, அவர்களே தமது வெளியீடுகளில் சுய தணிக்கை செய்துகொண்ட, பாலசிங்கத்தின் சில உள்ளடகத்தின் மீது, சேரன் புலியாக குளிர் காய்கின்ற முயற்சி இது. புலிகளின் எதிர்வினையையே, இவர் மீண்டும் பிரதிபலித்துள்ளார் அவ்வளவே. பாலசிங்கம் பகிரங்க மேடையில் இப்படிப் பேசலாமா? என்பதே சேரனின் விமர்சனத்தின் அரசியல் எல்லை. இது ராஜதந்திரமற்றது என்பதே சேரனின் புலம்பல். சேரனுக்கு பின்னால் ஒரு புலி வால் தெரிவதை யாராலும் தடுக்க முடியவில்லை. இந்த உரையினால் மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியை, சேரன் தனது அதிதிறன் வாய்ந்த புத்திஜீவித்தனத்தால் சரிக்கட்டிவிட முனைகின்றார். இதை வெறும் நகைச்சுவையாக, சபையை கிளுகிளுப்பில் வைத்திருக்க பாலசிங்கம் வழமையாக கையாளும் ஒரு முயற்சியின் விளைவே ஒழிய, இது அவர்களின் அரசியல் அல்ல என்பதே சேரன் சொல்ல முனையும் மற்றொரு அரசியல் செய்தி.

 

நீ அரசியல் இலக்கியம் பெயரில் தனிமனித வக்கிரத்துடன் புரண்டு எழுகின்ற போதும் சரி, பாலசிங்கம் உருளுகின்ற போதும் சரி, உங்கள் மொழியே இது தான். சமூகம் மீதான மொழி இழிவாடல் இன்றி, முரண்பாடுகள் மீதான அவதூறு இன்றி, நீங்கள் அரசியல் இலக்கியம் புலம்புவது கிடையாது. ஆனால் நீ அதை நாகரிகமாக மேடையில் செய்யமாட்டாய். ஆனால் பாலசிங்கம் அதை செய்து விட்டார் என்ற அங்கலாய்ப்பே உனது விமர்சனமாகின்றது.

 

தலைவரின் உரை மீது எந்த அரசியல் விமர்சனமற்ற சேரனின் விபச்சார அரசியல், பாலசிங்கத்தின் கோமாளித்தனத்தின் மீது மட்டும் தனது அதிருப்தியை வெளியிட்டு மிக நுட்பமாக மக்களை ஏமாற்றும் புத்திஜீவித்தனத்தை காட்டிவிடுகின்றார். பிரபாகரனின் உரையே மக்களுக்கு எதிரானது. புலிகளின் அரசியலே மக்களுக்கு எதிரானது. மக்களுக்கு எதிரானது என்பதில் சேரனுக்கு உடன்பாடில்லை. இதனால் அதைப்பற்றி அவர் வாய்திறப்பதில்லை. உண்மையில் மக்களை பற்றி எந்த அக்கறையுமற்ற பன்றித்தனத்தையே, தனது புத்திஜீவித்தனமாக மக்களின் முன் சொல்லுகின்றனர். இதனால் அவர்கள் நண்பர்களாகி தோளில் கைபோட்டு மக்களின் முதுகில் குத்துகின்றனர். மக்களின் வாழ்வு மீது, இவர்கள் எந்த உரையையும் கூட்டாக செய்வதில்லை. மக்களை இழிவுபடுத்தி, அவர்களை மந்தைகளாக நடத்தி, தமது அடிமைகள் மீது செய்யும் உரைகள் தான் இவைகள். அந்த மந்தைகளுக்கு சேரன் வழிகாட்ட முனைகின்றார். ஒட்டுமொத்த தமிழ்மக்களின் எதிர்காலத்தையே நாசமாக்குகின்ற, அவர்களை அழித்துவிடுகின்ற, ராஐதந்திரமற்ற உரையே பிரபாகரனின் உரை. இந்த உரையின் அரசியல் மீது விமர்சனமற்ற சேரனின் நிலை என்பதே, புலித்தனம் தான்.

 

அந்த புலித்தனத்தை சேரன் வெளிப்படுத்தவும் தவறவில்லை. பாலசிங்கம் பற்றி சேரன் கூறும் போது 'கட்டுக்கோப்பாகவும் ஒழுங்குடனும் திட்டமிடப்பட்ட முறையிலும் நல்ல வாக்கு வன்மையுடனும் ஆற்றப்பட்ட விளக்கவுரை அது. அவருடைய தமிழறிவிலும் புலமையிலும் மெய்யியல் ஞானத்திலும் மதிநுட்பத்திலும் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை" என்கின்றார். பாலசிங்கம் மீதே படருகின்ற ஓடடுண்ணித்தனம். சேரனின் அரசியல் ஒட்டுண்ணி விபச்சாரத்;தை அறியாதவர்களோ, சேரனா இப்படிக் கூறுகின்றார் என்று ஆச்சரியப்படலாம். புத்திஜீவிகள் என்று கூறிக் கொண்டு, காலத்தை பிழைப்புக்காக கடத்தி நக்கும் பலர் இப்படித்தான் ஒட்டுண்ணிகளாக அங்குமிங்கும் ஊர்ந்து வாழ்கின்றனர்.

 

ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்களின் உயிரை வேட்டையாடி, ஒரு இட்டுக்கட்டான முட்டுச் சந்தியில் அர்த்தமே இழந்துபோன போராட்டத்தை கொண்டு வந்து நிறுத்தியது யார்? அன்றாடம் எதிரிகளையே உற்பத்தி செய்தபடி, அன்றாடம் அவர்களை கொன்று குவித்து வருவது யார்? பிரபாகரனும் பாலசிங்கமும் மட்டுமல்ல, சேரன் போன்ற ஒட்டுண்ணிகளும் தான். இந்த ஒட்டுண்ணிகளின் தயவும் துணையுமின்றி புலிகள் இல்லை. 'தமிழறிவிலும் புலமையிலும் மெய்யியல் ஞானத்திலும் மதிநுட்பத்திலும்" வழிநடத்தப்படும் போராட்டத்தில் வழி நெடுக சேரனின் நன்மதிப்புடன் கூடிய ஆதரவுள்ளது என்பதை, சேரன் அழகாகவே சொல்லிவிடுகின்றார். இயக்க அழிப்புக்கள், மக்கள் மீதான தாக்குதல்கள், தொடர் கொலைகள், தொடர் கொள்ளை மற்றும் சூறையாடல், முஸ்லீம் மக்கள் வெளியேற்றம், முஸ்லீம் மக்கள் படுகொலைகள், எல்லைகிராமங்கள் மீதான படுகொலை தாக்குதல்கள், மக்கள் மீதான குண்டு வைப்புகள், இந்தியாவில நடத்திய படுகொலைகள், பாரிஸ் படுகொலைகள் என்று எண்ணிலடங்காத புலி பாசிசத்தின் கூறுகளையே, சேரன் தன் வாயால் ஒட்டுண்ணியாகி போற்றுகின்றார். அதை சேரன் பாலசிங்கத்தின் 'புலமையிலும் மெய்யியல் ஞானத்திலும் மதிநுட்பத்திலும்" வழிகாட்டப்பட்டு செய்யப்பட்டது என்கின்றார். இதையே அவர் அடுத்த வரியில், முதல்தரமான ராஐதந்திரியின் ராஐதந்திரம் என்கின்றார்.

 

போராட்ட மெய்யியல், புலனறிவு, ஞானம், மதி நுட்பம் என எதுவுமற்ற, வன்முறை கொண்ட ஒரு லும்பன் தான் பாலசிங்கம். மக்கள் பற்றி எந்த சமூக அறிவும் கிடையாது. செந்தில் முதல் கதாநாயகன் வகைப்பட்ட சினிமாவையே, தேசிய போராட்டமாக தயாரித்து அதற்கு கதைசொல்லும் ஒரு அரசியல் கோமாளி. விமர்சனமற்ற உலகத்தை துப்பாக்கி முனையில் உருவாக்கி வைத்துக் கொண்டு தாலாட்டு பெற நினைக்கும் வக்கிரத்தையே, சேரன் தாலாட்டுப் பாடி ஆட்டுகின்றார். இவை எவையும் கொலைகளும், அடக்குமுறையுமின்றி, தம்மைப் பற்றி தாம் கூறிக் கொள்வதில்லை. கோமாளிகளின் இராஜதந்திரம் போராட்டத்தின் உள்ளடகத்தில், தமிழ் சமூகத்தின் வாழ்வில் எதையும் பிரதிபலிப்பதில்லை. இதற்கு அப்பால் மொழியியல் ரீதியாக எடுத்தால், சமூக மொழியியல் பாலசிங்கத்துக்கு கிடையாது. இவர்களின் மொழியே மிக இழிவான கீழான சமூகப் பாத்திரத்தை வகிக்கின்றது. தமிழ் தேசியத்தில் பயன்படும் மொழி, அவர்கள் பேசிக் கொள்ளும் மொழி சார்ந்த நடத்தை நெறிகள், ஆண் பெண் வேறுபாடு இன்றி மிகவும் பண்புகெட்ட இழிவான வன்மமான பாத்திரத்தை வகிக்கின்றது. தூசணமே அதிலும் ஆணாதிக்கம் வக்கரிக்க வெளிப்படும் அரசியல் மொழியே இவர்களின் ஆன்மாவாக உள்ளது. கட்டளைகள், அதிகார திமிர்த்தனங்கள் என அனைத்தும் இதில் இருந்து புணர்ந்து வருகின்றது. பண்பாடற்ற காட்டுமிராண்டித்தனமான வக்கிரமான மொழியில் தான், தேசிய மொழியாக உள்ளது. சாதாரணமாக அதன் கீழ் வாழும் மக்கள், தமது முரண்பாடுகளை பேச முடியாதவாகளாக மாறி, அவர்கள் வன்மம் கொண்ட வன்முறையாளராகவே மாறிவிட்டது. இது மொழியில் தொடங்கி கொலையில் முடிகின்றது.

 

பாலசிங்கத்தின் மொழியின் வன்மம், வக்கிரமான வன்முறையான ஆணாதிக்க தன்மை வாய்ந்தவை. மொழி பாலசிங்கத்தின் குகையில் இருந்து உறுமுகின்றது. இதற்குள் 'புலமையிலும் மெய்யியல் ஞானத்திலும் மதிநுட்பத்திலும்" தேடும் சேரனின் பொறுக்கித்தனத்தையே, இங்கு நாம் காண்கின்றோம். ஒட்டுண்ணிகள் தாம் ஒட்டுண்ணும் பிரதேசத்தின் மகிமையை சொல்லித்தானே வாழமுடியும்.

 

இப்படி புலிவாலை நிமிர்த்தி ஒட்டுண்ணும் சேரன் 'வன்னியில் வாழும் புகழ்பெற்ற அரசியல் வரலாற்று ஆய்வாளரும் புலமையாளருமான மு.திருநாவுக்கரசு அவர்கள் பாலசிங்கத்தின் நூல் அரங்கேற்ற விழாவில் குறிப்பிட்டதைப் போல் 'குறைபாடுகள் இருந்தாலும் தமிழீழத்தின் முதலாவது இராஐதந்திரி பாலசிங்கம் அவர்கள் தான்" என்ற கருத்தில் மிகுந்த நியாயம் உள்ளது" என்கின்றார். தமிழ் மக்களாகிய நாங்கள் மிகச்சிறந்த இராஐதந்திரியின் கீழ் வாழ்வதாக சேரன் கூறுகின்றார். இதைச் சொன்ன விதம் தான் சூக்குமமானது. தான் எப்படி ஒரு புத்திஜீவியாக இருக்கின்றேனோ, அப்படி பாலசிங்கம் இராஐதந்திரி என்கின்றார். என்ன ஒற்றுமை. ஐயா சேரன் அவர்களே, அவர் எப்படி இராஐதந்திரியாகின்றார்?

 

1.எந்த வடிவத்தில் இராஐதந்திரியானர்?

 

2.அவரின் அரசியல் இராஐதந்திரம் தான் என்ன?

 

புத்திஜீவி சேரன் அவர்களே அதைக் கொஞ்சம் சொல்லுங்கள். வாயை மூடிக்கொண்டு ஒட்டுண்ணிகள் போல் அங்குமிங்கும் ஊர்ந்து தாவுவதைவிட்டு சொல்லுங்கள். நாயிலும் கீழான வாழ்வை வாழ்ந்தபடி நாய் வாலை நிமிர்த்த நக்குவது, உங்களைப் போன்றவர்களுக்கு இராஐதந்திரமாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு அல்ல. பொய்யும், புரட்டும், புனைவும், சுத்துமாத்தும், வன்முறையும் கொண்டு, பேந்து பீச்சி விடுவதையே சேரன் இராஐதந்திரம் என்கின்றார். எதார்த்தத்துக்குப் பொருந்தா வகையில், விமர்சனம் செய்ய முடியாத மனித அடிமை நிலையை உருவாக்கி வைத்துக் கொண்டு, அனைத்தையும் தாமே தமக்கு இராஐதந்திரம் என்று கூறிக் கொள்கின்றனர். இதையே சேரன் ஆகா இராஐதந்திரம் என்று எமக்கு கூறி, வானத்தை நோக்கி சுட்டிக் காட்டுகின்றார். இடிந்து வீழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் கோபுரத்தின் கீழ் உட்கார்ந்து இருப்பதால், யாரும் தன்னை முட்ட முடியாது என்ற துணிச்சல் வேறு. அதையும் இந்த ஒட்டுண்ணி சொல்லிக் காட்டுகின்றது

 

தனது ஓட்டுண்ணித் துணிச்சலையே பினாற்ற தொடங்குகின்றது. 'வன்னியில் வாழும் புகழ்பெற்ற அரசியல் வரலாற்று ஆய்வாளரும் புலமையாளருமான மு.திருநாவுக்கரசு" என்று அவரைப் பற்றிக் கூறுகின்றார். இந்த திருநாவுக்கரசை கோயில் திருப்பணியை சமணருக்கு எதிராக தொடங்கிய காலத்தில் இருந்தே நாம் அறிவோம். யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு புலியாக இருந்த போதே அறிவோம். அவரின் ஆய்வில் ஒடுவது எல்லாம் வலதுசாரிய புலி பினாற்றலே. புகழ்பெற்ற ஆய்வாளார் என்ற குறிப்பிடும் சேரன், அவரின் சுயாதீனம் பற்றிக் குறிப்பிடுவதில்லை.

 

புலியாக புலியின் நிழலாகவே வாழ்ந்த அவர், தனது சொந்த தந்தையின் வாழ்நிலையில் இருந்து கூட மக்களை திரும்பி ஒருநாளும் பார்த்ததில்லை. அவரின் தந்தை மிகவறிய நிலையில், மிகவும் கடினமான உழைப்பில் வாழ்ந்த சமூக இருத்தலைப் பற்றியோ, அந்த உழைப்பு பற்றியோ அவர் ஆய்வு எதையும் செய்யவில்லை. மக்களைப் பற்றி எந்த அக்கறையுமற்ற, மக்களின் வாழ்வுக்கே வேட்டுவைக்கின்ற அரசியலுக்கு கொள்கை விளக்கத்தையே அனறு முதல் இன்றுவரை செய்து வருகின்றார். போராட்டம் என்ற பெயரில் மக்கள் விரோதக் கூறுகள் அனைத்தையும் ஆதரிக்கும் ஒரு பாசிட். அவர் இந்த மக்கள் விரோதக் கூறுகளுக்கு அரசியல் கொள்கை விளக்கம் வழங்குவதற்கு அப்பால், மக்கள் பற்றி அக்கறையற்ற எழுத்துக்கள் தான் அவரின் ஆய்வுகள்.

 

அன்று முதல் இன்று வரை அனைத்துவிதமான ஜனநாயக போராட்டத்தையும் குழிதோண்டிப் புதைப்பதில் தனித்துவம் வாய்ந்தவர். மக்களின் வாழ்வையே புதைப்பதற்கு உதவியவர். கொலை கொள்ளை அனைத்துக்கும் பக்கபலமாக, ஏதோ ஒரு வகையில் கைகொடுத்து உதவியவர். மக்கள் விரோத போக்குக்கு எதிராக சில குறுகிய காலம் நீங்கள் கவிதை பாடிய போதே, அவர் உங்களுக்கு எதிராகவே 'புகழ் பூத்த" ஆய்வுகளை செய்தவர். இன்று உங்களுக்கே, உங்களின் தோலின் தன்மைக்கு ஏற்ப அவர் அரசியல் ஆசானாகிவிடுகின்றார். உங்கள் பார்வையில் புகழ்பூத்தவராகி, மதிப்புக்குரியவராகிவிடுகின்றார். புத்திஜீவித்தனத்தின் நக்குத்தனமே இதை அனுசரிக்கின்றது.

 

சேரன் தனது விபச்சார நிலையில் நின்று அங்குமிங்குமாக நக்குவதை நியாயப்படுத்த வைக்கும் வாதம் சிரிப்புக்குரியது. 'கடந்த சில ஆண்டுகளாக ஈழத்து அரசியல் தீவிரமான இரண்டு முனைகளைக் கொண்டதாக மாறிவிட்டது. ஒன்று புலி ஆதரவு, இன்னொன்று புலிஎதிர்ப்பு. இந்த இரண்டுக்கும் இடையில் சுதந்திரமான கருத்துகளையும் சுதந்திரமான நிலைப்பாட்டையும் எடுப்பவர்கள் மீது மிகுந்த தாக்குதல்களும் விமர்சனமும் வைக்கப்படுகின்றன" என்கின்றார். எப்படி இருக்கின்றது இந்த தர்க்க வாதம். இரண்டுக்கும் இடையில், தான் நண்பர்களாக அணுகி வாழும் விபச்சார நிலையைத்தான் அவர், இப்படிக் கூறுகின்றார். தனக்கு அனைவரும் நண்பர்கள் என்கின்றார். இதைத் தான் அவர் தான் புலியுமில்லை, புலியெதிர்ப்புமில்லை என்கின்றார்.

 

இரண்டுடனும் தொடர்பு கொண்ட மூன்றாவது அணி என்கின்றார். சேரன் போல் மக்கள் வாழ முடியுமா? எதார்த்தம் மக்களுக்கு மரணத்தை பரிசளிக்கின்றது. சேரன் போன்ற விபச்சாரர்கள் மட்டும்தான் இப்படி வாழமுடியும். இங்கு அரசியல் தொழிலே விபச்சாரமல்லலா. இதைத் தான் புலி அல்லாத, புலியாதரவு அல்லாத மூன்றாவது அரசியலின் சரியான நிலை என்கின்றார். இந்த புத்திஜீவியை நம்பி, அதைப் பின்பற்ற முடிந்தால் ஒரு அடிiயை எடுத்து வைத்துப் பாருங்கள். நாங்கள் என்ன சொல்லுகின்றோம் என்றால் இரண்டுக்கும் எதிராக மக்கள் நலனை உயர்த்தி, அதை முன்னெடுப்பது தான் சரியான அரசியல் பாதை என்கின்றோம். இதற்குள் தன்னை செருகிக் கொள்ள முனையும் நரித்தனத்துடன் தான், சேரன் தன்னை வெளிப்படுத்துகின்றார். நாங்கள் புலியுடனும் புலியெதிர்ப்பு அணியுடனும் கூடிக் கொண்டு முரண்பாட்டுடன் நட்பாக வாழ்வோம் என்கின்றார்.. இதே போல் யாருடனும் இதையே செய்வோம் என்கின்றார். நாங்கள் நிலைமைக்கு ஏற்ப நிறம் மாறும் ஒணான்கள் தான். ஒட்டுண்ணியாகவே பிழைத்தபடி உயிர் வாழ்பவர்கள் தான் என்கின்றார். அதனால் தான் எங்கள் ஒட்டுண்ணிக் கோபுரங்கள் மாடுமுட்டி இடிந்து வீழ்வதில்லை என்கின்றார்.

பி.இரயாகரன்
12.05.2006